விகாரை கட்ட அனுமதி மறுப்பு – திருமலை மாவட்ட செயலகத்தில் பிக்குகள் முற்றுகை போராட்டம்

திருகோணமலை மாவட்ட செயலகத்தை பிக்குகள் நேற்று முற்றுகையிட்டு போராடினர். அத்துடன், ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடந்த மண்டபத்துக்குள்ளும் புகுந்து களேபரத்தில் ஈடுபட்டனர்.

தமிழ் மக்கள் செறிந்து வாழும் நிலாவெளி – பெரியகுளத்தில் இடை நிறுத்தப்பட்ட விகாரையின் கட்டுமானப் பணிகளை ஆரம்பிக்க அனுமதி வழங்கக் கோரியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

விகாரை நிர்மாணத்துக்கு அனுமதி வழங்குமாறு கோரி திருகோணமலை மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு பிக்குகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விகாரை நிர்மாணத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக ஆளுநர் பிக்குகளை அழைத்து விளக்கம் வழங்கினார். ஆனால், அவர்கள் அதனை ஏற்கவில்லை.

இந்நிலையில், ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைபெற்ற மண்டபத்துக்குள் புகுந்த பிக்குகள் அங்கு குழப்பத்தை ஏற்படுத்தினர். இவர்கள் ஏற்படுத்திய குழப்பத்தால் கூட்டம் தடைப்பட்டது.

இதன்போது, “திருகோணமலை அனைத்து இன மக்களும் வாழும் ஒரு பிரதேசம். பிக்குகளின் செயற்பாடுகள் போல் ஏனைய இனத்தவரும் இவ்வாறான செயல்பாடுகளை முன்னெடுப்பார்களானால், அதற்கு நீங்களே முன்னுதாரணமாக இருப்பீர்கள் என்று ஆளுநர் கூறினார்.

இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ஆளுநர், பிரதேச செயலாளரால் வழங்கப்பட்ட கடிதத்தை மீளப்பெற்றாலும், பிரதேச சபையின் அனுமதியின்றி எந்த ஒரு கட்டுமானப் பணிகளும் முன்னெடுக்க முடியாது – என்றார்