முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களிற்கு வலி கிழக்கு பிரதேச சபையில் உணர்வுபூர்வ அஞ்சலி

வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று காலை ஈகைச் சுடரேற்றப்பட்டு உணர்வு பூர்வமாக இடம்பெற்றன.

சுகாதார நிலைமைகளைக் கருத்தில் கொண்டு அச் சமயத்தில் பிரசன்னமாகியிருந்த பிரதேச சபையின் உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், பணியாளர்களுடன் மட்டுப்படுத்தப்பட்டதாக அனுஸ்டிக்கப்பட்டது.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட அமைப்பாளரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளரும் ஆன தியாகராஜா நிரோஷ் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வுகளில், போர் முடிவுறுத்தப்பட்டு 12 ஆண்டுகள் முடிவடைகின்ற போதும் தமிழ் மக்கள் கொன்றழிக்கப்பட்டதற்கு நீதி கிட்டவில்லை என்பதை நினைவு கூர்ந்து 12 நிமிடங்கள் அகவணக்கம் செலுத்தப்பட்டது. அக வணக்கத்தினைத் தொடர்ந்து பிரதேச சபையின் தவிசாளார் தியாகராஜா நிரோஷ் பொது ஈகைச்சுடரினை ஏற்றிவைத்தார்.

பிரதேச சபை வளாகத்தில் உள்ள நினைவேந்தலுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இடம் சிவப்பு மஞ்சல் கொடிகள் பறக்கவிடப்பட்டு இன ஒடுக்குமுறைக்கு எதிரான உணர்வுகள் வெளிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.