மாதவனை, மயிலத்தமடு மேய்ச்சல் தரைகளுக்கு பெரும்பான்மை இனத்தவரால் கிருமிநாசினிகள் விசிறி தீ வைப்பு

மட்டக்களப்பு – மாதவனை, மயிலத்தமடு பகுதியில் பெரும்பான்மை இனத்தவரால் கால்நடைகளின் மேச்சல்தரையினை பரக்குவாட் போன்ற களைநாசினிகளை விசிறி, தீ வைத்து வருவதாக கால்நடை பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் பண்ணையாளர்கள் மேலும் தெரிவிக்கையில்,

காணி ஆக்கிரமிப்பாளர்கள், தாம் அபகரித்த காணிகளில் பயிர் செய்கையினை மேற்கொண்டு வருவதுடன், அருகிலுள்ள வேறு மேச்சல்தரை காணிகளையும் அபகரிக்கும் நோக்குடன் புற்தரைகளையும், காடுகளையும் தீயிட்டு அழித்து வருகின்றனர்.

இச்சம்பவம் கடந்த 14ம் திகதி புதன்கிழமை தொடக்கம் இடம் பெற்று வருகின்றது. இதனை வனலாகா, வன ஜீவராசிகள் திணைக்களம் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை.

பரக்குவாட் களைநாசினி விசிறிய புல் தரையில் தமது கால்நடைகள் மேய்வதால் சில மாடுகள் நோய்வாய்பட்டுள்ளதாகவும் பண்ணையாளர்கள் கூறுகின்றனர்.

தமிழரசுக் கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டும் – ரெலோ செயலாளர் நாயகம் கோ.கருணாகரம் எம்.பி

தமிழ் மக்களுக்காக நீண்டகாலமாக பயணிக்கும் தாய்க் கட்சி தாங்கள்தான் என்று சொல்லும் தமிழரசுக் கட்சியினர், உங்களுக்குள் ஒற்றுமையைக் கொண்டு வந்து தமிழ் தேசியக் கூட்டடைமைப் பலப்படுத்த வேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்கான அபிவிருத்திக்குழுக் கூட்டம் நேற்று (01.02.24) களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது கலந்து கொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தமிழ் மக்களுக்காக அரசியல் செய்யும் கட்சிகள், ஒன்றாக பயணிக்க வேண்டிய காலம் இதுவாகும். 2009 இற்கு முன்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பலமான ஒரு அரசியல் இருந்தது.

நாங்கள் ஆயுத ரீதியாகவும். அரசியல் ரீதியாகவும் பலமாக இருந்தோம். 2009 இற்குப் பின்பு ஆயுத ரீதியாக நாங்கள் செயற்பட முடியாத நிலை இருந்து கொண்டிருக்கும் இந்நிலையில் மிகவும் பலமாக இருக்க வேண்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு இக்காலகட்டத்தில் சிதைந்து பல்வேறு குழுக்களாக இயங்கிக் கொண்டிருக்கின்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து 2004 ஆம் அண்டிலிருந்து இலங்கைத் தமிழரசுக் கட்சி முக்கியமான கட்சியாக இருந்தது. 2023 ஆம் ஆண்டு உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்காக தமிழரசுக் கட்சி தனியாக தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பை விட்டுப் பிரிந்து சென்றார்கள்.

அப்போது கூட்டமைப்பிலிருந்து தமிழீழ விடுதலை இயக்கமும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகமும், ஏற்கனவே கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்ற ஈழமக்கள் புரட்சிகர முன்னணி, ஜனநாயக போராளிகள் கட்சி, மற்றும் தமிழ் தேசியக் கட்சி ஆகியவற்றுடன் இணைந்து பதிவு செய்யப்பட்ட ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியை நாங்கள் உருவாக்கியிருக்கின்றோம்.

2009 இங்குப் பின்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பு சிதைவடைவதற்குக் காரணமும் கூட அக்கூட்டமைப்பை பதிவு செய்யாததுதான். இந்நிலையில் தமிழரசுக் கட்சிக்குள்ளேயே ஒரு குழப்ப நிலை உருவாகியிருப்பதை நாங்கள் அனைவரும் அறிவோம்.

அக்கட்சியின் தலைவர்கூட வரலாற்றிலே வாக்களிப்பின் மூலம் தெரிவாகியிருக்கின்றார். செயலாளர் மற்றும் ஏனைய நிர்வாகங்களுக்கான தெரிவுகள் கூட நடைபெற்றிருக்கின்றது ஆனால் அது ஒழுங்காக நடைபெறவில்லை என ஒருசாரார் சொல்கின்றார்கள்.

இந்த நிலையில் ஒன்றை தமிழரசுக் கட்சி உணரவேண்டும். தாங்கள் தமிழ் மக்களுக்காக நீண்டகாலமாக பயணிக்கும் கட்சி தாங்கள்தான் தாய்க் கட்சி என்று சொல்பவர்கள், உங்களுக்குள் ஒற்றுமையைக் கொண்டு வந்து தமிழ் தேசியக் கூட்டடைமைப் பலப்படுத்த வேண்டும்.

அக்கட்சிக்கு புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்கள்கூட 2009 இற்கு முன்பு இருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று சொல்லியிருக்கின்றார்.

கல்வெட்டை இடித்து சேதப்படுத்திய குற்றச்சாட்டு-ஹென்றி மகேந்திரனுக்கு தண்டப்பணம் மற்றும் நஷ்டஈடு வழங்க உத்தரவு

அம்பாறை கல்முனை நகரில் எம்.எஸ்.காரியப்பர் வீதி என பெயரிடப்பட்ட நினைவுப்படிகத்தை இடித்து தரை மட்டமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வழக்கில் பிரதிவாதியான தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இயக்கத்தின் பிரதித் தலைவரும், கல்முனை மாநகர சபையின் முன்னாள் எதிர்கட்சி தலைவருமாகிய ஹென்றி மகேந்திரனுக்கு 1500 ரூபா தண்டபணமும் 55000 ரூபா நஷ்டஈடும் விதித்து கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2015 ஆண்டு அம்பாறை கல்முனை நகரில் எம்.எஸ்.காரியப்பர் வீதி என பெயரிடப்பட்ட நினைவுப்படிகம் ரெலோ இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஹென்றி மகேந்திரன் என்பவரால் இடித்து தரை மட்டமாக்கப்பட்டிருந்தது.இதன் பின்னர் சட்ட விரோதமாக கூட்டம் கூடியமை மற்றும் மாநகர சபைக்கு சொந்தமான உடைமையை சேதப்படுத்தியமை போன்ற குற்றச்சாட்டுக்களின் பேரில் கல்முனை பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றப் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

கடந்த 09 வருடங்களாக இவ்வழக்கு விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை(30) அன்று குறித்த வழக்கு விசாரணை கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் பாதிக்கபட்ட தரப்பினர் உட்பட ஏனைய தரப்பினரின் விடயங்களை ஆராய்ந்த நீதிவான் எம்.எஸ். காரியப்பர் வீதிப் பெயர் பலகை உடைத்த ஹென்றி மகேந்திரனை குற்றவாளியாக இனங்கண்ட மன்று 1 500 ரூபா தண்டபணமும் 55 000 ரூபா நஷ்டஈடும் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

பிரதி வாதி சார்பாக சட்டத்தரணி என்.சிவரஞ்சித் இசட்டத்தரணி என் மதிவதனன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

செய்திப் பின்னணி

வீதிப் பெயர் பலகையை இடித்துச் சேதப்படுத்திய ஹென்றி மகேந்திரன் கைது- பிணையில் செல்ல அனுமதி

கல்முனை பிரதான நெடுஞ்சாலையில் இருந்து சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்திற்கு செல்லும் பாதைக்கு கல்முனை மாநகர சபையினால் கேட் முதலியார் எம்.எஸ்.காரியப்பரின் பெயர் சூட்டப்பட்டு, கடந்த 2015.08.09ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பங்கேற்புடன் அப்போதைய முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமதினால் இவ்வீதியை திறந்து வைப்பதற்காக மாநகர சபையினால் அப்பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று நிறுவப்பட்டிருந்தது.

அதேவேளை இப்பெயர் சூட்டலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அன்றைய தினம் பிரதமரின் வருகைக்கு முன்னதாக ஹென்றி மகேந்திரன் தலைமையில் பேரணியாக சம்பவ இடத்திற்கு வந்த சிலர் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், ஹென்றி மகேந்திரன் பெரும் சுத்தியல் ஒன்றினால் குறித்த கல்வெட்டை அடித்து நொறுக்கி விட்டு சென்றிருந்தார்.

அதன் பின்னர் அப்போதைய கல்முனை மாநகர முதல்வர் நிஸாம் காரியப்பரின் பிரத்தியேக செயலாளர் ரீ.எல்.எம்.பாறூக்கினால் கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஹென்றி மகேந்திரன் கைது செய்யப்பட்டு, 75000 ரூபாவுடன் இரண்டு சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

இச்சம்பவம் தொடர்பில் கல்முனை பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட வழக்கின் தொடர்ச்சியாகவே இன்றைய தினம் விசாரணை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

“மஹிந்தவுடன் இணைய தமிழர்கள் தயாராக இல்லை” – ரெலோ செயலாளார் நாயகம் ஜனா எம்.பி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுடன் இணைந்து ஆட்சியை அமைக்க தமிழர்களோ, தமிழ் மக்களின் பிரதிநிதிகளோ எந்த விதத்திலும் தயாராக இல்லையென தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு – பட்டிருப்பில் செவ்வாய்க்கிழமை (16) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

” தமிழ் மக்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் விரும்பும் ஒரு வேட்பாளரை நிறுத்துவோமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியிருக்கின்றார்.

ஆயுதப்போராட்டம் 2009 இல் மௌனிக்கப்படும்போது ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்களையும் ஆயிரக்கணக்கான போராளிகளையும், சர்வதேசத்தின் துணைகொண்டு அழித்த ஜனாதிபதியாவார். புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை 13ஆவது திருத்தச் சட்டத்திற்கு மேலே 13 பிளஸ் கொடுப்பேன் என சர்வதேசத்திற்கு ஓர் உத்தரவாத்தத்தைக் கொடுத்து எமது மக்களையும் போராட்டத்தையும் அழித்தார்.

2009 இற்குப் பின்னர் தமிழ் மக்களின் முக்கியமான பிரதி நிதித்துவத்தைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் 18 சுற்றுப் பேச்சுவார்த்தைகளைச் செய்து, இறுதியில் ஏமாற்றிய மஹிந்த ராஜபக்‌ஷ, தமிழ் மக்களுடன் மீண்டும் பேசி ஒரு ஜனாதிபதி வேட்பாளரைக் கொண்டு வருவேன் என அ கூறினாலும், தமிழ் மக்களோ தமிழ் மக்களின் பிரதிநிதிகளோ அவருடன் இணைந்து ஓர் ஆட்சியை ஏற்படுத்துவதற்கு எந்த விதத்திலும் தயாராக இல்லை.

மேலும், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவினுடைய ஸ்ரீ லங்கா பொதுஜனப் பெரமுன கட்சியின் ஆதரவுடனேயே ஜனாதிபதியாக இருக்கின்றார்.

அதள பாதாளத்திற்குச் சென்ற இலங்கையை மீட்பதாக அவர் கூறிக்கொண்டிருந்தாலும் பொதுஜனப் பெரமுனவை விட்டு அவர் இன்னும் வெளியேறவில்லை. ஆனால், அரசியலமைப்பின் பிரகாரம் இந்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் நடாத்த வேண்டிய கட்டாயம் இருக்கின்றது.

உள்ளுராட்சிமன்றத் தேர்தலை ஜனாதிபதி ஒத்திவைத்தது போன்று ஜனாதிபதித் தேர்தலை ஒத்தி வைக்க முடியாது. இந்நிலையில் பொதுஜனப் பெரமுனவில் இருக்கின்ற பல பாராளுமன்ற உறுப்பினர்கள் ரணில் விக்ரமசிங்கவின் பக்கமும், இன்னும் சிலர் சஜித் பிரேமதாசவின் பக்கமும் சென்றிருக்கின்றார்கள்.

யாராக இருந்தாலும். இந்த நாட்டை மாறி மாறி ஆட்சி செய்தவர்கள் தமிழ் மக்களுக்கு எதுவித நன்மைகளையும் செய்யவில்லை” என தெரிவித்துள்ளார்.

இனவாதத்தின் காரணமாகவே மயிலத்தமடு விவகாரத்திலும் அரசு பாராமுகம் – தவிசாளர் நிரோஸ்

மயிலத்தமடு மாதவனை பிரதேசத்தில் தமிழ் பண்னையாளர்களுக்கு எதிரான பேரினவாதிகளின் ஆக்கிரமிப்பை அரச இயந்திரம் தடுக்கவில்லை. மாறாக அதற்கு ஒத்துழைப்பாகவே இருக்கின்றது என்பதனை வெளிப்படுத்துவதற்கு சகல இடங்களிலும் எதிர்ப்பு நடவடிக்கையினை முன்னெடுக்க வேண்டியுள்ளதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) யாழ் மாவட்ட அமைப்பாளர்வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஸ் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தின் மயிலத்தமடு மாதவனை பிரதேசத்தில் இடம்பெறும் திட்டமிட்ட சிங்களப் போரினவாத ஆக்கிரமிப்பிற்கு எதிராக நாம் போராடுகின்றோம். வரலாற்று ரீதியில் எமது மக்களின் நிலங்கள் திட்டமிட்ட பௌத்த சிங்கள மயமாக்கத்திற்கு உட்பட்டே வருகின்றன. அதற்கு அரச இயந்திரமும் ஒத்துழைப்பாக இருந்து வருகின்றது. இலங்கையை இனவாதமற்றதாக அரசாங்கம் வெளியுலகிற்குக் காட்ட எத்தனிக்கும் அதேவேளை ஆரவாரமற்ற வன்முறைகளின் ஊடாக தமிழ் மக்களின் பூர்வீகத்தினையும் அவர்களது பொருளாதாரத்தையும் அழித்து வருகின்றது.

மயிலத்தமடு விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்புக்கள் நடைமுறைப்படுத்தப்படவில்லை. கால்நடைகள் வன்முறையான மிகக் கொடூரமான முறையில் கொல்லப்படுகின்றன. பண்னையாளர்கள் தமிழ் மக்கள் என்ற காரணத்தின் அடிப்படையில் அவர்கள் அதிகார பலத்துடன் பேரினவாத நிகழ்ச்சி நிரல் முன்னெடுக்கப்படுகின்றது.

 கிழக்கு மாகாணத்தின் ஒரு பகுதியில் நடைபெறும் ஆக்கிரமிப்பு அல்ல இப்பிரச்சினை. அடிப்படையில் தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் இனவாத நிகழ்ச்சி நிரலுடனான ஆக்கிரமிப்பு. நாம் வடக்குக் கிழக்கு எமது தாயகம் என்ற வகையில் இன்று யாழில் இவ் ஒடுக்குமுறைக்கு எதிர்ப்பினை வெளிக்காட்டியுள்ளோம். தொடர்ந்தும் மயிலத்தமடுவில் போராடும் மக்களுக்கு ஆதரவாக சகல பிரதேசங்களிலும் வெளியுலகின் கவனத்தினை ஈர்ப்பதற்கான பிரதான பிரச்சினைகளில் ஒன்றாக பலதரப்பட்ட போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய பொறுப்பு உள்ளது என்றார்.

மட்டக்களப்பு பண்ணையாளர்களுக்கு நீதி கோரி யாழில் போராட்டம்

மட்டக்களப்பு பண்ணையாளர்களுக்கு நீதி கோரி இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இன்று பிற்பகல் நல்லூர் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்திற்கு முன்பாக தமிழர் ஒருங்கிணைந்த கட்டமைப்பின் ஏற்பாட்டில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்களான த.சித்தார்த்தன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள், சைவ மகா சபையினர், மதத்தலைவர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்களால் இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் இடம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு – மாதவனை, மயிலத்தமடு பகுதிகளில் இடம்பெறும் மிருக வதைக்கு எதிராக போராட்டம்

மட்டக்களப்பு – மாதவனை, மயிலத்தமடு பகுதிகளில் இடம்பெறும் மிருக வதை மற்றும் நில ஆக்கிரமிப்புக்கு எதிராக போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தென்கயிலை ஆதீனம் தவத்திரு அகத்தியர் அடிகளின் தலைமையில் இந்த போராட்டத்திற்கு ஊடக அறிக்கை மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மட்டக்களப்பு – மாதவனை, மயிலத்தமடு மேய்ச்சல் தரையில் அத்துமீறி குடியேறவும் பயிர்செய்யவும் முனையும் ஆக்கிரமிப்பாளர்கள் தொடர்ச்சியாக அங்கு மேய்ச்சலில் ஈடுபடும் பசுக்களுக்கும் காளைகளுக்கும் துயரங்களை ஏற்படுத்தி வருகின்றனர்.

வெங்காய வெடி வைத்து அவற்றின் வாயில் கொடும் காயங்களை ஏற்படுத்தி அவை உணவு உண்ணக்கூட முடியாத, வார்ததையால் வடிக்க முடியாத கொடுமைகளை வாயில்லா ஜீவன்களுக்கு ஏற்படுத்தி வருகின்றனர்.

அதனை விட சுட்டும், வெட்டியும், மின்சாரம் பாய்ச்சியும் இந்த பசுக்களுக்கும் காளைகளிற்கும் ஏற்படுத்தப்பட்டு வரும் கொடுமைகள் பூரணமாக நிறுத்தப்பட வேண்டும்.

அரசினால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளும், நீதிமன்றத் தீர்ப்புக்களும் முறையாக அமுல் செய்யப்படுவது உறுதிப்படுத்தப்பட்டு, பட்டி மேய்ச்சல் தரைகளிலிருந்து அனைத்து சட்டவிரோதிகளும் அகற்றப்பட வேண்டும்.

மேய்ச்சல் நிலத்தில் எந்தவொரு பிற நடவடிக்கைளும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்

இவற்றை ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தின் குரலாக ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பாக அரச இயந்திரத்திற்கு ஆணித்தரமாக வலியுறுத்துகின்றோம்.

சொல்லொணாத் துயரை சந்திதுள்ள கிழக்கின் பண்ணையாளர்களையும் பசுக்களையும் பாதுகாக்க அனைவரும் அணி திரள்வோம்.

மட்டக்களப்பு சீயோன் ஆலய விஜயத்தின் போது கடும் மன உளைச்சலுக்குள்ளானதாக அமெரிக்க தூதுவர் தெரிவிப்பு

2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞயிறு தாக்குதலின் போது பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்கு சென்றபோது தனக்கு கடும் மன உளைச்சல் ஏற்பட்டதாக அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குள்ளான மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்கு அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

விஜயம் குறித்து அமெரிக்கத் தூதுவர் தனது X தளத்தில் குறிப்பிடுகயைில்,

நான் சீயோன் தேவாலயத்திற்குச் சென்று, 2019 இல் இடம்பெற்ற அந்த பயங்கரமான நாளின் தாக்கம் குறித்து போதகர் ரோஷன் மகேசனுடன் கலந்துரையாடியதில் எனக்கு கடுமையான மனஉளைச்சல் ஏற்பட்டது. இங்கு கொல்லப்பட்ட 25 க்கும் மேற்பட்ட குழந்தைகளால் சமூகம் மேம்படுவதற்கான ஒரு குணப்படுத்தும் ஆதரவைப்பெற்றுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங், தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு குழு உறுப்பினர்களை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

மட்டக்களப்பு பிரதேசத்தில் நிலவும் நிலப்பிரச்சனைகளைத் தீர்ப்பதிலும் சமூக ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதில் தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு குழு உறுப்பினர்களின் ஒருங்கிணைந்த பங்கு குறித்து பாராட்டுதல்களை தெரிவித்துள்ளார்.

சமூகங்களுக்கிடையில் இனவாத பதற்றங்களை தணிப்பதில் அவர்கள் பகிர்ந்துகொண்ட விடயங்கள் இலங்கையின் வெற்றி மற்றும் பன்முகத்தன்மைக்கு முக்கிய சான்றாகும் எனத் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நிறுவப்பட்டுள்ள யேசு சபையைச் சேர்ந்தவரும் இலங்கை “கூடைப்பந்தாட்டத்தின் தந்தை” என்று அழைக்கப்படுபவருமான அமெரிக்காவில் பிறந்த யூஜின் ஜோன் ஹெபர்ட்டின் சிலையை அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங் பார்வையிட்டுள்ளார்.

கடந்த 1948 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் லூசியானாவிலிருந்து இலங்கை வந்த யேசு பையைச் சேர்ந்த யூஜின் ஜோன் ஹெபர்ட், மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரி கூடைப்பந்தாட்ட அணியை தேசிய சாம்பியன்ஷிப்களுக்கு வழிநடத்தினார். அப்போதும் அருட்தந்தை யூஜின் ஜோன் ஹெபர்ட், கூடைப்பந்து விளையாட்டை சமூகங்களை இணைக்கவும் புரிந்துணர்வை வளர்க்கவும் ஒரு இராஜதந்திர கருவியாகப் பயன்படுத்தினார் என்று அமெரிக்கத் தூதுவர் ஜுலிசங் தனது X தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மற்றும் அமெரிக்காவின் 75 வருட கூட்டாண்மை இலங்கையர்களுக்கு எவ்வாறான வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது என்பதை ஆராய்வதற்காக அமெரிக்கதூதுவர் ஜுலிசங் மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

அங்குள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் பிரகாசமான எதிர்காலத்தை உறுதி செய்வதற்கும் அதில் இருந்து படிப்பினைகளை கற்றுக்கொள்வதற்கும், முன்னேறுவதற்கும், ஒன்றாக இணைந்து செயல்படுவதற்கும் காணப்படும் வாய்ப்புகளை மட்டக்களப்பு மற்றும் அம்பாறையில் உள்ள இலங்கையர்களிடம் இருந்து இனங்கண்டு பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த உறுப்பினர்களுடன் ஒன்று சேரந்து ஈடுபட ஆவலுடன் காத்திருப்பதாகவும் அமெரிக்கத் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

சமாதான நீதவான்கள் 22 பேர் ரெலோ செயலாளர் நாயகம் ஜனா எம்.பியால் நியமனம்

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தேசிய அமைப்பாளரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா அவர்களினால் இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் 22 பேருக்கு முதற்கட்டமாக சமாதான நீதவான் பதவி நியமனம் வழங்கி வைக்கப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர்களின் சிபாரிசின் அடிப்படையில் வழங்கப்படுகின்ற இச் சமாதான நீதவான் பதவியானது கோ.கருணாகரம் ஜனா அவர்களினால் சிபாரிசு செய்யப்பட்ட சிலரில் சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டவர்களுக்கான நியமனத்தினை இன்றைய தினம் அவர் வழங்கி வைத்தார்.

இதன்போது பா.உ ஜனா கருத்துத் தெரிவிக்கையில்,

பலரின் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் தற்போது உங்களுக்கு இந்த நியமனம் கிடைக்கப்பெற்றுள்ளது. இதனை மக்களைக் கருத்திற்கொண்டு சேவையாற்ற வேண்டும். இதனை வருமானம் ஈட்டும் செயற்பாடாகக் கருதாமல் மக்களின் குறைகளை நிவர்த்திக்கக் கூடியவாறு செயற்பட வேண்டும். இதன் கௌரவத்தினைப் பாதிக்காத வண்ணம் உங்கள் நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு எதிரான முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

நாட்டில் சட்டம், ஒழுங்கை அமுலாக்குவதற்கும், அமைதியைப் பேணிக்காப்பதற்காகவும் உரிய நடவடிக்கைகள் பாரபட்சமின்றி முன்னெடுக்கப்படும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

அம்பிட்டிய சுமணரத்ன தேரர் விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

“அம்பிட்டிய சுமண தேரருக்கு எதிராக பல்வேறு தரப்பினராலும் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதனடிப்படையில் காவல்துறையினர் விசேட விசாரணைகளை முன்னெடுத்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளனர்.

ஆகவே, வீணான சந்தேகங்களை வெளியிட வேண்டிய அவசியம் யாருக்கும் இல்லை.” என்றார்.