ஹிருணிகா உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுத் தாக்கல்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமைகள் மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி கடந்த மாதம் பொது மன்னிப்பு வழங்கி விடுவித்திருந்தார்.

இந் நிலையில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ வழங்கிய பொது மன்னிப்பின் சட்டபூர்வமான தன்மையை எதிர்த்து பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் புதல்வியான ஹிருணிகா பிரேமச்சந்திர, உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமைகள் மீறல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

துமிந்தா சில்வாவுக்னா பொது மன்னிப்பு முடிவு நியாயமற்றது மற்றும் நீதிமன்றத்தின் அதிகாரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும் அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை செய்யப்பட்ட வழக்கில் துமிந்த சில்வா உட்பட ஐவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 2016 செப்டெம்பர் மாதம் மரண தண்டனை விதித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.