மாவட்ட அபிவிருத்தி சபை உருவாக்கப்பட வேண்டும் – மைத்திரி வலியுறுத்தல்

நாடு எதிர்கொண்டுள்ள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள வேண்டுமாயின் அரசியலமைப்பினால் அதிகாரம் வழங்கப்பட்ட வகையில் மாவட்ட அபிவிருத்தி சபை உருவாக்கப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சபையில் வலியுறுத்தினார்.

மாவட்ட அபிவிருத்தி சபையை உருவாக்க தயார் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சபையில் தெரிவித்தார்.மாவட்ட அபிவிருத்தி சபையை உருவாக்க ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி முழுமையான ஒத்துழைப்பு வழங்கும்.

வடக்கு பிரச்சினைகளை தீவிரப்படுத்தாமல் பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு காண வடக்கு அரசியல்வாதிகள் அவதானம் செலுத்த வேண்டும் எனவும் சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (29) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சுகாதாரத்துறை மற்றும் புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள்,கலாசார அலுவல்கள் அமைச்சு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீட்டு குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

வடக்கு பிரச்சினைக்கு தீர்வு காணுவதாக குறிப்பிட்டுக் கொண்டு காணி விடுவிப்பு,அதிகார பகிர்பு மற்றும் மாகாண சபை தேர்தல் தொடர்பில் பேசப்படுகிறது.

எனது ஆட்சிகாலத்தில் வடக்கு மாகாணத்தில் அந்த மக்களுக்கு சொந்தமான காணிகளில் 95 சதவீதமான காணிகளை விடுவித்தேன்.தற்போது இரண்டு அல்லது மூன்று சதவீதமான காணிகள் மாத்திரமே கட்டுப்பாட்டில் உள்ளன.

வடக்கு மாகாணத்தில் கோயில் தொடர்பான பிரச்சினை தற்போது தோற்றம் பெற்றதல்ல,மிலேட்சதமான நிலைக்கு செல்லாமல் பேச்சுவார்த்தை ஊடாக நல்லிணக்க அடிப்படையில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

புத்தசாசன அமைச்சருடன் இவ்விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டு இணக்கமாக தீர்மானத்தை காண்பது அவசியமாகும்.

நாடு வரலாற்று ரீதியில் பல சவால்களை எதிர்கொண்டுள்ளது. இனங்களுக்கு இடையிலான பிரச்சினைகளுக்கு பேச்சுவார்ததை ஊடாக தீர்வு காண்பது காலத்தின் தேவையாகும்.

இலங்கை வரலாற்றில் சிங்களவர்களுக்கும். தமிழர்களுக்கும் இடையில் நல்லிணக்க தொடர்பு காணப்பட்டது என்பதை வரலாற்று சின்னங்கள் உறுதிப்படுத்துகின்றன.

மாகாணங்களுக்கு அதிகார பகிர்வு வழங்குவது நாட்டில் புரையோடிப் போயுள்ள பிரச்சினையாக காணப்படுகிறது.

மாகாணங்களுக்கு கீழான நிருவன கட்டமைப்பில் அதிகார பகிர்வு வழங்க முடியும்.மாவட்ட அபிவிருத்தி சபை முறைமை ஊடாக அதிகாரத்தை பகிர முடியும்.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தன மாவட்ட அபிவிருத்தி சபை முறைமையை கொண்டு வந்தார்,அதற்கு வாக்கெடுப்பும் நடத்தப்பட்டது.அக்காலப்பகுதியில் தான் யாழ்ப்பாணம் நூலகத்திற்கு தீ வைக்கப்பட்டது.

முன்னாள் பிரதமர் எஸ்.டப்ள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்கவின் காலத்தில் சிங்கள மொழி மாத்திரம் அரச கரும மொழியாக பிரகடனப்படுத்தப்பட்டதை தொடர்ந்து சமூக கட்டமைப்பில் முரண்பாடுகள் தோற்றம் பெற்றன இவ்வாறான நிலையில் பண்டா- செல்வா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

பண்டா- செல்வா ஒப்பந்தத்திற்கு மதகுருமார்கள் எதிர்ப்பு தெரிவித்து வீதியில் போராட்டத்தில் ஈடுப்பட்ட போது எஸ்.டப்ள்யூ,ஆர்.டி. பண்டாரநாயக்க கைச்சாத்திட்ட பண்டா- செல்வா ஒப்பந்த பிரதிகளை போராட்டத்தில் ஈடுப்பட்ட மதகுருமார்கள் முன் தீயிட்டு இந்த ஒப்பந்தத்தை முன்னெடுத்து செல்வதில்லை என குறிப்பிட்டார்.

இதன்பின்னர் டட்லி –செல்வா ஒப்பந்தம் ஊடாக பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டது ஆனால் தீர்வு எட்டப்படவில்லை.

ஜே.ஆர் ஜயவர்தன அறிமுகப்படுத்திய மாவட்ட அபிவிருத்தி சபை ஊடாக மாவட்டங்களுக்கு அரசியலமைப்பின் ஊடாக அதிகாரம் வழங்ப்பட வேண்டும்.இந்த முறைமையினால் அரசாங்கத்திற்கு மேலதிக நிதி செலவாகாது என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ,மாவட்ட அபிவிருத்தி சபையை உருவாக்க தயார் என்றார்.

இதன்போது மீண்டும் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மிக்க நன்;றி,மாவட்ட அபிவிருத்தி சபையை உருவாக்க ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி முழுமையான ஒத்துழைப்பு வழங்கும்.நாடு இன்று எதிர்க்கொண்டுள்ள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள வேண்டுமாயின் மாவட்ட அபிவிருத்தி சபை ஸ்தாபிக்க வேண்டும்.

வடக்கு மாகாணத்தில் நிலவும் அடிப்படை பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு காண முடியும்,ஆகவே பிரச்சினைகளை தீவிரப்படுத்த வேண்டாம் என வடக்கு மாகாண அரசியல்வாதிகளிடம் கோரிக்கை விடுத்தார்.