தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் – ஜனாதிபதியிடையேயான பேச்சு ஒத்திவைப்பு

இனப் பிரச்னைக்கு தீர்வு காண்பது தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் வடக்கு, கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று நடைபெறவிருந்த பேச்சு இரத்து செய்யப்பட்டது.

எனினும், அதிகாரப் பகிர்வு தொடர்பான இந்தப் பேச்சு நாளை மறுதினம் திங்கட்கிழமை மாலை 5.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

பாராளுமன்றத்தில் நேற்று மாலை 5 மணிக்கு ‘நலன்புரி நன்மைகள் வழங்குதல்’ தொடர்பான சட்டமூலம் வாக்கெடுப்பு நடைபெறவிருந்தது.

இந்த வாக்கெடுப்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் நோக்கில் பேச்சு ஒத்திவைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் வடக்கு, கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான பேச்சு நேற்று முன்தினம் ஆரம்பமானது.

நேற்று முன்தினம் நடந்த இந்தப் பேச்சில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் காணி பிரச்னை மற்றும் ஏனைய பிரச்னைகள் தொடர்பாக ஆராயப்பட்டன. நேற்றைய பேச்சில் அதிகாரப் பகிர்வு, நல்லிணக்க முயற்சிகள் தொடர்பாக பேசப்பட இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.