21- 22ம் திகதிகள் அதிபர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தை முன்னெடுக்க அழைப்பு

பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ள நிலையில், பாடசாலை திறக்கப்படும் அதே நாளில் போராட்டத்தை முன்னெடுக்க அதிபர், ஆசிரியர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாடசாலை ஆரம்ப தினத்தில் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுவதா? இல்லையா? என்பது குறித்து ஆசிரியர் தொழில்சங்கங்களுக்கு இடையில் இன்று (18) விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

இதன்போதே எதிர்வரும் 21 மற்றும் 22ம் திகதிகள் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டமொன்றை முன்னெடுப்பதற்கான அழைப்பை விடுத்துள்ளனர். பாடசாலை ஆரம்ப தினத்தில் கற்பித்தல் நடவடிக்கைகளை புறக்கணிப்பதற்கும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தீர்மானித்துள்ளனர்.

எனினும், ஒக்டோபர் மாதம் 25ம் திகதி பாடசாலைகளுக்கு செல்ல அதிபர் − ஆசிரியர்கள் தீர்மானித்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலை பெரும் சிக்கலாக மாறியுள்ள நிலையில், தொழிற்சங்களின் செயல்பாடுகளால் அரசாங்கம் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருப்பதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இதே வேளை,

இலங்கையில் பாடசாலைகளின் கற்பித்தல் செயற்பாடுகளை பாடசாலை திறக்கப்பட்ட பின்னரும் புறக்கணிக்க பெரும்பாலான ஆசிரியர் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ள நிலையில், தாம் அதில் இருந்து விலகி கற்பித்தல் செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.

சம்பள உயர்விற்கு தாம் முரணானவர்கள் அல்லவெனக் குறிப்பிட்டுள்ள இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொது செயலாளர் சரா.புவனேஸ்வரன், யுத்த சூழ்நிலையில் கூட கற்பித்தல் செயற்பாடுகளை நிறுத்தாத நிலையில், பிள்ளைகளின் கல்வியை பணயம் வைக்க முடியாது என சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் நாடளாவிய ரீதியில் ஆசிரிய – அதிபர்கள் சம்பள உயர்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், தமது சங்கம் போராட்டத்தில் கலந்துக்கொள்ளாமை தொடர்பில் யாழ்ப்பாணத்தில் வைத்து இன்று விளக்கமளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது, அனைத்து அதிபர்களும், ஆசிரியர்களும் வரும் 21ஆம் திகதி பணிக்குச் சென்று கடமையில் ஈடுபட வேண்டுமெனவும், இது யாருக்கும் எதிரான செயற்பாடு அல்லவெனவும் அவர் கூறியுள்ளார்.