நெற் பயிர்களை அரச அதிகாரிகள் அழிக்க முற்பட்டமையால் கிளிநொச்சியில் அமைதியின்மை

கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் கீழான ஒதுக்கீட்டு பிரதேசங்களை ஆக்கிரமித்து பயிர்ச் செய்கை மேற்கொள்வது தொடர்பில் மாவட்ட மட்டத்தில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டு வியாழக்கிழமை (17) குறித்த செய்கைகளை அழிப்பதற்காக பொலிஸாருடன் சென்ற வேளை நீர்ப்பாசன திணைக்களத்தினருக்கும் நெற் செய்கையாளர்களுக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக கிளிநொச்சி இரணைமடு குளத்தின் கீழ் உள்ள ஒதுக்கீட்டு பிரதேசங்களில் பயிர் செய்கை மேற்கொள்ளப்பட்டு இரண்டு மாதங்கள் கடந்த நிலையில் நேற்றைய தினம் இவ்வாறு பயிர்களை அழிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

 

ஆனால் ஆரம்பத்தில் பயிர்செய்கை நடவடிக்கை மேற்கொள்ளும்போது குறித்த அதிகாரிகளால் எந்த விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படாத நிலை காணப்பட்டதுடன் குறித்த பிரதேசத்தில் பயிர்ச் செய்கை மேற்கொள்வதால் ஏற்படுகின்ற பாதிப்புகள் தொடர்பில் தொழில்நுட்ப ரீதியான அறிக்கைகள் எதுவும் மாவட்ட உயர்நிலை அதிகாரிகளுக்கு சமர்ப்பிக்கப்படவில்லை எனவும் அறிய முடிந்துள்ளது.

 

இது ஒருபுறமிருக்க கிளிநொச்சி கிழக்கு நீர்பாசன பொறியிலாளர் பிரிவின் கீழுள்ள கல்மடுக்குளததின் கீழ் அரச அதிகாரிகள் உள்ளடங்கிய சிலர் சட்ட விரோதமாக மேற்கொண்ட பயிர் செய்கைகளுக்கு குளத்து நீர் திறந்து வழங்கியது தெடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பிலும் அதிகாரிகள் மௌனம் காத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.