பாகிஸ்தானை விட அதிகரித்து வரும் இலங்கையின் பணவீக்கம்

ஆசிய பிராந்தியத்தில் இலங்கையின் பணவீக்கம் பாகிஸ்தானை விட வேகமாக அதிகரித்து வருவதாக இந்தியாவின் Business Standard இணையத்தளம் தெரிவித்துள்ளது.

ஜனவரி மாதத்தில் உணவுப் பொருட்களின் விலையேற்றம் 25 வீதம் வரை அதிகரித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் பணவீக்கம் 22.1 ஆக பதிவாகியிருந்தது.

மக்களின் பொருளாதாரத்திற்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள பணவீக்கம் குறிப்பிடத்தக்களவில் அதிகரித்துள்ளமை அரசாங்கம் வௌியிட்டுள்ள புதிய தரவுகள் மூலம் உறுதியாகின்றது.

டிசம்பர் மாதம் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை அதிகரிப்பு வேகம் 12 .1 ஆக அமைந்திருந்ததுடன், ஜனவரி மாதம் அது 14.2 ஆக அதிகரித்தது.

உணவுப்பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரித்தமையே பணவீக்கத்திற்கான முக்கிய காரணம் என தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் கூறியுள்ளது.

அரிசி, பால் மா, சீனி, பழ வகைகள், பாண் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளது.

உணவுப்பொருட்கள் அல்லாத எரிபொருள் விலை, போக்குவரத்து கட்டணங்கள், எரிவாயு விலை, வீட்டு வாடகை, கல்வி, உணவக மற்றும் ஹோட்டல் கட்டணங்கள் அதிகரிப்பு என்பனவும் ஜனவரி மாதம் பணவீக்கம் அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்துள்ளன.

கடந்த ஒரு வருட காலத்தில் ஒரு கிலோகிராம் சிவப்பு பச்சை அரிசியின் விலை 65 ரூபாவால் அதாவது 68 வீதத்தால் அதிகரித்துள்ளது.

அரிசிக்கான மாற்றீடாக அமைந்துள்ள கோதுமை மா ஒரு கிலோகிராமின் விலையும் 60 ரூபாவால் அதிகரித்துள்ளது. அது 57 வீத அதிகரிப்பாகும்.

நாட்டின் அநேகமானவர்களின் உணவில் முக்கிய அங்கமாக உள்ள பருப்பின் விலை கடந்த ஒரு வருட காலத்தில் 98 ரூபாவால் அதிகரித்துள்ளது. பருப்பின் விலையில் சுமார் 57 வீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த காலப் பகுதியில் சீனி விலையும் 28 ரூபாவால் அதிகரித்துள்ளதை காண முடிகிறது.

ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெயின் விலையும் 32 ரூபாவால் அதிகரித்துள்ளது.

பிள்ளைகள் உள்ள வீடுகளின் அத்தியாவசியத் தேவையாக உள்ள பால் மா விலையும் வெகுவாக அதிகரித்துள்ளது. 400 கிராம் எடையுடைய பால் மா பக்கெட்டின் விலை 160 ரூபாவால் அதிகரித்துள்ளதுடன், பட்டர் விலை 60 ரூபாவால் அதிகரித்துள்ளது.

13வது திருத்த சட்டம் யாருக்கு தேவை? ச. வி. கிருபாகரன், பிரான்ஸ்

மிக அண்மையில் ஓர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற காணோளியை பார்வையிட்டடேன். அதில் ஓரு பேச்சாளர், ‘யார் மக்களின் சமூக பொருளதார நலன்களில் அக்கறை கொண்டவர்களென்ற’வினாவை முன்வைத்து உரையாற்றினார். இவரின் உரையின் பிரகாரம், அரசியல்வாதிகள் என்பவர்கள் தினமும் தமது அடுத்த தேர்தலை பற்றிய சிந்தனை கொண்டவர்ளே தவிர, மக்களின் நலன்களிலோ எதிர்காலத்திலோ அக்கறை கொண்டவர்கள் அல்ல என்ற விடயத்தை முன்வைத்தார்.

இவ் காணோளியை என்னால் சகல தமிழ் அரசியல்வாதிகளிற்கும், தெற்கின் சில அரசியல் பிரமுகர்களிற்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இவ்விடயத்தை இரு வருடங்களிற்கு முன், ஓர் செவ்வியில் – ஈழத்தமிழரிடையே காணப்படும் தேர்தல்வாதிகள் என்பவர்கள் யார்? அவர்கள் எப்படியான சுகபாவனைகள், பழக்க வழக்கங்கள், செயற்திட்டங்களை கொண்டவர்கள் என்பது பற்றி குறிப்பிட்டிருந்தேன்.

இவ் அடிப்படையில், இன்று ஈழத்தமிழரிடையே, மிகவும் கடுமையாகவும் என்றுமில்லாதவாறு இடம்பெறும் பேச்சு பொருள் – 13வது திருத்த சட்டம். இது பற்றி யாவரும் நன்றாக அறிந்து அனுபவப்பட்டுள்ள காரணத்தினால், இதனது சரித்திரத்திற்குள் செல்வதை தவிர்த்து கொண்டாலும், சரித்திரத்தை மேலோட்டமாக தட்டி செல்ல வேண்டிய தேவையுள்ளது.

இலங்கைதீவின் 13வது திருத்த சட்டம் என்பது 1987ம் ஆண்டு யூலை மாதம் 29ம் திகதி கைச்சாத்திடப்பட்ட இலங்கை-இந்தியா ஒப்பத்தந்தின் அடிப்படையில், 1987ம் ஆண்டு நவம்பர் மாதம் 14ம் திகதி மாகணங்களிற்கான உள்ளக சுயநிர்ணய உரிமையை வழங்கும் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இவ் 13வது திருத்த சட்டம். ஏறக்குறைய முப்பத்தைந்து வருடங்களிற்கு முன் சிறிலங்காவின் அரசியல் அமைப்பு மூலம் உருவாக்கப்பட்ட சட்ட ரீதியான ஓர் திருத்த சட்டம். ஆனால் இதில் என்ன உள்ளது என்ன இல்லை என்பதை நாம் அனுபவரீதியாக கண்டுள்ளோம்.
ஈழத்தமிழரிடையே இது ஓர் புகம்பம் எனலாம். காரணங்கள் பல. ஒன்று இவ் திருத்த சட்டம் தமிழீழ மக்களுடைய அரசியல் அபிலாசைகளை முற்று முழுதாக திருப்திப்படுத்துவதாக காணப்படவில்லை. அடுத்து, அவ்வேளையில் ஆயுத போராட்டத்தை அர்பணிப்புடன் முன்னின்று நடாத்திய தமிழீழ விடுதலை புலிகள், தம்மால் தொடர்ந்து போராடி, 13வது திருத்த சட்டத்திற்கு மேலான வெளிவாரியான சுயநிர்ணய உரிமையான, தனி நாட்டை, அதாவது தமிழீழத்தை அமைக்க முடியும் என்ற திடமான நம்பிக்கையிருந்தது. அதை காலப்போக்கில், தமிழீழ விடுதலை புலிகள் நிருபித்தும் காண்டினார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.
1987ம் ஆண்டில் இந்திய சமாதானபடையுடனான யுத்தம் ஆரம்பமாகும் வரை, இந்தியாவுடன் நாம் ஓர் எதிர்பு அரசியலை, அதாவது வெளிப்படையான ஓர் அரசியல் பகைமையை கொண்டிருக்கவில்லை என்பதையும் இங்கு யாரும் மறுக்க முடியாது.

இந்தியாவுடனான அரசியல் பகமை

இந்தியாவுடனான எமது உண்மையான வலுவான அரசியல் பகமை என்பது, இந்திய சமாதான படையுடனான சமரின் வேளையில் உருவாகியது என்பதற்கு மேலாக, இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் துன்பியல் சம்பவத்தை தொடர்ந்தே ஆரம்பமாகியது என்பதையும் யாரும் இங்கு மறுக்க முடியாது. இதை வேறு வார்த்தையில் கூறுவதனால், தமிழ்நாட்டு மக்களோ, இந்தியாவின் மற்றைய மாநிலத்தின் மக்களோ, இந்திய சமாதான படையுடனான சமரின் வேளையில் தமிழீழ விடுதலை புலிகளை, ஓர் விடுதலை இயக்மாகவே பார்த்தனர் என்பதும், பிரதமர் ராஜீவ் காந்தியின் துன்பியல் சம்பவத்தை தொடர்ந்தே, அவர்களது சிந்தனையில் மாற்றங்கள் ஏற்பட்டதாக இந்திய ஆய்வாளரின் கருத்து காணப்படுகிறது.

பல நெருகடிகள், இடைவெளிகள், அழிவுகளை தொடர்ந்து, சிங்கள பௌத்த அரசினது 13வது திருத்த சட்டம் மீதான வெறுப்பின் மத்தியில், இன்று வடக்கு கிழக்கு வாழ் மக்கள், 13வது திருத்த சட்டம் பற்றி உரையாட விவாதிக்க கதைக்க ஆரம்பித்துள்ளனர். இது எதற்காக? ஏன்? என்ற விடயங்களை நாம் முதலில் ஆராய வேண்டும்.

எதற்காக என்ற வினாவிற்கான விடை என்னவெனில் – இன்று எம்மிடம் தமிழீழ விடுதலை புலிகள் காலத்திலிருந்த நடைமுறை அரசோ, ஆயுதபலமோ, பாரீய நிலப்பரப்போ இல்லாதது மட்டுமல்லாது, நம்மிடையே ஐக்கியம் என்பது அறவே கிடையாது என்பதையும் யாரும் மறுக்க முடியாது. இதேவேளை, அன்று போல் அல்லாது இன்று பல அரசியல் கட்சிகள் உருவாகியுள்ளதுடன், மக்கள் மிகவும் மோசமான பொருளாதார நெருக்கடிக்குள், கடந்த பன்னிரன்டு வருடங்களாள தள்ளப்பட்டு, அதிகமான மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் அதாவது இருப்பிட வசதியின்றி, உண்ண உணவின்றி, நாளாந்தம் பீதியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் ஒருவரும் மறுக்க முடியாது.

சமநிலை பேரம் பேசும் நிலை இல்லை

இவற்றை மிக சுருக்கமாக கூறுவதனால், தமிழீழ விடுதலை புலிகள் காலத்தை போன்று, சிங்கள பௌத்த அரசுடன் சமநிலையில் பேரம் பேசும் நிலையில், இன்று வடக்கு கிழக்கு வாழ் மக்களின் நிலை இல்லை என்பதையும் எவரும் மறுக்க முடியாது.

இவ் அடிப்படையில், அன்று தமிழீழ விடுதலை புலிகளினால் நிராகரிக்கப்பட்ட 13வது திருத்த சட்டத்தை, நாம் ஏன் இன்று தூசி தட்டி திரும்பி பார்க்க வேண்டும் என்ற விவாதம் அறவோடு நிராகரிக்கபப்படுகிறது என்பதை நியாயவாதிகள் ஏற்று கொள்வார்கள்.

இன்றைய ஜனதிபதி பதவி ஏற்று இரு வருடங்களிற்கு மேலாகியும், இன்று வரை வடக்கு கிழக்கு வாழ் மக்களிற்கு ஓர் அரசியல் பிரச்சனை உண்டு, இதற்கு தீர்வு காண வேண்டுமென்ற சிந்தனையே இல்லாத நிலையில், நாங்கள் யாவரும் 13வது திருத்த சட்டத்தை ஏற்பதா, இல்லையா என்ற விவாதங்களை மேற்கொண்டு, மேலும் மேலும் எம்மிடையே பகமைகளை அதிகரித்து கொள்கிறோம் என்பதையும் நியாயவாதிகள் ஏற்று கொள்வார்கள்.

இப்படியாக சிங்கள பௌத்த அரசினதும், அதனது ஜனதிபதியின் நிலை காணப்படும் பொழுது, ராஜதந்திரம் தெரிந்தவர்கள், சர்வதேசத்தின் அரவணைப்புடன், ஏற்கனவே சிங்கள பௌத்த அரசினால், சிறிலங்காவின் அரசியல் யாப்பில் ஏற்று கொள்ளப்பட்ட 13வது திருத்த சட்டத்தை முற்று முழுதாக நடைமுறை படுத்துங்களென கேட்பதில் என்ன தவறு உண்டு?

இவ் 13வது திருத்த சட்டத்திற்கு மூல கர்த்தவாகவுள்ள இந்தியா மூலமாகவே, இதை நடைமுறை செய்யுங்களென சிறிலங்காவிற்கு எம்மால் அளுத்தம் கொடுக்க முடியும். இந்தியாவுடன் இணைந்து, சர்வதேச சமூதாயமும், ஐ.நா.மனித உரிமை சபையினால் நிறைவேற்றப்பட்ட சகல தீர்மானங்களும், இதற்கு உறுதுணையாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

வேறு அரசியல் தீர்வை…

இந்த 13வது திருத்த சட்டத்தை நடைமுறைபடுத்துங்கள் என கேட்பதன் மூலம், தொடர்ந்து நாம் வேறு ஓர் அரசியல் தீர்வை கேட்கவோ, கோராவோ முடியாதென்று – எந்த பல்கலைகழகத்தினால், எந்த சட்ட கல்லுரியினால், எந்த புத்திஜீவியினால் கூறப்பட்டுள்ளது? இன்று, ஸ்கோட்லாந்து மட்டுமல்லாது, உலகில் உள்ளக சுயநிர்ண உரிமையை அனுபவித்து வரும் பல நாட்டின் தேசிய மக்கள், பிரிவினையை முன் வைக்க முடியாத நிலை உலகில் காணப்படவில்லையே.

சில வருடங்களிற்கு முன், சுவிஸ் நாட்டில் வசிக்கும் ஓர் ஊடகவியலாளர் எனக்கு கூறிய ஓர் கதை இங்கு நினைவிற்கு வருகிறது. அதாவது, “சில காலம் சென்ற பின்னர் உங்களிற்கு பட்டு வேட்டி சால்வை தருகிறோம், அது வரை நீங்கள் நிர்வாணமாக இருங்கள்”, என்பது போல் தான், இவ் 13வது திருத்த சட்டத்திற்கு எதிரான அரசியல் குசும்புகள் காணப்படுகின்றன.

சமஸ்டி என்ற மாயை, வடக்கு கிழக்கு வாழ் மக்களை பொறுத்த வரையில் 1957ம் ஆண்டு முதல் ஓர் கற்பனை பொருள். சிங்கள பௌத்த அரசிடம் நாம் இதை பெற்று கொள்வது என்பது, ‘கல்லில் நார் உரிப்பதற்கு’ சமன். இச் சொற்பதம், தமிழ் வாக்களர்களை கவருவதற்காக, தமிழ் தேர்தல்வாதிகளினால் பாவிக்கபடுகின்றதே தவிர, இதை நாம் சிங்கள பௌத்த அரசிடமிருந்த பெற்று கொள்வது என்பது பகற் கனவு.

சமஸ்டி ஓர் குசும்பு

இவ்வேளையில் இங்கு சில தேர்தல்வாதிகளின் கபட நிலைகளை காண்பிக்க விரும்புகிறேன்.

சிறிசேன-ரணில் அரசு, தமிழர் தேசிய கூட்டமைபின் (த.தே.கூ.) ஆதரவை நம்பி இருந்த காலத்தில், மூன்றில் இரண்டு பாரளுமன்ற பெரும்பான்மை அற்ற நிலையிலும், புதிய அரசியல் யாப்பு உருவாக்கவும், சமஸ்டியை பெற்று கொள்வதாக த.தே.கூ.பின் முக்கிய புள்ளியான, சட்டத்தரணியும் பாரளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் நம்பினர் என்றால் இதுவும் ஓர் குசும்பாகவே இருக்க முடியும்.

அன்று த.தே.கூ.பும், சுமந்திரனும் சிறிசேன-ரணில் அரசிடம், முதலில் 13வது திருத்த சட்டத்தை முழுமையாக அமூல் படுத்துங்கள் என்ற நிபந்தனையை முன் வைத்திருந்தால், இன்று வடக்கு கிழக்கு வாழ் மக்களின் அரசியல் நிலை வேறாக மாறியிருக்கும்.

அத்துடன் அன்று நீதிமன்றம் மூலம், வடக்கு கிழக்கு இரு மாகாணங்களாக பிரிக்கப்பட்ட வேளையில், அவ்வேளையில் சுமதந்திரனிடம், இதற்கான மீள் மனுவை செய்யுங்களென முன் வைக்கப்பட்ட வேளையில், சுமந்திரன் அதை செய்யாது காலம் கடத்திவிட்டு, இன்று வடக்கு கிழக்கு இணைப்பு பற்றி கதைப்பது புரியாத புதிராகவுள்ளது.

இதேவேளை ஒற்றை ஆட்சிக்கு வெளியில் அரசியல் தீர்வை பெற்று கொள்வோமென கொக்கரிக்கும் கூட்டமும், கற்பனை உலகில் வாழ்கிறார்கள் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. காரணம், அரசியல் உரிமைகளை சரியாக வரையறைக்கப்படாதா 13வது திருத்த சட்டத்தையே கொடுப்பதற்கு முன் வராத சிங்கள பௌத்த அரசுக்களிடமிருந்து, ஒற்றையாட்சிக்கு வெளியில் அரசியல் தீர்வு என்பது, எப்படி? எப்பொழுது? என்று? சாத்வீகமாக முடியும்? இது பற்றி அலட்டி கொள்பவர்கள், அப்பாவி வாக்களருக்கு மக்களிற்கு – உடனடியாக எப்படி, என்று, எப்பொழுது ஒற்றை ஆட்சிக்கு வெளியில் அரசியல் தீர்வு என்ற விளக்கத்தை கொடுக்க முன்வர வேண்டும்.

யாதார்தம் என்னவெனில், வடக்கு கிழக்கு வாழ் தமிழ் அரசியல்வாதிகளில் பெருபான்மையினர், தமது கருத்துகள் செயற்பாடுகள் யாவற்றையும், எதிர்வரும் தேர்தல்களையும் அதன் வாக்கு வங்கிகளையும் இலக்கு வைத்தே செயற்படுகிறார்கள் என்பதே உண்மை.

இல்லையேல், இன்றைய சிறிலங்காவின் யாதார்தம் உண்மைகளை தூக்கி ஏறிந்து அலட்சியம் பண்ணி விட்டு – ஒருவர் சமஸ்டி, மற்றையவர் ஒற்றையாட்சிக்கு வெளியில் தீர்வு என புசத்துவது, எவ்வளவு தூரம் வடக்கு கிழக்கு வாழ் மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பது வெளிப்படையாகிறது.

 

யாதார்த்த நிலை என்ன?

இன்று வடக்கு கிழக்கு வாழ் மக்களின் யாதார்த்த நிலை என்ன என்பதை, இவ் வீரவசனங்களை கொட்டி தள்ளும் அரசியல் ஞானிகள் உணர்ந்துள்ளார்களா என்பது கேள்வி கூறியாகவுள்ளது. வடக்கு கிழக்கில் தினமும் வெற்றிகரமாக இடம்பெறும் சிங்கள குடியேற்றங்கள், சைவ கோயில்கள் கிறிஸ்தவர்களின் இருப்பிடங்கள், நிலங்களின் நிலை என்ன எப்பதை இவ் வாக்கு வங்கியை நோக்கி வேலை திட்டங்களை மேற்கொள்ளும் தேர்தல்வாதிகள் சிந்திப்பதுண்டா?
தமிழீனத்தின் ஒற்றுமை, பிராந்திய ஒற்றுமை, தோழமை போன்றவற்றை அறவே கணக்கில் கொள்ளாத அரசியல்வாதிகள் – ஒற்றையாட்சிக்கு வெளியில் தீர்வு……13வது திருத்த சட்டம் வேண்டாமென கூறுவது யாவும், இவர்கள் உண்மையில் மக்களின் நலன்களில் அக்கறை கொண்ட அரசியல்வாதிகளா என்ற சந்தேகம் எழுகிறது.

ஊதாரணத்திற்கு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி எனப்படும் அரசியல் கட்சிக்கு, கிழக்கு மாகணத்திலிருந்தும் கொடுக்கப்பட்ட வாக்குகளையும் கணக்கில் கொண்டு, விகிதாசார முறைக்கு அமைய, கடந்த தேர்தலில் மேலாதிகமாக ஓர் ஆசனம் வழங்கப்பட்டது. அவ்வேளையில், அவ் பாரளுமன்ற உறுப்பினர் பதவியை, கிழக்கு மாகாணத்தில் போட்டியிட்ட யாருக்கும் கொடுப்பதற்கு முன்வராது, சுயநலத்தின் அடிப்படையில், ஓய்வுதியத்தை மனதில் கொண்டு, யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வி கண்ட ஒருவருக்கு வழங்கியது – தமிழ் தேசியம், இன, பிராந்தியா ஒற்றுமையா? இவர்கள் தான், ஒரு நாடு இரு தேசம், ஒற்றையாட்சிக்கு வெளியில், இணைந்த வடக்கு கிழக்கு என்ற அடிப்படையில் ஓர் அரசியல் தீர்வை பெற்று தருவார்களென மக்கள் எதிர்பார்க்கிறார்களா? இவர்கள் இதை, யாரிடமிருந்து? யாரின் துணையுடன் பெற்று கொடுப்பார்கள்?
தற்போதைய வடக்கு கிழக்கு வாழ் தேர்தல்வாதிகளின் போக்கு என்பது, வடக்கு கிழக்கு வாழ் மக்களின் எதிர்காலத்தை பாதாள குழியில் தள்ளுவதற்கான வழி வகைகளேயே தவிர, வேறு ஒன்றுமில்லை. அதாவது, வடக்கு கிழக்கை, முற்று முழுதாக சிங்களமயம், பௌத்தமயம், இராணுவமயம், சிங்கள குடியேற்றத்தை நோக்கி நகர்த்துகிறார்கள் என்பதே உண்மை.
இத் தேர்தல்வாதிகள், வடக்கு கிழக்கில் வாழும் – விதவைகள், முன்னாள் போராளிகள், ஊணமுற்றோர், அரசியல் கைதிகள் போன்றோரின் நாளந்த பிரச்சனைகள் சார்ச்சைகளில் அக்கறை கொள்ளவில்லை.

புலிகள் மாகாணசபையை நிராகரித்தார்களா?

தழிழீழ விடுதலை புலிகள் மாகாணசபையை நிராகரித்தர்களா இல்லையா என்பதற்கான பதில் தழிழீழ விடுதலை புலிகளின் அரசியல் ஆலோசகரும் தேசத்தின்குரல் மறைந்த அன்ரன் பாலசிங்கத்தின் துணைவியார் திருமதி. அடல் பாலசிங்கத்தினால் 2001 ஆம் ஆண்டு ஆங்கிலம் தமிழில் எழுதி வெளியிடப்பட்ட “The Will to Freedom” (த வீல் ரு பிறிடம்) என்ற புத்தகத்தில் பதில் உள்ளது.
மாகாணசபை பற்றிய தகவல்களை அறிய விரும்பியோர் “The Will to Freedom” (த வீல் ரு பிறிடம்) ஆங்கில வெளியீட்டின் “LTTE Stragegy and premadasa’s agenda” 256-258 என்ற பக்கங்களை படிக்கவும்.
இதே இடத்தில் ‘விடுதலை புலிகள் மக்கள் முன்னணி (PFLT)| என்ற அரசியல் கட்சியை தமிழீழ விடுதலைப் புலிகள் எதற்காக 1989 ஆம் ஆண்டு பதிவு செய்தார்கள் என்பதையும், நாம் நினைவுபடுத்திகொள்ள வேண்டும்.
இவற்றை அறிந்தும் அறியாதவர்களாக, தற்பொழுது காணப்படும் ஓர் சிறிய வெற்றிடத்தை பாவித்து, தமது குறுகிய சிந்தனை எண்ணங்களுக்கும் வடிவம் கொடுத்து, இது தான் தமிழீழ மக்களது அரசியல் சித்தாந்தம் என பறைசாற்றுவது நிட்சயம் எமது இனத்திற்கு அடிக்கும் சாவு மணியே.

சிறீலங்கா அரசு 6 ஆவது திருத்தச்சட்டத்தை வாபாஸ்பெற வேண்டுமென்பதை தழிழீழ விடுதலை புலிகள் தமது நிபந்தனையாக முன்வைத்தார்களென்பதை யாரும் மறுக்கவில்லை.

ஆனால் இதே 6வது திருத்த சட்டத்திற்கு கீழ் பாரளுமன்றத்தில் சத்தியபிரமாணம் செய்தவர்கள் தான், மக்களிற்கு ஒற்றையாட்சிக்கு வெளியில் அரசியல் தீர்வும், ஒரு நாடும் இரு தேசமும் பெற்று தரப்பபோகிறார்களா? நெஞ்சிலும் நாவிலும் உண்மை இருக்க வேண்டும்.

சிங்கள பௌத்த அரசு, 13வது திருத்த சட்டத்தை நடைமுறைபடுத்த முடியாதுவென கங்கணம் கட்டி நிற்கிறது. இதேவேளை ஈழத்தழிழர்களில் சிலர் அக்குரோசமாக, 13வது திருத்த சட்டத்தை நடைமுறை செய்யுமாறு வலியுறுத்தியவர்களை கண்டிக்கிறார்கள். இவ்விடயத்தில் சிங்கள பௌத்த அரசிற்கும் 13வது திருத்த சட்டத்தை எதிர்க்கும் தமிழரிடையே மாபெரும் ஒருமைபாட்டை நாம் காணக்கூடியதாகவுள்ளது. இது திட்டமிட்ட அணுகுமுறையா என பலர் சந்தேகிக்கிறார்கள்.

புலம்பெயர் தேசம்

புலம்பெயர் தேசத்தில், கடந்த 2009ம் ஆண்டு மே மாதத்தின் பின்னர், அரசியல் செயற்பாட்டில் ஈடுபட்டிருப்பவர்களில் பெரும்பலனோர் புதியவர்கள். அவர்கள் ஆயுத போராட்ட காலத்தில், பார்வையாளராக காணப்பட்டவர்கள். இதில் பலர் உணர்ச்சிவச அரசியல் செய்கிறார்கள், சிலர் நாட்டில் உள்ள தேர்தல்வாதிகளை திருப்திப்படுத்தும் செயல்களை மேற்கொள்கிறார்கள். வேறு சிலர், வெளிநாட்டு புலனாய்வினரை திருப்திபடுத்துவதற்காக, அரசியல் செயற்பாடு என்ற பெயரில், புலம் பெயர் வாழ் மக்களின் ஐக்கியத்தை கூறுபோட்டு, தகவல் சேர்க்கிறார்கள். இன்னும் சிலர் எவ்வளவு தூரம் நாட்டில் உள்ள எமது உடன் பிறப்புகளிற்கு நாசம் செய்ய முடியுமோ அதை செய்கிறார்கள். சிலர் பொழுது போக்காக அரசியல் செய்கிறார்கள்.

இலங்கைதீவின் 13வது திருத்த சட்டம் பற்றிய முழு விளக்கமும் தெரியாத புலம்பெயர் வாழ் தமிழர் சிலர், தாமும் 13வது திருத்த சட்டத்திற்கு எதிரானவர் என்பதை காண்பிப்பதற்காக கூறும் விளக்கம் மிகவும் வியப்பானாது.
அவர்கள் கூறுவதாவது, மேற்குலகில் எந்த நாட்டிலும் 13வது இலக்கத்தை யாரும் விரும்புவதில்லையாம், ஏற்பதில்லையாம். இவர் கூறிய விளக்கம் எண்கணித சாஸ்திரம் பற்றியது. ஆகையால் ஈழத்தமிழர்கள் ஆகிய நாங்களும் இவ் 13ஐ ஏற்க கூடாதாம்.

மிக சுருகமாக கூறுவதனால், இதே 13வது சட்டம் மூலமாகவே அமெரிக்காவில் 1865ம் ஆண்டு ஜனவரி 31ம் திகதி ‘அடிமை தனத்திற்கு ஏதிரான சட்டம்’ நடைமுறைக்கு வந்துள்ளது என்பதை இவர்கள் அறியவில்லை போலும். இப்படியாக பல அனுபவமற்ற ஆய்வற்ற கருத்துக்கள், இவ் நாட்களில் 13வது திருத்த சட்டம் பற்றி வலம் வருகிறது.

யாதார்தம் என்னவெனில், நன்றாக திட்டமிட்டு வடக்கு கிழக்கில் களம் இறங்கியுள்ள சீனர்களிற்கு எதிராக நாம் யாவரும் இணைந்து ஊர்வலங்கள், ஆர்பட்டங்கள், விழிப்பு போராட்டங்கள் செய்ய வேண்டி இவ்வேளையில், எம்மில் சிலர், 13வது திருத்த சட்டத்திற்கு எதிராக குரல் கொடுப்பது மிகவும் வியப்பாகவுள்ளது. இவ் நகர்வு நிட்சயம் எமது இனத்தின் தற்கொலைக்கு ஒப்பானது.

யாவருக்கும் இறுதியாக ஒன்றை மட்டும் ஞாபகப்படுத்த விரும்புகிறேன். 2009ம் ஆண்டு மே மாதம் யுத்தம் முடிந்ததை தொடர்ந்து, அவ்வேளையில் ஜனதிபதியாக விளங்கிய மகிந்த ராஜபச்சா, “வடக்கு கிழக்கு வாழ் மக்களிற்கு, அரசியல் தீர்வாக பஞ்சாயத்து முறையே மிக சிறந்த தீர்வு”என கூறியிருந்தார். ஆகையால், சிந்திக்க தெரிந்தவர்கள் சிந்திந்து செயற்பட தவறும் பட்சத்தில், நாம் இறுதியில் பஞ்சாயத்து முறையை ஏற்க வேண்டிய நிலையும் உருவாகலாம்.
நாம் எமது லச்சியத்தை அடைவதற்கு, மாற்றுவழிகளை பின்பற்றலாமென எமது முன்னோடிகள் கூறியுள்ளார்கள். இதேவேளை, நமது லட்சியத்திற்காக தமது அர்பணிப்புகளை செய்தோருடை கனவு பலிக்க வேண்டுமாயின், மாற்று வழி மூலம் லட்சியத்தை அடைவதற்கான வழிமுறைகளை நாம் கையாள வேண்டும் என்பது உலக அனுபவம்.

ச. வி. கிருபாகரன்
பிரான்ஸ்
27 ஜனவரி 2022

ஒரு கடிதத்தால் வந்த ஒற்றுமை? Elanadu Editorial

ஆறு கட்சிகள் இணைந்து ஒரு ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தியிருந்தன. நீண்ட காலத்திற்கு பின்னர் இவ்வாறானதொரு அரிய நிகழ்வு இடம்பெற்றிருக்கின்றது. ஆறு பிரதான கட்சிகள் அண்மையில் இந்தியாவை நோக்கி ஒரு கோரிக்கையை முன்வைத்திருந்தன. ஒன்றுக்கொன்று முரண்பட்டு நின்ற கட்சிகள் பலவும் ஒரு குடையின் கீழ் இணைந்திருக்கின்றன. யுத்தம் நிறைவுற்று பன்னிரெண்டு வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், இவ்வாறானதொரு விடயம் இடம்பெற்றிருப்பது வரவேற்கத்தக்க ஒரு விடயமாகும். மக்கள் இதனையே விரும்பியிருந்தனர். மக்கள் தமிழ் தேசிய கட்சிகளிடம் அடிப்படையில் ஒற்றுமையே எதிர்பார்க்கின்றனர்.

கட்சிகள் ஒற்றுமையாக நிற்கும் போது, அதனை இருகரம் கூப்பி வரவேற்கின்றனர். ஒற்றுமை சீர்குலையும் போது, அவர்களும் சிதறிப் போகின்றனர். ஒரு மக்கள் கூட்டம் நம்பிக்கையிழக்கின்ற போது, அவ்வாறான உடைவுகளே ஏற்படும். தமிழ் தேசிய கட்சிகள் தொடர்பில் ஏற்பட்ட அவநம்பிக்கைகளே கடந்த பொதுத் தேர்தலின் போது, மக்கள் சிதறிப் போவதற்கான பிரதான காரணமாக இருந்தது. இதனையே அரச ஆதரவு தமிழ் கட்சிகளும் சிங்கள தேசிய கட்சிகளும் பயன்படுத்திக் கொண்டன. ஊர் இரண்டு பட்டால், கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்று சொல்வார்கள். கடந்த பொதுத் தேர்தலின் போதும் அதுதான் நடந்தது. தமிழ் தேசிய ஊர் இரண்டு பட்டது. மக்களும் உடைந்து போனார்கள். அதனை தென்னிலங்கை அறுவடை செய்துகொண்டது. இனியும் உடைபட்டால் அது தென்னிலங்கைக்கே பயன்படும். தென்னிலங்கை எப்போதுமே, வென்று கொண்டிருக்க வேண்டுமென்று நினைப்போர், நிச்சயம் ஒற்றுமையை சீர்குலைப்பவர்களாகவே இருப்பர்.

ஆறு கட்சிகளின் கோரிக்கை எவ்வாறான அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தும்? ஏற்படுத்துமா? – என்னும் கேள்விகளுக்கு அப்பால், ஆறு கட்சிகள் ஒரு விடயத்தில் ஒன்றுபட்டிருக்கின்றன. எதிர்காலத்திலும் சில விடயங்களில் ஒன்றுபட்டு செயற்பட எத்தனிக்கின்றன. இன்றைய காலத்தில் இது அவசியமான ஒன்று. பொதுவாகவே தமிழ் சூழலில் ஒரு கட்சி அல்லது ஒரு அணி ஒரு விடயத்தை முன்னெடுக்கும் போது, அதனை திட்டமிட்டு எதிர்க்கும் ஒரு தரப்பும் இருக்கும். அதுவரை அமைதியாக இருப்பவர்கள் திடிரென்று தேசிய உத்வேகம் பெற்றுவிடுவர். பின்னர் – துரோகிகள், முகவர்கள், ஒட்டுக் குழுக்கள், கூலிப்படைகள் என்னும் கற்கள் தாராளமாகவே மற்றவர்கள் மீது வீசப்படும். உண்மையில் மக்கள் ஏமாந்து போனவர்கள் என்னும் எண்ணத்தில்தான் இவ்வாறான கற்கள் வீசப்படுகின்றன. இதிலுள்ள வேடிக்கையான விடயம் என்னவென்றால் – இவ்வாறு கூறுபவர்கள் அனைவருமே முன்னர் பல்வேறு இடங்களில் – பல்வேறு சந்தர்பங்களில் இணைந்து செயற்பட்டவர்கள். இன்று மற்றவர்கள் மீது கற்களை வீசும் அனைவருமே தமிழ் மக்கள் பேரவையில் ஒன்றாக இருந்தவர்கள். ஒரு மாற்றுத் தலைமையை நோக்கி செயற்படுவதற்காக தங்களுக்குள் அவ்வப்போது, சிரித்துப் பேசியவர்கள். அப்போது, இந்த வசைச் சொற்களுக்கு என்ன நடந்தது?

உண்மையில் துரோகி, முகவர், ஒட்டுக்குழு, கூலிப்படை இவ்வாறான சொற்களுக்கு தமிழ் அரசியலில் எவ்விதமான பெறுமதியும் இல்லை. தமிழ் மக்கள் மந்த புத்தியுள்ளவர்கள் என்னும் எண்ணத்தில்தான் இவ்வாறான சொற்களை சிலர் மக்கள் மத்தியில் விதைக்க முற்படுகின்றனர். இது ஒரு ஆபத்தான போக்கு. இதனை மக்கள் கண்டிக்காவிட்டால், சிவில் சமூகங்கள் தட்டிக் கேட்காவிட்டால் – ஒரு வேளை இவ்வாறான கற்கள் மக்களை நோக்கியும் வீசப்படலாம். ஒரு கட்சிக்கு வாக்களித்த மக்கள் அனைவருமே துரோகிகள், முகவர்கள், விலைபோனவர்கள் என்றும் சிலர் வாதிடும் சூழல் உருவாகலாம். இது ஒரு ஆபத்தான பாசிச போக்காக இது உருவெடுக்கலாம். இது தொடர்பில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மக்கள் விழிப்பாக இருப்பதை தவிர இப்போதைக்கு வேறு எந்தவொரு வழியும் இல்லை. மக்கள் தங்கள் விழிப்பை இழக்கும் போதே – மக்கள் இலகுவாக ஏமாற்றப்படுகின்றனர். மக்களை ஏமாற்றுவதற்கு துணை போபவர்கள் எவ்வாறான கொள்கைகளை உச்சரித்துக் கொண்டாலும் கூட, இறுதியில் அப்பாவி மக்களின் நம்பிக்கைகள் சுரண்டப்படுகின்றன என்பது மட்டும்தான் உண்மை.

Posted in Uncategorized

நரேந்திர மோதிக்கு தமிழ் கட்சிகள் எழுதிய கடிதத்தால் இலங்கையில் அரசியல் சர்ச்சை -BBC Tamil

இந்திய மற்றும் இலங்கை அரசாங்கங்களுக்கு இடையில் 1987ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட ஓர் உடன்படிக்கை காரணமாக, சுமார் 35 வருடங்களின் பின்னர் இலங்கையில் மீண்டும் பாரிய போராட்டங்கள் வெடிக்க ஆரம்பித்துள்ளன.

இலங்கை அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை அமல்படுத்தத் தலையீடு செய்யுமாறு, இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு இலங்கையில் உள்ள ஏழு தமிழ் கட்சிகள் கூட்டாக கடிதமொன்றை கடந்த 18ஆம் தேதி அனுப்பியிருந்தன.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழை நிர்வாக மொழியாக்கவும், ஒன்பது மாகாணங்களிலும் மாகாண சபை அமைக்கவும் 13வது திருத்தம் வழிவகை செய்கிறது.

இப்போது இந்தத் திருத்தத்தை அமலாக்க தமிழ் கட்சிகளுக்குள்ளேயே எதிப்பு கிளம்பியுள்ளது.

இலங்கைக்கான இந்திய உயர் ஆணையர் கோபால் பாக்லேயின் ஊடாக, இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்ட பின்னர் இவ்வாறு எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கை தமிழரசு கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ் ஈழ விடுதலை இயக்கம், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மற்றும் தமிழ்த் தேசியக் கட்சி ஆகிய ஏழு கட்சிகள் கூட்டாக இணைந்து இந்த கடிதத்தை, நரேந்திர மோதிக்கு அனுப்பியிருந்தனர்.

இப்போது எதிர்ப்பு ஏன்?

இந்த நிலையில், 13வது திருத்தத்தை அமல்படுத்துமாறு கோரி, இந்திய பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்திற்கு தற்போது எதிர்ப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

குறிப்பாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருகின்றது.

ஒற்றை ஆட்சி அரசியலமைப்பை நிராகரிப்பது மற்றும் 13வது திருத்தம் வேண்டாம் ஆகிய கோஷங்களை எழுப்பியவாறு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றது.

13வது திருத்தத்தை அமல்படுத்துவதற்கு எதிராக துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு, மக்களை தெளிவுப்படுத்துவது மற்றும் பேரணியின் ஊடாக மக்களை தெளிவுப்படுத்துதல் போன்ற திட்டங்களை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தற்போது முன்னெடுத்து வருகின்றது.

இந்த நிலையில், யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் பாரிய போராட்ட பேரணி நடத்தப்பட்டு, மக்கள் சந்திப்பொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த மக்கள் சந்திப்பில் பெருந்திரளானோர் கலந்துக்கொண்டிருந்தனர்.

ஒற்றையாட்சிக்குள் 13வது திருத்தத்தை அமல்படுத்தக்கூடாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கூறுகின்றது.

70 வருட காலமாக தமிழர்களை அடிமைப்படுத்தும் அரசியலமைப்பை, தாம் தீர்வாக ஏற்றுக்கொள்கின்றோம் என்ற அடிப்படையிலேயே, அந்த அரசியலமைப்பில் உள்ளடங்கியுள்ள 13வது திருத்தத்தை அமல்படுத்துமாறு, தமிழ் கட்சிகள் இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகமும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவிக்கின்றார்.

இவ்வாறு இந்தியாவிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கையானது, சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை கொண்ட ஒற்றையாட்சி அரசியலமைப்பை இவர்கள் தீர்வாக ஏற்றுக்கொள்கின்றார்கள் என்பதை வெளிப்படுத்துவதாக அவர் குறிப்பிடுகின்றார்.

அரசியலமைப்பின் 13வது திருத்தமானது, இனப் பிரச்னைக்கான தீர்வு இல்லை என கூறப்பட்டு இந்தப் பேரணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

நரேந்திர மோதிக்கு கடிதம் எழுதியவர்கள் சொல்வதென்ன?

13வது திருத்தச் சட்டத்தை அமல்படுத்தி, வட மாகாண சபையை மீண்டும் கொண்டு வரவே தாம் முயற்சித்து வருவதாக வட மாகாண முன்னாள் முதலமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவிக்கின்றார்.

13வது திருத்தச் சட்டமானது, தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு கிடையாது என்பதனை தாமும் ஏற்றுக்கொள்வதாக அவர் கூறுகின்றார்.

அரசியலமைப்பில் தற்போதுள்ள சட்டத்தை முதலில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றே தாம் கோரியதாக அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துங்கள் என்றால், தாம் அந்த சட்டத்திற்கு முழுமையாக ஆதரவு தெரிவித்து விட்டோம் என்ற வகையிலான மாயையை உருவாக்கும் நோக்கிலேயே இந்த பேரணி முன்னெடுக்கப்படுவதாக சி.வி.விக்னேஸ்வரன் பதிலளித்துள்ளார்.

அரசியலமைப்பின் 13வது திருத்தம் என்றால் என்ன?

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் இலங்கை முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன ஆகியோருக்கு இடையில் 1987ம் ஆண்டு ஜுலை மாதம் 29ம் தேதி இந்த 13வது திருத்தச்சட்ட உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.

அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்ளும் வகையிலேயே இந்த உடன்படிக்கை அப்போது கைச்சாத்திடப்பட்டது.

இதன்படி, நாட்டில் மாகாண சபைகளை உருவாக்கும் நோக்கில், இந்த 13வது திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது.

இந்த மாகாண சபை முறையின் ஊடாக, காணி மற்றும் போலீஸ் அதிகாரங்கள் மாகாண சபை வசமாகின்றன. எனினும், மத்திய அரசாங்கம் இன்று வரை மாகாண சபைகளுக்கு அந்த அதிகாரங்களை வழங்காதிருக்கின்றது.

இலங்கையில் தமிழ் மொழி பேசும் சமூகம், நாட்டின் ஏனைய பகுதிகளில் கலந்து காணப்படுகின்ற போதிலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெரும்பான்மை சமூகமாக வாழ்ந்து வருகின்றனர்.

இதன்படி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் வகையிலேயே இந்த 13வது திருத்தம் அமைக்கப்பட்டுள்ளது. இதன்படி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிர்வாக மொழியாக தமிழுக்கும், ஏனைய மாகாணங்களில் நிர்வாக மொழியாக சிங்களத்துக்கு முன்னுரிமை வழங்க வழிவகை செய்யப்பட்டது.

இதேவேளை, இந்த திருத்தச் சட்டத்தின் ஊடாக, இலங்கையில் ஒன்பது மாகாண சபைகள் ஸ்தாபிக்கப்பட்டிருந்ததுடன், வடக்கு, கிழக்கு மாகாண சபைகள் இணைந்த மாகாண சபைகளாக அப்போது அறிவிக்கப்பட்டிருந்தன.

எனினும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தனித்தனி மாகாணங்களாக இருக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி 2006ம் ஆண்டு இலங்கை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இதன்படி, அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவினால், வடக்கு கிழக்கு இணைப்பு சட்டமானது, சட்டவிரோதமானது என உயர்நீதிமன்றம் 2007ம் ஆண்டு தீர்ப்பு வழங்கி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இரண்டாக பிரிந்து உத்தரவு பிறப்பித்தது.

இலங்கை அரசின் நிலை என்ன?

தமிழர் பிரச்னை தீர்வுக்கு இலங்கை – இந்திய உடன்படிக்கையில் ஏற்படுத்தப்பட்ட 13வது திருத்தச் சட்டமே, சிறந்த ஆரம்பமாக இருக்கும் என ஆளும் தரப்பிலுள்ள தமிழ் அரசியல்வாதியான கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிக்கின்றார்.

இந்த சட்டத்தை அமல்படுத்துமாறு, பெரும்பான்மையான தமிழ் கட்சிகள் இன்று ஒன்றிணைந்து, நரேந்திர மோதிக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் அவர் கூறினார்.

13வது திருத்தத்தை அமல்படுத்துவது தொடர்பில், இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் குறித்து, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கருத்து வெளியிட்டுள்ளார்.

இலங்கையின் உள்ளக விவகாரங்களில், சர்வதேச நாடுகள் நேரடியாக தலையிட வேண்டியதில்லை என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் உள்ளக பொறிமுறையின் ஊடாகவே, உள்ளக பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இந்த பிரச்னைகளை கொண்டு வந்து, அதனூடாக தீர்வை காண முயற்சிக்க வேண்டும் என ஜீ.எல்.பீரிஸ் கூறுகின்றார்.

மகாத்மா காந்தியின் 74 ஆவது நினைவு தினம் யாழில் நினைவுகூரல்

மகாத்மா காந்தியின் 74 ஆவது நினைவு தினம் இன்று யாழ்ப்பாணத்தில் நினைவுகூரப்பட்டது.

அகில இலங்கை காந்தி சேவா சங்கம் மற்றும் இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ் போதனா வைத்தியசாலை முன்றலில் உள்ள மகாத்மா காந்தியின் உருவச்சிலை அமைந்துள்ள இடத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது காந்தியின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும் அகில இலங்கை காந்தி சேவா சங்கத்தின் அதிகாரபூர்வ வெளியீடான காந்தீயம் பத்திரிகை பாராளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரனால் வெளியிடப்பட்டது.

இந்நிகழ்வில் இந்திய துணைத்தூதரக பதில் தூதர் ராம் மகேஷ், நாடாளுமன்ற உறுப்பினர்களான சித்தார்த்தன், சி.வி.விக்னேஸ்வரன், மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், கஜதீபன், மாநகர ஆணையாளர் ஜெயசீலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Posted in Uncategorized

தமிழ் தேசிய மக்கள் முன்னணி சீனாவின் முகவர்களா? – கோவிந்தன் கருணாகரம்

நாங்கள் இந்தியாவின் முகவர்கள் எனச் சித்தரிக்கின்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் அப்போ நீங்கள் யாரது முகவர்கள்? நீங்கள் சீனாவின் முகவர்களா?

சீனா எதிர்பார்ப்பதைத்தானே நீங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் செய்கின்றீர்கள் என தமிழ் ஈழ விடுதலை இயக்க செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு கண்ணகி அம்மன் ஆலய வீதியில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினரின் காரியாலயத்தில் இன்று(29) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு கிழக்கிலே தற்போது அரசியல் பேசும் பொருளாக 13வது திருத்தச் சட்டமும் இந்திய இலங்கை ஒப்பந்தமும் மிகவும் நடைபெற்றிருக்கின்றது.

அந்த வகையில் 13வது திருத்தச் சட்டத்தை முற்று முழுதாக அமுல்படுத்த வேண்டும். அமுல்படுத்திய 13 திருத்த சட்டத்தின் ஊடாக மாகாணசபை தேர்தலை விரைவாக வைக்கவேண்டும் எனத் தமிழ்த் தேசிய பரப்பிலுள்ள ஒரு கட்சியைத் தவிர ஏனைய அனைத்து கட்சிகளும் வேண்டிநிற்கின்றனர்.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக இந்த 13வது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டும் என்று நேற்று யாழ்ப்பாணத்தில் கூடித் தெரிவித்தன. ஆனால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 13வது திருத்தத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளது.

இந்த இலங்கை இந்திய ஒப்பந்தம் 1987 யூலை 29 ம் திகதி கைச்சாத்திடப்பட்டுக் கொண்டுவரப்பட்டது. இது வெறுமனவே தமிழர்கள் மீது உள்ள அக்கறை மூலமாகக் கொண்டுவரப்பட்டது அல்ல.

பல தியாகங்கள், உயிரிழப்பு, பல போராட்டங்கள், பல அழிவுகளின் பின்பு அந்த போராட்ட தியாகத்தின் அடிப்படையில் தான் இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

இன்று நாங்கள் இருக்கும் நிலையைச் சிந்தித்துப் பார்க்கவேண்டும். இந்த இலங்கை இந்திய ஒப்பந்தத்தை நாங்கள் அனைவரும் விரும்பியே விரும்பாமலே ஏற்றுக் கொண்டிருந்தோம்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் வந்த 13வது திருத்தச் சட்டம் போராட்டத்தில் ஈடுபட்டு எமது உரிமைகளைப் பெறுவதற்காகப் போராடிய எமக்கு ஒரு இறுதி தீர்வாக நாங்கள் எந்த இடத்திலும் எவரிடமும் நாங்கள் கூறவில்லை.

தமிழ் ஈழம் வேண்டும் என போராடியவர்கள் எனவே 13வது திருத்தச் சட்டம் மூலம் வந்த மாகாணசபை முறைமையை நாங்கள் இறுதி தீர்வாக எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளமாட்டோம்.

தமிழ் மக்கள் தங்களை தாங்களே ஆழக்கூடிய சுயநிர்ணயம் கூடிய தாயத்தை நாங்கள் ஆழக்கூடிய ஒரு சமஷ்டி முறையிலான தீர்வு தான் எமக்கான அறுதி தீர்வாகும்.

2009 ஆம் ஆண்டு ஆயுத போராட்டம் மௌனிக்கப்படும் வரை தமிழ் ஈழம் இந்த மலரும், அந்தா மலரும் என்ற ஒரு நிலைப்பாட்டில் நாங்கள் இருந்தோம்.

அந்த காலகட்டத்தில் இலங்கை இந்த ஒப்பந்தத்தை விட இன்னும் தமிழர்களுக்கு உரிமைகளைக் கொடுக்கக் கூடிய ஒரு சில ஒப்பந்தங்கள் வந்திருந்தும் கூட நாங்கள் தனிநாட்டை எதிர்பார்த்து அவைகளைக் கூட நிராகரித்தோம்.

ஆனால் 2009 மே 18க்கு பின்பு தமிழ் மக்கள் தற்போது எந்த நிலையில் இருக்கின்றோம் எனச் சிந்தித்துப் பார்க்கவேண்டும். தற்போது வடக்கு கிழக்கு நலத் தொடர்பை நிரந்தரமாகப் பிரிக்கப் பேரினவாத அரசு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றதுடன் வடக்கு கிழக்கில் எமது குடிப்பரம்பலை குறைப்பதற்காக எல்லைப்புறம் ஊடாக பெரும்பான்மை மக்களைக் குடியேற்றிவருகின்றார்.

13வது திருத்தச் சட்டத்துக்கு ஊடாக வழங்கப்பட்ட அதிகாரங்கள் அமுல்படுத்தப்படாமல் இருக்கின்றது, அமுல்படுத்தப்பட்ட அதிகாரங்கள் மீளப்பெறப்பட்டிருக்கின்றது. புதிய அரசியல் அமைப்பு 3 மாதத்தில் வரவிருக்கின்றது.

ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச வந்த பின்பு உரையாற்றும் அனைத்தும் இந்த நாடு ஒரு பௌத்த நாடு அவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பேன் என்கின்ற ரீதியில் பேசிவருகின்றார்.

எனவே புதிய அரசியல் அமைப்பில் எங்களுக்கான தீர்வு வரும் என எதிர்பார்க்கவில்லை . தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எங்களை இந்தியாவின் முகவர்கள் எனச் சித்தரிக்கின்றனர். அப்போ நீங்கள் யாரது முகவர்கள்? நீங்கள் சீனாவின் முகவர்களா? சீனா எதிர்பார்ப்பதைத்தானே நீங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் செய்கின்றீர்கள்.

கோட்டாபயவை எதிர்த்து சஜித் பிரேமதாஸ் கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டார். அதற்கு முன்பு மகிந்த ராஜபக்சவை எதிர்த்து மைத்திரி பால சிறிசேன போட்டியிட்டார்.

இந்த ராஜபக்ச சகோதரர்கள் தமிழ் மக்களுக்குச் செய்த அட்டூழியங்கள் அநியாயங்கள் அழிப்புக்களை எதிர்த்து அவர்களைத் தோற்கடிக்க வேண்டும் என்று அவர்களுக்கு எதிராகத் தமிழ்த் தேசிய பரப்பிலே உள்ள அனைத்து கட்சிகளும், அனைத்து மக்களும் வீறு கொண்டு எழுந்தபோது தேர்தலைப் பகிஷ்கரிக்குமாறு நீங்கள் கூறுகின்றீர்கள்.

அப்படியென்றால் நீங்கள் மறைமுகமாக யாருக்கு உதவி செய்ய நினைக்கின்றீர்கள்? இன்று சீனா யாழ்ப்பாண கரையோரத்திலிருந்து இந்தியா எவ்வளவு தூரம் என்று கேட்கும் அளவிற்கு வந்திருக்கின்றது. இந்த நிலையில் நீங்கள் அதை எதிர்க்கவில்லை.

சீனாவைப் பொறுத்தமட்டில் எந்தவொரு விடுதலைப் போராட்டத்திற்குமே மனித உரிமைகள் மீறல்களுக்கும் எதிராகவே குரல்கொடுத்த வரலாறு இல்லை. எனவே நாங்கள் எக்காரணம் கொண்டும் சீனாவை ஆதரிக்க முடியாது.

எமக்கு இருக்கும் அண்டை நாடான இந்தியாவுக்கும் தமிழ் மக்களுக்கும் மாத்திரம் அல்ல. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நீண்டகால தொடர்புகள் உண்டு.

தற்போது இலங்கை பொருளாதார ரீதியாக அதலபாதாளத்தில் இருக்கின்ற நிலையில் இந்தியா உதவி செய்துவருகின்றது. 1971 ம் ஆண்டு ஜே வி பி கிளர்ச்சியின் போது இந்தியா இலங்கைக்கு உதவி செய்தது.

அதேபோன்று விடுதலைப் போராட்டத்துக்கு எந்தளவு உதவி செய்ததோ அந்தளவுக்குத் தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு 2009 இலங்கை அரசுக்கு இந்தியா உதவி செய்தது. அதற்குப் பின்பு வடக்கு கிழக்கிலே பல அபிவிருத்தி திட்டங்களுக்கு உதவி செய்தது. மலையகத்தில் ஆயிரக்கணக்கான வீடுகளைக் கட்டிக் கொடுத்துள்ளது.

தற்போது இலங்கை பொருளாதாரத்திலிருந்து மீட்பதற்குப் பல உதவிகளைச் செய்துவருகின்றது. எனவே இந்த நேரத்தில் நாங்கள் இந்தியர் பயன்படுத்த வேண்டும் ஏன் என்றால் அவர்களுக்குக் கடமையுண்டு.

13 திருத்தச் சட்டம் முற்று முழுதாக அமுல்படுத்தப்படுமாக இருந்தால் நாங்கள் இருப்பையாவது காப்பாற்றிக் கொள்ளலாம் என்பது தான் எங்களது நிலைப்பாடு.

இதைவிடுத்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் 13 திருத்தச் சட்டம் வேண்டாம் ஆனால் அதற்கு ஊடாக அதிகாரமற்ற மாகாணசபை தேர்தல் வந்தால் கூட போட்டியிடுவோம் என்ற நிலைப்பாட்டில் அவர்கள் இருக்கின்றனர்.

எனவே தமிழ் மக்கள் எதற்காக போராடினமே அந்த இலக்கை அடையவில்லை. இருந்தும் சமஷ்டியைப் பெறுவதற்கா நாங்கள் போராடுவோம். அதுவரை எமக்கு எமது இருப்பை காப்பாற்றுவதற்கு முழு அதிகார பரவலுடன் 13வது திருத்தச் சட்டம் வேண்டும்.

எனவே 13 திருத்தச் சட்டம் ஊடக தமிழ் மக்களின் இருப்பை கூட இல்லாமல் செய்ய அதற்கு எதிராக நடைபெறும் ஆர்ப்பாடத்தினை உண்மையான தமிழ்த் தேசியத்தை விரும்பும் தமிழ் மக்கள் அதனை எதிர்க்கவேண்டும் அவர்களை விரட்டியடிக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

இலங்கை மீதான தடை அமெரிக்காவுடன் ஆராயும் பிரித்தானியா

இலங்கை படை அதிகாரிகள் மீதான தடை குறித்து அமெரிக்காவுடனும், ஏனைய நாடுகளுடனும் தாம் கலந்துரையாடல்களை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அபிவிருத்தி திணைக்கள அமைச்சர் அமந்தா மிலிங் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் பிரித்தானியா நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதம் ஒன்றின்போது, இலங்கை இராணுவத்தின் பிரதம அதிகாரியான ஜெனரல் சவீந்திர சில்வா மீது அமெரிக்கா கொண்டுவந்தது போல தடையை கொண்டுவர பிரித்தானியா அரசுக்கு என்ன ஆதாரங்கள் தேவை என பிரித்தானியாவின் நாடாளுமன்ற உறுப்பினர் சியோபன் மக்டொனா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமந்தா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எல்லா ஆதாரங்களையும், தகவல்களையும் பிரித்தானியா அரசு சேகரித்து வைத்துள்ளது. பிரித்தானியாவின் அனைத்துல மனித உரிமை ஆய்வுக்குழு அதனை ஆய்வுக்குட்படுத்தியுள்ளது.

எதிர்கால தடை குறித்து நாம் எதிர்வுகூறுவதில்லை அது எமது நடவடிக்கைகளை பாதிக்கும் என அமந்தா மேலும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

கொவிட் தொற்றிலிருந்து மக்களைக் காப்பாற்ற போராடிக்கொண்டிருக்கும் சுகாதாரத் துறையினர் ஒவ்வொருவரும் போராளிகளே – ஜனா

கொவிட் தொற்றிலிருந்து மக்களைக் காப்பாற்றப் போராடிக் கொண்டிருக்கும் சுகாதாரத் துறையினர் ஒவ்வொருவரும் போராளிகளே. மக்களைத் தொற்றிலிருந்து பாதுக்காக வேண்டும் என்பதற்காக எத்தனையோ வைத்தியர்கள், தாதியர்கள், சுகாதாரத் தொழிலாளர்கள், அரச உத்தியோகத்தர்கள் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்திருக்கின்றார்கள். அவர்களைப் பாராட்டாமல் இருக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம்(ஜனா)தெரிவித்தார்.

இன்றைய தினம் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற கொவிட் தடுப்பூசி திட்டத்தின் ஒரு வருட பூர்த்தி நிகழ்வில் அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

உலகலாவிய ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தி கொவிட் 19 தொற்றானது இலங்கைத் தீவையும் விட்டுவைக்கவில்லை. என்னைப் பொறுத்தமட்டில் விடுதலைப் போராட்டத்தில் இருந்து அரசியலுக்குள் வந்தவன் என்ற ரீதியில் இந்த கொவிட் தொற்றுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் சுகாதாத் துறையினரை நான் விடுதலைப் போராளிகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கின்றேன்.
ஒரு போராட்டத்தில் போராளியொருவர் தாக்குதலுக்குச் செல்லும் போது பல நாட்கள் நித்திரையிழந்து, பட்டினி கிடந்து, தன்னைச் சார்ந்த சமூகத்திற்காக உயிரைக் கூட தியாகம் செய்ய வேண்டும். அந்த வழியிலே சுகாதாத் துறையினர் உண்மையிலேயே தங்களை அர்ப்பணித்து வீடுகளுக்கும் செல்லாமல் வேலை செய்யும் இடங்களிலேயே தங்கி நமது மக்களுக்கான சேவைகள் செய்தவர்கள். அவர்களைப் பாராட்டாமல் இருக்க முடியாது.

இந்த மக்களைத் தொற்றிலிருந்து பாதுக்காக வேண்டும் என்பதற்காக எத்தனையோ வைத்தியர்கள், தாதியர்கள், சுகாதாரத் தொழிலாளர்கள், அரச உத்தியோகத்தர்கள் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்திருக்கின்றார்கள். அந்த அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலங்களிலே இருந்த பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் மயுரன் உட்பட அவரது உத்தியோகத்தர்கள், போதனா வைத்தியாசலை உத்தியோகத்தர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், உள்ளுராட்சி மன்றங்கள், பொலிஸார், இராணுவத்தினர், அரச அதிகாரிகள் போன்றோர் இணைந்து இந்தக் கொவிட் தொற்றுக்கு எதிராகப் போராடியிருக்கின்றார்கள்.

கொவிட் முதலாவது அலையில் மட்டக்களப்பு மாவட்டம் பெரிதாகப் பாதிக்கப்படவில்லை. இரண்டாவது அலையிலேயே கூடுதலாகப் பாதிக்கப்பட்டது. இலங்கையில் கொவிட் முதலாவது தடுப்பூசி கடந்த வருடம் இதேநாள் ஏற்றப்பட்டிருந்தாலும் அதற்குப் பின்னர் இரண்டாம் கட்டமாக ஊசிகள் ஏற்றப்பட்டத்தில் ஏற்பட்ட காலதாமதம் தான் இரண்டாவது அலையிலே நாங்கள் கூடுதலாகப் பாதிக்கப்பட்டிருந்தோம்.

குறைகள் கூறுவதென்றால் கூறிக்கொண்டே போகலாம். ஆனால் அதற்கான நேரம் இதுவல்ல. ஆனாலும் பல கோமாளித் தனங்களும் கொரோனாவையொட்டி இந்த நாட்டிலே நடந்ததை நாங்கள் அறிவோம். வெத மாத்தையா என்பதும், முட்டியை ஆற்றில் விட்டது போன்ற கோமாளித் தனங்களும் இங்கு நடந்துதான் இருக்கின்றது.

இந்த நாட்டின் அரச இயந்திரம் முதலாவது பகுதி தடுப்பூசி இந்தியாவில் இருந்து வந்ததன் பின்பு இரண்டாம் கட்டத்தை காலம் தாழ்த்தாமல் முன்னமே எடுத்திருந்தால் இரண்டாவது அலையின் தாக்கத்தைக் கொஞ்சம் குறைத்திருக்கலாம்.

இருந்தாலும் பல நாடுகள் இலங்கைக்கு உதவி செய்ததன் காரணமாக இன்று ஓரளவிற்கு இந்தத் தொற்றைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு முடிந்திருக்கின்றது. அந்த வகையிலே அனைத்து தரப்பினரயும் நான் பாராட்டுகின்றேன்.

தற்போது ஒமிக்றோன் பரவலில் மட்டக்களப்பு மாவட்டமும் திகழுவதாகத் தகவல்கள் அறியக் கிடைத்துள்ளன. தற்போது கல்முனையில் கொவிட் பரவலைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பாகச் செயற்பட்ட வைத்தியர் சுகுணன் இங்கு பதவியேற்றுள்ளார். அந்த அடிப்படையில் அவரின் தலைமையில் இந்த ஒமிக்குறோன் பரவலையும் சிறப்பான முறையில் கட்டுப்படுத்துவீர்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது. மக்கள் பிரதிநிதியாக எங்களால் முடிந்த உதவிகளை நாங்கள் செய்வதற்குத் தயாராக இருக்கின்றோம்.

தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுமல்லாது முழு இலங்கையிலும் இளம் சமுதாயத்தினர் குறிப்பாக வெளிநாட்டு மோகத்துடன் இருப்பவர்கள் இந்த தடுப்பூசி பெறுவதற்குக் கொஞ்சம் தயக்கம் காட்டுகின்றார்கள். குறிப்பாக சினோபாம் பெறுவதற்கே தயங்குகின்றார்கள். இவர்களுக்கு ஒரு செய்தியைக் கூறியே ஆக வேண்டும்.

பல நாடுகளுக்கும் நாங்கள் விஜயம் செய்திருக்கின்றோம். குறிப்பிட்ட ஓரிரு நாடுகளைத் தவிர ஏனைய நாடுகள் எந்த தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பதைக் கேட்பதில்லை. இரண்டு தடுப்பூசிகளும் இட்ட அட்டை இருக்குமாக இருந்தால் நீங்கள் எந்த நாட்டுக்கும் பிரயாணம் செய்யலாம் என்பதைக் கருத்திற்கொண்டு எமது சமுதாயத்தைக் காப்பாற்றுவதற்கு அனைவரும் முன்வந்து இந்தத் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

ஏனெனில் இந்தத் தடுப்பூசியொன்று தான் கொவிட் தொற்றில் இருந்து எங்களைக் காப்பாற்றும் என்பதில் உலக நாடுகள் அனைத்தும் உறுதியாக இருக்கின்றது.

இரண்டாவது அலையில் இலங்கையின் சனத்தெகையில் இறந்தவர்களின் எண்ணிக்கை விகிதத்தில் இந்தியாவை விட அதிகமானது. ஏனெனில் நாங்கள் அந்த நேரத்தில் தடுப்பூசி இட்டுக் கொண்டது குறைவாக இருந்திருக்கின்றது. தற்போது போதுமான அளவிற்கு தடுப்பூசி இருக்கின்ற காரணத்தினால் அனைவரும் தடுப்பூசி இடவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம் என்று தெரிவித்தார்.

Posted in Uncategorized

சட்ட மறுசீரமைப்புக்கான உள்ளகப்பொறிமுறைகள் குறித்து அரசாங்கத்தை வலியுறுத்தும் ஐ. நா.

சட்ட மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கக்கூடிய அரசாங்கம், அதனை முன்னிறுத்திய உள்ளகப்பொறிமுறைகள் சர்வதேச நியமங்களையும் கடப்பாடுகளையும் பூர்த்திசெய்யும் வகையில் அமைந்திருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் ஹம்டி, அதிலுள்ள குறைபாடுகளை அடையாளங்காண்பதற்கு விரிவான கலந்துரையாடல்களை முன்னெடுக்கவேண்டியது அவசியமாகும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில், மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றகரமான நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கையில் பணியாற்றும் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் நேற்று வியாழக்கிழமை விளக்கமளித்திருந்தார்.

இதன்போது மனித உரிமைகள் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு தொடர்பில் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவதற்கு இலங்கை தயாராக இருப்பதாகக் கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரின்போது தான் அளித்த வாக்குறுதியை மீண்டும் நினைவுகூர்ந்த அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், பொறுப்புக்கூறல், சட்ட மறுசீரமைப்பு, நல்லிணக்கம் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்டு உள்நாட்டு நிறுவனங்களின் ஊடாக இலங்கை அரசாங்கம் கணிசமான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

வெளிவிவகார அமைச்சருடனான இச்சந்திப்பில் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் ஹம்டியும் பங்கேற்றிருந்த நிலையில், நிலைமாறுகால நீதியை உறுதிப்படுத்தல், நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைதல் மற்றும் பயங்கரவாதத்தடைச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளல் ஆகிய விடயங்களில் அவற்றுடன் தொடர்புடைய உள்நாட்டுக்கட்டமைப்புக்களால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு அவர் தனது பாராட்டை வெளிப்படுத்தினார்.

அதேவேளை சட்ட மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கக்கூடிய அரசாங்கம், அதனை முன்னிறுத்திய உள்ளகப்பொறிமுறைகள் சர்வதேச தரநியமங்களையும் கடப்பாடுகளையும் பூர்த்திசெய்யும் வகையில் அமைந்திருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டியது அவசியமாகும் என்றும் ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் வலியுறுத்தியுள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸுக்கும் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும் இடையில் நேற்று வியாழக்கிழமை வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பு தொடர்பில் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையை மேற்கோள்காட்டி தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே ஹனா சிங்கர் ஹம்டி மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.

சட்டத்தில் ஏற்படுத்தப்படும் மாற்றங்கள் சட்ட அமுலாக்கத்தினால் ஏற்படுத்தப்படும் மாற்றங்களுடன் சமாந்தரமாகப் பயணிப்பதாக அப்பதிவில் சுட்டிக்காட்டியுள்ள அவர், இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது அவற்றிலுள்ள குறைபாடுகளை அடையாளங்காண்பதற்கும் தீர்வுகளைக் கண்டறிவதற்கும் விரிவான கலந்துரையாடல்களும் ஆராய்வும் இன்றியமையாததாகும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

போர்க்குற்றங்களில் ஈடுப்பட்ட இராணுவ அதிகாரிகளுக்கு எதிராகத் தடைவிதியுங்கள் – 9 புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் கூட்டாகக் கோரிக்கை

இலங்கையில் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக அவுஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்கா, அயர்லாந்து, கனடா, தென்னாபிரிக்கா, சுவிஸ்லாந்து ஆகிய நாடுகளின் அரசாங்கங்கள் தடைவிதிக்கவேண்டும் என்று அந்தந்த நாடுகளைத் தளமாகக்கொண்டியங்கும் 9 புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.

இலங்கை அரசாங்கங்களினால் திட்டமிட்டு வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்ட இனப்படுகொலைகளால் புலம்பெயர் தமிழர்கள் அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் நண்பர்களையும் இழந்திருக்கின்றார்கள்.

அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பலர் நாட்டைவிட்டு வெளியேறி, வெளிநாடுகளில் வசித்துவருகின்றார்கள்.

அவர்கள் திட்டமிட்ட இனப்படுகொலையினால் ஏற்பட்ட வடுக்களிலிருந்து மீள்வதற்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியைப் பெற்றுக்கொள்வதற்கும் கடுமையாகப் போராடிவருகின்றார்கள் என்றும் அவ்வமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இலங்கையில் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட இராணுவ அதிகாரிகளுக்கு எதிராகத் தாம் வசிக்கும் நாடுகளின் அரசாங்கங்கள் தடைவிதிக்கவேண்டும் என்று வலியுறுத்தி அவுஸ்திரேலியா தமிழ் காங்கிரஸ், பிரித்தானிய தமிழர் பேரவை, அயர்லாந்து தமிழர் பேரவை, பிரான்ஸை தளமாகக்கொண்டியங்கும் மைசன் டு தமிழ் ஈழம், கனேடியத்தமிழர்களின் தேசிய பேரவை, தென்னாபிரிக்காவைத் தளமாகக்கொண்டியங்கும் சமாதானம் மற்றும் நீதிக்கான ஒருமைப்பாட்டுக்குழு, சுவிஸ் தமிழ் செயற்பாட்டுக்குழு, இனப்படுகொலைக்கு எதிரான தமிழர் இயக்கம் மற்றும் ஐக்கிய அமெரிக்க தமிழர் செயற்பாட்டுக்குழு ஆகிய 9 புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதாவது,

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்முறைகள் காரணமாக நாட்டைவிட்டு வெளியேறிய ஒரு மில்லியனுக்கும் அதிகமான தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் உறுப்பினர்களான நாம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் திரட்டப்பட்ட நம்பத்தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் இலங்கையில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராகத் தடைவிதிக்கவேண்டும் என்று நாங்கள் வாழக்கூடிய நாடுகளின் அரசாங்கங்களிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.

தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான மிகமோசமான மீறல்கள் தொடர்பில் நம்பத்தகுந்த வகையில் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கக்கூடிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரே தற்போது இலங்கை அரசாங்கத்திற்குத் தலைமைதாங்குகின்றனர்.

தமிழ்மக்களுக்கு எதிரான தீவிர பிரசாரம் மற்றும் தமது கட்டளையின்கீழ் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட இராணுவ வீரர்களைப் பாதுகாப்பதாக அளிக்கப்பட்ட வாக்குறுதி என்பவற்றின் ஊடாகவே அவர்கள் ஆட்சியதிகாரத்திற்குத் தெரிவுசெய்யப்பட்டார்கள்.

இலங்கையில் ஆட்பீடமேறும் ஒவ்வொரு அரசாங்கங்களும் இதனையே தொடர்ந்து செய்கின்றன. அந்தவகையில் தற்போதைய அரசாங்கம் வெளிநாடுகளின் இராஜதந்திர அழுத்தங்களைக் குறைத்துக்கொள்ளும் நோக்கில் அரசநிர்வாகம் மற்றும் இராஜதந்திர ரீதியில் முக்கியமான பதவிகளுக்கு முன்னாள் இராணுவ அதிகாரிகளை நியமித்துவருகின்றது.

இலங்கை அரசாங்கங்களினால் திட்டமிட்டு வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்ட இனப்படுகொலைகளால் புலம்பெயர் தமிழர்கள் அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் நண்பர்களையும் இழந்திருக்கின்றார்கள்.

அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பலர் நாட்டைவிட்டு வெளியேறி, வெளிநாடுகளில் வசித்துவருகின்றார்கள். அவர்கள் திட்டமிட்ட இனப்படுகொலையினால் ஏற்பட்ட வடுக்களிலிருந்து மீள்வதற்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியைப் பெற்றுக்கொள்வதற்கும் கடுமையாகப் போராடிவருகின்றார்கள்.

போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக நம்பத்தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்ட சில இராணுவ அதிகாரிகள் தமது நாட்டிற்குள் நுழைவதற்கு பிரேஸில், கனடா, ஐக்கிய அமெரிக்க, பிரிட்டன் மற்றும் ஐரோப்பா உள்ளிட்ட சில நாடுகள் தடைவிதித்திருக்கின்றன. அதன் தொடர்ச்சியாக அண்மையில் இலங்கையின் இரு இராணுவ அதிகாரிகளும் அவர்களது குடும்பத்தினரும் தமது நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கு அமெரிக்க இராஜாங்கத்திணைக்களம் தடைவிதித்தது.

ஆகவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கையில் நம்பத்தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் மிகமோசமான மீறல்களில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் நபர்களுக்கு எதிராகத் தடைவிதிக்குமாறு நாம் வசிக்கும் நாடுகளின் அரசாங்கங்களிடம் கேட்டுக்கொள்கின்றோம் என்று அவ்வறிக்கையில் கோரப்பட்டுள்ளது.

அதுமாத்திரமன்றி மீறல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்குக் கட்டளை பிறப்பிக்கும் அதிகாரத்திலும் பொறுப்பிலும் இருந்தவர்கள் என்ற அடிப்படையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஜெனரல் சரத்பொன்சேகா, ஜெனரல் சவேந்திர சில்வா, மேஜர் ஜெனரல் சத்யப்ரிய லியனகே, ஜெனரல் கமால் குணரத்ன, மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ், மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரிய உள்ளடங்கலாக 18 பேரின் பெயர்களையும் மேற்குறிப்பிட்ட புலம்பெயர் அமைப்புக்கள் தமது அறிக்கையில் உள்ளடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.