நாம் ஏதாவது செய்ய தயாரானால் தொல்லியல் திணைக்களம் அங்கே 4 கட்டைகளை அடித்து விட்டு தொல்லை கொடுக்கிறது – யாழ். பல்கலை துணைவேந்தர்

ஈழத்தமிழர்களால் மொழி, கலாச்சாரம், உணவு மற்றும் வாழ்வியல் என அனைத்து விதங்களிலும் தனித்து இயங்க முடியும் என்று யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தெரிவித்துள்ளார்.

யாழ்.பல்கலையில் கலாநிதி கா.இந்திரபாலா தொல்லியல் அருங்காட்சியகம் திறப்பு விழாவில் இன்றைய தினம்(24.05.2023) உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்.பல்கலையில் தொல்லியல் படிக்கும் பிள்ளைகள் சிறப்பு கற்கை நெறியினை மட்டும் கற்பது போதாது ஈழத்தமிழர்களின் இருப்பினை ஆவணப்படுத்தல் வேண்டும்.

பிரித்தானியாவில் உள்ள அறிவியல் அருங்காட்சியகம் மிகவும் புகழ் பெற்றது.

அதனை போன்று திருவாசக அரண்மனை போன்றவற்றை கட்டி வருகின்றனர். அவை அனைத்தும் அரசாங்கத்தினுடையதல்ல. அவற்றை அமைப்பதற்கு தனியான சிந்தனை வேண்டும்.

எமது பல்கலையில் திறந்து வைக்கப்பட்டுள்ள தொல்லியல் அருங்காட்சியகத்தை யாரும் வந்து பார்வையிட முடியும். இன்றைய காலத்தில் வடக்கு கிழக்கு குறித்து அனைவருக்கும் பொறாமை காணப்படுகின்றது.

ஜப்பானின் ஜைக்கா ஆய்வுகளை மேற்கொள்ளுதல் போன்றவையே இதற்கு காரணமாகும். முன்னதாகவே ஆராய்ச்சி பயிற்சிக்கான ஆய்வுகூடம் 2000 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமன்றி ஜப்பானின் விஞ்ஞானிகள் இங்கு நிற்கின்றனர். ஆனால் எமது பிள்ளைகள் அங்கு செல்கின்றனர்.

நாம் ஒன்று செய்ய தயாராகினால் தொல்லியல் திணைக்களம் அதற்கு 4 கட்டைகளை அடித்து விட்டு அதற்கு பல காரணங்களை குறிப்பிடும்.

ஏனைய பீடங்களை இலங்கை முழுவதையும் பிரதிநிதித்துவப்படுத்தும். ஆனால் கலை பீடம் எமது மக்களின் வாழ்வியலை மிகவும் சிறப்பாக பிரதிநிதித்துவப்படுத்தும் அளவிற்கு சிறப்பானது.

அத்துடன் எமது அறிவியல் அறிவினால் காலநிலை குறித்தும் முன்கூட்டியே நிலைமைகளை தெரிவிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த திறப்பு விழா நிகழ்வில் வரலாற்றுத்துறை ஓய்வுநிலை சிரேஷ்ட பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம், வரலாற்றுத்துறை தலைவர் சாந்தினி அருளானந்தம், பேராசிரியர் மௌனகுரு, ஏனைய பீட பீடாதிபதிகள்,விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக உத்தியோகத்தர்கள், மத்திய கலாசார நிதியத்தினர், தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.