பெளத்த பிக்குகளின் பேரரசியல் அபிலாஷைகளைத் தடுக்காத வரை வெடுக்குநாறிமலை போன்ற சம்பங்கள் தொடர்ந்து அரங்கேறும்

சட்டத்துக்கு மதிப்பளிக்குமாறு ‘கொழும்பு அரசாங்கம்’ வலியுறுத்தும் வரையிலும், நாட்டின் வட, கிழக்கு மாகாணங்களில் காணிகளை அபகரிப்பதையும், இன-மதப்பரவலை மாற்றியமைப்பதையும் இலக்காகக்கொண்டு இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் இயங்கிவரும் பௌத்த பிக்குகளின் பேரரசியல் அபிலாஷைகளைத் தடுக்கும் வரையிலும் வெடுக்குநாறிமலை விவகாரத்தை ஒத்த மோதல்கள் தொடர்ந்து அரங்கேறும் என சர்வதேச நெருக்கடி கண்காணிப்புக்குழுவின் இலங்கை ஆய்வாளர் அலன் கீனன் எச்சரித்துள்ளார்.

வவுனியா மாவட்டத்தின் வெடுக்குநாறிமலையில் உள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் கடந்த 8 ஆம் திகதி சிவராத்திரி தினத்தன்று பூஜை வழிபாடுகளில் ஈடுபடச்சென்ற பக்தர்களுக்கு பொலிஸாரால் இடையூறு விளைவிக்கப்பட்டதுடன், இரவு வேளையில் வழிபாடுகளைத் தொடர முற்பட்டோர் அங்கிருந்து வலுகட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். அதுமாத்திரமன்றி ஆலயப்பூசகர் உள்ளடங்கலாக எண்மர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.

அவர்கள் 19 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றைய தினம் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டதுடன் அவர்களுக்கு எதிரான வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனை வரவேற்கத்தக்க செய்தி எனக் குறிப்பிட்டுள்ள சர்வதேச நெருக்கடி கண்காணிப்புக்குழுவின் இலங்கை ஆய்வாளர் அலன் கீனன், இருப்பினும் சட்டத்துக்கு மதிப்பளிக்குமாறு ‘கொழும்பு அரசாங்கம்’ வலியுறுத்தும் வரையிலும், நாட்டின் வட, கிழக்கு மாகாணங்களில் காணிகளை அபகரிப்பதையும், இன-மதப்பரவலை மாற்றியமைப்பதையும் இலக்காகக்கொண்டு இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் இயங்கிவரும் (சிறியளவிலான) பௌத்த பிக்குகளின் பேரரசியல் அபிலாஷைகளைத் தடுக்கும் வரையிலும் இவ்வாறான மோதல்கள் தொடர்ந்துகொண்டேயிருக்கும் என எச்சரித்துள்ளார்.