மாநகர காவல் படை உருவாக்கம்: யாழ். மாநகர சபை அமர்வைப் புறக்கணித்தது ஈ.பி.டி.பி.

யாழ். மாநகர சபையின் இன்றைய அமர்வை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி புறக்கணித்துள்ளது என மாநகர சபை உறுப்பினரும் முன்னாள் முதல்வருமான யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார்.

யாழ். மாநகர சபை முதல்வரினால் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மாநகர காவல் படை தொடர்பாக தம்முடன் கலந்துரையாடப்படாமையே இந்தப் புறக்கணிப்பிற்குக் காரணமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அரசியலில் ஆர்வம் செலுத்துகின்ற இளைய தலைமுறையினருக்குச் சந்தர்ப்பத்தினை வழங்க வேண்டும் என்றே சட்டத்தரணி மணிவண்ணனுக்கு ஆதரவு வழங்குவதற்கு தமது கட்சித் தலைமை தீர்மானித்திருந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், தமது கட்சியின் ஆதரவுடன் ஆதிகாரத்தைப் பெற்றுக்கொண்டவர்கள், முக்கிய தீர்மானங்களை மேற்கொள்ளும்போது அவை தொடர்பாகத் தம்முடனும் கலந்துரையாட வேண்டியது தார்மீகக் கடமையென அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, மாநகர காவல்படை உருவாக்கம் குறித்து தம்மோடு கலந்துரையாடப்படவில்லை என்பதில் கரிசனையை வெளிப்படுத்தும் விதமாகவே இன்றைய அமர்வுகளைப் புறக்கணித்துள்ளதாக யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார்.