மன்னார் தீவு காற்றாலை மின் உற்பத்தி சுற்றாடல் பேரழிவை ஏற்படுத்தலாம் – சஜித் பிரேமதாச

மன்னார் தீவு காற்றாலை மின் உற்பத்தி நிலையம் சுற்றாடல் பேரழிவை ஏற்படுத்தலாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரித்துள்ளார்.

நேற்று(20) நாடாளுமன்றத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

எரிசக்தி உற்பத்திக்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்களின் அதிகரித்த முதலீடு உகந்ததாக இருந்தாலும், இத்தகைய திட்டங்களை செயற்படுத்துவதில் சிறந்த மாற்று இடம் மற்றும் மிகவும் பயனுள்ள முதலீட்டு பிரதேசங்களை தெரிவு செய்வது அவசியம்.

பறவைகள் சரணாலயமாக விளங்கும் மன்னாரை அண்மித்த பகுதியில் மேற்கொள்ளப்படும் காற்றாலை மின் நிலைய நிர்மாணத் திட்டம் சுற்றாடல் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய செயற்திட்டமாகவே பல நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தி காற்றாலை மின் உற்பத்தி போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றலுடன் உடன்படுகிறது.

மேலும் டீசல் மாபியாவிற்கு இடமளிக்காது, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை நடைமுறைப்படுத்துவதில் மாற்று இடங்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டும்.

இத்திட்டத்திற்கு இதை விட பொருத்தமான பல இடங்கள் உள்ளன என்பதை விஞ்ஞான ஆய்வுகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இது குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகளை நாம் அடுத்த வாரம் சந்திக்க உள்ளோம் – சஜித் பிரேமதாச

இந்நாட்டில் சிசுக்கள், குழந்தை மற்றும் தாய்மார்களது ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்துள்ள. 2022 இல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், 5-18 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 25% எடை குறைந்த குழந்தைகள் என்பது தெரிய வந்துள்ளது. இதுபோன்ற இன்னும் பல புள்ளி விவரங்கள் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து வருவதாகவும், தாய்மார்களும் குழந்தைகளும் ஊட்டச் சத்து குறைபாட்டால் பாதிக்கப்படக்கூடிய குழுவாக மாறிவருவதனை எடுத்துக் காட்டுகின்றன.

அடுத்த சில நாட்களில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளை ஐக்கிய மக்கள் சக்தி சந்திக்கவுள்ளதால், இந்நாட்டில் தாய்மார்கள், சிசுக்கள், குழந்தைகள் மற்றும் பாடசாலை பிள்ளைகளின் ஊட்டச்சத்து குறைபாடு நிலையை உடனடியாகப் போக்க சர்வதேச நாணய நிதியத்தின் விசேட ஒத்துழைப்பு வேலைத்திட்டம் தேவை என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியம் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் பிற நிதி நிறுவனங்களை ஒன்றிணைத்து ஒரு சிறப்பு நிதயத்தை நிறுவி,இந்த போசாக்கின்மை நிலையிலிருந்து விடுபட விசேட தேசிய வேலைத்திட்டமொன்று தேவை. ஊட்டச்சத்து குறைபாட்டின் வளர்ச்சி ஒரு தீய சுழற்சியை உருவாக்குதற்கு சமன். இது நாட்டின் உற்பத்தித் திறனில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

அனைத்து அரச பாடசாலைளிகளிலும் அனைத்து மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்கும் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். நாட்டின் எதிர்காலம் சிறுவர்கள் என்பதால் அவர்களின் ஆரோக்கியம் பாதுகாக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத் திட்டத்தின் 1120 ஆவது கட்டமாக, 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள்,கம்பஹா,தொம்பே,மல்வான மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வில் செவ்வாய்க்கிழமை (12) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பாடசாலைகள் மூடப்படுவதையும் சிறைச்சாலைகள் திறப்பதையும் தடுப்பதற்காகவே தனது இந்த முயற்சியை முன்னெடுத்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஒரு நாட்டின் பாடசாலை கட்டமைப்பு வலுப்பெறும் போது சிறைச்சாலைகள் மூடப்படுகிறது.பாடசாலை கட்டமைப்பை வலுப்படுத்துவதே பிரபஞ்சம் திட்டத்தின் பிரதான நோக்கம். நவீனத்துவ, ஸ்மார்ட் கல்வியை வழங்குவதே ஐக்கிய மக்கள் சக்தியின் ஒரே நோக்கம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

தற்போதுள்ள வங்குரோத்து நிலையில் இருந்து மீள, சரியான பயணப் பாதையில் பயணிக்க வேண்டும். நாடு அனுபவித்த அவலத்தை அடுத்த தலைமுறைக்கு வழங்கக் கூடாது. அடுத்த சந்ததியினருக்கு சிறந்த நாட்டை உருவாக்கிக் கொடுப்பதே எமது நோக்கமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

உலகம் புதிய தொழில்நுட்பத்துடன் அபிவிருத்தியடைந்து வரும் நிலையில், அந்த புதிய தொழில்நுட்பத்தை இந்நாட்டில் கல்விக்கு வழங்காமல் இருப்பது பாடசாலை மாணவர்களின் மனித உரிமைகளை மீறும் செயற்பாடாகும் என அவர் மேலும் தெரிவித்தார்

மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீட மகாநாயக்கர்களைச் சந்தித்த சஜித் பிரேமதாச

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஞாயிற்றுக்கிழமை (25) கண்டியில், மல்வத்து மகா விகாரையின் மகாநாயக்க தேரர் திப்படுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர், மல்வத்து பீடத்தின் அனுநாயக்க திம்புல் கும்புரே ஸ்ரீ விஜய தம்ம தேரர், அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரர் மற்றும் அஸ்கிரி பீடத்தின் பிரதான ஆவணக் காப்பாளர் மெதகம தம்மானந்த தேரர்களை சந்தித்து,நலன் விசாரித்து தனது எதிர்கால அரசியல் பயணத்திற்கு ஆசிகளைப் பெற்றுக் கொண்டார்.

இந்த வங்குரோத்து நிலையில் இருந்து நாட்டை மீட்பதே எமக்கு உள்ள ஒரே சவால்

ஐக்கிய மக்கள் சக்தி ஏனைய அரசியல் கட்சிகள் முன்வைக்கும் விடயங்களுக்கு பதிலளிக்காமல், நாட்டின் வங்குரோத்து நிலையுடன் இந்நாட்டில் பெண்கள் தலைமையிலான ஏனைய சமூகம் எதிர்நோக்கும் பாரதூரமான அவல நிலைக்கு பதில்களையும் தீர்வுகளையும் வழங்கவே செயற்படுகின்றது. பெண்களை பலர் மறந்துவிட்ட இந்த வேளையில், இன்று நேற்றல்ல 2019 ஆம் ஆண்டிலயே பெண்களுக்கான சாசனம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் நீட்சியே நேற்றைய நிகழ்வு என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்நேரத்தில் நாட்டின் மிகப்பெரிய சவாலாக இருப்பது வறுமையை ஒழித்து பொருளாதார அபிவிருத்தி விகிதத்தை அதிகரிப்பதும், தகவல் தொழில்நுட்ப கனவை எவ்வாறு நனவாக்குவது என்பதுமே ஆகும். அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் பொருளாதார வளர்ச்சியை செயல்படுத்துவது சவாலானது. ஏனைய கட்சிகளின் சவால்கள் தமக்கு பாதகமாக அமையாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பெண்களுக்கு பக்க பலத்தை வழங்கும் முகமாக சமூக ஒப்பந்தம்

2019 ஜனாதிபதித் தேர்தலைப் போலவே, பெண்களை உள்ளடக்கிய சமூக ஒப்பந்தத்தை உருவாக்கும் ஆரம்ப நிகழ்வை கண்டியில் ஆரம்பித்தார். இங்கு பெண்களின் பொருளாதார, சமூக, அரசியல் உரிமைகள் உறுதிப்படுத்தப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நமது நாட்டில் ஆண் இல்லாத 16 இலட்சம் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் இருப்பதாகவும், அவர்களுக்காக விசேட பொருளாதார மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், வீட்டின் முக்கிய வருமானம் ஈட்டுபவர் என்பதுடன், இல்லத்தரசி தனது குழந்தைகளின் எதிர்காலத்திற்கு தீங்கு விளைவிக்காமல் வீட்டிலிருந்தவாறே ஒரு தொழிலிலும் ஈடுபடலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

திக்வெல்ல பத்தேகம பிரதேசத்தில் குறிப்பிட்ட பெண் ஒருவர் ஜேர்மனிக்கு தென்னை நாரினால் ஆன விரிப்புகளை ஏற்றுமதி செய்வது போன்று ஏனைய பெண்களுக்குத் தேவையான பயிற்சிகளை வழங்குவதன் மூலம் இந்த இலக்கை அடைய முடியும். பிரதேச செயலாளர் மற்றும் உப பிரதேச செயலாளர் எல்லைகளில் மகளிர் மேம்பாட்டு மையங்களை நிறுவி இந்நாட்டு பெண்களுக்கு கணினி பயிற்சி, தகவல் தொழில்நுட்பம், தொழில்முனைவு, சுயதொழில் அறிவு போன்றவற்றை வழங்க முடியும். இதன் மூலம் குடும்ப வருமானத்தை அதிகரிக்க முடியும் எனவும், அதற்கு பெரிய பொருளாதார கோட்பாடுகள் தேவையில்லை எனவும் எதிர்கட்சி தலைவர் சுட்டிக்காட்டினார்.

பாடசாலை மாணவர்களுக்கு கூடிய முன்னுரிமை

தற்போது பிள்ளைகள் மிகவும் ஆதரவற்ற நிலையில் இருப்பதால், ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் முதல் பணியாக பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படும். சரியான பாதுகாப்பு வழிமுறைகள் பொருத்தப்பட்ட ஒரு ஸ்மார்ட் சாதனம் வழங்கப்படும். இதனூடாக புதிய தகவல்கள் மற்றும் தரவுகளை அணுக முடியும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

உலகளாவிய தொழிலாளர் சந்தைக்கு திறமையான தொழிலாளர்கள்

வீட்டு பணிப் பெண் துறையில் மட்டும் தங்கியிருக்காமல் அவர்களுக்கு பெண்களுக்கு பயிற்சி அளித்து, இதன் மூலம் திறமையான தொழிலாளர்களாக வெளிநாட்டு வேலைகளுக்கு அவர்களை வழிநடத்த முடியும். இந்தியாவைப் போன்று ஒரு தகவல் தொழில்நுட்ப புரட்சியை ஏற்படுத்த முடியும் என்றும் அதன் மூலம் உலக சந்தைக்கு ஏற்ற பயிற்சி பெற்ற தொழிலாளர்களை அனுப்ப முடியும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பிரபஞ்சமும் மற்றும் மூச்சும் மிகவும் வெற்றிகரமான செயற்திட்டங்களாகும்

இந்தத் திட்டங்களுக்கு மேலதிகமாக, பிரபஞ்சம் பேருந்துத் திட்டம், பிரகஞ்சம் ஸ்மார்ட் வகுப்பறைத் திட்டம் மற்றும் மூச்சுத் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் கீழ் தம்புத்தேகம தேசிய பாடசாலைக்கு கூட பஸ் வழங்கப்பட்டன. திருகோணமலையில் ஜனாதிபதி கலந்து கொண்ட ஜம்போரிக்குக் கூட அந்தப் பாடசாலையின் பிள்ளைகள் குறித்த பேருந்துலயே சென்றதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நாட்டில் 99.999% ஆசிரியர்கள் பிள்ளைகளை நேசிக்கும் ஆசிரியர்களே,ஆனால் மிகக் குறைந்த எண்ணிக்கையிலானவர்களே அரசியல் நிலைப்பாடுகளை முன்வைத்து இந்த திட்டத்தை தோல்வியடையச் செய்ய பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். 76 வருட அரசியல் வரலாற்றில் அதிகாரம் இல்லாமல் இந்த மூன்று திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டது இதுவே முதற் தடவை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

IMF ஒப்பந்தத்தில் திருத்தங்களை மேற்கொள்வோம்

தற்போதைய மக்கள் ஆணையற்ற அரசாங்கம் மக்களுக்கு பாதகமான ஒப்பந்தமொன்றையே சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டியுள்ளது.ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் இது திருத்தப்படும். கூடிய சலுகையும் மிகக் குறைந்த அழுத்தமும் ஏற்படக் கூடிய வகையில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நாட்டில் ஏறக்குறைய 40 சதவீதமான மக்கள் வறுமையில் வாடுகின்றனர், LIRNEasia கணக்கெடுப்பின்படி, ஏழ்மையடைந்தோர் எண்ணிக்கை 40 இலட்சம் அதிகரித்து 30 இலட்சத்தில் இருந்து 70 இலட்சமாக அதிரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது

இதனால், நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறையினர் மிகவும் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பரேட் சட்டத்தின் மூலம் அவர்களின் சொத்துக்கள் ஏலம் விடப்பட்டு வருகின்றன. வங்கி முறைமைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த நிலைமையும் கட்டுப்படுத்தப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் மக்கள் விரோத பிற்போக்குத்தனமான கூறுகள் அகற்றப்பட்டு மக்கள் சார்பான கருத்துக்கு கொண்டு வரப்பட்டு சாதகமாக திருத்தப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

நாட்டுக்கு கொள்கையே முக்கியம்!

நாட்டிற்கு தனிமனிதர்களை விடுத்து, கொள்கைகள், வேலைத்திட்டங்கள், செயற்பாடுகள் என்பனவே முக்கியம்.ஐக்கிய மக்கள் சக்தியில் படித்த புத்திஜீவிகள் உள்ளனர். எனவே, இதைப் பற்றி மீண்டும் பேச வேண்டிய அவசியமில்லை, மக்கள் அதை நன்கு புரிந்து கொண்டுள்ளனர். 76 ஆண்டு கால வரலாற்றில் அதிகாரம் இல்லாமல் எந்த கட்சியும் செய்யாத சேவையை இந்த ஐக்கிய மக்கள் சக்தி செய்துள்ளது. நாட்டை வங்குரோத்தடையச் செய்தவர்கள் என்ன கூறினாலும் தமக்கு கவலையில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மேலும் சிலர் பல்வேறு தீர்க்கதரிசனங்களை கூறினாலும் அவர்களால் பாராளுமன்றத்தில் ஒரு இடத்தை கூட பெற முடியவில்லை. பேசுபவர் என்ன சொன்னாலும் கேட்பவர் புத்திசாலித்தனமாக கேட்க வேண்டும். சர்வஜன வாக்குரிமையால் அன்றி, நாட்டை வங்குரோத்தாக்கிய 134 பேரினால் தெரிவு செய்யப்பட்ட ஒரு ஜனாதிபதியே தற்போது இருக்கிறார். நாட்டின் சுகாதாரத்தை அழித்த கெஹலியவை பாதுகாக்க 113 பேர் முன்வந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

நுண்,சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் குறித்து முதலில் குரல் கொடுத்தது நாமே!

நுண்,சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவோரை பாதித்துள்ள பரேட் சட்டம் தொடர்பாக கடந்த 2 ஆண்டுகளாக குரல் எழுப்பி வருகிறேன். இறுதியாக, தனது பேச்சுக்களைக் கேட்டு, அரசாங்கம் சரியானதைச் செய்ய முடிவு செய்துள்ளது, எனவே அவர் இதற்கு நன்றி தெரிவிக்கிறேன்.

அரசாங்கம் கூறியவாறு இது சரியாக நடைபெறுகிறதா என்பது குறித்து கவனம் செலுத்தி வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பரேட் சட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்து,தொழில் முயற்சிகளுக்கு வாய்ப்புகளை அரசாங்கம் ஏற்படுத்தி தர வேண்டும். இது நிறைவேறும் வரை இதற்காக முன்நிற்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் உள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதன் பிரகாரம் 100 மில்லியன் கடன் உத்தரவாத வேலைத்திட்டம் மற்றும் கடனுதவி வழங்கப்பட்டது. இதனால் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கவில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியுடன் செய்தது தேர்தல் ஒப்பந்தம் அல்ல – மனோ கணேசன்

“நாட்கூலி தொழிலாளர் என்ற தாழ்நிலை நிலையில் இருந்து, பெருந்தோட்ட மக்களை நிலவுரிமை கொண்ட தொழில் முனைவோராக மாற்றுவோம்” என எஸ்ஜேபி தலைவர் சஜித் பிரேமதாச மீண்டும் ஒருமுறை பகிரங்கமாக கூறி எம்முடன் உடன்பாட்டில் கையெழுத்து இட்டுள்ளார். இது எமது தமுகூவின் தூரநோக்கு சிந்தனையின் வெற்றி.

எஸ்ஜேபி அரசு உருவாகுமானால், அப்போது, எமது மக்கள் தொடர்பாக முன்னெடுக்ககூடிய நலவுரிமை திட்டங்கள் என்ன, என்பதுபற்றிய எழுத்து மூலமான உள்ளக சமூகநீதி உடன்பாடு இதுவாகும். இது தேர்தல் ஒப்பந்தம் அல்ல. தேர்தல் ஒப்பந்தம், தேர்தல் வரும்போது வரும்.

தேசிய அளவில் நடந்துள்ள இந்நிகழ்வு பற்றி கேள்வி எழுப்பும், ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் ஐதேக கூட்டணி, அனுரகுமாரவின் என்பிபி கூட்டணி, தரப்புகளுக்கு எமது இந்த சமூகநீதி உடன்பாடு விபரங்களை அனுப்பி வைக்க நாம் தயார். அவர்களது பதில் நிலைப்பாடுகள் என்ன என அவர்கள் எமக்கு அறிவித்தால் அவை பற்றியும் கலந்தாலோசிக்க நாம் தயார். ரணிலும், அனுரவும் தயாரா? என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கூறியுள்ளார்.

இதுபற்றி மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது,

இந்நாட்டில் வாழும் 15 இலட்சம், மலையக தமிழ் மக்கள் என்ற இன அடையாளத்துக்குள், சரிபாதி ஜனத்தொகை இன்னமும் பெருந்தோட்டங்களில் வாழ்கிறார்கள். இந்நாட்டின் ஏனைய மக்களுடன் ஒப்பிடும் போது, இந்த பெருந்தோட்ட மக்கள், சமூக பொருளாதார வளர்ச்சியில் இந்நாட்டிலேயே பின்தங்கியவர்கள்.

இதற்கு காரணம், மலைநாட்டு அரசியல்வாதிகள் மட்டுமே என்ற கவர்ச்சிக்கரமான பிரசாரம் முன்னேடுக்கப்படுகிறது. இது வரலாற்றை திட்டமிட்டு மூடி மறைக்கும் சூழ்ச்சி. இந்த கண்ணாம்பூச்சி கவர்ச்சி கதையில் நாம் மயங்கி விடக்கூடாது. மலைநாட்டு அரசியல்வாதிகள் மீது பெரும் குற்றச்சாட்டுகள் உள்ளன. அவற்றில் உண்மைகளும் உள்ளன. ஆனால், எமது மக்களின் குறை வளர்ச்சிக்கு முதல் மூன்று காரணங்கள், பேரினவாதம், இந்திய அரசு, இங்கிலாந்து அரசு ஆகியவை ஆகும்.

சுதந்திரம் பெற்றவுடன் எமது குடியுரிமை, வாக்குரிமைகளை பறித்து எமக்கு இன்று காணி, கல்வி, சுகாதாரம் ஆகிய உரிமைகள் முழுமையாக இல்லாமல், எம்மை பெருந்தோட்ட அமைப்புக்குள்ளே இரண்டாந்தர பிரஜைகளாக வைத்திருப்பது, பேரினவாதம் ஆகும். எம்மை கேட்காமலே, எம்மில் பெரும்பான்மையோரை நாடு கடத்தி, எம்மை அரசியல்ரீதியாக பலவீனப்படுத்தியது, இந்திய அரசு ஆகும். எம்மை இங்கே அழைத்து வந்து, எமது உழைப்பில் நன்கு சம்பாதித்து விட்டு, எம்மை அம்போ என விட்டு ஓடியது, இங்கிலாந்து அரசு ஆகும். இந்த வரலாற்றால், ஏற்பட்டுள்ள, தாழ்நிலைமைகளில் இருந்து வெளியே வருவது சுலபமான காரியம் அல்ல.

இந்த மூன்றுக்கும் பிறகுதான், மலைநாட்டு அரசியல் கட்சிகளின் பொறுப்பு வருகிறது. அதிலும், தமிழ் முற்போக்கு கூட்டணி, எட்டு ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டு, ஒரே ஒருமுறை மட்டும் ஆட்சியில் இருந்த முற்போக்கு அரசியல் இயக்கம் ஆகும். தேசிய, சர்வதேசிய அரங்குகளில் எமது பிரச்சினைகளை காத்திரமாக எடுத்து பேசி, முன் வைத்து, தீர்வு தேடும் இயக்கம், எமது கட்சியாகும். அதன் ஒரு அங்கம்தான், “நாட்கூலி தொழிலாளர் என்ற தாழ்நிலை நிலையில் இருந்து, பெருந்தோட்ட மக்களை நிலவுரிமை கொண்ட தொழில் முனைவோராக மாற்றுவோம்” என எஸ்ஜேபி தலைவர் சஜித் பிரேமதாசவை, மீண்டும் ஒருமுறை பகிரங்கமாக கூறவைத்து, நாம் செய்துகொண்டுள்ள சமூகநீதி உடன்பாடாகும்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்க நிபந்தனையுடன் ஆதரவளிக்கத் தயார் – சஜித் பிரேமதாச

நிறைவேற்று அதிகாரஜனாதிபதி முறையை நீக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவளிக்க தயார் என எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவதற்கு ஐக்கியமக்கள் சக்தி நிபந்தனையுடன் ஆதரவளிக்க தயார் என தெரிவித்துள்ள அவர் தேர்தலின் பின்னரே இந்த திருத்தத்தை நடைமுறைப்படுத்தவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

நாங்கள் ஆரம்பத்தில் நிறைவேற்று அதிகாரமுறையை நம்பினோம் ஆனால் சட்டத்தின் ஆட்சிக்கு இவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்தும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை என குறிப்பிட்டுள்ள சஜித்பிரேமதாச இதன் காரணமாக நாங்கள் எங்கள் நிலைப்பாட்டை மாற்றிவிட்டோம் என சட்டத்தரணிகள் மாநாட்டில் உரையாற்றுகையில் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக ஜனாதிபதி தேர்தலை அல்லது வேறு எந்த தேர்தலையும் நடத்தாமல் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவதை எதிர்க்கின்றோம் மக்களின் வாக்களிப்பதற்கான உரிமையை பறிக்ககூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்

.நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவதற்கான பொறுப்பு ஜனாதிபதியின் விசுவாசியொருவருக்கு வழங்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ள சஜித்பிரேமதாச அவர் சிவில் சமூக உறுப்பினர்கள் சிலருடன் இணைந்து இதனை முன்னெடுத்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் ஏனையவர்களின் நிலைப்பாட்டை அறிவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர் அரசமைப்பு சீர்திருத்தங்களிற்கு சரியான தருணம் இதுவென குறிப்பிட்டு வருகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசமைப்புசீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் தேர்தலை நடத்துவதற்காக ஐக்கிய மக்கள் சக்தி குரல்கொடுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.அரசமைப்பு பேரவை ஒருபோதும் ஜனாதிபதியின் அடிமையாக மாறாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதே ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கையாகும் – சஜித் பிரேமதாஸ

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதே ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கையாகும். இதில் உருவாக்கப்பட்ட ஏகாதிபத்தியமும், மகத்தான அதிகாரமும் இந்நாட்டு குடிமக்களின் உரிமைகளை மீறுவதால் இங்கு தெளிவான மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும். இதனை இல்லாதொழிப்போம் என்ற போர்வையில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு இடையூறு விளைவிக்க இடமளிப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை சரியான திகதியில் நடத்தாமல், அதற்கு நிதி ஒதுக்காது மக்களின் வாக்குரிமையை மீறும் அரசாங்கமே ஆட்சியில் இருக்கிறது. மக்களின் சர்வஜன வாக்குரிமையில் இத்தகைய தடைகளை ஏற்படுத்தி வரும் அரசாங்கத்துக்கு நாம் ஒத்துழையோம். தேர்தலில் மக்கள் ஆணையை காண்பிக்கும் உரிமையை வழங்கியதன் பின்னரே நிறைவேற்று ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பல்வேறு தனிநபர்களும் குழுக்களும் ஜனாதிபதியின் ஒப்பந்தங்களுக்கிணங்க, நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டும் என்ற கருத்தோட்டத்தை முன்வைத்து வருகின்றனர். இது தனிப்பட்ட அரசியல் வாழ்வை நீட்டிக்கும் முயற்சியே தவிர தேச நலனுக்காக இலக்காக் கொண்ட அபிலாஷை அல்ல என்றும் இதற்கு இடமளிக்க மாட்டோம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் மாநாடு நேற்று (11) கொழும்பில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் Peter Maynard, ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்துக்கான சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் Shyam Divan மற்றும் இந்தியா சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் பிரசாந்த குமார் ஆகியோர் சிறப்புரைகளை நிகழ்த்தினர்.

“அரசியலமைப்பு பேரவையில் இருப்பது ஜனாதிபதியின் கைப்பாவைகள் அல்லர்”

அரசியலமைப்பு பேரவை நிறைவேற்று அதிகாரத்தின் ஒரு பகுதியாகும் என ஜனாதிபதி பாராளுமன்றத்திலும் வெளியேயும் தைரியமாக தெரிவித்து வருகிறார். இதன் மூலம் அதன் அங்கத்தவர்களை நிறைவேற்றுநரின் கீழ் உள்ளவர்கள் என்று அழைப்பது தவறு. நிறைவேற்று ஜனாதிபதியின் வரம்பற்ற அதிகாரங்களை மட்டுப்படுத்தவே அரசியலமைப்பு பேரவை நிறுவப்பட்டது. அதில் ஒரு அங்கத்தவராக, ஜனாதிபதியின் கைக்கூலியாகவோ அல்லது கைப்பாவையாகவோ செயற்படமாட்டேன் என்றும், அனைத்து விடயங்களிலும் பாரபட்சமின்றி, சரியான முறையில் நீதி நியாயமாக, தீர்மானங்களை எடுப்பேன் என்றும் தான் பேரவையில் குறிப்பிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

“கீழிருந்து மேலாக அனைவரையும் உள்ளடக்கிய அபிவிருத்திக் கொள்கையை பின்பற்றுவோம்”

சந்தை சமூகத்தில் செயல்படும் மனிதநேய முதலாளித்துவத்தை அடிப்படையாகக் கொண்டு, வளங்களின் உருவாக்கம் மற்றும் உருவாக்கப்பட்ட வளங்களின் வருமானம், சமூக நீதி மற்றும் சமத்துவ அடிப்படையில் இரண்டையும் பகிர்ந்தளிப்பதே ஒரு கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் கொள்கையாகும். சமூக ஜனநாயகத்தை மையமாகக் கொண்ட நடுத்தர பாதையே எமது கொள்கை. சமூகத்தில் எழும் பிரச்சினைகளை அடிமட்டத்திலிருந்து மக்கள் கருத்துக்களை உள்ளீர்த்த, பங்கேற்பு கொள்கையை வகுப்பதாகும்.

“ஜனநாயகத்தையும் சட்டத்தின் ஆட்சியையும் பாதுகாப்போம்”

ஜனநாயகத்தைப் பாதுகாத்தல், சட்டத்தின் ஆட்சியைப் பேணுதல் மற்றும் நீதியின் அடிப்படையில் நீதித்துறை செயல்முறையை நடைமுறைப்படுத்தி, பாதிக்கப்பட்ட சமூகத்தினரின் கருத்துக்களை கோரி நியாயமான தீர்வுகளை வழங்கும் கட்மமைப்பை செயல்படுத்துவோம். ஜனநாயகத்தின் மூன்று தூண்கள், அவற்றின் அதிகாரப் பகிர்வு மற்றும் தடைகள் மற்றும் சமன்பாடுகள் முறைமையினுள் வலுவான ஜனநாயக கட்டமைப்பை நாட்டில் நிறுவுவோம்.சுதந்திர ஊடகங்களும் நான்காவது தூணாகக் கருதப்பட்டு அவை பாதுகாக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

“அடிப்படை உரிமைகள் திருத்தப்பட வேண்டும்”

இந்நாட்டின் அரசியலமைப்பின் முக்கிய அங்கமான அடிப்படை உரிமைகள் பற்றி நாம் மீள் பரிசீலனை செய்ய வேண்டும். அடிப்படை உரிமைகள் தொடர்பான பகுப்பாய்வு மேலும் விரிவுபடுத்தப்பட்டு, சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற புதிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டு, தெளிவான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

“ஊழலை இல்லாதொழிக்கும் ஒரு புதிய முறைமை”

ஊழலை ஒழிக்க நடவடிக்கை எனுக்க வேண்டும். தற்போதைய ஊழல் எதிர்ப்புச் சட்ட உள்ளடக்கம் போதுமானதாக இல்லாததால், அரசியலமைப்பின் மிகவும் உயரிய பகுதியாக, ஓர் எளிய பெரும்பான்மையால் மாற்ற முடியாத ஒரு கட்டமைப்பாக ஊழல் எதிர்ப்பு நிறுவகம் நிறுவப்பட நடவடிக்கை எனுக்கப்படும். எவரும்,எந்த அதிகாரத்தாலும், செல்வாக்கு செலுத்த முடியாத முறைமை உருவாக்கப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

“திருடர்களுடன் எங்களுக்கு டீல் இல்லை”

நாட்டை வங்குரோத்தாக்கியவர்கள் யார் என்பதை வெளிக்கொணர ஐக்கிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் சங்கமும், தேசிய அறிஞர்கள் பேரவையும் நடந்து கொண்டது போல, இந்நாட்டை அழித்த தரப்பினர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, எமது நாட்டிற்கு இழந்த வளங்களும் சொத்துக்களும் மீட்கப்படும். இந்நாட்டை அழித்த திருடர்களுடன் எங்களுக்கு எந்த வகையிலுமான டீல்களும் இல்லை என அவர் தெரிவித்தார்.

“அரசாங்கத்தின் ஜனநாயக விரோத சட்டங்களை திருத்தம் செய்வோம்.”

அரசாங்கம் கொண்டு வர முயற்சிக்கும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை அரசாங்கத்தின் பெரும்பான்மையால் அங்கீகரிக்கப்படுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், ஜனநாயகத்தை சீர் குலைக்க கொண்டு வரப்பட்ட அனைத்து சட்டங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் இரத்துச் செய்து, உண்மையில், அனைத்து பங்குதாரர்களுடனும் கலந்தாலோசித்து, உண்மைக்கு முன்னுரிமை அளிக்கும், யோசனைகளை முன்வைப்பதற்கு முன்னுரிமை அளித்து, புதிய சட்டங்கள் கொண்டு வரப்படும். நாட்டின் தேசிய பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் சிறந்த சட்டங்கள் கொண்டு வரப்படும். சிவில் பிரஜைகளின் ஜனநாயக உரிமைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்த மாட்டோம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

டெலிகொம் நிறுவனத்தின் உரிமத்தை வெளிச்சக்திகளுக்கு விற்பதன் மூலம் ஏற்படும் பாதிப்புக்களுக்கு அரசாங்கம் பொறுப்பேற்குமா? – சஜித் கேள்வி

ஶ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனத்தின் உரிமையை அரசாங்கத்திடம் இருந்து வெளி நிறுவனத்திற்கு மறுசீரமைப்பதன் மூலம் தேசிய பாதுகாப்புக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு அரசாங்கம் பொறுப்புக் கூறுமா என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (09) நிலையியற் கட்டளை 27 /2 இன் கீழ் கேள்வி நேரத்திலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

நஷ்டத்தில் இயங்கும் பொது நிறுவனங்களின் மறுசீரமைப்பு மற்றும் புதிய முகாமைத்துவ திட்டத்தின் அடிப்படையில் தற்போது இலாபம் ஈட்டும் நிறுவனங்களின் செயற்பாட்டுச் செலவுகளைக் குறைப்பது மற்றும் நிர்வாகப் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.

நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை மறுசீரமைக்க வேண்டும். என்றாலும் இலாபம் ஈட்டும் நிறுவனங்களை அதிக இலாபம் ஈட்டக்கூடிய முறைமைக்குச் செல்ல வேண்டும். பொது நிறுவனங்களின் மறுசீரமைப்புக்காக அமைக்கப்பட்ட அலகு மூலம், டெலிகொம் மற்றும் காப்புறுதி நிறுவனம் உட்பட அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களை மறுசீரமைப்பது குறித்து மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தால், குறித்த அறிக்கையை சபைக்கு சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

டெலிகொம் நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்வதற்கான ஏலத்தை சமர்ப்பித்த நிறுவனங்கள், அவர்களின் தகுதி மற்றும் டெலிகொம் நிறுவனத்தின் சொத்துக்கள் குறித்து மதிப்பீடு செய்யப்பட்டிருந்தால் அந்த அறிக்கையையும் சபைக்கு முன்வைக்க வேண்டும். இந்த அறிக்கையை நாட்டுக்கு வெளிப்படுத்தாது மறைத்து வைத்திருக்க வேண்டாம்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் 9.6.2023 திகதியிட்ட அறிக்கையின் பிரகாரம், டெலிகோம் நிறுவனத்தை தனியார் மயமாக்குவது தேசிய பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும் என்று பரிந்துரைக்கப்பட்டிருக்கும் நேரத்தில், டெலிகொம் நிறுவனத்தின் உரிமையை அரசாங்கத்திடம் இருந்து வெளி நிறுவனத்திற்கு மறுசீரமைப்பதன் மூலம் தேசிய பாதுகாப்புக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு அரசாங்கம் பொறுப்புக் கூறுமா என கேட்கிறேன்.

காப்புறுதி கூட்டுத்தாபனத்தை தனியார் மயமாக்கிய பிறகு கிடைத்த இலாபத்தை விட,அரசாங்க உடைமையின் போது அதிக இலாபம் ஈட்டியுள்ளமை இராஜாங்க நிதி அமைச்சின் இலாப நஷ்ட அறிக்கையிலிருந்து தெரிய வருகிறது.எனவே இதன் பின்னணியில் உள்ள காரணங்களை அரசாங்கம் இனம் கண்டுள்ளதா என கேட்கிறேன்.

மேலும், நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான 8 பில்லியன் பெறுமதியான விசுபம்பாய சொத்துக்களை 4 பில்லியனுக்கு விற்க தயாராகி வருகின்றனர்.இதற்காக ஒரு பகுதியை குறைந்த விலைக்கு விற்க தனி தரகர்கள் தயாராக உள்ளனர். இவ்வாறு குறைந்த பெறுமதிக்கு விற்பனை செய்ய எடுத்துவரும் நடவடிக்கை தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

Posted in Uncategorized

நாட்டை வங்குரோத்தாக்கியோரிடமிருந்து மக்களுக்கு நஷ்டஈடு பெற்று கொடுக்க நடவடிக்கை – சஜித் பிரேமதாஸ

நாடு வங்குரோத்து நிலைக்கு செல்ல காரணமானவர்கள் என உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கமைய, அந்த தலைவர்களிடமிருந்து நாட்டு மக்கள் நஷ்ட ஈடு பெற்றுக்கொள்ளும் வகையில் நாங்கள் எமது அரசாங்கத்தில் நடவடிக்கை எடுப்போம். அத்துடன் நிகழ்நிலை காப்புச்சட்டத்தையும் மறுசீரமைப்பு செய்வோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (8) இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரைமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான பிரதான கருவி தனியார் துறையாகும். அதனால் இதன் மூலம் நாட்டின் விரைவான பொருளாதார அபிவிருத்தியை நாங்கள் எதிர்பாக்கிறோம்.

அதேபோன்று எமது அரசாங்கத்தில் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் முறையான முகாமைத்துவத்துக்கு உட்படுத்தி, தற்போது சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொண்டுள்ள ஒப்பந்தத்தில் கலந்துரையாடல் மூலம் திருத்தங்களை மேற்கொள்ள எதிர்பார்க்கிறோம்.

இதன் மூலம் நாணய நிதியத்தை புரக்கணித்து செயற்படுவதென யாரும் அர்த்தம் கொள்ளக்கூடாது. நாணய நிதியத்துடன் இணைந்துகொண்டே இந்த பயணத்தை நாங்கள் மேற்கொள்ள வேண்டும்.

அத்துடன் எமது பொருளாதார கொள்கையின் மூலம் நேரடி வெளிநாட்டு முதலீடுகளை அபிவிருத்தி செய்யும் தேசிய வேலைத்திட்டத்தை நாங்கள் செயற்படுத்துவோம்.

அதேபோன்று நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்தும் நோக்கில் ஊழல் எதிர்ப்பு சட்டத்தை மேலும் பலப்படுத்துவதுடன் அந்த சட்டத்தை அரசியலமைப்பில் ஓர் பிரிவாக கொண்டுவர நடவடிக்கை எடுப்போம்.

அத்துடன் நாட்டின் ஏற்றுமதி துறை வீழ்ச்சியடைந்துள்ளது. ஏற்றுமதி பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசாங்கத்திடம் எந்த வேலைத்திட்டமும் இல்லை. அதனால் நாட்டின் ஏற்றுமதி பொருளாதாரத்தை பலப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலமே நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்த முடியும்.

அதற்கான வேலைத்திட்டத்தை நாங்கள் முன்னெடுப்போம். மேலும் நாட்டின் பொருளாதாரத்தின் என்ஜினாக இருப்பது சிறிய, நடுத்தர, நுண் தொழிற்சாலைகள் மற்றும் தொழில் முயற்சியாளர்களாகும். நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் நூற்றுக்கு 50வீத பங்களிப்பை வழங்கி வருகின்றன.

ஆனால் பராடே சட்டத்தின் மூலம் இந்த பிரிவினர் பாரியளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அரசாங்கம் இதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகிறது.

அதனால் எமது அரசாங்கத்தில் ஏழை எளிய மக்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டம் ஒன்றை நாங்கள் முன்னெடுப்போம். மாறாக அஸ்வெசும போன்ற தேர்தலை இலக்குவைத்து ஏழை மக்களுக்கு சிறியதொரு தொகையை கையளிப்பது போன்று அல்ல.

மேலும் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் எமது திட்டத்தில் நாடு இழந்த வளங்களை மீண்டும் பெற்றுக்கொள்ள நாங்கள் செயற்படுவோம்.

அதேபோன்று நாடு வங்குராேத்து நிலைக்கு செல்ல காரணமானவர்கள் என உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கமைய, அந்த தலைவர்களிடமிருந்து நாட்டு மக்கள் நஷ்டஈடு பெற்றுக்கொள்ளும் வகையில் நாங்கள் எமது அரசாங்கத்தின் நடவடிக்கை எடுப்போம்.

அதேபோன்று நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நாங்கள் சமர்த்திருக்கும் திட்டங்களில் கல்வி துறையில் மாற்றம், தகவல் தொழிநுட்ப துறையை விரிவுபடுத்தல், விவசாயம், கடற்றொழில் துறையை விருத்தி செய்தல், புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை பலப்படுத்தல், ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்தல், சுதந்திர ஊடகத்தை பாதுகாத்து தற்போதுள்ள நிகழ்நிலை காப்புச் சட்டத்தை மறுசீரமைப்பு செய்து அனைத்து தரப்பினருடன் கலந்துரையாடி முறையான சட்டத்தை கொண்டுவருவோம் என்றார்.

Posted in Uncategorized

நிகழ்நிலைக் காப்புச் சட்டம் தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகருக்கு சஜித் பிரேமதாஸ விளக்கமளிப்பு

நிகழ்நிலைக் காப்புச் சட்டம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ விளக்கமளித்துள்ளார்.

இந்தியாவின் இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள சிரேஷ்ட இராஜதந்திரியான ஸ்ரீ சந்தோஷ் ஜா (Santosh Jha) மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று அண்மையில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக நிலவிவரும் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் விவகாரங்களுடன் தொடர்பான பல்வேறு விடயங்களை இருவரும் பரிமாறிக்கொண்டனர்.

தற்போதைய அரசாங்கம் கொண்டு வந்துள்ள சட்டவிரோத மற்றும் நியாயமற்ற வரிக் கொள்கை குறித்த விடயங்களை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்திய உயர்ஸ்தானிகருக்கு தெரியப்படுத்தினார்.

நியாயமற்ற முறையில் அரசாங்கம் விதித்த பெறுமதி சேர் வரியினால் மக்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பில் உழைக்கும் மக்களின் ஊழியர் சேம நிதியங்களுக்கு ஏற்படுத்தப்பட்ட பாதகமான விளைவுகளின் தாக்கம் குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் இதன் போது உயர்ஸ்தானிகரை தெளிவுபடுத்தினார்.

அவ்வாறே,தற்போதைய அரசாங்கம் மக்களின் ஜனநாயக உரிமைகளில் ஏற்படுத்தி வரும் தாக்கம் குறித்து விடயங்களையும் இந்திய உயர்ஸ்தானிகரிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

திட்டமிட்ட திகதிகளில் நடத்தப்பட வேண்டிய தேர்தல்கள் வேண்டுமென்றே ஒத்திவைக்கப்பட்டு வருவதான விடயங்கள் குறித்தும் இங்கு எதிர்க்கட்சித் தலைவரால் தெளிவுபடுத்தப்பட்டது.

இதுதவிர இந்த வருடம் தேர்தல் வருடமாக அமைந்திருந்தாலும் தற்போதைய அரசாங்கம் “நிகழ்நிலை காப்பு” என்ற சட்டத்தை நிறைவேற்றி,மக்களின் கருத்துகளை தெரிவிக்கும் உரிமை,தகவல் அறியும் உரிமை என்பவற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும்,சமூக ஊடக வலையமைப்புகளை முடக்க மற்றும் கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்த இச்சட்டத்தினால் முடியும்.

தேர்தல் வருடத்தில் இவ்வாறான சட்டமூலத்தை கொண்டு வருவதன் மூலம் மக்களின் ஜனநாயக உரிமைகளில் தேவையற்ற தலையீடுகள் பிரயோகிக்கப்பட்டு வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதன் போது மேலும் சுட்டிக்காட்டினார்.

இந்நிகழ்வில், இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார,பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன,ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி தேர்தல் செயற்பாட்டு பிரதானி சட்டத்தரணி சுஜீவ சேனசிங்க,எதிர்க்கட்சித் தலைவரின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திசத் விஜயகுணவர்தன ஆகியோர் கலந்து கொண்டனர்.

“ரணிலுக்கும் மஹிந்தவுக்கும் முதுகெலும்பு இருந்தால் தேர்தலில் மக்கள் முன் வாருங்கள்” – சஜித் சவால்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் முதுகெலும்பு இருந்தால் தேர்தலை நடத்தி மக்கள் முன் வருமாறு சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (30) கொழும்பில் தெரிவித்திருந்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட பேரணியை நீர் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைத்ததன் பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் உரையாற்றும் போதே சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச மேலும் கூறியதாவது;

“இன்று ஒரு வரலாற்று தருணம். இந்த நாட்டை அழித்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை அகற்றிய மாபெரும் ஜனநாயகப் புரட்சியை ஆரம்பித்தவர்கள் நாங்கள். இப்போது நாட்டை ஆளும் ரணில் ராஜபக்ச அரசாங்கம் நீண்ட காலம் நீடிக்க முடியாது. இந்த அரசாங்கம் மக்களைக் கொல்லாமல் மக்களைக் கொன்று மிக மனிதாபிமானமற்ற அழுத்தத்தை மக்கள் மீது செலுத்தி நாட்டில் உள்ள இருநூற்றி இருபது இலட்சம் பேரை பட்டினியில் இடும் கேவலமான அரசாகும்.

உங்களுக்கு முதுகெலும்பு இருந்தால் வாக்களித்து மக்கள் முன் வாருங்கள் – ஜனாதிபதி ரணிலுக்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கும் ‘மாற்றத்தை ஏற்படுத்தும் ஓர் ஆண்டு’. அத்துடன் நாங்கள் இந்த அரசாங்கத்திற்கு பயப்படவில்லை என்று கூறுகிறோம். இது வெறும் ஆரம்பம் தான். எங்களுக்கு வேறு எதுவும் வேண்டாம், எங்களுக்கு தேர்தல் வேண்டும். நாங்கள் மக்களின் ஆசியுடன் ஆட்சிக்கு வருகிறோம், தலைகளை மாற்றும் விளையாட்டினாலோ அல்லது முரட்டு ராஜபக்சவுடன் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு அல்ல. மக்களின் ஆசியால் ஆட்சிக்கு வருகிறோம். இன்று இந்த அரசாங்கம் மக்களை கண்டு அஞ்சுகிறது. இது வெறும் ஆரம்பம் தான். இன்று காலை இந்த அரசாங்கத்தின் குண்டர்கள் சென்று தடை உத்தரவு பிறப்பித்தனர். ஆனால் நாங்கள் சட்டத்தை மீறவில்லை. இன்று இந்த இடத்திற்கு வந்த பல்லாயிரக்கணக்கான மக்களின் அடிப்படை உரிமைகளை இந்த அரசாங்கம் அப்பட்டமாக மீறியது.

நான் ரணிலுக்கும் மகிந்தவுக்கும் சொல்கிறேன் உங்களுக்கு முதுகெலும்பு இருந்தால் முன்வாருங்கள். இந்த நாட்டை வங்குரோத்து செய்தவர்கள் எமது அரசாங்கத்தில் நிச்சயம் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று கூறுகின்றோம். மக்களுக்கு நீதி வழங்குவோம். நாட்டை திவாலாக்கியது யார் என்பதை உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அரச அதிகாரம் பெறுவதற்கு முன்னரே அந்த முடிவை எடுத்தோம். அந்த முடிவின் மூலம் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களிடமிருந்து இழப்பீடு பெறுவதற்கு தேவையான சட்ட ஆதரவை வழங்கி எங்கள் கடமையை நிறைவேற்றுவோம்.

இன்றைய தாக்குதல் சட்டவிரோதமானது என்று பொலிஸாரிடம் கூறுகின்றோம். இன்று இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை நடத்தியவர்கள் தயாராக இருக்க வேண்டும். நாங்கள் நிச்சயமாக உங்களை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்வோம் நாங்கள் அரசியல் அயோக்கியர்கள் அல்ல. எமது வலது பாதத்தை முன் வைத்து மக்கள் சக்தியால் ஒவ்வொரு கிராமத்தையும் பலப்படுத்தி இந்த சட்டவிரோத அரசை வீட்டுக்கு அனுப்புவோம். இன்று ரணிலை நினைத்து வெட்கப்படுகிறோம். தடை உத்தரவு போடுவது நமக்கு வெட்கமாக இல்லையா? இன்று நான் சொல்கிறேன், நமது அரசாங்கத்தின் கீழ், இந்த மாளிகைகள் அனைத்தும் பல்கலைக்கழகங்களாக மாற்றப்படும்”. என மேலும் தெரிவித்தார்.