20ஆம் திகதிக்கு முன்னர் வாக்குச்சீட்டுக்களை ஒப்படைக்க முடியாது – அரச அச்சகம்

எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் வாக்குச்சீட்டுக்களை ஒப்படைக்க முடியாது என அரச அச்சகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அரச அச்சகத் திணைக்களத் தலைவர் கங்கானி லியனகே இது தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு எழுத்து மூலமாக அறிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பு மற்றும் பொது வாக்கெடுப்பு ஆகியவற்றுக்குத் தேவையான வாக்குச்சீட்டுக்களை அச்சிடுவதற்கு தேவையான நிதியை வழங்க வேண்டும் என திறைசேரிக்கு கடந்த இரு வாரங்களில் இரண்டு தடவைகள் எழுத்து மூலமாக முன்வைத்த கோரிக்கைக்கு இதுவரை சாதகமான பதில் கிடைக்கவில்லை.

மார்ச் மாதம் 9 ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட அச்சிடல் பணிகளுக்கான நிதி முழுமையாக கிடைக்கவில்லை.

நிதி விடுவிப்பு தொடர்பில் திறைசேரி ஒரு உத்தியோகபூர்வமாக அறிவிப்பை விடுக்க வேண்டும் என அரச அச்சகத் திணைக்களத் தலைவர் திறைசேரியிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

நிதி கிடைப்பதில் தாமதம் காணப்படுவதால் தபால் மூல வாக்கெடுப்புக்கான வாக்குச்சீட்டுக்கள் அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை.

எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் வாக்குச்சீட்டுக்களை ஒப்படைக்க முடியாது என அரச அச்சகத் திணைக்கள தலைவர் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தியோ பூர்வமாக அறிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தபால் மூல வாக்கெடுப்பை எதிர்வரும் 28, 29, 30 மற்றும் 31ஆம் திகதிகளில் நடத்த தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

தபால்மூல வாக்குச்சீட்டு விநியோகப் பணிகள் எதிர்வரும் 24 ஆம் திகதிக்கு முன்னர் முழுமைப்படுத்தப்பட வேண்டும்.

இந்தநிலையிலேயே குறித்த திகதிக்கிடையில் தம்மாக் வாக்குச்சீட்டுகளை அச்சிட்டு வழங்க முடியாது என அரச அச்சகத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக தேர்தல் மீண்டும் தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது.