யாழ்.மாநகர காவல் படை சீருடையை ஒப்படைக்க காலக்கெடு – அதிகாரிகளிடம் பொலிஸார் தீவிர விசாரணை

யாழ். மாநகர காவல் படையின் சீருடைகளை காவல் நிலையத்தில் ஒப்படைக்க மாநகர சபைக்கு காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த சீருடை விவகாரம் தொடர்பில் மாநகர சபை அதிகாரிகளிடம் தீவிர விசாரணை இடம்பெற்று வருகின்றது.

யாழ்.மாநகரசபையினால் சுகாதார நடைமுறைகளை கண்காணித்தல், கழிவகற்றல் பொறிமுறையை கண்காணித்தல், மற்றும் மாநகரின் ஒழுங்கு உள்ளிட்டவற்றை கண்காணிப்பதற்காக மாநகர காவல் படை உருவாக்கப்பட்டு இன்று பரீட்சார்த் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்நிலையில் குறித்த சீருடை விடுதலைப் புலிகளின் ஆளுகைப் பகுதிகளுக்குள் காவல்துறையினர் பயன்படுத்திய சீருடையைப் போன்ற வர்ணத்தினால் வடிவமைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்த பொலிஸார் சீருடைகளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்குமாறு மாநகரசபைக்கு அறிவித்தல் விடுத்துள்ளனர்.

யாழ்.மாநகரசபை ஆணையாளர், பிரதம வருமான வரிப் பரிசோதகர் மற்றும் குறித்த காவல் படையில் பணியாற்றுவதற்காக நியமிக்கப்பட்டிருந்த மாநகரசபை ஊழியர்கள் ஐவர் உட்பட்ட ஏழு பேரையும் காவல் நிலையம் அழைத்து 3 மணி நேரத்திற்கும் மேலாக தொடர் விசாரணை நடைபெற்றுள்ளது.