முள்ளிவாய்க்கால் நினைவுக் கல் மாயம்; நினைவுச் சின்னமும் சிதைக்கப்பட்டது

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடம்பெறும் முள்ளிவாய்க்கால் கிழக்குப் பகுதியில் உள்ள நினைவு முற்றத்தில் இருந்த நினைவுத் தூபி இன்று வியாழக்கிழமை(13) அதிகாலை சேதமாக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நடுகை செய்வதற்காக கொண்டு வரப்பட்டிருந்த பாரிய நினைவுக்கல்லும் இரவோடு இரவாக காணாமல் ஆக்கப்பட்டுள்ளது.

நேற்றுப் பிற்பகல்-06 மணியளவில் பொது நினைவுக்கல் நடுகை செய்வதற்காக முள்ளிவாய்க்கால் பகுதிக்கு கொண்டுவரப்பட்டு இறக்கி வைக்கபட்டிருந்தது. இந்த நிலையில் பொலிஸார், இராணுவம் மற்றும் புலனாய்வாளர்கள் இணைந்து விசாரணைகளில் ஈடுபட்டிருந்ததோடு நினைவுக்கல் நடுகை செய்யமுடியாது எனத் தடை ஏற்படுத்தியிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து இரவோடு இரவாக அப்பகுதி இராணுவத்தினரின் பூரண கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டிருந்ததுடன் முள்ளிவாய்க்கால் முற்றத்துக்குச் செல்லும் அனைத்து வீதிகளிலும் உள்நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையிலேயே இரவோடு இரவாக நினைவுக்கல் காணாமல் ஆக்கப்பட்டிருந்ததுடன் பொது நினைவுத்தூபியும் அடித்து உடைத்தெறியபட்டுள்ளது .

நினைவுக்கல் இருந்த இடம் தெரியாது அகற்றிச் செல்லப்பட்டுள்ளதுடன் பொது நினைவுத்தூபியும் உடைக்கப்பட்டுள்ளது. சுமார் 2000 கிலோவுக்கு அதிகமான எடையைக் கொண்ட நினைவுக்கல் கனரக வாகனங்களைக் கொண்டு அகற்றிச் செல்லப்பட்டுள்ளது.

இதேவேளை, இரவிரவாக அப்பகுதி முழுவதும் இராணுவம் குவிக்கப்பட்டிருந்ததாகவும், இராணுவ வாகனங்கள் சுற்றி திரிந்ததாகவும் அயலில் உள்ள மக்கள் தெரிவித்தனர். உடைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியைச் சூழ இராணுவ சப்பாத்து அடையாளங்களை ஒத்த அடையாளங்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.