பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தை திருத்தங்கள் இன்றி, நாடாளுமன்றில் சமர்ப்பிக்க வேண்டாம்

பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தை திருத்தங்கள் இன்றி, நாடாளுமன்றில் சமர்ப்பிக்க வேண்டாம் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், தேசிய கலந்துரையாடல் முடிவடைந்து, தெளிவான திட்டத்துடன் அதன் பரிந்துரைகள் வெளியிடப்படும் வரை காத்திருக்குமாறும் ஆணைக்குழு கோரியுள்ளது.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பாக கவனம் செலுத்துவதற்கு, நீண்டகாலமாக நிலுவையில் உள்ள சமாதானம் மற்றும் நல்லிணக்கச் செயற்பாடுகள் குறித்து மேலும் ஆராய வேண்டியமை அவசியமானது என்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

சமாதானம் மற்றும் நல்லிணக்கச் செயற்பாடுகள் 30 வருடங்களுக்கும் மேலாக நீடித்த, உள்நாட்டுப் போரின் அழிவுகளின் கீழ் நேரடியாகப் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு சமூகங்களுக்கு மாத்திரமல்ல என்றும் ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.

70 மற்றும் 80 களில் தெற்கில் ஏற்பட்ட கிளர்ச்சியால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கும் இந்த செயல்முறை அவசியம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

சமாதானம் மற்றும் நல்லிணக்க செயல்முறையை சமமாக எதிர்கொள்ளும் ஒரு தேசிய உரையாடலை நிறுவுவது, பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்துடன் ஒப்பிடக்கூடிய ஒரு சட்டமூலத்திற்கான சூழலின் அவசியத்தை சிறப்பாக வரையறுக்கும் என்பதை உறுதியான கருத்துவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளது.