மலையக மக்களின் பிரஜாவுரிமையும் பிரேமதாஸவும் எம்.எஸ்.எம். ஐயூப்

வரலாற்றில் நடைபெறும் அனைத்தையும் மக்கள் ஞாபகத்தில் வைத்திருப்பதில்லை. பெரும்பாலான விடயங்களை, பெரும்பாலானவர்கள் மறந்துவிடுகிறார்கள். இதனால், அரசியல்வாதிகள் மக்கள் முன் வந்து, நடந்ததை நடக்கவில்லை என்றும் நடக்காததை நடந்தது என்றும் கூறி அரசியல் இலாபம் அடைய முடிகிறது.

சிங்களம் மட்டும் அரச கரும மொழியாக வேண்டும் என்ற சட்டம், முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்கவின் காலத்திலேயே நிறைவேற்றப்பட்டது. இதனை வைத்து, பல சந்தர்ப்பங்களில் ஐக்கிய தேசிய கட்சிக்காரர்கள், “ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியே இனப்பிரச்சினைக்கான அத்திவாரத்தை இட்டது” என்று குற்றஞ்சாட்டுவார்கள். ஆனால், ஐ.தே.கவுக்கு அவ்வாறு குற்றஞ்சாட்ட தார்மிக உரிமை இல்லை.

1954ஆம் ஆண்டு, வடபகுதி விஜயத்தின் போது, அப்போதைய ஐ.தே.கவின் தலைவர் சேர் ஜோன் கொத்தலாவல, கொக்குவிலில் நடைபெற்ற கூட்டமொன்றில், சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளும் அரசகரும மொழிகளாக்கப்படும் எனக் கூறியிருந்தார். ஆனால், தெற்கில் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதையும் ஸ்ரீ ல.சு.க சிங்கள மொழியை மட்டும் அரசகரும மொழியாகப் பிரகடனப்படுத்துவோம் என்று கூறி வந்ததையும் அடுத்து, ஐ.தே.க தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது.

அதன்படி, 1956ஆம் ஆண்டு தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்னர், களனியில் நடைபெற்ற ஐ.தே.க மாநாட்டின் போது, சிங்கள மொழி மட்டுமே அரச கரும மொழியாக வேண்டும் என்ற பிரேரணை நிறைவேற்றப்பட்டது. அதனை மக்கள் மறந்துவிட்டார்கள்.

இந்திய வம்சாவளி தமிழ் மக்களுக்கு, தமது தந்தையான ரணசிங்க பிரேமதாஸவே பிரஜாவுரிமையை வழங்கியதாக, சஜித் பிரேமதாஸ, நுவரெலியாவில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டமொன்றில் உரையாற்றும் போது கூறியிருந்தார். இதுவும் வரலாற்றைத் திரிபுபடுத்தும் கருத்தாகவே தெரிகிறது.

ஐக்கிய மக்கள் சக்தி என்பது, 2020ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட புதியதொரு கட்சியாகும். அதற்கு முன்னர் அக்கட்சியின் தலைவர்களும் ஆதரவாளர்களும் ஐ.தே.கவிலேயே இருந்தார்கள். எனவே, 2020ஆம் ஆண்டுக்கு முன்னர், ஐ.தே.க செய்த நன்மையான காரியங்களின் பெருமையிலும் செய்த கொடுமைகளின் அபகீர்த்தியிலும் ஒரு பங்கு ஐக்கிய மக்கள் சக்தியையும் சென்றடைகின்றது.

இந்தவகையில், ஐ.தே.கவின் வரலாற்றில் நடைபெற்ற சில விடயங்களுக்கு, ஐக்கிய மக்கள் சக்தியும் வெட்கப்பட வேண்டும். அதில், 1948 ஆம் ஆண்டு மலையகத் தமிழ் மக்களின் பிரஜாவுரிமையைப் பறித்தமை, மிகவும் முக்கியமான கொடுமையாகும்.

1947ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில், மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்திய இலங்கை – இந்திய காங்கிரஸின் ஏழு பிரதிநிதிகள் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டார்கள். அவர்கள் ஆளும் கட்சியை அல்லாது, பிரதான எதிர்க்கட்சியான லங்கா சமசமாஜ கட்சியையே ஆதரித்தனர்.

இதைத் தமது அரசியல் எதிர்க்காலத்துக்கான ஓர் அச்சுறுத்தலாகவே, டி.எஸ் சேனாநாயக்கவின் தலைமையிலான ஐ.தே.க கருதியது. எனவேதான், 1948 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பிரஜாவுரிமை சட்டத்தின் மூலம், மலையக மக்களின் பிரஜாவுரிமையை ஐ.தே.க அரசாங்கம் இரத்துச் செய்தது. இதற்கு, ஜீ.ஜீ பொன்னம்பலத்தின் தமிழ்க் காங்கிரஸ் ஆதரவளித்தது.

இது இன்று வரை, இந்திய வம்சாவளி தமிழ் மக்களின் சமூக பொருளாதார அபிவிருத்தியை, வெகுவாகப் பாதித்து வந்துள்ளது. அக்காலத்தில் நாட்டின் வருமானத்தில் பெரும்பகுதியைச் சம்பாதித்துக் கொடுத்த அம்மக்களுக்கு, இந்தப் பிரஜாவுரிமைப் பிரச்சினையால், திறைசேரிப் பணத்தில் பாடசாலைகளையோ மருத்துவமனைகளையோ பெற்றுக் கொள்ள முடியாமல் போய் விட்டது.

இந்த விடயத்தில், அவர்களுக்கு சில சட்டச் சிக்கல்களும் இருந்தன. அதன் காரணமாக, சுதந்திரத்துக்குப் பின்னரும் அவர்கள் நாட்டில் மிகவும் ஒதுக்கப்பட்ட மக்களாக வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது.

கல்வி, சுகாதாரம், தொழில் வாய்ப்பு, வீடமைப்பு என்று எதை எடுத்தாலும் உரிமைகளற்ற, தோட்டக் கம்பனிகளால் ஒடுக்கப்பட்ட மிகவும் பின்தங்கிய மக்களாகவே அவர்கள் சுதந்திரத்துக்குப் பின்னரும் வாழ்ந்து வந்துள்ளனர். ஏனெனில், சுதந்திரத்துக்குப் பின்னரும் பல தசாப்தங்களாக அவர்கள் இலங்கைப் பிரஜைகளாக இருக்கவில்லை.

பின்னர், இடம்பெற்ற பல்வேறு அரசியல் நெருக்குதல்கள் காரணமாக, நான்கு கட்டங்களில் சட்டங்கள் இயற்றப்பட்டு, இந்திய வம்சாவளி மக்களுக்கு பிரஜாவுரிமை வழங்கப்பட்டது.

1964ஆம் ஆண்டு இலங்கை பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவுக்கும் இந்திய பிரதமர் லால் பஹதூர் சாஸ்திரிக்கும் இடையில் ஏற்பட்ட உடன்பாட்டின்படி 1967ஆம் ஆண்டு இல. 14க் கொண்ட ‘இந்திய-இலங்கை ஒப்பந்தம் (நிறைவேற்றல்) சட்டம்’ நிறைவேற்றப்பட்டமை அதன் முதல் கட்டமாகும்.

1974ஆம் ஆண்டு பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்வுக்கும் இந்திய பிரதமர் இந்திரா காந்திக்கும் இடையில் ஏற்பட்ட மற்றுமோர் ஒப்பந்தத்தின் படி, மேலும் ஒருசாரார் இலங்கை பிரஜாவுரிமையைப் பெற்றுக் கொண்டனர். இந்த இரண்டு ஒப்பந்தங்களும் ஸ்ரீ ல.சு.க ஆட்சிக் காலத்திலேயே கைச்சாத்திடப்பட்டன.

பிரஜாவுரிமை விடயத்தில் இந்தியா மீதும் அதன் மூலம் இலங்கை அரசாங்கத்தின் மீதும், மலையக அமைப்புகள் ஏற்படுத்திய நெருக்குவாரத்தைப் பார்க்கிலும், கடுமையான நெருக்குவாரத்தை வட பகுதியைச் சேர்ந்த தமிழ் ஆயுதக்குழுக்கள் பிற்காலத்தில் ஏற்படுத்தின.

1980களில் இந்தியாவுக்கு எதிரான இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கை காரணமாக, இலங்கையை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க இந்தியா நினைத்தது. அதற்கு, இந்திரா காந்தி இலங்கையின் இனப் பிரச்சினையை பாவித்தார். அதன் ஓர் அம்சமாகவே இந்தியா 1985ஆம் ஆண்டு திம்புப் பேச்சுவார்த்தையை ஏற்பாடு செய்தது.

அதில் கலந்து கொண்ட தமிழ் கட்சிகளும் இயக்கங்களும், நான்கு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தனர். அவை இன்றும் திம்புக் கோட்பாடுகள் என்று அழைக்கப்படுகின்றன. இலங்கையில் வாழும் சகல தமிழர்களினதும் பிரஜாவுரிமை மற்றும் மனித உரிமைகள் அங்கிகரிக்கப்பட வேண்டும் என்பது அவற்றில் நான்காவது கோட்பாடாகும்.

அக்காலத்தில் ஈ.பி.ஆர்.எல்எப் போன்ற தமிழ் அமைப்புகள் மலையக தமிழர்களையும் தமது போராட்டத்தில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தன. அதன்படியே இந்தக் கோட்பாடு மற்றவையுடன் சேர்த்துக் கொள்ளப்பட்டது.

அதனை அடுத்து, இந்தியா இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தி வந்தது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸூம் அக்காலத்தில் பிரஜாவுரிமை விடயத்தில் குரல் கொடுத்தது. இந்த நிலையிலேயே கடும்போக்குவாதியான ஜனாதிபதி ஜே ஆர். ஜயவர்தனவால் 1986ஆம் ஆண்டு இல. 5க் கொண்ட ‘நாடற்ற நபர்களுக்கு பிரஜாவுரிமை வழங்குவதற்கான சட்டம்’ நிறைவேற்றப்பட்டது. இது இந்திய வம்சாவளி நபர்களுக்கு பிரஜாவுரிமை வழங்க நிறைவேற்றப்பட்ட இரண்டாவது சட்டமாகும்.

இதனை நிறைவேற்றும் போது எழுந்த சில பிரச்சினைகள் காரணமாக, 1988ஆம் ஆண்டு இல. 39க் கொண்ட ‘நாடற்ற நபர்களுக்கு பிரஜாவுரிமை வழங்குவதற்கான (விசேட பிரமாணங்கள்) சட்டம், நிறைவேற்றப்பட்டது. அது மூன்றாவது சட்டமாகும்.

இந்த இறுதி இரண்டு சட்டங்களும் ஜே.ஆர். ஜயவர்தனவின் ஐ.தே.க அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட சட்டங்களாகும். அப்போது ரணசிங்க பிரேமதாஸ பிரதமராக இருந்தமை உண்மையாயினும் அவரது முயற்சியால் அவை கொண்டுவரப்படவில்லை. ஆனால் அவை அக்காலத்திலேயே நிறைவேற்றப்பட இந்திய நெருக்குதலே காரணமாகியது. ரணசிங்க பிரேமதாஸ அதற்காக விசேடமாக எதனையும் செய்தாரா என்று வரலாற்றை புரட்டிப் பார்க்கும் போது தெரிவதில்லை.

மஹிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதியாக இருந்த 2003ஆம் ஆண்டு மீண்டும் இந்த விடயத்துக்காக மற்றொரு சட்டம் கொண்டுவரப்பட்டது. அது இல. 35க் கொண்ட ‘இந்திய வம்சாவளி நபர்களுக்கு பிரஜா உரிமை வழங்குவதற்கான சட்டம்’ ஆகும். இது இந்த விடயத்துக்காக நிறைவேற்றப்பட்ட நான்காவது சட்டமாகும்.

எனவே மலையக மக்களுக்கு பிரஜாவுரிமை வழங்கும் விடயத்தில் சஜித் பிரேமதாஸவுக்கு உரிமை கோர ஏதாவது ஒரு வழி இருப்பதாகத் தெரியவில்லை.

இதனால், மலையக மக்கள் ஐக்கிய மக்கள் சக்தியை புறக்கணிக்க வேண்டும் என்று அர்த்தமாகாது. கடந்த பொதுத் தேர்தலில் பெரும்பாலான மலையக மக்கள், சஜித்தின் கட்சியை ஆதரித்தமை பிழையென்று கூற நாம் முற்படவுமில்லை.

கடுமையாக இனவாதத்தை தூண்டிக் கொண்டு, தேர்தலில் போட்டியிட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவைப் புறக்கணித்து, சிறுபான்மை மக்கள் ஐக்கிய மக்கள் சக்தியை ஆதரித்தமை விளங்கிக் கொள்ளக்கூடியதே. ஆனால் வரலாறு திரிபுபடுத்துப்படக் கூடாது.

இந்தியாவை நோக்கி ஒரு கோரிக்கை -யதீந்திரா

ஆறு தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து தயாரித்த கடிதம் இந்திய தூதுவரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டிருக்கின்றது. யுத்தத்திற்கு பின்னரான கடந்த பன்னிரெண்டு வருடங்களில் இந்தியாவை நோக்கி முதல் முதலாக தமிழ்தேசிய கட்சிகள் கூட்டுக் கோரிக்கையொன்றை முன்வைத்திருக்கின்றனர். கடந்த பன்னிரெண்டு வருடகால தமிழ் தேசிய அரசியல் செயற்பாடுகள் அனைத்துமே மேற்கு நோக்கியதாக மட்டுமே இருந்தது. அதாவது, ஜக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஊடான அழுத்தங்களே ஒரேயொரு பிரதான விடயமாக இருந்திருக்கின்றன. ஆனால் இந்த பன்னிரெண்டு வருடகால அரசியல் முன்னெடுப்புக்கள் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இ;வாறானதொரு சூழலில்தான், பிரதான தமிழ் கட்சிகள் ஒன்றாக இந்தியாவையே நோக்கி சென்றிருக்கின்றன.

இந்த இடத்தில் இதன் பின்னணி பற்றி சிறிது பார்ப்பது பொருத்தமென்று எண்ணுகின்றேன். கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றும் – தமிழரசு கட்சிக்கு அடுத்த நிலையில் பாராளுமன்ற ஆசனங்களை வைத்திருக்கும் கட்சியுமான, தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) இந்த முயற்சியை ஆரம்பித்திருந்தது. இதன் பிரதான ஒருங்கிணைப்பாளராக டெலோவின் பேச்சாளர் சுரேன் குருசாமி செயற்பட்டிருந்தார். பின்னர், டெலோவின் முயற்சியுடன் கூட்டமைப்பின் பிறிதொரு பங்காளிக் கட்சியான, சித்தார்த்தன் தலைமையிலான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியும் (புளாட்) இணைந்து கொண்டது. இது தொடர்பான முதலாவது சந்திப்பு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றிருந்தது. இந்த சந்திப்பில், கூட்டமைப்பில் அதிக பாராளுமன்ற ஆசனங்களை கொண்டிருக்கும் இலங்கை தமிழரசு கட்சி பங்குகொள்ளவில்லை. அதே வேளை, தமிழரசு கட்சியின் முக்கியஸ்தர் எம்.ஏ.சுமந்திரன் டெலோவின் முயற்சியை பொது வெளிகளில் விமர்சித்திருந்தார். அதாவது, 13வது திருத்தச்சட்டத்தின் அடிப்படையில் இந்தியாவிடம் ஒரு கோரிக்கையை முன்வைக்க முடியாது என்னுமடிப்படையில் அவருடைய விமர்சனம் அமைந்திருந்தது. ஆனால் பின்னர் தமிழரசு கட்சியும் டெலோவின் முயற்சியுடன் இணைந்து கொண்டது.

பல கட்சிகள் ஒரு இணக்கப்பாட்டிற்கு வருகின்ற போது, பலருடைய கருத்துக்களையும் உள்வாங்க வேண்டியது ஒரு ஜனநாயக நெறிமுறையாகும். அந்த அடிப்படையில்தான், தற்போது இந்திய பிரதமருக்கு அனுப்பப்பட்டிருக்கும் கடிதம் பூர்த்திசெய்யப்பட்டிருக்கின்றது. இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் குழந்தையான 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டுமென்னும் கோரிக்கையும் கடிதத்தில் இருக்கின்றது 13ஜை மட்டும், ஓரு கோரிக்கையாக முன்வைக்கக் கூடாதென்று வாதிட்ட தமிழசு கட்சியின் சொற்களும் கடிதத்தில் இருக்கின்றன. ஆனால் இந்த முயற்சி எந்த இலக்கின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதோ, அந்த இலக்கு நிறைவுசெய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் டெலோவின் முயற்சி வெற்றிபெற்றிருக்கின்றது.

அண்மைக்காலமாக, இந்தியாவை தவிர்த்துச் செல்லும் வகையிலேயே கூட்டமைப்பின் தீர்மானங்கள் அமைந்திருந்தன. சம்பந்தன் இதனை திட்டமிட்டு செய்ததாக இந்தக் கட்டுரையாளர் கருதவில்லை. அதே வேளை, சுமந்திரனின் தூண்டுதலால் இது நிகழ்ந்ததாகவும் இந்த கட்டுரையாளர் கருதவில்லை. சுமந்திரன் அரசியலுக்கு முற்றிலும் புதியவர். கொழும்பின் சிங்கள ஆளும் வர்க்கத்தோடு நெருங்கிப் பழகுவதற்கான வாய்ப்பு அவருக்கு முதல் முதலாக கிடைத்த போது, அது அவருக்கு ஒரு பரவசத்தை கொடுத்திருக்கலாம். அவர்களுடன் உரையாடி விடயங்களை மிகவும் இலகுவாக வெற்றிகொள்ளலாம் என்று அவர் எண்ணியிருக்கலாம். ரணில்-மைத்திரி ஆட்சிக் காலத்தில் சுமந்திரன் மிகவும் வீறாப்பாகவே ஊடகங்களை எதிர்கொண்டிருந்தார். தீர்வை நெருங்கிவிட்டதான ஒரு பார்வையே அவரது பேச்சுக்களில் தெரிந்தது. இறுதியில் என்ன நடந்தது? ஆனால் இந்தக் கட்டுரையாளர் உட்பட பலரும் எதிர்வு கூறியதற்கு அமைவாகவே விடயங்கள் நடந்தேறின.

இலங்கை தமிழர் விவகாரத்தில் இந்தியா ஒரு தீர்மானகரமான சக்தி. இது தொடர்பில் எனது பத்தியில் பல்வேறு சந்தர்பங்களில் பதிவு செய்திருக்கின்றேன். இலங்கையின் உடனடி அயல்நாடாக இ;ந்தியா இருப்பதும் – ஏற்கனவே இந்த பிரச்சினையில் இந்தியா நேரடியாக தலையீடு செய்து, இனப்பிரச்சினைக்கான தீர்வாக ஒரு விடயத்தை முன்வைத்திருப்பதும் பிரதான காரணங்களாகும். இதனை சாதாரணமாக புறம்தள்ளிவிட்டு ஈழத் தமிழர்களால் எக்காலத்திலும் செயற்பட முடியாது. இது நமது விருப்பு வெறுப்புகள் சம்பந்தப்பட்ட விடயமல்ல. மாறாக, இந்த பிராந்தியத்தின் அரசியல் யதார்த்தம். இந்த யதார்த்தின் அடிப்படையில்தான் விரும்பமில்லாமிட்டாலும் கூட, ஜே.ஆர்.ஜெயவர்த்தன இந்தியாவின் தலையீட்டை அனுமதித்தார். இந்திய-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டன் பின்னர், ஜே.ஆர் டைம்ஸ் ஒப் லண்டன் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார் – அதாவது, இந்தியா இந்த பிராந்தியத்தின் முதன்மையான சக்தி. நாங்கள் இந்த யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கின்றது. நாங்கள் இந்தியாவுடன் செல்ல வேண்டும் அல்லது பிறிதொரு வலிமையான சக்தியோடு செல்ல வேண்டும்.

இந்திய-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 35 வருடங்கள் சென்றுவிட்டது. இந்தக் காலத்தில், இலங்கைத் தீவிலும், ஈழத் தமிழர் அரசியலிலும், உலகளாவிய அரசியல் போக்குகளிலும் பல மாற்றங்கள் இடம்பெற்றிருக்கின்றன. ஆனாலும் ஈழத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில் முன்னோக்கி செல்வதற்கான பிரகாசமான எந்தவொரு தெரிவையும் காண முடியவில்லை. மீளவும் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை நோக்கியே திரும்ப வேண்டியிருக்கின்றது. ஏனெனில் இந்த இடைப்பட்ட காலத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், இந்தியா ஒரு பிராந்திய சக்தியென்பதும் – அது எப்போது வேண்டுமானாலும், இலங்கை விடயத்தில் தலையீடு செய்யும் வல்லமையை கொண்டிருக்கின்றது என்பதிலும் எந்தவொரு மாற்றமும் ஏற்படவில்லை. இனியும் ஏற்படாது.

இன்னும் சொல்லப் போனால், இந்தியாவின் பிராந்திய மற்றும் உலகளாவிய முக்கியத்துவம் முன்னரைவிடவும் அதிகரித்திருக்கின்றது. பனிப் போர் காலத்தில் – அமெரிக்கா, சோவியத் யூனியனை முடக்குவதற்காக, சீனாவுடனான உறவை வலுப்படுத்தியது. இன்று சீனாவை ஒரு வறையறைக்குள் முடக்குவதற்கான அமெரிக்க மூலோபாயத்தின் பிரதான பங்காளியாக இந்தியா இருக்கின்றது. உலக அரசியலில் முன்னர் சோவியத் யூனியன் இருந்த இடத்தில், இப்போது சீனா இருக்கின்றது – சீனா இருந்த இடத்தில் இப்போது, இந்தியா இருக்கின்றது. இந்த நிலையில் இந்தியாவை விலத்திக் கொண்டு ஈழத் தமிழர்களால் எங்கு ஓட முடியும்?

இந்த பின்னணியில்தான் இந்தியாவின் ஈடுபாட்டை மீளவும் தமிழர் பிரச்சினையில் ஏற்படுத்தும் நோக்கில், தமிழ் தேசிய கட்சிகள் இந்த வரலாற்று நகர்வை மேற்கொண்டிருக்கின்றன. பன்னிரெண்டு வருடங்களாக அரசியல் தீர்வு நோக்கி மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்திருக்கின்ற நிலையில்தான், இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்ற 13வது திருத்தச்சட்டத்தின் அடிப்படையிலான கோரிக்கையொன்றுடன் புதுடில்லியை ஈழத் தமிழர்கள் அணுகியிருக்கின்றனர். 13வது திருத்தச்சட்டத்தை ஒரு இறுதியான அரசியல் தீர்வாக கட்சிகள் முன்வைக்கவில்லை. உண்மையில் இப்போது முன்னெடுக்கப்பட்டிருக்கும் நகர்வானது, 13வது திருத்தச்சட்டம் தொடர்பான விடயமே அல்ல. இது அடிப்படையில் இந்தியாவின் தலையீட்டை கோருகின்ற – இந்தியாவின் பங்களிப்பு இல்லாமல் இந்த விடயத்தில் ஈழத் தமிழர்கள் பயணிக்க முடியாது என்பதை அழுத்தம் திருத்தமாக வெளிப்படுத்தும் ஒரு தந்திரோபாய முன்னெடுப்பாகும்.

தமிழ் கட்சிகள் இவ்வாறானதொரு முடிவுக்கு சடுதியாக வரவில்லை என்பதையும் நாம் குறித்துக் கொள்ள வேண்டும். கடந்த பன்னிரெண்டு வருடங்களாக மேற்குலகத்தை நோக்கி பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு வருடமும் ஜெனிவாவை முன்வைத்து பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றிருக்கின்றன. கட்சிகள் மற்றும் புலம்பெயர் அமைப்புக்கள் என்போர் ஏட்டிக்கு போட்டியான செயற்பாடுகளில் ஈடுபட்டனர். ஜ.நா மனித உரிமைகள் பேரவையில் – இதுவரையில் எட்டு பிரேரணைகள் இலங்கையின் மீது நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. 2012இல் அமெரிக்க அனுசரனையுடன், இலங்கையின் மீதான முதலாவது பொறுப்பு கூறல் பிரேரணை நிறைவேற்றப்பட்டது. இந்த மார்ச் மாதத்துடன் பத்து வருடங்கள் பூர்த்தியடையவுள்ளது.

ஆனாலும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வில் என்ன முன்னேற்றங்கள் இடம்பெற்றிருக்கின்றன? சிலர் கூறலாம் கூட்டமைப்பு விடயங்களை சரியாக கையாளவில்லையென்று. ஆட்சி மாற்றத்தை கூட்டமைப்பு உச்சளவில் பயன்படுத்தியிருக்கலாம் என்னும் கருத்தில் இந்த கட்டுரையாளருக்கு முழுமையான உடன்பாடுண்டு. ஆனால் சமஸ்டியடிப்படையிலான அரசியல் தீர்வை அடைவதற்கு கூட்டமைப்பு எதனையும் செய்யவில்லை என்றால் அது தவறானது. ஏனெனில் சமஸ்டித் தீர்விற்காக சிறிலங்கா அரசை இறங்கிவரச் செய்யக் கூடிய எந்தவொரு பலமும் கூட்டமைப்பிடம் இல்லை. அதே வேளை சர்வதேச நீதிப் பொறிமுறையை கூட்டமைப்பு பயன்படுத்தவில்லை என்னும் விமர்சனத்திலும் உண்மையில்லை. ஏனெனில், கூட்டமைப்பு என்னதான் உரத்துப் பேசியிருந்தாலும் கூட, இப்போது இருக்கின்ற நிலைமைக்கு மேல் பெரிதாக எதுவும் நடந்திருக்காது. ஆனால் வாய்ப்புக்களை உச்சளவில் பயன்படுத்தி எடுக்கக் கூடியதை எடுத்துக் கொள்வது என்னும் தந்திரோபாய அடிப்படையில் கூட்டமைப்பு செயற்பட்டிருக்கவில்லை என்று கூறினால் அது சரியானது.

தமிழ் கட்சிகள் இந்தியாவை நோக்கி கோரிக்கை முன்வைத்ததை ஒரு சிலர் விமர்சிக்கின்றனர். 13வது திருத்தச்சட்டத்திற்குள் தமிழ் மக்களின் அபிலாஸைகளை முடக்க முற்படுகின்றனர் என்பதுதான் அவர்களது விமர்சனத்தின் அடிப்படையாகும். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியே இவ்வாறான விமர்சனத்தை மேற்கொண்டு வருகின்றது. இந்தியாவை நோக்கி ஒரு கோரிக்கையை முன்வைக்கும் போது, இந்தியாவிற்கு உரித்தான விடயமொன்றுடன் செல்வதுதானே சரியானது. இந்த அடிப்படையில்தான், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தினால் கொண்வரப்பட்ட 13வது திருத்தச்சட்டத்தை கையிலெடுக்க வேண்டியிருக்கின்றது. பிரதமர் மோடிக்கான கடிதத்தில் கையெழுத்திட்டிருக்கின்ற கட்சிகள் மிகவும் தூரநோக்குடனும், தந்திரோபாயமாகவும்தான் இந்த விடயத்தை கையாண்டிருக்கின்றன. ஆனால் இந்த விடயத்தை விமர்சனம் செய்வோரிடம் ஒரு அடிப்படையான தவறுண்டு.

அதாவது, 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டுமென்று கூறுவோரை, விமர்சிப்பவர்கள்- சர்வதேச அழுத்தங்களின் அச்சாணியாக கருதப்படும், ஜெனிவா பிரேரணைகள் 13வது திருத்தச்சட்டத்தின் அடிப்படையிலான அதிகாரப் பகிர்வு பற்றி வலியுறுத்துவதை வசதியாக மறந்துவிடுகின்றனர். இந்த உண்மையை மக்கள் மத்தியில் திட்டமிட்டு மறைக்கின்றனர். 2009 மே மாதத்தில் யுத்தம் முடிவுற்றதை தொடர்ந்து, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கையை பாராட்டி ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தில் 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவது தொடர்பில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இறுதியாக கொண்டுவரப்பட்ட 46ஃ1 தீர்மானத்திலும் 13வது திருத்தச்சட்டத்தின் அடிப்படையில் அரசாங்கத்தின் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டுமென்றுதான் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அதே வேளை மாகாண சபைகள் இயங்குவதற்கான சூழலை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டுமென்றும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அவ்வாறாயின் இந்த பிரேரணைகளையுமல்லவா தமிழர் தரப்புக்கள் நிராகரிக்க வேண்டும்? எனவே இங்கு அடிப்படையில் பிரச்சினையாக இருப்பது, 13வது திருத்தச்சட்டமா அல்லது, இந்தியாவை நோக்கி செல்வதா?

தற்போது ஒரு நேர்கோட்டில் சந்தித்திருக்கும் பிரதான தமிழ் தேசிய கட்சிகள் அனைத்தும் காலத்தை சரியாக விளங்கிக் கொண்டு செயற்பட்டிருக்கின்றன. ஆனால் இத்துடன் கட்சிகளின் பணி முடிந்துவிடவில்லை. இதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான தந்திரோபாய நகர்வுகளை மேற்கொள்ள வேண்டும். இந்தியாவிற்கு பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உண்டு. அதனை விளங்கிக்கொண்டு புதுடில்லியை நோக்கி தொடர்ந்தும் செயற்படுவதற்கான முன்னெடுப்புக்களையும் கட்சிகள் முன்னெடுக்க வேண்டும்.

Posted in Uncategorized

அரசாங்கம் விழ முன் நாடு விழுந்து விட்டது- தமுகூ தலைவர் மனோ கணேசன் எம்பி

நாம் முன்னோக்கி சென்று, இந்த காட்டாட்சியை வீழ்த்த வேண்டும் என்றால் சஜித் பிரேமதாசவும், சம்பிக்க ரணவக்கவும் முரண்பாடுகளை மறந்து கரங்கோர்க்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி விரும்புகிறது என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் அமைந்துள்ள ஊழல் எதிர்ப்பு குழு அங்கத்தவர்களை விசாரிக்கும் விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் இன்று சாட்சியம் அளித்து விட்டு, ஊடகங்களிடம் உரையாற்றிய மனோ கணேசன் எம்பி மேலும் கூறியதாவது,

‘வழமையாக அரசாங்கங்கள் பதவிக்கு வரும். பின்னர் அது விழும். அதையடுத்து புதிய அரசாங்கம் பதவிக்கு வரும். அதுவும் விழும். இன்னொரு அரசாங்கம் வரும். இதுவே வழமை. ஆனால், இன்று அரசாங்கம் விழுவதற்கு முன் நாடு விழுந்து விட்டது. அண்டை நாடுகளிடம் கெஞ்சி கூத்தாடி கைமாற்று வாங்கி, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை,பெருங்கடன்களின் மீள் செலுத்தும் தொகையை செலுத்தி காலத்தை ஓட்டும் நிலைமைக்கு நாடு விழுந்து விட்டது.
ஆகவே புதிதாக கட்டி எழுப்ப வேண்டியது புதிய அரசாங்கம் என்பதை விட, புதிய நாடு என்றுதான் சொல்ல வேண்டும். ஆகவே இன்று இந்நாட்டின் அரச எதிர்ப்பு சக்திகள் அனைத்தும் கரங்கோர்க்க வேண்டும். அதற்கு முன் ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாசவும், 43ம் படையணி தலைவர் பாடலி சம்பிக்க ரணவக்கவும் கரங்கோர்க்க வேண்டும்.

‘’இல்லை, இல்லை” என்ற கூக்குரலை விட இந்நாட்டில் இன்று எதுவும் இல்லை என்றாகி விட்டது. எண்ணெய் இல்லை. எரிவாயு இல்லை. பால்மா இல்லை. உரம் இல்லை. மருந்துகள் இல்லை. எதுவும் இல்லை. சொல்லப்போனால் இந்நாட்டில் இன்று அரசாங்கமே இல்லை.

உரம் இல்லை என்று கையை விரித்து மன்றாடும் விவசாயிகளிடம் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச, “உங்கள் நிலங்களில் நெல் விளைவிக்க முடியாவிட்டால், பாசிபயறு விளைவியுங்கள்” என்று கூறுகிறார். இது, “பாண் இல்லாவிட்டால், கேக் சாப்பிடுங்கள்” என்று சொன்ன பிரான்ஸ் நாட்டு கொடுங்கோல் அரசியை ஞாபகப்படுத்துகின்றது.

வெள்ளைபூண்டு ஊழலை கண்டு பிடித்து, அம்பலப்படுத்திய முன்னாள் நுகர்வோர் அதிகார சபை பணிப்பாளர் துசான் குணவர்தன, வெளிநாடு செல்ல முடியாமல் தடுக்கப்பட்டுள்ளார். இது என்ன கோலம்? குற்றவாளிகள் சுதந்திரமாக சுற்றி திரிவது ஒருபுறம் இருக்க, குற்றவாளிகளை கண்டு பிடிக்கும் நடவடிக்கையை எடுத்த நேர்மையான அதிகாரிகள் தண்டிக்கப்படுகிறார்கள்.

இன்று இங்கே “ஊழல் எதிர்ப்பு குழு என்று ஏன் முன்னாள் அரசாங்க பிரமுகர்கள் மீது நடவடிக்கை எடுத்தீர்கள்” என என்னை கேட்டு தொந்தரவு செய்கிறார்கள். ஊழல் செய்தவர்கள் மீதான வழக்குகளை சட்டமா அதிபர் திணைக்களம் மூலம் வாபஸ் வாங்கி விட்ட நிலையில், ஊழல் செய்தவர்கள் எல்லாம் சுதந்திரமாக திரியும் போது, ஏன் நீங்கள் நடவடிக்கை எடுத்தீர்கள் என இவர்கள் என்னை கேட்கிறார்கள்.

நான் மனோ கணேசன். தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவன். எங்கள் கூட்டணி, எவருக்கும் எடுபிடி வேலை செய்யாத, ஒரு பலமான, தைரியமுள்ள சுதந்திரமான கட்சி. இது மக்களின் கட்சி. எம்மை எவரும் பயமுறுத்த முடியாது. நாங்கள் பயந்து ஒதுங்க மாட்டோம். அதை இன்னமும் பலமாக நாம் வளர்ப்போம். அது ஒன்றே எமது பலம்” என அவர் தெரிவித்தார்.

பொரளை தேவாலய கைக்குண்டு விவகாரம் : எவரையும் நழுவிச்செல்ல விட மாட்டோம் – கர்தினால்

பொரளை தேவாலயத்தில் கைக்குண்டு வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் அரசாங்கத்தையோ பொலிஸாரையோ நழுவிச் செல்ல விட மாட்டோம்.

இந்த விவகாரம் தொடர்பான முழுமையான உண்மைத் தன்மையை வெளியே கொண்டு வரும் வரையில் அரசாங்கத்திற்கு எதிராக நாம் போராட்டத்தை நடத்துவோம் என கொழும்பு மறை மாவட்ட பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

பொரளை சகல புனிதர்கள் தேவாலய சங்கிரிஸ்டியனான முனி மற்றும் ஏனைய மூவருக்கும் ஏற்பட்ட அசாதாரணத்திற்கு எதிராக நீதிமன்றத்தை நாடவுள்ளோம். அவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதற்கான செயற்பாடுகளை நாம் ஆரம்பித்துள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த ஞாயிறன்று இரவு சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக நடைபெற்ற கலந்துரையாடலொன்றின்போதே கர்தினால் ஆண்டகை மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடலின்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சம்பவம் நடைபெற்ற தினத்தன்று காலை வேளையில் சி.சி.டி.வி. காணொளிகளை பார்வையிடும் படி நான் எமது குருவானவர்களுக்கு அறிவுருத்தியிருந்தேன்.

ஏனெனில், இந்த குண்டை வேறு யாராவது கொண்டு வந்து வைத்தார்களா என தேடிப்பார்க்க வேண்டும் என கூறினேன். இதன்படி, இந்த குண்டை யார் ஆலயத்திற்குள் வந்து வைத்தார்கள் என என்பதை எங்களால் கண்டறிய முடிந்தது.

மேலும், குண்டை வைத்தவர் ஆலய சங்கிரிஸ்டியனான முனி என்பவர்தான் என கூறி அவர் மீது பலியை சுமத்துவதற்கு பொலிஸார் முயற்சித்தனர். இதைத்தான் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் கூறியிருந்தார். இந்த சம்பவம் மட்டுமல்லாது நாரஹேன்பிட்டி வைத்தியசாலையிலும் குண்டு வைத்தமைக்கு முனி என்பவர் மீது பலியை போட முயற்சித்தனர்.

இது போன்ற விடயங்களை நடத்துவதற்கு எங்களால் இடமளிக்க முடியாது. அரசாங்கமோ அல்லது பொலிஸாரோ யாராக இருப்பினும் இந்த சம்பவத்திலிருந்து எவரையும் நழுவில் செல்ல விட முடியாது.

முனி என்பவருக்கும் ஏனைய மூவருக்கும் ஏற்பட்ட அசாதாரணத்திற்கு நீதியை வழங்க வேண்டும். இந்நாட்டில் நீதிமன்றம் உள்ளது. நீதிமன்றத்தின் மீது எமக்கு முழு நம்பிக்கை உள்ளது. ஆகவே, எமக்கு நீதியை பெற்றுக்கொள்வதற்காக நாம் நீதிமன்றத்தை நாடவுள்ளோம். அதற்குத் தேவையான சகல வேலைகளையும் நாம் முன்னின்று செயற்படுவோம்.

பொரளை சகல புனிதர்கள் தேவாலயத்திலிருந்து கண்‍டெடுக்கப்பட்ட கைக்குண்டு தொடர்பான விவகாரம் தொடர்பிலான முழுமையான உண்மைத் தன்மையை வெளியே கொண்டு வருவதற்காக அரசாங்கத்துக்கு எதிராக நாம் போராட்டத்தை நடத்துவோம்.

இந்த அரசாங்கமும், பொலிஸாரும் இணைந்து நாடகமொன்றை நடத்தி வருகின்றமை தெளிவாகத் தெரிகிறது. இதன் உண்மைத் தன்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வருவதற்கு முயற்சிப்போம் ” என்றார்.

Posted in Uncategorized

சம்பூரில் சூரிய சக்தி மின்னுற்பத்தி நிலையம்: இந்தியாவுடனான உடன்படிக்கைக்கு திட்டம்

சம்பூரில் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையமொன்றை ஸ்தாபிப்பதற்காக இந்தியாவின் அரச நிறுவனமான NTPC எனப்படும் National Thermal Power Corporation Limited நிறுவனத்துடன் உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளதாக இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார்.

NTPC நிறுவனம் இந்தியாவில் 60,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மொத்த மின் உற்பத்தி 4,300 மெகாவாட்டை விட அதிகரிக்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, மன்னாரில் 5,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தை நிர்மாணிப்பது தொடர்பிலும் இரு தரப்பினரும் ஆராய்ந்து வருவதாக மிலிந்த மொரகொட குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் மின்சாரத்தை ஏற்றுமதி, இறக்குமதி செய்வதற்குள்ள இயலுமை தொடர்பிலும் சுட்டிக்காட்டியுள்ள இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர், இரு நாடுகளுக்கும் இடையிலான மின் கம்பி கட்டமைப்பொன்றை ஏற்படுத்துவது பாரிய விடயமாக அமையாது எனவும் கூறியுள்ளார்.

பகிர்தல்:

Posted in Uncategorized

பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

கொவிட் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சகத்தின் கொவிட்-19 தலைமை ஒருங்கிணைப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி இது குறித்து கருத்து தெரிவித்தார்.

மூன்றாம் டோஸை கட்டாயமாக்குவதற்கு ஐரோப்பிய நாடுகளிலும் பல்வேறு வளர்ந்த நாடுகளிலும் இவ்வாறான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சுகாதார அமைச்சரிடமும் சட்டமா அதிபரிடமும் ஆலோசனையைப் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

இலங்கைக்கு இந்தியா கடன் கொடுப்பதற்கு முன்.. இந்த உத்தரவாதம் மிக அவசியம்! செல்வப்பெருந்தகை செக்!

சென்னை: இலங்கைக்கு இந்தியா கடன் கொடுப்பதற்கு முன்பு, 13 -வது சட்டத் திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துவோம் என்ற உத்தரவாதத்தை அந்நாட்டு அரசிடம் இருந்து கேட்டுப்பெற வேண்டும் என காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.

தமிழர் பிரச்சினை குறித்துப் பேசும் ஒரே அரசமைப்புச் சட்டப் பிரிவாக 13-வது சட்டத் திருத்தம் மட்டுமே இருந்து வருவதாக தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை கூறுவதாவது;

ராஜீவ்காந்தி

முன்னாள் பாரத பிரதமர் தலைவர் ராஜீவ் காந்தியின் முயற்சியால் இந்திய – இலங்கை ஒப்பந்தம் கொண்டுவரப்பட்டது. 1987 ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் திரு. ராஜீவ் காந்திக்கும், இலங்கை அதிபர் திரு. ஜே.ஆர்.ஜெயவர்தனேவுக்கும் இடையிலான இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் விளைவாக இலங்கையில் 13-வது சட்டத் திருத்தம் ஏற்பட்டது. தமிழர் பிரச்சினை குறித்துப் பேசும் ஒரே அரசமைப்புச் சட்டப் பிரிவாக 13-வது சட்டத் திருத்தம் மட்டுமே இருந்து வருகிறது.

அதிகாரப் பகிர்வு

முழு அளவிலான உள்நாட்டுப் போர் உருவாகியிருந்த நேரத்தில் இலங்கையின் இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான முயற்சி அது. மாகாண கவுன்சில்களின் உருவாக்கத்திற்கும், சிங்களர்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகள் உட்பட 9 மாகாணங்களும் சுயாட்சி மேற்கொள்ளும் வகையில் அதிகாரப்பகிர்வு கிடைப்பதற்கு உறுதிப்படுத்தியது. கல்வி, ஆரோக்கியம், விவசாயம், வீட்டுவசதி, நிலம், காவல் துறை போன்ற பிரிவுகளில் மாகாண நிர்வாகங்களுக்கு அதிகாரம் தரப்படுகிறது. ஆனால், இத்தகைய அதிகாரம் இன்றளவும் தரப்படவில்லை.

இலங்கைக்கு கடன்

தற்போது, இலங்கை மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் உள்ளது. பல்வேறு நாடுகளிடம் இருந்து கடன் வாங்கிக் கொண்டு இருக்கிறது இலங்கை. இலங்கைக்கு சுமார் 6 ஆயிரத்து 700 கோடி ரூபாயை கடனாக இந்தியா தர இருப்பதாகச் செய்திகள் வந்துள்ளன. கடன் தரப் போகும் இந்தியா, இலங்கைத் தமிழர் நல்வாழ்வுக்கான உத்தரவாதத்தை இலங்கையிடம் இருந்து பெற வேண்டும்.

13-வது சட்டத்திருத்தம்

மேலும், இலங்கைத் தமிழருக்கு சம உரிமை பெற்றுத் தரும் அரசியல் சாசன 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த இலங்கைக்கு அழுத்தம் தர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்திருக்கிறார்.

Posted in Uncategorized

பெப்ரவரியில் வருகிறார் புதிய அமெரிக்க தூதுவர்

இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கு அமெரிக்காவின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ஜுலி சங் எதிர்வரும் பெப்ரவரி மாதம் இலங்கைக்கு வருகை தந்து தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.

இந்த விஜயத்தினை இராஜாங்கத்தரப்பு தகவல்கள் உறுதி செய்துள்ளன. அதேநேரம், அமெரிக்க தூதரகம் புதிய தூதுவரை வரவேற்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக தெரிவித்துள்ளது.

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அமெரிக்கத் தூதுவராக ஜூலி சங்கை நியமிக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த ஆண்டு ஜுன் 15ஆம் திகதி பரிந்துரை செய்திருந்தார்.

அதன் பின்னர் அவர் தனது சமர்ப்பணங்களை செனட் சபையில் செய்திருந்தார். இதனையடுத்து கடந்த டிசம்பர் 20 இல் அமெரிக்க செனட் சபையினால் அவருக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அவர் எதிர்வரும் பெப்பரவரியில் இலங்கைக்கு வருகை தந்து பதவியைப் பொறுப்பேற்கவுள்ளார்.

ஜூலி ஜியூன் சுங், இலங்கைக்கு மேலதிகமாக மாலைதீவுக்கான தூதுவராகவும் நியமிக்கப்படவுள்ளதாக வெள்ளை மாளிகை தகவல்கள் தெரிவிக்கின்றன.

தென் கொரியாவின் சியோலில் பிறந்த ஜூலி சுங்ரூபவ் கலிபோர்னியா சான் டியாகோ மற்றும் கொலம்பியா பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்புகளை பயின்றுள்ளார்.

தூதுவராக நியமிக்கப்படுவதற்கு முன்னதாக இவர்ரூபவ் அமெரிக்க வெளியுறவு ஆலோசகராகவும், இராஜாங்க திணைக்களத்தின் பதில் செயலாளராக கடமையாற்றியுள்ளர்.

இதற்கு முன்னர் கம்போடியா, தாய்லாந்து, இரான், கொலம்பியா, வியட்நாம், ஜப்பான் மற்றும் சீனா ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்கத் தூதரகங்களில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

13 ஆம் திருத்தத்தை தமிழ் மக்களின் அரசியல் தீர்வாக ஏற்கவில்லை! ஏற்றுவிட்டதாக அரசியல்கட்சியொன்று மக்களை குழப்புவதாக ரெலோ குற்ச்சாட்டு

தமிழ்மக்களின் அரசியல் தீர்வாக 13வது திருத்தச்சட்டத்தை ஏற்றறு விட்டோம் என தமிழ் கட்சி ஒன்று மக்களை தவறாக வழிநடத்த முற்படுவதாக டெலோ அமைப்பின் ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேன் தெரிவித்தார்.

நேற்றைய தினம் யாழ் ரெலோ அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் ஒரே நிலைப்பாட்டில் உள்ள தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து 13ஐ ஏற்றுவிட்டார்கள் ஒற்றையாடசிக்குள் தமிழர்களை அடகு வைத்து விட்டார்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி மக்களை குழப்ப முற்படுகிறது.

தமிழர்களுடைய இனப்பிரச்சனை அரசியல் தீர்வு விடயங்களில் ஒரே நிலைப்பாட்டில் உள்ள தமிழ் கட்சிகளின் தலைவர்கள் தெளிவான கொள்கையுடன் இருக்கிறார்கள்.

நாம் கட்சித் தலைவர்கள் ஒன்றிணைந்து இந்தியாவுக்கு அனுப்பிய அறிக்கையில் 13 அரசியல் தீர்வாக ஏற்கவில்லை இதை மக்களுக்கு தெளிவாகக் கூறுகிறேன்.

சமஸ்டி அடிப்படையிலான வடக்கு கிழக்கு இணைந்த அதிகாரமே தமிழ் மக்களுடைய இனப் பிரச்சனைக்குத் தீர்வாக நாம் ஆரம்பத்தில் இருந்தே கூறி வருகிறோம் இப்போதும் அதையே கூறுகிறோம்.

இலங்கையில் அரசியல் யாப்பில் புறப்பட்ட 13வது திருத்தச் சட்டம் நடைமுறை அற்றுக் காணப்படும் நிலையில் அதனை செயற்படுத்து மாறு இந்தியாவுக்கு அழுத்தத்தை வழங்கவே நாம் கூடி முடிவெடுத்தோம்.

13வது திருத்தச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள மாகாணசபை அதன் கீழ் வருகின்ற அதிகாரங்களாக காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் இன்று வரை வழங்கப்படவில்லை.

அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்தியா பிரதமர் நரேந்திர மோடியிடம் 13க்கு அப்பால் தமிழர்களுக்கு தீர்வு வழங்குவேன் என உறுதி அளித்திருந்தார்.

இந்தியாவுக்கு 13 தொடர்பில் நாம் அழுத்தங்களை வழங்காது இருப்பது இலங்கை அரசாங்கத்துக்கு சாதகமாகி விடும்.

அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள 13 ஐ நடைமுறைப்படுத்துமாறு இந்தியாவுக்கு ஒரே நிலைப்பாட்டில் இருக்கின்ற தமிழ் தேசிய தலைவர்கள் ஒன்றிணைந்து கடிதத்தை அனுப்பி யுள்ளோம்.

இதை சரியாக விளங்கிக் கொண்ட தமிழ் கட்சி ஒன்று தமிழ் மக்களின் அரசியல் தீர்வாக 13ஐ ஏற்று விட்டோம் என கூறி எதிராக மக்களை போராடு வருமாறு ஊடக சந்திப்புகளை நடத்தி வருகின்றனர்.

தமிழ் தேசியம் சார்ந்த தலைவர்கள் ஓரணியில் நிற்கும்போது அழைத்த ஒரு கட்சி மட்டும் வெளியில் நின்று கொண்டு முரண்பட்ட கருத்துக்களைக் கூறுவது ஏதோ ஒரு நிகழ்ச்சி நிரலை செயற்படுத்த முனைகிறார்களா என்ற சந்தேகம் தோன்றுகிறது.

நாம் எமது நிலைப்பாட்டை தெளிவாக கூறுகிறோம் 13வது திருத்தச்சட்டம் தமிழ்மக்களின் அரசியல் தீர்வாக அமையாத நிலையில் இருக்கின்ற அதிகாரத்தை தக்க வைத்துக் கொண்டு முன்னோக்கி செல்வதே எமது நிலைப்பாடாகும்.

ஆகவே தமிழ் மக்களுக்காக கடந்த காலங்களில் வரலாற்றுத் தவறுகளை விட்டவர்கள் மீண்டும் ஒரு தவறை விடாது ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

ஒரு வளத்தினைக் கொண்டுவந்து இன்னுமொரு வளத்தினை அழிப்பதை அனுமதிக்க மாட்டோம் -ரெலோ செயலாளர் ஜனா

‘தொழிற்சாலைகள் வருவதை நாங்கள் ஒருபோதும் எதிர்க்க மாட்டோம். ஆனால் ஒரு வளத்தினைக் கொண்டு வந்து இன்னுமொரு வளத்தினை அழிப்பதை அனுமதிக்க மாட்டோம்’ என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தம் கருணாகரம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு –ஏறாவூர் புன்னக்குடாவில் அமைக்கப்படவுள்ள தொழிற்சாலை தொடர்பில் ஆராய்வதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பிக் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருணாகரம் சென்றிருந்தார்.

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் குறித்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருவது குறித்தான தகவல்கள் அங்கு கிடைத்ததுடன் அது தொடர்பில் உயர் அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு கலந்துரையாடினார்.

குறித்த இடத்தில் வரவிருக்கும் தொழிற்சாலையின் கழிவினை சுத்திகரித்து கடலினுள் வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காகவே இக் குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் அதனால் சூழலுக்கு எந்த பாதிப்பும் இல்லையெனவும் அதிகாரிகளினால் தெரிவிக்கப்பட்டது. எனினும் குறித்த தொழிற்சாலையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் சுத்திகரிக்கப்பட்டாலும் கடலுடன் கலக்குமானால் கடல்வளம் பாதிக்கப்படும் சூழ்நிலையேற்படும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக ஊடகங்களுக்கு இதன்போது மேலும் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருணாகரம், “மட்டக்களப்பு புன்னக்குடா கடற்பகுதியில் மர்ம குழாய்கள் பறிக்கப்பட்டுள்ளதாகவும் அதன் மர்மம் விளங்கவில்லையென ஓரிரு நாட்களில் செய்திகளில் பார்த்தோம்.அதனை நேரடியாக கண்காணிப்பதற்காக இந்த பகுதிக்கு விஜயம்செய்தேன்.நாங்கள் இதற்குள் நுழையும் நுழைவாயிலில் இராணுவமுகாம் ஒன்று அமைக்கப்படுகின்றது.

குழாய்கள் கடலுக்குள் சுமார் 200மீற்றர் தூரத்திற்கு புதைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் அதிகாரிகளுடன் பேசினேன். தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பெயர்ப்பலகை இடப்பட்டுள்ளது.சுமார் 13கோடிரூபா பெறுமதியான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

புன்னக்குடா பகுதியில் சுமார் 200ஏக்கருக்கு அதிகமான பகுதி முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஆடைத்தொழிற்சாலைக்கு மேலாக நூல்களுக்கு வர்ணம் சேர்க்கும் தொழிற்சாலையொன்றும் நிர்மாணிக்கப்பட வுள்ளதாக அறியமுடிகின்றது.

இது தொடர்பில் பிரதேச செயலாளரிடம் கேட்டபோது அவரும் இதனை உறுதிப்படுத்தினார். தொழிற்சாலைகள் வருவதை நாங்கள் வரவேற்கின்றோம்.அந்த தொழிற்சாலைகள் இன்னொரு வளத்தினை கொடுத்து ஒரு வளத்தினை அழிப்பதாகயிருக்ககூடாது.மட்டக்களப்பு மாவட்டத்தில் பனை அபிவிருத்திசபை மற்றும் பனை உற்பத்தியாளர்களுக்கான பனை மூலப்பொருட்களை வழங்கும் முக்கிய பகுதியா இதுவுள்ளது.அதிகளவான பனைமரங்களைக்கொண்ட பகுதி.அந்த பனை மரங்கள் அழிக்கப்படக்கூடாது” என்றார்.

Posted in Uncategorized