பாகிஸ்தான் தூதரை கொல்ல முயன்ற வழக்கிலிருந்து முன்னாள் எம்.பி கனகரத்தினத்தின் மகன் உள்ளிட்ட 3 பேர் விடுதலை!

இலங்கைக்கான முன்னாள் பாகிஸ்தான் தூதுவராக இருந்த வசீர் அலி மொஹமட் என்பவரை கொலை செய்ய முயன்றமை, அதற்கு சதி செய்தல் மற்றும் உதவி செய்தமை ஆகிய குற்றச்சாட்டின் கீழ் குற்றம் சுமத்தப்பட்ட மூன்று சந்தேகநபர்களும் நீண்ட விசாரணையின் பின்னர் இன்று காலை விடுவிக்கப்பட்டுள்ளனர்.

2006 ஆம் ஆண்டு இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவராக இருந்த வசீரை படுகொலை செய்ய சதி செய்து முச்சக்கர வண்டியில் வெடிகுண்டு வைத்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்களே விடுவிக்கப்பட்டனர்.

இச்சம்பவம் 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி அல்லது அதற்கு அருகில் கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் இடம்பெற்றது.

இந்த சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டுகள் வாதிகளால் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படாததால் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி மகேஷ் வீரமன் இன்று தனது உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இந்த சந்தேக நபர்களுக்கு எதிராக 25 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நீண்ட விசாரணைக்குப் பிறகு தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கனகரத்தினத்தின் மகன் ரஞ்சன் எனப்படும் கனகரத்தினம் ஆதித்தன், ஸ்டார்ஸ் எனப்படும் யோகராஜா நிரோஷன் மற்றும் முச்சக்கரவண்டி சாரதி சுப்ரமணியம் சோதிராஜா ஆகியோரே விடுவிக்கப்பட்டனர்.

ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா சந்தேகநபர்கள் சார்பில் நீண்டகாலமாக முன்னிலையாகி வந்தார்.

அண்மைய இலங்கை நீதித்துறை வரலாற்றில் 15 வருடங்களாக தடுப்புக்காவலில் இருந்து, நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்ட கைதியாக கனகரத்தினம் ஆதித்தன் குறிப்பிடப்படுகிறார். 2009 இல் கைது செய்யப்பட்டது முதல் இன்று விடுதலையாகும் வரை அவர் தடுப்புகாவல் கைதியாகவே வைக்கப்பட்டிருந்தார்.