பேரினவாத முயற்சிகளை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் – அருட்தந்தை மா.சத்திவேல்

முன்னாள் போராளிகள் ஏற்கனவே திறந்த வெளி சிறைக்குள் இருப்பதாகவே உணரும் நிலையில், தகவல்கள் திரட்டும் செயற்பாடு சிறைக்குள் இருக்கும் உணர்வையே ஏற்படுத்தும் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

ஊடக அறிக்கையொன்றில் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், முன்னாள் போராளிகளின் தகவல்களை நீதி அமைச்சின் கீழ் உள்ள தேசிய ஒருமைப்பாட்டு நல்லிணக்க அலுவலகம் திரட்டுவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

எந்த நோக்கத்துக்காக இந்த தகவல்கள் திரட்டப்படுகின்றன என்பது தொடர்பில் முன்னாள் போராளிகள் மட்டுமல்லது பொதுமக்களும் அச்ச உணர்விலேயே உள்ளனர். இது தொடர்பில் நீதி அமைச்சு தெளிவான விளக்கம் கொடுக்க வேண்டும் அத்தோடு வடக்கு, கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பி மக்களுக்குத் தெளிவூட்டல் பெற்றுக்கொடுப்பதோடு பாதிப்பு ஏற்படும் எனின் தடுத்து நிறுத்துவதற்கு கூட்டான செயற்பாட்டிலும் ஈடுபட வேண்டும்.

கொழும்பில் வெள்ளவத்தை போன்ற தமிழர் அதிகமாக வாழும் பிரதேசங்களில் வீடுகளில் தங்கி இருப்போர் தொடர்பாக பொலிஸார் தகவல் திரட்டுகின்றனர் எனவும், அவ்வாறான தகவல் படிவங்களை எவரும் நிரப்பி கொடுக்க வேண்டாம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் பகிரங்கமாகக் கூறியதோடு இது தொடர்பில் பொலிஸ்மா அதிபருடனும், ஜனாதிபதியுடன் வினவுவதாகவும் கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது தமிழர்களை அச்சத்தில் ஆழ்த்தும் வகையில் தமிழர் பகுதியில் முன்னாள் போராளிகளின் தகவல்கள் திரட்டப்படுகின்றன என்று கூறப்படுகின்றது. முன்னாள் போராளிகள் ஏற்கனவே திறந்த வெளி சிறைக்குள் இருப்பதாகவே உணரும் நிலையில் தகவல்கள் திரட்டும் செயற்பாடு சிறைக்குள் இருக்கும் உணர்வையே ஏற்படுத்தும்.

இது உள ரீதியிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதோடு சுயமாகவே முன்னாள் போராளிகள் தமது ஜனநாயகச் செயற்பாட்டை மட்டுப்படுத்திக்கொள்ள வழிவகுக்கும். இந்த விடயம் மனித உரிமை மீறலாகும். அண்மையில் அரசு கொண்டுவர முனைந்த புனர்வாழ்வு தொடர்பான திருத்தச் சட்டம் சமூகத்தில் எழுந்த சலசலப்பும் மக்களின் எதிர்ப்பும் சட்டச் சிக்கலும் காரணமாகத் தடுத்து நிறுத்தப்பட்டது.

அந்தச் சட்ட அமுலாக்கத்தை வேறு வகையில் நிறைவேற்றுவதற்காக முன்னாள் போராளிகளின் தகவல்கள் திரட்டப்படுகின்றதா. தெற்கின் போராட்டக் குழுவினர் தொடர்ச்சியாகப் பல்வேறு காரணங்களை முன்வைத்து அரசாங்கத்துக்கு எதிரான வீதிப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தங்கள் சகாக்கள் மூன்று பேரையும் விடுவிக்குமாறும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குமாறும் கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைத் தொடர்ந்து வைத்திருக்க முன்னாள் போராளிகளின் தகவல்கள் திரட்டப்படுகின்றதா. இத்தகைய தகவல் திரட்டும் ஏற்பாடு முன்னாள் போராளிகளின் ஜனநாயக ரீதியான மாற்று அரசியல் செயற்பாட்டையும் அது தொடர்பான சிந்தனையையும் தடுக்கும். இது அவர்கள் சார்ந்த குடும்ப உறுப்பினர்களின் சுதந்திர நடமாட்டத்தைக் பாதிக்கும்.

அது மாத்திரமல்ல தற்போது மறைமுகமாகப் படையினரும் புலனாய்வுப் பிரிவினரும் இயங்குகின்ற நிலையில் முன்னாள் போராளிகளின் தகவல்கள் திரட்டும் செயற்பாடு நேரடியாகவே அரச படைகள் தமிழர்களைக் கண்காணிப்பில் வைத்திருக்கவும், தமிழர்கள் வாழும் கிராமங்களைத் திறந்த வெளி புனர்வாழ்வு கிராமங்களாக்கவும் பேரினவாதம் முயற்சிக்கலாம். இது உடனே தடுத்து நிறுத்தப்படல் வேண்டும் என தெரிவித்துள்ளார்.