போர்க்குற்றவாளியை ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்திற்கு அனுப்பியமை தொடர்பில் விசனம்

ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழு அமர்வில் பங்கேற்கும் இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகள் தொடர்பில் கேள்விக்குரிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஜெனீவாவில் தற்போது நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்திற்கு இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் 28 உறுப்பினர்கள் கொண்ட குழுவில் ஒரு உறுப்பினராக தேசிய புலனாய்வு அமைப்பின் தலைவர் மேஜர் ஜெனரல் ருவன் ஜீவக குலதுங்க கலந்துகொள்கின்றார்.

மேஜர் ஜெனரல் குலதுங்க, பிரித்தானியாவை தளமாகக் கொண்டு இயங்கும் செனல் 4 தொலைக்காட்சியில், போர் குற்றங்கள் குறித்து இலங்கையில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் அமைப்பு (JDS) மறுக்க முடியாத சாட்சிகளை ஒளிபரப்பிய பின்னரும் இலங்கை இஐராணுவம் போர் குற்றங்கள் ஏதும் செய்யவில்லை என மறுத்த இராணுவ விசாரணை சபையின் ஒரு உறுப்பினராக இருந்தார்.

இலங்கையில் “தொடர்ச்சியாக மிகவும் கொடூரமான சித்திரவதை” செய்யும் ஒரு இராணுவ முகாமை நடத்திய குற்றச்சாட்டில் ஜீவக ருவன் குலதுங்க மற்றும் வேறு நால்வர் விசாரிக்கப்பட வேண்டுமென கடந்த 2017ஆம் ஆண்டு, உண்மை மற்றும் நீதிக்கான சரவதேச செயல் திட்டம் (ITJP) கோரியிருந்தது.

குறிப்பிட்ட அந்த முகாம் ஜோசப் முகாம் என்றழைக்கப்பட்ட வவுனியாவிலிருந்த பாதுகாப்பு படை முகாமாகும் (SFHQ/W). மோசமான சித்திரவதை மற்றும் பாலியல் வன்செயலுக்காக அறியப்படும் அந்த முகாமிற்கு 2016-17ஆம் ஆண்டுகளில் மேஜர் ஜெனரல் தலைவராக இருந்தார்.

தற்போது ஜெனீவாவில் கூடிய மனித உரிமைகள் குழு 2016ஆம் ஆண்டு தொடர்பில் இலங்கையிடம் நேரடியாக கேள்வி எழுப்பியிருந்தது.