யாழில் சுதந்திர தின விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலை.மாணவர்கள் போராட்டம்

இலங்கையின் சுதந்திர தின விழா மீண்டும் இன்றைய தினம் யாழில் இடம்பெறவுள்ளதால், அதனை எதிர்த்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் போராட்டம் ஒன்று சற்று முன்னர் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினருடன் சமூக அமைப்பினரும் இணைந்து கொண்டுள்ளனர்.

மேலும் யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்றலில் நண்பகல் 12 மணியளவில் ஆரம்பமான இப்போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் பொதுமக்கள் என பலரும் பங்குபற்றியுள்ளனர்.

மாணவர்களின் போராட்டக் களத்தில் பெருமளவு கலகம் அடக்கும் கால்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் மக்களினுடைய பிரச்சினைகளுக்கு இதுவரை காலமும் தீர்வு வழங்கப்படாத நிலையிலும் பொருளாதார பின்னடைவு நேரத்திலும் சுதந்திர தின விழா கொண்டாட்டம் இரண்டாவது தடவையாக தேவையில்லை என கூறியே குறித்த கவனயீர்ப்பு போராட்டம் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் போது, பொருளாதார பின்னடைவு நேரத்திலும் பெருந்தொகையான பண செலவிலும் இரண்டாவது தடவையாக சுதந்திர தின கொண்டாட்டம் செய்யவேண்டிய தேவை ஏன் என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் அழகராசா விஜயகுமார் கேள்வியெழுப்பியுள்ளார்.

அதேவேளை, தேர்தலுக்கு பணம் இல்லை என கூறி சுதந்திர தினத்துக்கு பணத்தை செலவளிப்பது ஏன் என யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய உப தலைவர் இ.தர்சனும் கேள்வியெழுப்பியுள்ளார்.

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய கேட்போர் கூடத்தில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் பொழுது யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், இன்றைய போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக பொது அமைப்புக்கள், பொதுமக்கள் என அனைவரும் ஒன்றிணையுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.