மாண்டெஸ் சூறாவளியால் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் கன மழை

வட மாகாணம் மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் சில பிரதேசங்களிலும் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வங்காள விரிகுடாவின் தென் கிழக்கு கடற்பிராந்தியத்தில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை, சூறாவளியாக வலுவடைந்துள்ளதால் இந்த எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூறாவளிக்கு மாண்டெஸ் (Mandous) என பெயரிடப்பட்டுள்ளது.

மன்னாரிலிருந்து காங்கேசன்துறை, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களில் மறு அறிவித்தல் வரை கடற்றொழிலுக்கு செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு கடற்பரப்புகளில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மீனவர்களை உடனடியாக கரைக்கு திரும்புமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.