10 வருடங்களுக்கும் மேலாக இருக்கும் ஒருவரை அமைச்சு ஏன் தொடர்ந்தும் வைத்திருக்கின்றது – ரெலோ செயலாளர் நாயகம் ஜனா

புவி சரிதவியல் திணைக்களத்தின் முகாமையாளராக மட்டக்களப்பு மாவட்டத்திலே 10 வருடங்களுக்கும் மேலாக ஒருவர் கடமையாற்றிக்கொண்டிருக்கின்றார். 10 வருடங்களுக்கும் மேலாக இருக்கும் ஒருவரை அமைச்சு ஏன் தொடர்ந்தும் வைத்திருக்கின்றது என்பது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை சுற்றாடல் அமைச்சு தொடர்பில் கேள்வி ஒன்றை முன்வைத்தபோதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

மணல் அகழ்வு என்பது இந்த நாட்டில் பாரிய கொள்ளைச் சம்பவமாகவே இடம்பெறுகின்றது. அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து ஒரு நாளைக்கு 500க்கும் மேற்பட்ட லொறிகளில் மணல் மாவட்டத்தை விட்டு வெளியேறுவது மாத்திரமல்லாது ரயில் மூலமாகவும் மணல் மாவட்டத்தை விட்டு வெளியேறுகின்றது.

புவி சரிதவியல் திணைக்களத்தின் முகாமையாளராக மட்டக்களப்பு மாவட்டத்திலே 10 வருடங்களுக்கும் மேலாக ஒருவர் கடமையாற்றிக் கொண்டிருக்கின்றார். அரச திணைக்களங்களிலே உயர் அதிகாரிகள் கடமையாற்றும் போது 5 வருடங்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் அந்த அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவது இந்த நாட்டின் வழமையாக இருக்கின்றது.

இந்த புவி சரிதவியல் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் எப்படி 10 வருடங்களுக்கும் மேலாக ஒரு மாவட்டத்திலே கடமையாற்றுகின்றார்? அரசியல் செல்வாக்குடன் அவர் கடமையாற்றுகின்றார் என்றால் அந்த அரசியல் செல்வாக்கை செலுத்துபவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் 10 க்கும் மேற்பட்ட அனுமதிப் பத்திரங்களை வைத்திருக்கின்றனர்.

அந்த வகையில் புவி சரிதவியல் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளராக 10 வருடங்களுக்கும் மேலாக இருக்கும் ஒருவரை நீங்கள் ஏன் தொடர்ந்தும் வைத்திருக்கின்றீர்கள் என்பது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் நான் ஏற்கனவே உங்களிடம் கூறிய போது நீங்கள் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறியிருந்தீர்கள். ஆனால் இதுவரை இதுதொடர்பில் அங்கு எந்த வித முன்னேற்றமான நடவடிக்கையும் இடம்பெறவில்லை. எனவே இது தொடர்பில் தீர்க்கமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார்.

வவுனியா வடக்கில் பாதீடு தோல்வி: நல்லூரில் நிறைவேறியது!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்கு உட்பட்ட வவுனியா வடக்கு பிரதேச சபையின் பாதீடு இரண்டாவது தடவையாகவும் இன்று (7) தோற்கடிக்கப்பட்டுள்ளது.

வவுனியா வடக்கு பிரதேச சபையின் பாதீடு கடந்த மாதம் தோற்கடிக்கப்பட்ட நிலையில் அது மீள் திருத்தம்செய்யப்பட்டு இன்றைய தினம் சபை தவிசாளர் எஸ்.தணிகாசலத்தால் சபையில் முன்வைக்கப்பட்டது.

இதனையடுத்து பாதீடு தொடர்பான வாதங்கள் இடம்பெற்றதுடன், பாதீடு வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.

இதன்போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சுயேட்சைக் குழு உள்ளடங்கிய 17 உறுப்பினர்கள் பாதீட்டுக்கு எதிராக வாக்களித்தனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 8 உறுப்பினர்களும், ஐக்கிய தேசிய கட்சியின் ஒரு உறுப்பினருமாக 9 பேர் பாதீட்டுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இதன்படி 9 மேலதிக வாக்குகளால் வவுனியா வடக்கு பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு இரண்டாவது தடவையாகத் தோற்கடிக்கப்பட்டது.

இதேவேளை, யாழ்ப்பாணம் – நல்லூர் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு 4 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஆளுகைக்கு உட்பட்ட நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் மயூரனால் அடுத்த வருடத்திற்கான பாதீடு இன்று சபையில் முன்வைக்கப்பட்டது.

இதன்போது குறித்த பாதீட்டுக்குத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 3 உறுப்பினர்களும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் 4 உறுப்பினர்களும், சுயேச்சை குழுவின் 2 உறுப்பினர்களும் வாக்களித்திருந்தனர்.

அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலா ஒரு உறுப்பினர் என 12 பேர் பாதீட்டுக்கு ஆதரவளித்திருந்தனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 8 உறுப்பினர்களும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 2 உறுப்பினர்களுமாக 8 பேர் பாதீட்டுக்கு எதிராக வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

சர்வதேச நாணய நிதியத்தை இணங்கச்செய்யுமா சிறிலங்கா? தப்பிக்க வழி கூறும் நிசாந்த டி மெல்

சர்வதேச நாணய நிதியத்தை இணங்கச்செய்யும் பொருளாதார திட்டத்தை சிறிலங்கா வகுக்க வேண்டும் என்கிறார் வெரைட்டே ஆய்வகத்தின் தலைவர் நிசாந்த டி மெல்(Nishantha de Mel).

கொழும்பைத் தளமாக கொண்டு இயங்கும் புத்திஜீவிகள் அமைப்பான, வெரைட்டே ஆய்வகத்தின் தலைவரான இவர், சிறிலங்கா வர்த்தக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் உரையாற்றிய அவர், “ஒருவர் வங்கியில் கடன் பெறச் செல்லும் போது, அவரது வணிகத்துக்கான திட்டத்தை அவரே தயாரிக்க வேண்டும் எனும் தன்மையே உள்ளது.

அதனை விடுத்து கடன் தருநரை வணிகத் திட்டத்தை தயாரிக்கச் செய்து, அந்தத் திட்டம் தமக்கு பொருந்தாது என்று புலம்பக் கூடாது.

அவ்வாறே சிறிலங்காவும் தமது பொருளாதாரத் திட்டத்தை நிபுணர்களைக் கொண்டு தயாரித்து, அதற்கு சர்வதேச நாணய நிதியத்தை இணங்கச் செய்ய வேண்டும்.

மாறாக சிறிலங்காவின் பொருளாதார விடயங்கள் தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்தை தீர்மானிக்க, ஒருபோதும் விடக் கூடாது” என்றார்.

முல்லைத்தீவு காணிகளை வனவள திணைக்களம் கையகப்படுத்த நடவடிக்கை

முல்லைத்தீவு மாவட்டத்தில் 23,803 ஏக்கர் காணியை வனவள திணைக்களம் கையகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக நேற்றைய (05) வீரகேசரி வார வௌியீட்டில் செய்தி வௌியிடப்பட்டுள்ளது.

இதற்கான கடிதம் முல்லைத்தீவு மாவட்ட வனவள அலுவலரான எஸ்.ஜி. சுனில் ரஞ்சித், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் விமலநாதனுக்கு அனுப்பியுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் காடு ​பேணல் சட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தில் புதிதாக ஒதுக்க காடுகளான பகுதிகளின் விபரங்களை பொது மக்களுக்கு வழங்குவதுடன் மேலதிக நடவடிக்கைகளை எடுக்குமாறும் கோரப்படுவதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 15,688 ஏக்கர்களும் நட்டாங்கண்டல் பகுதியில் 678 ஏக்கரும் கையகப்படுத்தப்படவுள்ளதாக குறித்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் கல்விளான் பகுதியில் 5,006 ஏக்கர் காணியும் அமைதிபுரத்தில் 2,431 ஏக்கர் காணியும் வனவள திணைக்களத்தால் கையகப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த கடிதத்தின் பிரதி முல்லைத்தீவு, ஒலுமடு வட்டார வன அதிகாரிக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

கட்சிகளின் சுயநலத்தின் அடிப்படையில் தான் உள்ளூராட்சி சபைகள் தோற்கடிக்கப்படுகின்றன – சுரேஷ்

கட்சிகளின் சுயநலத்தின் அடிப்படையில் தான் அவை தோற்கடிக்கப்படுகிறது. தங்களின் கட்சி சார்ந்த தேவைகளுக்காக தோற்கடிக்கின்றார்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், ”உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர்களின் செயற்பாடுகளில் பிழைகளை கண்டு இருக்கலாம் அல்லது அவர்கள் நன்றாக செயற்படுகிறார்கள் என மக்கள் மத்தியில் அபிப்பிராயங்கள் ஏற்பட்டு இருக்கலாம். இவற்றை உடைக்க வேண்டும் ஆயின் அவர்களை தோற்கடிக்க வேண்டும்.

கட்சிகளின் சுயநலத்தின் அடிப்படையில் தான் அவை தோற்கடிக்கப்படுகிறது. தங்களின் கட்சி சார்ந்த தேவைகளுக்காக தோற்கடிக்கின்றார்கள்.

உள்ளூராட்சி சபைகளின் காலம் வருகின்ற ஏப்ரல் மாதமளவில் முடிவடையவுள்ள நிலையில், அதனை 6 மாத காலப்பகுதிக்கோ , ஒரு வருட கால பகுதிக்கோ அந்த சபைகளை நீடிக்க கூடும் என நிச்சயமாக நம்புகிறேன். ஏனெனில் இன்றைய கள சூழலில் அரசாங்கம் புதிய தேர்தலை நடத்தும் நிலைக்கு போக மாட்டாது.

ஆகவே அவ்வாறான சூழலில் உள்ளூராட்சி சபைகளை தோற்கடித்து ஆங்காங்கு ஆணையாளரின் கீழ் சபைகள் கொண்டுவரப்படுமாயின் , அதைப்போல ஒரு மோசமான நிலை இருக்காது. எனவே மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள் இருப்பது.

வடக்கு மாகாண சபை இல்லாததால் , ஆளுநர்கள் வந்து என்ன செய்கிறார்கள் என கண்களால் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். அதேபோல உள்ளூராட்சி சபைகள் கலைக்கப்பட்டு இந்த கதி ஏற்படுமாயின் , ஒட்டுமொத்தமாக அரசாங்கம் தான் விரும்பியதை செய்யும். அதற்கு நாங்கள் களம் அமைத்து கொடுத்தவர்களாக இருப்போம். ஆகவே இதொரு சரியான நடவடிக்கை இல்லை” என தெரிவித்தார்.

Posted in Uncategorized

மூன்றாவது நாளாக சபை அமர்வுகளை புறக்கணித்தது ஐக்கிய மக்கள் சக்தி

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று மூன்றாவது நாளாகவும் சபை அமர்வுகளை புறக்கணித்து பாராளுமன்றத்திற்கு முன்பாக எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

பாராளுமன்றத்திற்குள் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வரை சபை அமர்வுகளில் கலந்துகொள்ளாதிருக்க ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அண்மையில் தீர்மானித்தனர்.

எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார மற்றும் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து மோதல் வலுவடைந்து, மனுஷ நாணயக்காரவிற்கு ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அச்சுறுத்தல் விடுத்ததாக குற்றம் சுமத்தி எதிர்க்கட்சியினர் இந்த தீர்மானத்தை எடுத்தனர்.

Posted in Uncategorized

கல்முனையில் ஊடுறுவிய கடல் நீர் – ரெலோ பிரதி தலைவர்ஹென்றி மகேந்திரன் தலைமையில் நீர் வெட்டும் பணி!

கடல் அரிப்பு கல்முனை பாண்டிருப்பு பகுதிகளில் அதிகமாக காணப்படுகின்றது. நேற்று இரவு கடல் அலை பாண்டிருப்பு வீதியை தாண்டி பாய்ந்தது பாண்டிருப்பு மஹா விஷ்ணு ஆலயம் கல்முனை மாமாங்க விநாயகர் ஆலயம் பகுதிகளில் கடல் நீர் புகுந்தது.

கல்முனையில் மக்கள் குடியிருப்பு பகுதியில் கடல் நீர் தேங்கி நின்றதால் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கினர். தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பிரதி தலைவரும் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஹென்றி மகேந்திரன் தலைமையில் மாநகரசபை ஊழியர்கள் மற்றும் மாநகரசபை இயந்திரங்களின் உதவியுடன் நீர் கடலுக்குள் வெட்டிவிடப்பட்டன. இந்தப்பணி நேற்றும் இன்றும் இடம்பெற்றது. கல்முனை மாநகரசபை மேயர் ஆணையாளர் ஊழியர்களுக்கு உறுப்பினர் கென்றி மகேந்திரன் நன்றிகளை தெரிவித்தார்.

Posted in Uncategorized

நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் ரெலோ மதுசுதனின் முயற்சியில் புதிய ஒரு வீடு கையளிப்பு!

நல்லூர் பிரதேச சபைகுட்பட்ட வட்டாரம் இரண்டில் ஜே-119 கிராம சேவகர் பிரிவில் கோண்டாவில் சென் செபஸ்ரியார் வீதியில் கடந்த மாதம் ஏற்பட்ட மழைக்குள் மண்வீட்டில் குழந்தைகளுடன் வசித்த குடும்பம் ஒன்று மண்வீடு விழுந்து, சுவர் இடிந்து வீழ்ந்து இருக்க இடமின்றி பாதுகாப்பற்று வாழ்ந்து வந்தது.

இந் நிலைமைகளினை நேரடியாக அவதானித்த வட்டார நல்லூர் பிரதேச சபை உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் நல்லூர் அமைப்பாளருமாகிய மதுசுதன் உலர் உணவுகளையும் தகரங்களையும் தற்காலிகமாக வழங்கி வைத்த போதும் பின்னர் அவர்களின் அவல நிலை நீக்க நடவடிக்கை எடுத்ததன் விளைவாக

ஒரு கொடையாளரான கோடாவில் பிரதேச சமூக சேவககர் ஆன சுராங்கனி அவர்களின் பல லட்ச நிதியுதவி மூலம் ஒரு மாதத்திற்குள்ளாகவே புதிய கல் வீடு அமைக்கப்பெற்று இன்று 07.11.2021 அன்று திறந்து வைக்கப்பட்டு பயனாளிகளான செல்லத்துரை நிசாந்தன் குடும்பத்திடம் மங்கல நிகழ்வுடன் கையளிகப்பட்டது.

இந்நிகழ்வில் பேராடிரியர் க. தேவராஜா , ஆசிரியர் ஞான திருக்கேதீஸ்வரன், முன்னாள் அதிபர் சண் வாமதேவன் ஆகியோர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.

ஆர்ப்பாட்டம் செய்த எதிர்க்கட்சிக்கு பிரதமர் கூறிய நக்கல்

பாதுகாப்பை உறுதிசெய்யுமாறு கோரி பாராளுமன்ற வளாக நுழைவாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் சென்ற பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (06) முற்பகல் அவர்களுடன் சுமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்யும் போது இதனைவிட அதகளவிலான உறுப்பினர்களை ஈடுபடுத்த வேண்டும் என பிரதமர் இதன்போது ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களிடம் தெரிவித்தார்.

வரலாற்றில் தன்னுடன் இணைந்து அரசியல் போராட்டங்களில் ஈடுபட்ட உறுப்பினர்களை பார்த்த பிரதமர், கடந்த காலங்களில் இவ்வாறான போராட்டங்களில் ஈடுபட்ட விதம் குறித்து அவர்களுடன் நினைவுகளை பகிர்ந்துக்கொண்டு அவ்விடத்திலிருந்து விலகிச் சென்றார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களான ராஜித சேனாரத்ன, இம்தியாஸ் பாகிர் மாகர், பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட பலர் இவ்வாறு பிரதமருடன் சுமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

வெளிநாட்டு பயண கடவுச்சீட்டு அச்சிடும் பணி அரசு அச்சகத்திற்கு!

கடவுச்சீட்டை அச்சிட்டு வழங்குவதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும கோரிக்கை விடுத்துள்ளார்.

வெகுஜன ஊடகம் மற்றும் தகவல் அமைச்சு மற்றும் அரசாங்க அச்சகத்தின் செயலாளருக்கு அறிவுறுத்தப்பட்டது.

தற்போது இலங்கை கடவுச்சீட்டுகள் இந்தோனேசிய நிறுவனத்தினால் அச்சிடப்பட்டு வழங்கப்படுகின்றன.

வெளிநாட்டு நிறுவனம் சுமார் ஒரு மில்லியன் கடவுச்சீட்டுகளை அச்சிடுவதற்கு சுமார் 1 பில்லியன் ரூபாவை செலுத்த வேண்டியிருந்தது மற்றும் ஒரு மில்லியன் கடவுச்சீட்டுகள் ஒன்றரை வருடத்திற்கு மட்டுமே போதுமானதாக இருக்கும்.

தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தால் கடவுச்சீட்டை அரசாங்க அச்சகத்தினால் அச்சிட முடியும் எனவும், அவ்வாறான வசதிகளை வழங்குவதற்கு சுமார் 700 மில்லியன் ரூபா செலவாகும் எனவும் வெகுஜன ஊடக மற்றும் தகவல் அமைச்சு அரசாங்கத்திற்கு சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

64 பக்கங்களைக் கொண்ட கடவுச்சீட்டை அரசாங்க அச்சகத்தில் 350 முதல் 450 ரூபாவிற்கு அச்சிட முடியும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

டொலர் கையிருப்பு நெருக்கடிக்கு தீர்வு!

முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவும் கடந்த வருடம் (2020) செப்டெம்பர் மாதம் அமைச்சரவையில் வெளிநாட்டு நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்ட கடவுச்சீட்டுகளை அச்சிடுவதை அரசாங்க அச்சகத்திடம் ஒப்படைப்பதற்கான யோசனையொன்றை முன்வைத்திருந்தார்.

கடவுச்சீட்டு அச்சிடுவது வெளிநாட்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டதுடன், உடன்படிக்கையின் பிரகாரம் வெளிநாட்டு நிறுவனம் இன்னும் இரண்டரை வருடங்களுக்கு கடவுச்சீட்டை அச்சிடுவதாகக் கூறி பிரேரணை புறக்கணிக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், இலங்கை டொலர் கையிருப்பு மட்டுப்படுத்தப்பட்டு பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கும் இவ்வேளையில் கடவுச்சீட்டுகளை அச்சிட்டு அரச அச்சகத்திற்கு வழங்குவதன் மூலம் வருடத்திற்கு பல பில்லியன் ரூபாவை சேமிக்க முடியும் என ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும அரசாங்க அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டியுள்ளார். .

Posted in Uncategorized