மயிலந்தனை படுகொலை 31 ஆம் ஆண்டு நினைவுநாள் அனுட்டிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் மயிலந்தனை கிராமத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று புதன் கிழமை (9) ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் இடம்பெற்றது.

உயிர் நீத்தவர்களின் நினைவாக ஆலயத்தில் விசேட பூஜைகள் இடம்பெற்று, பொதுச் சுடரேற்றி மலர் அஞ்சலி செலுத்தியதுடன் உணர்வு பூர்வமாக நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.

நினைவேந்தல் உரையினை ஆலய பிரதம குரு சிவஸ்ரீ குகன் மற்றும் வடக்கு கிழக்கு ஓருங்கிணைப்பு குழுவின் செயற்பாட்டாளர் கண்டுமணி லவகுகராசா ஆகியோர்கள் நிகழ்த்தினார்கள்.

இதன்போது ஜனாதிபதி அவர்களுக்கு படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்ப உறவுகளுக்கு நீதி கோரிய மகஜர் ஒன்றும் அனுப்பிவைக்கப்பட்டது.

கடந்த 9.8.1992 ஆம் ஆண்டு அன்று புனானை மயிலந்தனை கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள்,பெண்கள் உட்பட 39 பேர் வெட்டியும் சுடப்பட்டும் படுகொலை செய்யப்பட்டனர்.34 பேர் காயமடைந்தனர்.

நேரில் கண்ட சாட்சியங்களின் அடிப்படையில் புணானை இராணுவத்தினரே இப் படுகொலையை நிகழ்த்தியதாக தெரிவித்து வழக்கு தொடுக்கப்பட்டது.

அப்போது இடம்பெற்ற அடையாள அணிவகுப்பில் 24 இராணுவத்தினர் அடையாளம் காட்டப்பட்டனர்.

வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட எந்த ஒரு இராணுவத்தினரும் குற்றம் இழைக்கவில்லை என தீர்ப்பளிக்கப்பட்டது.மேன் முறையீடு செய்வதற்கு அப்போதிருந்த சட்டமா அதிபர் ஒப்புதல் அளிக்கவில்லை. எனவே 2002 நவம்பர் 27 இல் குற்றம் சாட்டப்பட்ட இராணுவத்தினர் விடுதலை செய்யப்பட்டனர்.

எனவே மீளவும் நீதிக்க ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பதாக பாதிக்கப்பட்டோர் தெரிவிக்கின்றனர்.