வேட்பு மனுக்களை இரத்துச் செய்யும் அதிகாரம் ஆணைக்குழுவுக்கில்லை – தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக தாக்கல் செய்துள்ள வேட்புமனுக்களை இரத்து செய்யும் அதிகாரம் ஆணைக்குழுவுக்கு கிடையாது.

கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடி பாராளுமன்றமே ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையிலான அரச நிர்வாகம் தொடர்பான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக்குழுவில் குறிப்பிட்டார்.

பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இடம்பெற்ற பொறுப்புக் கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையான அரச நிர்வாகம் தொடர்பான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக்குழுவின் போது மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டது.

தேர்தல் சட்டத்தின் பிரகாரம் வாக்காளர் பதிவு நடவடிக்கைகளை பெப்ரவரி மாதம் ஆரம்பிக்க வேண்டும்.நிதி நெருக்கடி காரணமாக இம்முறை வாக்காளர் பதவி உள்ளிட்ட சகல பணிகளும் தாமதமடைந்தன. பாரிய போராட்டத்துக்கு மத்தியில் தேர்தல் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இருப்பினும் இறுதிக் கட்டத்தில் நிதி விடுவிப்பு முடக்கப்பட்டதால் தேர்தல் வாக்கெடுப்பு எப்போது இடம்பெறும் என்பது கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது என்றார்.

இதன்போது கருத்து தெரிவித்த தெரிவுக்குழுவின் உறுப்பினர் ரோஹன பண்டார உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எப்போது இடம்பெறும் என்ற நிச்சயமற்ற தன்மை காணப்படும் நிலையில் வேட்புமனுத்தாக்கல் செய்த அரச சேவையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் தொடர்பில் ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என கேள்வியெழுப்பினார்.

இதற்கு பதிலளித்த தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு 3000 அரச சேவையாளர்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளார்கள். சம்பள பிரச்சினை உள்ளிட்ட விடயங்களுக்கு அரச நிர்வாகம் அமைச்சின் ஊடாக தற்காலிக தீர்வு வழங்கப்பட்டுள்ளது.

தேர்தல் சட்டத்தின் 120 ஆவது பிரிவின் பிரகாரம் தேர்தலுக்கு வேட்புமனுத்தாக்கல் செய்யும் அரச சேவையாளர் ஒருவர் தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறும் வரை அரச சேவையில் ஈடுபட முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே தேர்தல் சட்டத்துக்கு அப்பாற்பட்ட வகையில் எம்மால் செயற்பட முடியாது.

அத்துடன் தாக்கல் செய்யப்பட்டுள்ள வேட்புமனுக்களை இரத்து செய்யும் அதிகாரம் ஆணைக்குழுவுக்கு கிடையாது. இவ்விடயம் குறித்து சகல கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடி பாராளுமன்றத்தின் ஊடாகவே தீர்வு காண வேண்டும் என்றார்.

இதன்போது கருத்து தெரிவித்த பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையிலான அரச நிர்வாகம் தொடர்பான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் ஜகத் குமார உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எப்போது இடம்பெறும் என்று குறிப்பிட முடியாத நிலை காணப்படுவதால் தாக்கல் செய்த வேட்பு மனுக்களை இரத்துச் செய்ய அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. அதற்கான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எதிர்க்கட்சிகளுடன் கலந்துரையாடி ஒரு தீர்மானம் எடுக்கப்படும் சாத்தியம் காணப்படுகிறது என்றார்.

இதன்போது கருத்து தெரிவித்த தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க வேட்பு மனுக்கலை இரத்து செய்வதற்கு முன்னர் தேர்தல் பணிகளுக்காக செலவிடப்பட்டுள்ள நிதியை பெற்றுத்தாருங்கள் என்று வலியுறுத்தினார்.