வெளிநாடுகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ள நாட்டின் வளங்களை மீள கொண்டு வரும் பொறிமுறை அவசியம் – சஜித் பிரேமதாச

நாட்டு வளங்களை திருடி வெளிநாடுகளில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் சொத்துக்களை நாட்டுக்கு மீண்டும் கொண்டுவர முடியுமான பொறிமுறை ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு மற்றும் தொழிலட மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுகளுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் இந்நாட்களில் தூக்கமில்லாமல் வேலை செய்வதாக தெரிவிக்கப்பட்டது. நாட்டிலிருந்து திருடப்பட்டு வெளிநாடுகளில் வைப்புச் செய்யப்பட்டுள்ளன. இந்நாட்டின் நிதி வளங்களை திருடிய தரப்பினரையும், வளங்களையும் கண்டுபிடித்து அந்த வளங்களை மீண்டும் நாட்டுக்கு கொண்டுவரும் வேலைத்திட்டத்தில் வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் தூக்கமில்லாமல் செயற்படுவதே மிகவும் பொருத்தமானது.

நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை மீறி நாட்டை வங்குரோத்தாக்கிய தரப்பினர் யார் என்பதை இலங்கை உயர் நீதிமன்றம் வெளிப்படுத்தியுள்ளது. இந்த தீர்ப்புக்கு இணங்க நாட்டிலிருந்து திருடப்பட்ட வளங்களையும் பணத்தையும் திரும்பக் கொண்டுவருவதற்கான பொறிமுறை ஒன்றை ஏற்படுத்த வேண்டும்.

அத்துடன், மனித உரிமைகளைப் பாதுகாப்பது குறித்து பேசும் தற்போதைய அரசாங்கம், கொரோனா கால கட்டத்தில் இந்நாட்டில் உள்ள இஸ்லாமிய சமூகத்தின் மனித உரிமைகளை அப்பட்டமாக மீறி தகனமா அடக்கமா என்ற பிரச்சினையைக் கையாண்டது. இப்பிரச்சினையில் தலையிட்டால் சிங்கள பௌத்த வாக்குகள் பறிபோகும் என்று கூறி இத்தகைய செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டாலும், ஐக்கிய மக்கள் சக்திக்கு இவ்வாறான கொள்கை கிடையாது. நாமெல்லோரும் இலங்கையர் என்ற கொள்கையில் முற்போக்கு தேசியவாதத்தை அடிப்படையாகக் கொண்டே செயற்பட்டு வருகிறோம்.

இந்த பிரச்சினையில் நடந்து கொள்ள வேண்டிய முறையை உலக சுகாதார ஸ்தாபனம் தெளிவாக கூறியிருந்த போதிலும் அரசாங்கத்தின் முஸ்லிம் அமைச்சர்கள் கூட சரியான நிலைப்பாட்டில் இருக்கவில்லை. தேசிய கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மாத்திரமே முஸ்லிம் மக்கள் மற்றும் இஸ்லாமிய சமூகத்தின் உரிமைகளுக்காக வீதிக்கிறங்கினோம். யார் என்ன சொன்னாலும் கோட்டாபய ராஜபக்ஷ அன்று எடுத்த தீர்மானம் முற்றாக இனவாத தீர்மானமாகும். தற்போது அதனை அனைவரும் உணர்ந்துள்ளனர். பல்வேறு மதங்களை பின்பற்றுபவர்களுக்கு அவர்களின் மத தனித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும்.

அத்துடன், வெளிநாட்டு பயணங்களுக்கு ஆட்களை அழைத்து செல்வது தொடர்பில் தெரிவிக்கப்படடது. எத்தனை பேரை அழைத்துச்சென்றாலும் அவர்களுக்கு அரசாங்கம் செலவழிக்கிறது. அவ்வாறு செலவழிக்கப்பட்டதன் பெறுபேறு என்ன என்பதை நாட்டுக்கு அறிவிக்க வேண்டும். வெளிநாடுகளுடன் செய்துகொள்ளும் ஒப்பந்தங்கள் தொடர்பில் முடியுமானால் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றார்.