இலங்கை மீதான தடை அமெரிக்காவுடன் ஆராயும் பிரித்தானியா

இலங்கை படை அதிகாரிகள் மீதான தடை குறித்து அமெரிக்காவுடனும், ஏனைய நாடுகளுடனும் தாம் கலந்துரையாடல்களை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அபிவிருத்தி திணைக்கள அமைச்சர் அமந்தா மிலிங் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் பிரித்தானியா நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதம் ஒன்றின்போது, இலங்கை இராணுவத்தின் பிரதம அதிகாரியான ஜெனரல் சவீந்திர சில்வா மீது அமெரிக்கா கொண்டுவந்தது போல தடையை கொண்டுவர பிரித்தானியா அரசுக்கு என்ன ஆதாரங்கள் தேவை என பிரித்தானியாவின் நாடாளுமன்ற உறுப்பினர் சியோபன் மக்டொனா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமந்தா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எல்லா ஆதாரங்களையும், தகவல்களையும் பிரித்தானியா அரசு சேகரித்து வைத்துள்ளது. பிரித்தானியாவின் அனைத்துல மனித உரிமை ஆய்வுக்குழு அதனை ஆய்வுக்குட்படுத்தியுள்ளது.

எதிர்கால தடை குறித்து நாம் எதிர்வுகூறுவதில்லை அது எமது நடவடிக்கைகளை பாதிக்கும் என அமந்தா மேலும் தெரிவித்துள்ளார்.

கொவிட் தொற்றிலிருந்து மக்களைக் காப்பாற்ற போராடிக்கொண்டிருக்கும் சுகாதாரத் துறையினர் ஒவ்வொருவரும் போராளிகளே – ஜனா

கொவிட் தொற்றிலிருந்து மக்களைக் காப்பாற்றப் போராடிக் கொண்டிருக்கும் சுகாதாரத் துறையினர் ஒவ்வொருவரும் போராளிகளே. மக்களைத் தொற்றிலிருந்து பாதுக்காக வேண்டும் என்பதற்காக எத்தனையோ வைத்தியர்கள், தாதியர்கள், சுகாதாரத் தொழிலாளர்கள், அரச உத்தியோகத்தர்கள் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்திருக்கின்றார்கள். அவர்களைப் பாராட்டாமல் இருக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம்(ஜனா)தெரிவித்தார்.

இன்றைய தினம் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற கொவிட் தடுப்பூசி திட்டத்தின் ஒரு வருட பூர்த்தி நிகழ்வில் அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

உலகலாவிய ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தி கொவிட் 19 தொற்றானது இலங்கைத் தீவையும் விட்டுவைக்கவில்லை. என்னைப் பொறுத்தமட்டில் விடுதலைப் போராட்டத்தில் இருந்து அரசியலுக்குள் வந்தவன் என்ற ரீதியில் இந்த கொவிட் தொற்றுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் சுகாதாத் துறையினரை நான் விடுதலைப் போராளிகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கின்றேன்.
ஒரு போராட்டத்தில் போராளியொருவர் தாக்குதலுக்குச் செல்லும் போது பல நாட்கள் நித்திரையிழந்து, பட்டினி கிடந்து, தன்னைச் சார்ந்த சமூகத்திற்காக உயிரைக் கூட தியாகம் செய்ய வேண்டும். அந்த வழியிலே சுகாதாத் துறையினர் உண்மையிலேயே தங்களை அர்ப்பணித்து வீடுகளுக்கும் செல்லாமல் வேலை செய்யும் இடங்களிலேயே தங்கி நமது மக்களுக்கான சேவைகள் செய்தவர்கள். அவர்களைப் பாராட்டாமல் இருக்க முடியாது.

இந்த மக்களைத் தொற்றிலிருந்து பாதுக்காக வேண்டும் என்பதற்காக எத்தனையோ வைத்தியர்கள், தாதியர்கள், சுகாதாரத் தொழிலாளர்கள், அரச உத்தியோகத்தர்கள் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்திருக்கின்றார்கள். அந்த அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலங்களிலே இருந்த பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் மயுரன் உட்பட அவரது உத்தியோகத்தர்கள், போதனா வைத்தியாசலை உத்தியோகத்தர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், உள்ளுராட்சி மன்றங்கள், பொலிஸார், இராணுவத்தினர், அரச அதிகாரிகள் போன்றோர் இணைந்து இந்தக் கொவிட் தொற்றுக்கு எதிராகப் போராடியிருக்கின்றார்கள்.

கொவிட் முதலாவது அலையில் மட்டக்களப்பு மாவட்டம் பெரிதாகப் பாதிக்கப்படவில்லை. இரண்டாவது அலையிலேயே கூடுதலாகப் பாதிக்கப்பட்டது. இலங்கையில் கொவிட் முதலாவது தடுப்பூசி கடந்த வருடம் இதேநாள் ஏற்றப்பட்டிருந்தாலும் அதற்குப் பின்னர் இரண்டாம் கட்டமாக ஊசிகள் ஏற்றப்பட்டத்தில் ஏற்பட்ட காலதாமதம் தான் இரண்டாவது அலையிலே நாங்கள் கூடுதலாகப் பாதிக்கப்பட்டிருந்தோம்.

குறைகள் கூறுவதென்றால் கூறிக்கொண்டே போகலாம். ஆனால் அதற்கான நேரம் இதுவல்ல. ஆனாலும் பல கோமாளித் தனங்களும் கொரோனாவையொட்டி இந்த நாட்டிலே நடந்ததை நாங்கள் அறிவோம். வெத மாத்தையா என்பதும், முட்டியை ஆற்றில் விட்டது போன்ற கோமாளித் தனங்களும் இங்கு நடந்துதான் இருக்கின்றது.

இந்த நாட்டின் அரச இயந்திரம் முதலாவது பகுதி தடுப்பூசி இந்தியாவில் இருந்து வந்ததன் பின்பு இரண்டாம் கட்டத்தை காலம் தாழ்த்தாமல் முன்னமே எடுத்திருந்தால் இரண்டாவது அலையின் தாக்கத்தைக் கொஞ்சம் குறைத்திருக்கலாம்.

இருந்தாலும் பல நாடுகள் இலங்கைக்கு உதவி செய்ததன் காரணமாக இன்று ஓரளவிற்கு இந்தத் தொற்றைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு முடிந்திருக்கின்றது. அந்த வகையிலே அனைத்து தரப்பினரயும் நான் பாராட்டுகின்றேன்.

தற்போது ஒமிக்றோன் பரவலில் மட்டக்களப்பு மாவட்டமும் திகழுவதாகத் தகவல்கள் அறியக் கிடைத்துள்ளன. தற்போது கல்முனையில் கொவிட் பரவலைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பாகச் செயற்பட்ட வைத்தியர் சுகுணன் இங்கு பதவியேற்றுள்ளார். அந்த அடிப்படையில் அவரின் தலைமையில் இந்த ஒமிக்குறோன் பரவலையும் சிறப்பான முறையில் கட்டுப்படுத்துவீர்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது. மக்கள் பிரதிநிதியாக எங்களால் முடிந்த உதவிகளை நாங்கள் செய்வதற்குத் தயாராக இருக்கின்றோம்.

தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுமல்லாது முழு இலங்கையிலும் இளம் சமுதாயத்தினர் குறிப்பாக வெளிநாட்டு மோகத்துடன் இருப்பவர்கள் இந்த தடுப்பூசி பெறுவதற்குக் கொஞ்சம் தயக்கம் காட்டுகின்றார்கள். குறிப்பாக சினோபாம் பெறுவதற்கே தயங்குகின்றார்கள். இவர்களுக்கு ஒரு செய்தியைக் கூறியே ஆக வேண்டும்.

பல நாடுகளுக்கும் நாங்கள் விஜயம் செய்திருக்கின்றோம். குறிப்பிட்ட ஓரிரு நாடுகளைத் தவிர ஏனைய நாடுகள் எந்த தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பதைக் கேட்பதில்லை. இரண்டு தடுப்பூசிகளும் இட்ட அட்டை இருக்குமாக இருந்தால் நீங்கள் எந்த நாட்டுக்கும் பிரயாணம் செய்யலாம் என்பதைக் கருத்திற்கொண்டு எமது சமுதாயத்தைக் காப்பாற்றுவதற்கு அனைவரும் முன்வந்து இந்தத் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

ஏனெனில் இந்தத் தடுப்பூசியொன்று தான் கொவிட் தொற்றில் இருந்து எங்களைக் காப்பாற்றும் என்பதில் உலக நாடுகள் அனைத்தும் உறுதியாக இருக்கின்றது.

இரண்டாவது அலையில் இலங்கையின் சனத்தெகையில் இறந்தவர்களின் எண்ணிக்கை விகிதத்தில் இந்தியாவை விட அதிகமானது. ஏனெனில் நாங்கள் அந்த நேரத்தில் தடுப்பூசி இட்டுக் கொண்டது குறைவாக இருந்திருக்கின்றது. தற்போது போதுமான அளவிற்கு தடுப்பூசி இருக்கின்ற காரணத்தினால் அனைவரும் தடுப்பூசி இடவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம் என்று தெரிவித்தார்.

Posted in Uncategorized

சட்ட மறுசீரமைப்புக்கான உள்ளகப்பொறிமுறைகள் குறித்து அரசாங்கத்தை வலியுறுத்தும் ஐ. நா.

சட்ட மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கக்கூடிய அரசாங்கம், அதனை முன்னிறுத்திய உள்ளகப்பொறிமுறைகள் சர்வதேச நியமங்களையும் கடப்பாடுகளையும் பூர்த்திசெய்யும் வகையில் அமைந்திருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் ஹம்டி, அதிலுள்ள குறைபாடுகளை அடையாளங்காண்பதற்கு விரிவான கலந்துரையாடல்களை முன்னெடுக்கவேண்டியது அவசியமாகும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில், மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றகரமான நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கையில் பணியாற்றும் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் நேற்று வியாழக்கிழமை விளக்கமளித்திருந்தார்.

இதன்போது மனித உரிமைகள் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு தொடர்பில் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவதற்கு இலங்கை தயாராக இருப்பதாகக் கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரின்போது தான் அளித்த வாக்குறுதியை மீண்டும் நினைவுகூர்ந்த அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், பொறுப்புக்கூறல், சட்ட மறுசீரமைப்பு, நல்லிணக்கம் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்டு உள்நாட்டு நிறுவனங்களின் ஊடாக இலங்கை அரசாங்கம் கணிசமான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

வெளிவிவகார அமைச்சருடனான இச்சந்திப்பில் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் ஹம்டியும் பங்கேற்றிருந்த நிலையில், நிலைமாறுகால நீதியை உறுதிப்படுத்தல், நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைதல் மற்றும் பயங்கரவாதத்தடைச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளல் ஆகிய விடயங்களில் அவற்றுடன் தொடர்புடைய உள்நாட்டுக்கட்டமைப்புக்களால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு அவர் தனது பாராட்டை வெளிப்படுத்தினார்.

அதேவேளை சட்ட மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கக்கூடிய அரசாங்கம், அதனை முன்னிறுத்திய உள்ளகப்பொறிமுறைகள் சர்வதேச தரநியமங்களையும் கடப்பாடுகளையும் பூர்த்திசெய்யும் வகையில் அமைந்திருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டியது அவசியமாகும் என்றும் ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் வலியுறுத்தியுள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸுக்கும் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும் இடையில் நேற்று வியாழக்கிழமை வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பு தொடர்பில் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையை மேற்கோள்காட்டி தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே ஹனா சிங்கர் ஹம்டி மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.

சட்டத்தில் ஏற்படுத்தப்படும் மாற்றங்கள் சட்ட அமுலாக்கத்தினால் ஏற்படுத்தப்படும் மாற்றங்களுடன் சமாந்தரமாகப் பயணிப்பதாக அப்பதிவில் சுட்டிக்காட்டியுள்ள அவர், இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது அவற்றிலுள்ள குறைபாடுகளை அடையாளங்காண்பதற்கும் தீர்வுகளைக் கண்டறிவதற்கும் விரிவான கலந்துரையாடல்களும் ஆராய்வும் இன்றியமையாததாகும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

போர்க்குற்றங்களில் ஈடுப்பட்ட இராணுவ அதிகாரிகளுக்கு எதிராகத் தடைவிதியுங்கள் – 9 புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் கூட்டாகக் கோரிக்கை

இலங்கையில் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக அவுஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்கா, அயர்லாந்து, கனடா, தென்னாபிரிக்கா, சுவிஸ்லாந்து ஆகிய நாடுகளின் அரசாங்கங்கள் தடைவிதிக்கவேண்டும் என்று அந்தந்த நாடுகளைத் தளமாகக்கொண்டியங்கும் 9 புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.

இலங்கை அரசாங்கங்களினால் திட்டமிட்டு வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்ட இனப்படுகொலைகளால் புலம்பெயர் தமிழர்கள் அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் நண்பர்களையும் இழந்திருக்கின்றார்கள்.

அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பலர் நாட்டைவிட்டு வெளியேறி, வெளிநாடுகளில் வசித்துவருகின்றார்கள்.

அவர்கள் திட்டமிட்ட இனப்படுகொலையினால் ஏற்பட்ட வடுக்களிலிருந்து மீள்வதற்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியைப் பெற்றுக்கொள்வதற்கும் கடுமையாகப் போராடிவருகின்றார்கள் என்றும் அவ்வமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இலங்கையில் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட இராணுவ அதிகாரிகளுக்கு எதிராகத் தாம் வசிக்கும் நாடுகளின் அரசாங்கங்கள் தடைவிதிக்கவேண்டும் என்று வலியுறுத்தி அவுஸ்திரேலியா தமிழ் காங்கிரஸ், பிரித்தானிய தமிழர் பேரவை, அயர்லாந்து தமிழர் பேரவை, பிரான்ஸை தளமாகக்கொண்டியங்கும் மைசன் டு தமிழ் ஈழம், கனேடியத்தமிழர்களின் தேசிய பேரவை, தென்னாபிரிக்காவைத் தளமாகக்கொண்டியங்கும் சமாதானம் மற்றும் நீதிக்கான ஒருமைப்பாட்டுக்குழு, சுவிஸ் தமிழ் செயற்பாட்டுக்குழு, இனப்படுகொலைக்கு எதிரான தமிழர் இயக்கம் மற்றும் ஐக்கிய அமெரிக்க தமிழர் செயற்பாட்டுக்குழு ஆகிய 9 புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதாவது,

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்முறைகள் காரணமாக நாட்டைவிட்டு வெளியேறிய ஒரு மில்லியனுக்கும் அதிகமான தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் உறுப்பினர்களான நாம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் திரட்டப்பட்ட நம்பத்தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் இலங்கையில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராகத் தடைவிதிக்கவேண்டும் என்று நாங்கள் வாழக்கூடிய நாடுகளின் அரசாங்கங்களிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.

தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான மிகமோசமான மீறல்கள் தொடர்பில் நம்பத்தகுந்த வகையில் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கக்கூடிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரே தற்போது இலங்கை அரசாங்கத்திற்குத் தலைமைதாங்குகின்றனர்.

தமிழ்மக்களுக்கு எதிரான தீவிர பிரசாரம் மற்றும் தமது கட்டளையின்கீழ் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட இராணுவ வீரர்களைப் பாதுகாப்பதாக அளிக்கப்பட்ட வாக்குறுதி என்பவற்றின் ஊடாகவே அவர்கள் ஆட்சியதிகாரத்திற்குத் தெரிவுசெய்யப்பட்டார்கள்.

இலங்கையில் ஆட்பீடமேறும் ஒவ்வொரு அரசாங்கங்களும் இதனையே தொடர்ந்து செய்கின்றன. அந்தவகையில் தற்போதைய அரசாங்கம் வெளிநாடுகளின் இராஜதந்திர அழுத்தங்களைக் குறைத்துக்கொள்ளும் நோக்கில் அரசநிர்வாகம் மற்றும் இராஜதந்திர ரீதியில் முக்கியமான பதவிகளுக்கு முன்னாள் இராணுவ அதிகாரிகளை நியமித்துவருகின்றது.

இலங்கை அரசாங்கங்களினால் திட்டமிட்டு வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்ட இனப்படுகொலைகளால் புலம்பெயர் தமிழர்கள் அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் நண்பர்களையும் இழந்திருக்கின்றார்கள்.

அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பலர் நாட்டைவிட்டு வெளியேறி, வெளிநாடுகளில் வசித்துவருகின்றார்கள். அவர்கள் திட்டமிட்ட இனப்படுகொலையினால் ஏற்பட்ட வடுக்களிலிருந்து மீள்வதற்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியைப் பெற்றுக்கொள்வதற்கும் கடுமையாகப் போராடிவருகின்றார்கள்.

போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக நம்பத்தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்ட சில இராணுவ அதிகாரிகள் தமது நாட்டிற்குள் நுழைவதற்கு பிரேஸில், கனடா, ஐக்கிய அமெரிக்க, பிரிட்டன் மற்றும் ஐரோப்பா உள்ளிட்ட சில நாடுகள் தடைவிதித்திருக்கின்றன. அதன் தொடர்ச்சியாக அண்மையில் இலங்கையின் இரு இராணுவ அதிகாரிகளும் அவர்களது குடும்பத்தினரும் தமது நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கு அமெரிக்க இராஜாங்கத்திணைக்களம் தடைவிதித்தது.

ஆகவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கையில் நம்பத்தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் மிகமோசமான மீறல்களில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் நபர்களுக்கு எதிராகத் தடைவிதிக்குமாறு நாம் வசிக்கும் நாடுகளின் அரசாங்கங்களிடம் கேட்டுக்கொள்கின்றோம் என்று அவ்வறிக்கையில் கோரப்பட்டுள்ளது.

அதுமாத்திரமன்றி மீறல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்குக் கட்டளை பிறப்பிக்கும் அதிகாரத்திலும் பொறுப்பிலும் இருந்தவர்கள் என்ற அடிப்படையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஜெனரல் சரத்பொன்சேகா, ஜெனரல் சவேந்திர சில்வா, மேஜர் ஜெனரல் சத்யப்ரிய லியனகே, ஜெனரல் கமால் குணரத்ன, மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ், மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரிய உள்ளடங்கலாக 18 பேரின் பெயர்களையும் மேற்குறிப்பிட்ட புலம்பெயர் அமைப்புக்கள் தமது அறிக்கையில் உள்ளடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலாக புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படும்: G.L.பீரிஸ்

தற்போதுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலாக புதிய சட்டமொன்று அறிமுகப்படுத்தப்படும் என வௌிவிவகார அமைச்சர் G.L.பீரிஸ் தெரிவித்தார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தில் தற்போது துரித திருத்தங்களை மேற்கொண்டு வருவதாகவும் இரண்டு பகுதிகளாக பிரித்து, முழுமையாக ஆராய்ந்து புதிய சட்டமொன்றை அறிமுகம் செய்யவுள்ளதாகவும் G.L.பீரிஸ் குறிப்பிட்டார்.

அதற்காக குழுவொன்றை நியமித்து, பொறுப்புகளை ஒப்படைத்துள்ளதாகவும் 1979 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலாக புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் அவர் கூறினார்.

Posted in Uncategorized

அமெரிக்க தூதரக உயர் அதிகாரிகளுக்கு பல விடயங்களை வௌிப்படுத்தினார் ஆஸாத் சாலி!

தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும், முன்னாள் ஆளுநருமான ஆஸாத் சாலி மற்றும் அமெரிக்கத் தூதரக உயர் அதிகாரிகளுக்கும் இடையில் நேற்று (26) சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது, தான் சட்டவிரோதமாகக் கைது செய்யப்பட்டமை மற்றும் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் மற்றும் பல புத்திஜீவிகள் கைது செய்யப்பட்டு இன்னும் சிறையில் உள்ளமை குறித்து ஆஸாத் சாலி அமெரிக்கத் தூதரக உயர் அதிகாரிகளிடம் விரிவாக எடுத்துரைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் 800 வருடங்களாக முஸ்லிம் மக்களால் பாதுகாக்கப்பட்டு வந்த கூரஹல ஜெய்லானி கட்டிடங்கள் தகர்க்கப்பட்டமை மற்றும் பல விடயங்கள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.

குறித்த சந்திப்பில் அமெரிக்கத் தூதரக அதிகாரிகளான மாட்டின் கெலி, ரூபி வூட் சேட், அரசியல் பொறுப்பாளர் நஸ்ரின் மரைக்கார் ஆகியோர் கலந்து கொண்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

தமிழ் மக்களையும் புலம் பெயர்ந்தோரையும் ஏமாற்ற முடியாது- ஸ்ரீகாந்தா தெரிவிப்பு

தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்ன தான் புரண்டாலும், தமிழ் மக்களையும் புலம் பெயர்ந்தோரையும் ஏமாற்ற முடியாது என தமிழ் தேசிய கட்சியின் தலைவர் ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.

13 ஆவது திருத்தம் தொடர்பில் தமிழ் கட்சிகள் ,இந்திய பிரதமர் மோடிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதம் தொடர்பில்,தெளிவு படுத்தும் ஊடகவியாளர் சந்திப்பு யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது. இதன் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

நாம் இப்போது என்ன செய்தோம் என்று தெளிவாக கூற வேண்டிய பொறுப்பு உள்ளது.புதிய அரசியல் அமைப்பு வருமா வரதா என்று உறுதியாக கூற முடியாது.அப்படி வந்தாலும் அதில் சிங்கள, பெளத்த மேலாதிக்கம் மட்டுமே அதில் இருக்கும்.

இது மட்டும் உறுதி. ஏனென்றால் இது தான் நடந்தது.எமது கடந்த கால அனுபவம் இது. இந்திய இலங்கை ஒப்பந்தம் ராஜீவ் காந்தி காலத்தில் எழுத்தப்பட்ட போது தமிழ் மக்களின் தீர்வு தொடர்பில் அன்று வாக்குறுதி எமக்கு வழங்கப்பட்டது.அதன் உரித்து இந்தியாவுக்கு இருக்கிறது என்பதன் அடிப்படையிலேயே நாம் மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். 13 ஆவது திருத்தம் தமிழ் மக்களின் முழுமையான பிரச்சினைக்கு தீர்வு தரும் என்று ஒரு நாளும் கூறவில்லை. ஏற்றுக்கொள்ளவும் இல்லை.

ஒன்றுமே இல்லாமல் இருக்கும் இடத்தில் ,சட்ட ரீதியாக அமுல் படுத்துமாறு கூறிய 13 ஆவது திருத்தத்தை முதலில் அமுல் படுத்தினால், அதில் உள்ள சிறிய விடயங்களை என்றாலும் நாம் பெறுவதற்கு முயற்சிக்கலாம்.ஒன்றுமே இல்லாமல் இருக்கும் இடத்தில் இருக்கிறதை என்றாலும் நாம் பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும்.

ஏனென்றால் எமது தமிழ் மக்களின் இருப்பு தற்போது அழிந்து வருகிறது. அழிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக சிங்கள குடியேற்றம் இடம்பெற்று வருகிறது. ஆகவே இருக்கிறதை முதலில் அமுல் படுத்துங்கள் என்று தான் கூறுகின்றோம் என்றார்.

Posted in Uncategorized

அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் செயற்படுகின்றார்கள் – சுரேஷ்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் கோட்டாபய அரசாங்கம் நினைக்கும் விடயங்களை வடக்கில் நிறைவேற்றுகிறார்கள் என ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே சுரேஸ் பிரேமச்சந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 13வது திருத்தச் சட்டத்தினை நாம் தமிழரின் தீர்வாக ஒரு போதும் ஏற்க வில்லை அதனை ஏற்க போவதும் இல்லை.

ஆனால் தற்போதுள்ள பூகோள அரசியல் நிலையில் தமிழ் மக்களை பாதுகாக்க அதாவது வடக்கில் இராணுவ மயமாக்கல், சிங்கள குடியேற்றங்களைத் தடுத்து தமிழ் மக்களின் உரிமையை பாதுகாப்பதற்காக ஏற்கனவே இந்தியாவின் தலையீட்டில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட அரசியல் சாசனத்தில் உள்ள 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துமாறு கோரியே 6 தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து இந்திய பிரதமருக்கு கடிதம் ஒன்றின் மூலம் அனுப்பி வைத்துள்ளோம்.

அந்த கடிதத்தின் தொடர்ச்சியாக நாம் டெல்லி சென்று இந்திய பிரதமரை சந்தித்து அடுத்தகட்டமாக முன்னெடுக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளோம்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மக்கள் மத்தியில் போலிப் பிரசாரத்தினை மேற்கொள்வது போல நாங்கள் 13 வது திருத்தச்சட்டத்தை தீர்வாக ஏற்றுக் கொள்ளவில்லை ஏற்றுக் கொள்ளப் போவதுமில்லை.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் கோட்டாபய அரசாங்கம் எதை செய்ய நினைக்கிறார்களோ அதனை வடக்கில் நிறைவேற்றுகிறார்கள் அதாவது தற்போது அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு வடக்கின் முகவர்களாக செயற்படுகின்றார்கள் என்றுதான் கூற வேண்டும்.

குறிப்பாக ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய போட்டியிடும் போது வடக்கு மக்களின் வாக்களிப்பு எனக்கு தேவையில்லை ஆனால் தேர்தலை புறக்கணியுங்கள் என்று கூறியிருந்தார் அதனையே அந்த தேர்தலின் போது தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் செய்திருந்தார்கள்.

அதாவது அந்த தேர்தலை புறக்கணிக்குமாறு கூறியிருந்தார்கள் தற்போது கோட்டாபய கூறுகின்றார் 13வது திருத்தம் தேவையில்லை அபிவிருத்தி மட்டும் போதும் என அதேபோல் அரசாங்கத்தில் உள்ளவர்களும் அதனை கூறுகின்றார்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரும் வடக்கில் அந்தக் கோரிக்கையினையே செயற்படுத்துகின்றார்கள்.

கட்சியிலிருந்து மணிவண்ணன் பிரிந்து சென்றுவிட்டதால் தமது கட்சியை மணிவண்ணன் கொண்டு சென்று விடுவார் என்பதற்காக கட்சியில் உள்ளோருக்கு ஏதாவது ஒரு வேலையை கொடுக்க வேண்டும்தானே அதற்காகத்தான் 13வது திருத்தச் சட்டத்தினை சவப்பெட்டியில் வைத்து மக்கள் மத்தியில் ஊர்வலமாக கொண்டு செல்கிறார்கள். அவர்கள் தமது கட்சியை காப்பாற்றுவதற்காக இவ்வாறு போலி பிரச்சாரத்தினை மேற்கொள்கிறார்கள்.

மக்களை ஏமாற்றி கோட்டாபய அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் செயற்படுகின்றார்கள் எனவே மக்கள் போலிப் பிரச்சாரங்களை நம்ப கூடாது” என தெரிவித்தார்.

13 ஆவது திருத்ததில் தமிழர்களுக்கு தீர்வில்லை; சமஷ்டியே தீர்வு! பொய்யுரைக்காதீர்கள் முண்ணணியிடம் விக்னேஸ்வரன் கோரிக்கை

13 ஆவது திருத்தம் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாது.ஆனால் சிறிய சிறிய அலுவல்களை பார்த்துக்கொள்ள முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

13 ஆவது திருத்தம் தொடர்பில் தமிழ் கட்சிகள் ,இந்திய பிரதமர் மோடிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதம் தொடர்பில்,தெளிவு படுத்தும் ஊடகவியாளர் சந்திப்பு யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது.இதன் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,
எம்மிடம் ஒரு முனை மடிந்த மண் வெட்டி உள்ளது.புது மண்வெட்டி வருவதற்கு காலம் எடுக்கும்.

இந்த நிலையில், இந்த பழைய மண் வெட்டியை பயன்படுத்தி என்றாலும் சிறிய வேலையை செய்ய வேண்டும்.புதிய மண் வெட்டி வரும் வரும் என்று இருப்பதில் அர்த்தம் இல்லை.

இதை போல தான் 13 ஆவது ,திருத்தம்.தமிழ் மக்களின் பிரச்சினைகள் இதன் மூலம் தீர்க்கப்படாது.ஆனால் சிறிய சிறிய அலுவல்களை பார்த்துக்கொள்ள முடியும் என்று தான் கூறுகின்றோம்.

நாம் இப்போது இருக்கும் நிலையில் இராணுவ ஆட்சி வடக்கு கிழக்கில் அதிகரிக்கிறது.சிங்கள குடியேற்றம் நடைபெறுகிறது.

நாம் ஒன்றுமே செய்ய முடியாமால் நிற்கிறோம்.இதற்கு இருக்கும் சட்டம் ஒன்றை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்றார்.

காங்கிரஸ் யாப்பில் ஒற்றையாட்சியை வலியுறுத்திக் கொண்டு வெளியில் இருதேசம் ஒரு நாடு என மக்களை ஏமாற்றுகிறார் கஜேந்திரகுமார்! சித்தார்த்தன் குற்றச்சாட்டு

கயேந்திர குமார் பொன்னம்பலத்தின் அகில இலங்கை தமிழ் காங்கிரசின் கட்சியின் யாப்பு ஒற்றையாட்சியை வலியுறுத்துகின்ற நிலையில் தமிழ் மக்களை திசைதிருப்ப தமிழ் மக்கள் முன்னணி என்ற குழுவை அமைத்து 13 க்கு எதிராகப் போராட்டம் நடத்துகிறார்கள் என புளொட் அமைப்பின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் 13வது திருத்தச் சட்டத்தினை எதிர்க்கும் தமிழ் தேசிய முன்னணியினர் தமிழ் மக்களின் தீர்வாக எதனை முன் வைக்கப் போகிறார்கள் அல்லது அவர்கள் தீர்வு தொடர்பில் எடுக்கும் முயற்சி என்னவென கேட்க விரும்புகின்றேன்.

மக்கள் மத்தியில் பொய் சொல்வதற்கு தகுதி வேண்டும் 13வது திருத்தச் சட்டத்தினை நாங்கள் தீர்வாக ஏற்றுக் கொண்டோம் ஏற்றுக் கொண்டுள்ளோம் என கஜேந்திரகுமார் அணியினர் பொய் பிரச்சாரம் செய்கிறார்கள்.

13 வேண்டாம் என்றால் 13பதிலாக என்ன தீர்வினை முன் வைக்கப் போகிறீர்கள்? அல்லது தீர்வு விடயத்தில் என்ன நடவடிக்கை எடுத்துள்ளீகள் எனக் கூறமுடியுமா.

கயேந்திரகுமார் அணியினர் எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் போட்டியிடவுள்ள நிலையில் யாரை முதலமைச்சராக முட்படுத்துவது என போட்டி நிலவுகிறது.

கஜேந்திரகுமாரின் அகில இலங்கை தமிழ் காங்கிரசின் தேர்தல் விஞ்ஞாபனத்தை 75ரூபாய் முத்திரைக் காசு வழங்கி பார்த்தேன் அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனம் ஒற்றையாட்சியை வலியுறுத்துகிறது.

காங்கிரஸ் என்ற பெயரில் போராட்டம் நடத்தினால் தமது கபடத்தனம் தெரிந்து விடும் என்பதற்காக முன்னணி என்ற ஒரு குழுவை ஆரம்பித்து 13ஐ தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து ஏற்றிவிட்டார்கள் அதற்கு எதிராக போராட வாருங்கள் என மக்களை குழப்பி வருகிறார்கள்.

தமிழ் தேசியத்திற்காக ஒன்றிணைந்த தலைவர்கள் நாங்கள் ஒருபோதும் 13வது திருத்தச்சட்டத்தை தமிழ் மக்களின் தீர்வாக ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறோம் .

Posted in Uncategorized