மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது சிக்கலை ஏற்படுத்தியவர் சுமந்திரனே – நீதியமைச்சர் குற்றச்சாட்டு

மாகாண சபைத் தேர்தல் முறைமை திருத்த விவகாரத்தில் அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எம்.ஏ.சுமந்திரன் கடும் அழுத்தம் பிரயோகித்தார்.மாகாண சபை தேர்தல் பிற்போடப்பட்டு மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளமைக்கு எம்.ஏ.சுமந்திரன் பொறுப்புக் கூற வேண்டும் என நீதி,சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (19) இடம்பெற்ற சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சபையில் உரையாற்றுகிறாரா அல்லது பிரதேச சபையில் உரையாற்றுகிறாரா ? என்பதை அறியவில்லை.உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை சுட்டிக்காட்டி உரையாற்றினார்.அவரது உரையில் விரக்தி மாத்திரமே எதிரொலித்தன.

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் தொடர்பில் இவர் சபையில் உரையாற்றுகையில் ‘உயர்நீதிமன்றம் வீட்டுக்கு செல்ல வேண்டும் ‘ என்று இவர் குறிப்பிட்டார்.இவர்களுக்கு சார்பான தீர்ப்பு கிடைக்கும் போது சபைக்கு வந்து உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அப்பாற்பட்டு செல்ல கூடாது என்று குறிப்பிடுகிறார்.ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு.

இதன்போது எழுந்து ஒழுங்கு பிரச்சினையை எழுப்பிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ‘உயர்நீதிமன்றத்தின் குறை நிறைகளைச் சுட்டிக்காட்டும் உரிமை எமக்கு உண்டு.அன்று குறிப்பிட்ட விடயத்துக்கும்,இன்று குறிப்பிடும் விடயத்துக்கும் இடையில் பரஸ்பர வேறுபாடுகள் உண்டு.நான் அன்று குறிப்பிட்ட கருத்தில் எவ்வித மாறுப்பாடும் கிடையாது என்றார்.

தொடர்ந்து உரையாற்றிய நீதியமைச்சர், மாகாண சபைத் தேர்தல் முறைமை திருத்தம் தொடர்பில் உயர்நீதிமன்றம் முன்வைத்த திருத்தங்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை.சிறந்த சட்ட வரைபை நாங்கள் தயார் செய்து முன்வைத்தோம்.உயர்நீதிமன்றத்தின் திருத்தங்கள் சட்டத்தில் உள்வாங்கப்படவில்லை.நல்லாட்சி அரசாங்கத்தின் இந்த செயற்பாடுகளுக்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன்.

மாகாண சபைத் தேர்தல் முறைமை திருத்தம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழுத்தம் பிரயோகித்தார்.இதனால் மாகாண சபைத் தேர்தல் பிற்போடப்பட்டு மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளது.இதற்கு எம்.ஏ.சுமந்திரன் பொறுப்புக் கூற வேண்டும்.ஆகவே நீங்கள் தான் ( சுமந்திரனை நோக்கி) நீங்கள் தான் அப்போதைய பிரதமருக்கு கடும் அழுத்தம் பிரயோகித்தீர்கள்.

இதன்போது மீண்டும் குறுக்கிட்டு உரையாற்றிய எம்.ஏ.சுமந்திரன் .நான் எதிர்க்கட்சி உறுப்பினர் நீங்கள் தான் அமைச்சரவை உறுப்பினர் ஆகவே நீங்களே பொறுப்புக் கூற வேண்டும் ‘ என்றார்.

நான் அமைச்சரவையில் இருந்தேன். சிறந்த சட்ட மூலத்தையே பாராளுமன்றத்துக்குச் சமர்ப்பித்தோம்.சட்டமூலம் குழுநிலை வேளையில் திருத்தம் செய்யப்பட்ட போது உயர்நீதிமன்றத்தின் தீர்மானங்கள் கவனத்திற் கொள்ளவில்லை.இவர்களின் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டதால் மாகாண சபைத் தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது.மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது.சிக்கலை நீங்களே (சுமந்திரனை நோக்கி) ஏற்படுத்தினீர்கள் என்றார்.