விரைவில் யாழ். மாநகர சபைக்கு புதிய முதல்வர் தெரிவு

யாழ். மாநகர சபையின் எஞ்சியுள்ள ஆட்சிக் காலத்துக்குப் புதிய முதல்வர் ஒருவரைத் தெரிவு செய்வதற்கான கூட்டம் எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இதற்கான வர்த்தமானி அறிவித்தல், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரால் வெளியிடப்பட்டுள்ளது.

2022 டிசம்பர் மாதம், யாழ் மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வாக்கெடுப்பின் முதலாவது சமர்ப்பிப்பில் அங்கீகரிக்கப்படாததன் காரணமாக முன்னாள் முதல்வரும், சட்டத்தரணியுமான வி. மணிவண்ணன் தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார்.

இதனையடுத்து, கடந்த ஜனவரி 20 ஆம் திகதி இடம்பெற்ற முதல்வர் தெரிவில் இ.ஆனோல்ட் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

அவரது நியமனம் குறித்த கடும் சர்ச்சைகளுக்கு மத்தியில் அவர் தனது 2023 ஆம் ஆண்டுக்கான முதலாவது சமர்ப்பிப்பிப்பைக் கடந்த 14 ஆம் திகதி நடாத்தியிருந்தார். அந்த  பாதீடு சமர்ப்பிப்பு உறுப்பினர்களுக்கிடையிலான வாக்கெடுப்பில் தோற்கடிக்கப்பட்டது.

அதன் பின் பாதீட்டின் இரண்டாவது வாக்கெடுப்பு  கடந்த மாதம் 28 ஆம் திகதி இடம்பெற்றது. அந்த வாக்கெடுப்பிலும் ஆனோல்ட் சமர்ப்பித்த பாதீடு 6 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து அவர் பதவி விலகினார்.

நாட்டிலுள்ள சகல உள்ளூராட்சி சபைகளினதும் பதவிக் காலம் 2022 மார்ச் மாதம் 18 ஆம் திகதி நிறைவுக்கு வந்த நிலையில், உள்ளூராட்சி சபைகள் சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சருக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தின் படி மேலும் ஒரு வருட காலத்துக்கு – எதிர்வரும் மார்ச் 19 வரை நீடிக்கப்பட்டிருந்தன. இந்த நீடிப்பின் படி, எதிர்வரும் மார்ச் 19 வரை சபை நடவடிக்கைகளைக் கொண்டு நடத்துவதற்காகப் புதிய முதல்வர் ஒருவரைத் தெரிவு செய்வதற்காகவே தேர்தல் நடாத்தப்படவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் நாட்டிலுள்ள 340 உள்ளூராட்சி சபைகளின் ஆயுட் காலம் மேலும் ஒரு வருட காலத்துக்கு நீடிப்பது பற்றி அமைச்சரவை மட்டத்தில் ஆராயப்பட்டு வருகிறது. உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோக பூர்வ பதவிக் காலத்தை மேலும் ஒரு வருட காலத்துக்கு நீடிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரமொன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.