பொங்குதமிழ் மக்கள் பேரெழுச்சி பிரகடனத்தின் 23ஆம் ஆண்டு நினைவு தினம்

23ஆம் ஆண்டு பொங்குதமிழ் நிகழ்வு புதன்கிழமை (17) யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பொங்குதமிழ் தூபியில் நடைபெற்றது.

இதன்போது பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களது கருத்துரைகள் இடம்பெற்றன.

பொங்குதமிழ் பிரகடனத்தில் தமிழ் மக்களின் அபிலாஷைகளைகளான சுய நிர்ணய உரிமை, மரபு வழித் தாயகம், தமிழ் தேசியம் என்பன உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

பல்கலைக்கழகங்களை உருவாக்கும் அதிகாரங்களை வழங்க முதல் மாகாண சபை தேர்தல்களை நடாத்த வேண்டும்

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பல்கலைக்கழகங்களை உருவாக்கும் அதிகாரத்தை மாகாணசபைகளுக்கு வழங்கப்படுவதாக அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.

அப்படியானால் முதலில் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த வேண்டும்.மாகாண சபைகளில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நிலையில் எவ்வாறு பல்கலைக்கழகங்களை உருவாக்க முடியுமென எதிரணியின் சுயாதீன உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கேள்வியெழுப்பினார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (05) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் கல்வி அமைச்சின் செலவுத்தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

புதிய பல்கலைக்கழங்களையும் தனியார் பல்கலைக்கழகங்களையும் உருவாக்குவதாக ஜனாதிபதி முன்மொழிந்துள்ளார். அத்துடன் பல்கலைக்கழகங்களை உருவாக்கும் அதிகாரம் மாகாண சபைகளுக்கும் வழங்கப்படுவதாகவும் அரசு அறிவித்துள்ளது.

இதில் முதலாவது பிரச்சினை , பல்கலைக்கழகங்களை உருவாக்கி அவற்றுக்கான ஆளணி மற்றும் பௌதீக வளங்களை வழங்கும் இயலுமை மாகாண சபைகளுள்ளதா என்பது அடுத்து பல்கலைக்கழகங்களை உருவாக்கும் அதிகாரம் மாகாண சபைகளுக்கும் வழங்கப்படும் என்றால் அந்த மாகாணசபைகளில் மக்கள் பிரதிநிதிகள் இருக்க வேண்டும்.

தற்போது நாட்டில் உள்ள மாகாண சபைகள் அனைத்தும் ஆளுநர்களின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன.

அங்கு மக்கள் பிரதிநிதிகள் எவரும் இல்லை.இவ்வாறான நிலையில் மாகாண சபைகளினால் எப்படி பல்கலைக்கழகங்களை உருவாக்க முடியும்? அவ்வாறு மாகாண சபைகளைக்கொண்டு பல்கலைக்கழகங்களை அரசு உருவாக்க விரும்பினால் முதலில் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த வேண்டும்.

இதேவேளை இன்று மூளைசாலிகள் வெளியேற்றம் என்பது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது நாட்டிலிருந்து வெளியேறியுள்ள மூளைசாலிகளின் வெற்றிடத்தை நிரப்ப எமக்கு இன்னும் இரண்டு பரம்பரை தேவைப்படும். முன்னர் பல்கலைக்கழக கலாநிதிகள்,பேராசிரியர்களுக்கு சம்பளம் குறைவாக இருந்தாலும் அவர்கள் 7,8 மடங்கு சம்பள அதிகரிப்பை எதிர்பார்த்து நாட்டிலிருந்து வெளியேற முற்படவில்லை.

ஏனெனில் பணியில் அவர்களுக்கு திருப்தி இருந்தது. ஆனால் தற்போது நாட்டிலுள்ள பொருளாதார நெருக்கடியில் அவர்களுக்கு சம்பளம் போதாது. அத்துடன் பாரிய வரி விதிப்புக்களினாலும் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

அது மட்டுமன்றி அவர்கள் தமது பணியில் திருப்தியடைய முடியாதவாறு பல்கலைக்கழகங்களில் பெரும் வளப்பற்றாக்குறைகளும் உள்ளன.

புலம்பெயர் இலங்கையர்கள் இலங்கையில் புதிய பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்க வேண்டும்

புதிய பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க புலம்பெயர் இலங்கையர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர் மொழி அறிவை சிங்களம், தமிழ் மொழிகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்த முடியாது.

2030ஆம் ஆண்டளவில் அனைவருக்கும் ஆங்கிலம் என்ற திட்டம் அனைத்து பாடசாலைகளிலும் நடைமுறைப்படுத்தப்படுவதுடன் பல்கலைக்கழகளிலும் அறிமுகப்படுத்தப்படும்.

தமிழ், சிங்கள புலம்பெயர் இலங்கையர்கள் இந்நாட்டு பிள்ளைகளின் கல்விக்கு ஆதரவளிக்கும் வகையில் புதிய பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்க வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

மாகாணங்களுக்கு பல்கலைக்கழகங்களை ஸ்தாபிக்கும் அதிகாரம் வழங்கும் முன்மொழிவு பாரதூரமானது – சரத் வீரசேகர

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு அமைய மாகாணங்களுக்கு பல்கலைக்கழகங்களை ஸ்தாபிக்கும் அதிகாரம் வழங்கும் முன்மொழிவு பாரதூரமானது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரத்தை பகிர்ந்தளித்தால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மூளைச்சலவை செய்யும் பல்கலைக்கழகங்கள் தோற்றம் பெறும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சரத் வீரசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (16) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்டுள்ள 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஒருசில முன்மொழிவுகள் வரவேற்கத்தக்கவை.

கொழும்பு மாவட்டத்தில் தொடர் மாடிv குடியிறுப்புகளில் வசிப்பவர்களுக்கு நிவாரணம் வழங்கும் யோசனை வரவேற்கத்தக்கது.

விவசாயிகளுக்கு காணி உரிமை வழங்குவதாக ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தாலும் அதில் மாறுப்பட்ட பிரச்சினைகள் காணப்படுகின்றன.

பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைந்துள்ள நாடுகள் காணி உரிமையை முழுமையாக மக்களுக்கு உரித்தாக்குவதில்லை.

ஏனெனில் காணி விவகாரம் நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்புடையது.ஆகவே காணி உரிமையை முழுமையாக வழங்காமல் நிபந்தனை அடிப்படையில் தற்காலிக உரிமத்தை மாத்திரம் வழங்குவது பொறுத்தமானதாக அமையும்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு அமைய மாகாணங்களுக்கு பல்கலைக்கழகங்களை உருவாக்கும் அனுமதி வழங்கப்படுவதாக ஜனாதிபதி குறிப்பிடுவது பாரதூரமானது. 13 ஆவது திருத்தத்தில் கல்வி கட்டமைப்பில் பல்கலைக்கழகங்கள் தொடர்பில் குறிப்பிடப்படவில்லை.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரங்களை மாகாணங்களுக்கு பகிர்ந்தளித்தால் கிழக்கு மாகாணத்தில் வாஹப் கொள்கையுடைய சரியா பல்கலைக்கழகம் கிழக்கு மாகாணத்திலும்,மூளைச்சலவை செய்யும் பல்கலைக்கழகம் வடக்கு மாகாணத்திலும் ஆரம்பிக்கப்படும்.

அரசியல்வாதிகள்,மாகாண ஆளுநர்கள் தமக்கு ஏற்றாட் போல் பல்கலைக்கழகங்களை உருவாக்க முயற்சிப்பாளர்கள். ஆகவே மாகாணங்களுக்கு பல்கலைக்கழக அனுமதி என்ற யோசனை முறையற்றது என்பதை வெளிப்படையாக குறிப்பிடுவோம் என்றார்.

வடக்கைச் சேர்ந்த 12 பேருக்கு இந்தியப் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்க வாய்ப்பு

வட மாகாணத்தைச் சேர்ந்த 12 மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள், இந்தியப் பல்கலைக்கழகங்களில் முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களைத் தொடர இந்திய கலாச்சார உறவுகளுக்கான உதவித்தொகைக்கு தகுதி பெற்றுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் மாணவர்களை சந்தித்து இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் சந்தித்து கலந்துரையாடினார்.

600 க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறினர்

கடந்த 6 மாத காலப்பகுதிக்குள் 600 க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தமது தொழிலிலிருந்து விலகி நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனத்தின் தலைவர் பேராசிரியர் பரண ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கத்தின் சம்மேளனம், கல்வி அமைச்சு மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு இடையே கொழும்பில் செவ்வாய்க்கிழமை (01) மாலை சந்திப்பொன்று இடம்பெற்றது.

இதன்போது, தொழில் ரீதியான சிக்கல்கள் தொடர்பில்  கலந்துரையாடல் இடம்பெற்றதுடன் வழங்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு அமைவாக திருத்தங்களை மேற்கொள்ளாவிட்டால் எதிர்காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட வேண்டி ஏற்படும் என சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் சம்மேளத்தின் தலைவர் பரண ஜயவர்தன கூறுகையில்,

கடந்த இறுதி 6 மாதங்களில் 600க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தமது தொழிலிருந்து விலகி  நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதன் காரணமாக பல்கலைக்கழகங்களில் சில பீடங்களை நடத்தி செல்வதில் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளோம். 600க்கும் அதிகமான வெற்றிடங்கள் நிலவுகின்றன.

வரிக்கொள்ளை மற்றும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக பேராசிரியர்கள் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர். போராசிரியர்கள் இவ்வாறு விலகி செல்வதை தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசாங்கம் வரிக்கொள்ளை தொடர்பில் சாதகமான தீர்மானமொன்றை மேற்கொள்ளும் என நாம் கடந்த 6 மாதங்களாக எதிர்பார்த்தோம். ஜூலை மற்றும் செப்டம்பர் மாதமளவில் எமக்கு ஏதேனும் நிவாரணங்கள் வழங்கப்படும் என அரசாங்கம் உறுதியளித்தது. இருப்பினும், இதற்கு அரசாங்கம் தயார் இல்லை என தெளிவாகிறது. நாம் இது தொடர்பில் கவலையடைகிறோம்.

எனவே, எதிர்காலத்தில் கடுமையான தீர்மானமொன்றை எடுப்பது தொடர்பில் ஏனைய தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடி வருகிறோம் என்றார்.

அமெரிக்க ஒத்துழைப்பில் கொத்மலையில் காலநிலை மாற்றம் தொடர்பில் சர்வதேச பல்கலைக் கழகம்

காலநிலை மாற்றம் தொடர்பான கற்கை நெறிகளை தொடரும் வகையிலான சர்வதேச பல்கலைக்கழகத்தை கொத்மலை பிரதேசத்தில் அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கான திட்ட வரைபை தயாரித்துள்ளதாக காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.

இந்த சர்வதேச பல்கலைக்கழத்தை அமைப்பதற்காக 400 ஏக்கர் நிலப்பரப்பு கொத்மலை பிரதேசத்தில்  அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அங்கு விஜயம் செய்த காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன தலைமையிலான குழுவினர் பல்கலைக்கழத்தை அமைக்கும் பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அத்துடன், காலநிலை மாற்றம் தொடர்பான கற்கை நெறிகளை தொடரும் வகையிலான சர்வதேச பல்கலைக்கழகத்தை ஆரம்பிப்பதற்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்குவதற்கு அமெரிக்க தூதரகம் முன்வந்துள்ளது

மேலும், அமெரிக்க பல்கலைக்கழங்களின் ஒத்துழைப்புகளையும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக அமெரிக்க தூதரகம் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தனவிடம் உறுதியளித்துள்ளது.

எவ்வாறாயினும், ஏற்கனவே  அடையாளப்படுத்தப்பட்டுள்ள 400 ஏக்கர் நிலப்பரப்புக்கு மேலதிகமாக மேலும் 200 ஏக்கர் காணியை பல்கலைக்கழகம் அமைக்கும் திட்டத்திற்குள் உள்வாங்குவதற்கும் தீர்மானிக்கபட்டுள்ளது.

சர்வதேச தரத்தில் ஸ்தாபிக்கப்பட உள்ள இந்த பல்கலைக்கழத்தின் வதிவிட வசிதகள் உட்பட அனைத்து வளங்களையும் உள்ளடக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.

அதிகளவிலான மாணவர்களை உள்வாங்கும் பொறிமுறையொன்று பல்கலைக்கழகங்களில் உருவாக்கப்பட வேண்டும் – ஜனாதிபதி

இலங்கை பல்கலைக்கழகங்கள் அன்று ஆசியப் பல்கலைக்கழகங்களின் பட்டியலில் முதன்மையான இடத்தில் காணப்பட்டன. அந்தத் தரம் மற்றும் நற்பெயரை இந்நாட்டின் பல்கலைக்கழக கட்டமைப்பில் மீண்டும் ஏற்படுத்த வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அதன் ஊடாக வெளிநாட்டு மாணவர்களையும் இலங்கை பல்கலைக்கழகங்களுக்கு ஈர்க்க முடியும் எனவும் அது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது இதனை தெரிவித்த ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

இலங்கையில் வருடாந்தம் சுமார் 1,70,000 மாணவர்கள் உயர்கல்விக்கு தகுதி பெறுகின்றனர். அவர்களில் சுமார் 40,000 பேர் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெறுகின்றனர். மேலும், 30,000 முதல் 40,000 பேர் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு செல்கிறார்கள். ஆனால், பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெறும் 40,000 பேருக்கு மேலதிகமாக மேலும் 25,000-/ 30,000 பேரை இலங்கை பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்குவதற்கான பொறிமுறையொன்றை ஏற்படுத்த வேண்டும்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் இயங்கும் பல்கலைக்கழக கட்டமைப்பொன்று எம்மிடம் உள்ளது. அதேவேளை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு கீழ் உள்வாங்கப்படாத பல்கலைக்கழகங்களும் உள்ளன. மேலும், இலாபம் ஈட்டும் மற்றும் இலாப நோக்கற்ற பல்கலைக்கழக கட்டமைப்பும் உள்ளது. எனவே, இந்த மூன்று முறைகளையும் நடைமுறைப்படுத்துவதா அல்லது ஒரு முறையை உருவாக்கி பல்கலைக்கழக கட்டமைப்பை மீட்டெடுப்பதா என்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

அதிகபட்ச எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு கல்வியை வழங்கக்கூடிய வழிமுறைகள் தொடர்பில் நாம் கவனம் செலுத்த வேண்டும். அன்று, ஆசிய பல்கலைக்கழகங்களின் பட்டியலில் நம் நாட்டுப் பல்கலைக்கழகங்கள் முதன்மை இடத்தில் இருந்தன. ஆனால், இன்று அந்த நிலை மாறிவிட்டது. எமது பல்கலைக்கழகங்களின் செயற்பாடுகளை மீண்டும் எவ்வாறு மேம்படுத்துவது என்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

நமது பல்கலைக்கழகங்களின் தரம் மற்றும் நற்பெயரை உலகுக்கு எவ்வாறு மீண்டும் உறுதிப்படுத்துவது என்பதை நாம் கண்டறிய வேண்டும். இதன் மூலம் உலகின் பிற நாடுகளைச் சேர்ந்த மாணவர்களை நமது பல்கலைக்கழகங்களுக்கு ஈர்க்க முடியும். நமது நாட்டின் பொருளாதாரத்துக்கு இது நல்லதொரு நிலை என்றே கூற வேண்டும்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் இயங்காத பல்கலைக்கழகங்கள் தொழில் சந்தையை இலக்கு வைத்து செயற்படுவதால் பெருமளவிலான மாணவர்கள் அதன் பக்கம் திரும்பியுள்ளனர்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு மட்டுமன்றி, வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கும் இது பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. எனவே, இது தொடர்பில் ஏனையவர்கள் தீர்வுகளை வழங்குவார்கள் என்று காத்திருப்பதற்குப் பதிலாக, நாம், நமக்கு ஏற்ற தீர்வுகளை காண வேண்டும்.

தற்போதுள்ள பல்கலைக்கழகக் கட்டமைப்பை அப்படியே தொடர்வதா அல்லது தேவையான மாற்றங்கள் செய்வதா என்பதை நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.

இந்நாட்டின் முதல் வதிவிடப் பல்கலைக்கழகமான பேராதனை பல்கலைக்கழகம், ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் கட்டமைப்பைக் கொண்டுள்ளது. ஆனால், தற்போதுள்ள நவீன பல்கலைக்கழகங்களில் அத்தகைய அமைப்பு காணப்படவில்லை. நாம் இந்த அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண வேண்டும். இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண கல்வி தொடர்பான அமைச்சரவைக் குழுவொன்றையும் அமைத்துள்ளோம் என்றார்

பல்கலைக்கழகங்களுக்கு அருகில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை

கொழும்பு, ஜயவர்த்தனபுர மற்றும் களனி பல்கலைக்கழகங்களுக்கு அருகில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது.

அண்மையில் பொதுப்பாதுகாப்புத்துறை அமைச்சர் டிரான் அலஸூடன் இடம்பெற்ற சந்திப்புக்களின்போது துணைவேந்தர்கள் முன்வைத்த கோரிக்கைகளை அடுத்து இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த சந்திப்புக்களின் போது, பல்கலைக்கழக மாணவர்களின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள், மற்றும் திருட்டு சம்பவங்களின் அதிகரிப்பு போன்ற விடயங்கள் கருத்திற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

கன்பூசியஸ் நிறுவனத்தை நிறுவ சீனா கிழக்கு பல்கலையுடன் ஒப்பந்தம்

கன்பூசியஸ் நிறுவனத்தை நிறுவுவதற்கு கிழக்கு பல்கலைக்கழகத்துடன் யுனான் பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது.

அண்மையில் இந்த இரு பல்கலைக்கழகங்களும் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன.

இந்த இரு பல்கலைக்கழகங்களுக்கும் இடையே ஆசிரியர் உறுப்பினர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள், கூட்டு ஆராய்ச்சி மற்றும் வெளியீடுகள், கன்பூசியஸ் நிறுவனம் நிறுவுதல் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் போன்றவற்றில் பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்தவே புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

உலக நாடுகள் முழுவதிலும் உள்ள பல்கலைக் கழகங்களில் சீனா கன்பூசியஸ் நிறுவனத்தை நிறுவி வருகின்றது.

இந்த நிறுவனத்தை உளவு நடவடிக்கைக்காக அந்த நாடு பயன்படுத்துகிறது என்று சர்ச்சை கிளம்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.