தமிழ் நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் – ஜீவன் தொண்டமான் இடையே சந்திப்பு

மலையக தமிழர்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் கடந்துள்ள நிலையில் அவர்களை கௌரவிக்கும் முகமாக மலையகம் – 200 விழா, மீனவர் பிரச்சினை, மலையக கல்வி அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ஜீவன் தொண்டமான் பேச்சு நடத்தியுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இல்லத்தில் மரியாதை நிமித்தம் இன்று (29) காலை நடைபெற்ற இச்சந்திப்பில், இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையக தமிழ் மக்களின் மேம்பாட்டுக்காக தமிழக அரசின் பங்களிப்பும் அவசியம் என்ற கோரிக்கையை அமைச்சர் ஜீவன் தொண்டமான் முன்வைத்தார்.

இச்சந்தர்ப்பத்தில், கடந்த வருடம் இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியின் போது தமிழக  அரசாங்கம் இலங்கை வாழ் அனைத்து மக்களுக்கும் பாரிய அரிசி தொகையினை நன்கொடையாக வழங்கியிருந்தது. இதற்கு இலங்கை மக்கள் சார்பாக தனது நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டார்.

இந்த சந்திப்பின் போது, சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தின் துணைத் தூதுவர் வெங்கடேஸ்வரன் மற்றும் அரச உயர் அதிகாரிகளும் கலந்துக் கொண்டனர்.