மட்டக்களப்பை சிறந்த சுற்றுலாத் தளமாக மாற்றும் நடவடிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த காணிகளை அடையாளம் காணும் கலந்துரையாடல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று (30) நடைபெற்றது.

இதன்படி, மட்டக்களப்பு மாவட்டத்தில் வெருகல் ஆறு தொடக்கம் மட்டக்களப்பு வரையான அரச மற்றும் தனியார் துறையினருக்கு சொந்தமான கரையோர காணிகளை அடையாளம் காண்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இப்பிரதேசத்தை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்து மட்டக்களப்பை 2023 ஆம் ஆண்டில் சிறந்த சுற்றுலாத் தலமாக மாற்றுவது இதன் நோக்கமாகும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜூம் ஊடாக நடைபெற்ற கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் கே கருணாகரன் உட்பட பிரதேச செயலாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க, சுற்றுலா மற்றும் காணி அமைச்சின் செயலாளர் டபிள்யூ.ஏ.சூலானந்த பெரேரா, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆர்.எம்.சி.எம். ஹேரத் மற்றும் நிறுவனங்களின் தலைவர்கள் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.