நயினாதீவில் வீதி ஒன்றுக்கு சிங்களப் பெயர்

யாழ் நயினாதீவில் வீதி ஒன்றின் பெயர் சிங்களத்தில் மாற்றப்பட்டுள்ள சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த வீதி ‘‘அதிமேதகு சங்கைக்குரிய பிரஹ்மனவத்தே தம்மகித்தி திஸ்ஸ பெரஹெர மாவத்தை’‘ என இரவோடு இரவாக மாற்றப்பட்டுள்ளது.

இது தற்போதைய அரசாங்கத்தின் சிங்கள மயமாக்கல் செயற்பாடு என பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

மேலும், யாழ்ப்பாணம் – குறிகாட்டுவான் பகுதியில் இருந்து நயினாதீவு நாகபூசணி அம்மன் கோயிலுக்கு செல்லும் படகு பயணக் கட்டணச் சீட்டில் நயினாதீவு எனும் பெயர் நீக்கப்பட்டுள்ளது.

நயினாதீவில் நாகபூசணி அம்மன் கோவிலும் மற்றும் நாகவிகாரையும் அமைந்துள்ளது.

இதற்கான படகுச் சேவையில் குறிகட்டுவானில் இருந்து நயினாதீவுக்குச் செல்லும்போது இங்கு இரண்டு விதமான இன பக்தர்களும் சுற்றுலாப் பயணிகளும் பயணிப்பார்கள்.

ஆனால், தமிழிலே நயினாதீவு என்பதுதான் தொடக்கத்தில் இருந்து பாவனையில் உள்ள பெயர். அப்படி இருக்கும்போது தற்போது நாகதீப என்று மட்டும் எழுதப்பட்டுள்ள பயண கட்டணச் சீட்டு வழங்கப்பட்ட விடயம் மிகப் பெரிய சலனத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தற்போது இப் பயணக் கட்டணச்சீட்டு சமூக வலைத்தளங்களில் அதிகளவு பகிரப்பட்டு வருகின்றது.

அண்மைக் காலங்களில் தமிழர் பகுதியை சிங்களவர்கள் ஆக்கிரமிக்கும் செயற்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில் இச்சம்பவமும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆக கொஞ்சம் கொஞ்சமாய் தமிழர் தேசம் பறிபோய்கொண்டு தான் இருக்கிறது என்பதை வெளிவரும் அனைத்து விடயங்களும் உறுதிப்படுத்துபவையாகவே காணப்படுகிறது.

வெடுக்குநாறி ஆதிசிவனாலய அழிப்பு, திருக்கோணேசர் ஆலயக்காணி அபகரிப்பு முயற்சி, வடமுனை நெடிய கல்மலை பெளத்தாலய நிருமாணிப்பு, கரடியனாறு குசலான மலை முருகன் ஆலய அபகரிப்பு முயற்சி போன்ற பல ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகையில் வடக்கு கிழக்கில் பல சைவ ஆலயங்கள் தொல்லியல் அடையாளங்கள் இருப்பதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த ஆலயங்களில் சில சிதைக்கப்பட்டு இருக்கின்றன . அதே போல சில ஆலய சூழலுக்குள் பௌத்த மத அடையாளங்கள் நிறுவப்பட்டு இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.