பாகிஸ்தானிலுள்ள அனைத்து இலங்கையர்களையும் மீள அழைக்க வேண்டும் ! மத வெறியும், மதத் தீவிரவாதமும் அனுமதிக்கப்படக் கூடாது

பாகிஸ்தானில் பணிபுரியும் இலங்கையர்களின் பாதுகாப்பை பாகிஸ்தான் அரசாங்கம் உறுதிப்படுத்தா விட்டால், அங்கு பணிபுரியும் அனைத்து இலங்கையர் களையும் திரும்ப அழைக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித் துள்ளார்.

இலங்கைப் பிரஜை கொல்லப்பட்டதையடுத்து பாகிஸ்தானில் வாழும் இலங்கையர்களின் பாதுகாப்பில் பாகிஸ்தான் அரசாங்கம் தலையிட வேண்டும் எனவும், குற்றவாளிகளைத் தண்டிக்க பாகிஸ்தான் அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவிய லாளர் சந்திப்பில் கட்சியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

உலகில் எங்கும் மத வெறியும், மதத் தீவிரவாதமும் அனுமதிக்கப்படக் கூடாது என்றும் அவர் கூறினார்.

Posted in Uncategorized

பேராயர் மல்கம் ரஞ்சித் கண்டனம்

பாகிஸ்தானின் சியால்கோட்டில் படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் மறைவுக்கு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் இரங்கல் தெரிவித்ததுடன், கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்ற கொலைக்கு தனது கண்டனத்தையும் தெரிவித்தார்.

மதம் என்ற போர்வையில் இழைக்கப்படும் இதுபோன்ற கொடூரமான, குற்றச்செயல்களால் ஏற்படும் அவலங்களை தடுத்து நிறுத்த அனைத்து நாடுகளின் தலைவர்களும் முனைப்புடன் செயல்பட வேண்டும் என தனது இரங்கல் செய்தியில் பேராயர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கொலைக்கு எதிராக பாகிஸ்தான் தலைமை உடனடியாக நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

பிரியந்த குமாரவின் படுகொலையைக் கண்டித்து பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக போராட்டம்

கொழும்பிலுள்ள பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக இன்று திங்கட்கிழமை அமைதியான முறையில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

பாகிஸ்தான் சியல்கோட் நகரில் இலங்கைப்பிரஜையொருவர் மிகமோசமாக எரித்துக் கொலைசெய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத்தெரிவித்தே சிங்களே தேசிய ஐக்கிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் கொழும்பிலுள்ள பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக அமைதியான முறையில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இப்போராட்டத்தில் தேசப்பற்றாளர்கள் அமைப்பு, மக்கள் சக்தி, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு வலையமைப்பு ஆகிய அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளடங்கலாக சிங்கள, தமிழ், முஸ்லிம் இனங்களைச் சேர்ந்த செயற்பாட்டாளர்கள் கொண்டிருந்தனர்.

அதுமாத்திரமன்றி மிகக்கொடூரமான முறையில் கொல்லப்பட்ட பிரியந்த குமாரவின் குடும்பத்திற்கு நட்டஈடாக பாகிஸ்தான் அரசாங்கம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதுடன் இச்சம்பவம் தொடர்பில் எழுத்துமூலம் மன்னிப்புக்கோரவேண்டும் என்று அவ்வமைப்பு வலியுறுத்தியுள்ளது.

கலப்பு அபிவிருத்தி திட்டத்துக்காக வெலிக்கடை சிறைச்சாலையை குத்தகைக்கு வழங்க அரசாங்கம் தீர்மானம்!

வெலிக்கடை சிறைச்சாலையின் 42 ஏக்கர் காணியை கலப்பு அபிவிருத்தி திட்டத்துக்காக நீண்டகால அடிப்படையில் குத்தகைக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கலப்பு அபிவிருத்தி திட்டத்திற்காக நீண்ட கால அடிப்படையில் காணிகளை குத்தகைக்கு வழங்குவதன் மூலம் சுமார் 2,630 கோடி ரூபாவை பெறுவதற்கு மதிப்பிடப்பட்டுள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலையை அதன் இடத்தில் இருந்து அகற்றி, ஹொரணை, மில்லனிய பிரதேசத்தில் 280 ஏக்கர் காணியில் கட்டுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

பத்தரமுல்லையில் சிறைச்சாலை தலைமையகமும் மாலபேயில் உத்தியோகபூர்வ குடியிருப்பும் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இந்த மூன்று திட்டங்களுக்கான செலவையும் வெலிக்கடை சிறைச்சாலை அமைந்துள்ள காணியின் குத்தகையில் இருந்து ஈடுகட்டவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலையை ஹொரணையில் உள்ள மில்லனியவுக்கு இடமாற்றம் செய்வதற்கும், பத்தரமுல்லையில் தலைமையகத்தை நிர்மாணிப்பதற்கும் மாலபேயில் உத்தியோகபூர்வ குடியிருப்புகளை நிர்மாணிப்பதற்கும் காணிகளை சுவீகரிப்பதற்கும் சுமார் 3147 கோடி ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

பாகிஸ்தான் சம்பவத்தையடுத்து உளவுத் துறை உசார் ! – பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி சிறப்பு ஆலோசனை

பாகிஸ்தான் பஞ்சாப் மாநிலத்தின் சியால்கோட் நகரில் பணிபுரிந்து வந்த இலங்கையர் ஒருவர், வன்முறைக் கும்பலால் தாக்கப்பட்டு, எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து இலங்கையில் உளவுத் துறையினர் உசார் படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தை மையப்படுத்தி குறுகிய நோக்கங்களுக்காக அசம்பாவிதங்களை தோற்றுவிக்க எவரேனும் முயற்சிக்கலாம் என்ற அடிப்படையில், உளவுத் துறையினர் ஊடாக உரிய தகவல்களைப் பெற்று, அவ்வாறான நாசகார செயல்களை முறியடிக்குமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு விஷேட அறிவித்தலை விடுத்துள்ளார்.

திங்கட்கிழமை (6), கொலை செய்யப்பட்ட இலங்கை முகாமையாளர் பிரியந்த குமாரவின் சடலம் நாட்டுக்கு எடுத்து வரப்படும் நிலையில், குறுகிய சிந்தனை கொண்டவர்கள் நாசகார செயல்களில் ஈடுபட முயல்கின்றனரா என்பதை உளவுத் துறையூடாக கண்காணித்து தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி பொலிஸ் மா அதிபருக்கு இவ்வாறு கண்டிப்பான ஆலோசனையை வழங்கியுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவித்தன.

இந் நிலையில் நாடளாவிய ரீதியில் உளவுத் துறையினர் உசார் செய்யப்பட்டு, இது தொடர்பில் போதுமான தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதுடன், அவசியம் ஏற்படும் பட்சத்தில் கைது நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் பொலிசாருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

Share

Posted in Uncategorized

இந்தியாவின் திரவ உர இறக்குமதியில் தாமதம் – விவசாய அமைச்சு

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் நனோ நைதரசன் திரவ உரத்தை நாட்டுக்கு இறக்குமதி செய்யும் முகவரின் செயற்பாட்டில் சிக்கல் தோன்றியுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனால் திரவ உரத்தை நாட்டுக்கு கொண்டுவருவதில் தாமதம் நிலவுவதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

​குறித்த முகவர் ஒப்பந்தத்துக்கு இணங்கிச் செயற்படாமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பில் நேரடியாக தலையிட்டு முழுமையான விசாரணையை மேற்கொள்ளுமாறு அமைச்சின் உரச் செயலாளர் அலுவலகம் மற்றும் அரச உர நிறுவனம் ஆகியவற்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஏற்பட்டுள்ள நிலை தொடர்பில் இந்த வாரத்திற்குள் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் ​நனோ நைதரசன் திரவ உரத்தை இறக்குமதி செய்யும் போது கடன் பத்திரத்திற்கான கொடுப்பனவை செலுத்தாமை உள்ளிட்ட காரணங்களினால் உள்நாட்டு முகவர்களின் செயற்பாடுகள் சிக்கலைத் தோற்றுவித்துள்ளதாக அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, நிராகரிக்கப்பட்ட சீன சேதனப் பசளையை ஏற்றிய கப்பலிலுள்ள உரத்தை மீள் பரிசோதனைக்குட்படுத்த எச்சந்தர்ப்பத்திலும் அனுமதி வழங்க வேண்டாம் என விவசாய அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

இதனிடையே, சீன சேதனப் பசளையை ஏற்றிய ஹிப்போ ஸ்பிரிட் கப்பல், உர மாதிரியைப் பெறல் மற்றும் தீர்ப்பைப் பெற சிங்கப்பூர் நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளதாக சிந்தாவோ சீவின்ங் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹிப்போ ஸ்பிரிட் கப்பல் இலங்கை கடற்பரப்பில் 70 நாட்களுக்கும் மேலாக சஞ்சரித்திருந்த நிலையிலேயே சிங்கப்பூருக்கு பயணத்தை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கைத் தூதுவர் இராஜாங்க அமைச்சர் சமலுடன் சந்திப்பு

அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷவுக்கும் ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கைத் தூதுவர் சாரா ஹல்டனுக்கும் இடையில் உத்தியோகபூர்வ சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

May be an image of 2 people, people sitting and indoor

சந்திப்பானது இராஜாங்க அமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்யை தினம் நடைபெற்றது.

நவம்பரில் ஸ்காட்லாந்தில் நடந்த கோப் 26 காலநிலை மாற்ற மாநாட்டில் விவாதிக்கப்பட்ட பல விடயங்கள் குறித்து இந்த சந்திப்பின்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இது தவிர எக்ஸ்பிரஸ் பேர்ல் பேரழிவை அடுத்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளில் சாத்தியமான சர்வதேச ஒத்துழைப்புகள், புவி வெப்பமடைதல் மற்றும் காலநிலை மாற்றம் தணிப்பு தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆசிய திட்டங்களை உருவாக்குதல், தாழ்நில ஈரநிலங்கள் மற்றும் அவற்றின் தாவரங்கள், விலங்கினங்கள் மற்றும் விலங்கினங்களின் பாதுகாப்பு, எதிர்கால சுற்றுச்சூழல் பேரழிவுகளைத் தடுக்க நீண்ட கால காலநிலை மாற்ற முன்னறிவிப்புகள் மற்றும் உருவகப்படுத்துதல்களை செயல்படுத்துதல், விவசாயம், கட்டுமானம் மற்றும் வளர்ச்சி குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இரு நாடுகளும் எதிர்கால இருதரப்பு பணிகளுக்காக உத்தியோகபூர்வ மட்டத்தில் முன்னேறுவது என்று ஒப்புக்கொள்ளப்பட்டது.

இக் கலந்துரையாடலில் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் அரசியல் விவகாரங்களின் தலைவர் மேத்யூ டெத், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க, கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவி திருமதி தர்ஷனி லஹந்தபுர ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Posted in Uncategorized

இலங்கையில் மலையகத் தமிழர்களின் வாழ்க்கை நிலை இழிவாக இருப்பதாக ஐ.நா அலுவலர் கவலை

இலங்கையின் மலையக பெருந்தோட்ட பகுதிகளில் வாழும் இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் மனிதாபிமானமற்ற, இழிவான சூழ்நிலையில் வாழ்ந்து வருவதாக ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர் ரோமோயா ஒபோகாடா தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள ஐநா அலுவலகத்தில் வெள்ளியன்று உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

எனினும், இலங்கை மலையகத் தமிழர்களுக்கு இலங்கை மற்றும் இந்திய அரசுகள் உதவி செய்துவருவதாகவும், சர்வதேச அமைப்புகள் இம்மக்களைக் கண்டுகொள்வதில்லை என்றும் ஆளும் தரப்பு கூறுகிறது .

ரோமோயா ஒபோகாடா உரையில் பேசியவை இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

இலங்கையிலுள்ள மலையக பெருந்தோட்ட மக்கள், தேயிலை தொழில்துறையின் ஊடாக நாட்டிற்கு பாரியளவிலான அந்நிய செலாவணியை ஈட்டித் தருகின்றனர்.

ஆண்டொன்றிற்கு சுமார் 1.3 பில்லியன் டொலருக்கும் அதிகமான வருமானத்தை இலங்கை இந்த பெருந்தோட்ட துறை மூலம் வருகின்றது.

இந்தியாவிலிருந்து சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர், மலையகத்திலுள்ள இந்திய வம்சாவளித் தமிழர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.

இவ்வாறு அழைத்து வரப்பட்ட தமிழ் மக்கள், நாட்டின் மலையக பகுதிகளில் குடியமர்த்தப்பட்டு, தேயிலை, ரப்பர் போன்ற பெருந்தோட்ட தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

மலையகத்தில் சுமார் 10 லட்சம் வரையான இந்திய வம்சாவளித் தமிழர்கள் வாழ்ந்து வருகின்ற நிலையில், அவர்களில் சுமார் 2 லட்சம் பேர் தேயிலை மற்றும் ரப்பர் தொழில்துறைகளில் நேரடியாக பணியாற்றி வருகின்றனர்.

தேயிலை மற்றும் ரப்பர் தொழில்துறைகளில் அதிகளவில் பெண் தொழிலாளர்களே ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த மக்கள் பல ஆண்டுகளாக நடத்திய போராட்டங்களின் வெற்றியாக நாள் ஒன்றுக்கு 1000 ரூபாய் சம்பளம் வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்ட போதிலும், அந்த சம்பளம் கூட இன்று வரை உரிய வகையில் கிடைக்காத நிலையை எதிர்நோக்கி வருகின்றனர்.

அதேவேளை, 200 வருட காலமாக லைன்-வீடுகள் என்று அழைக்கப்படும் சிறிய, நெரிசல் மிகுந்த வீடுகளிலேயே இந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

மிக மோசமான சுகாதார மற்றும் சமூக பிரச்னைகளை எதிர்நோக்கி வருவதுடன், காணி உரிமைகள் மலையக மக்களுக்கு மறுக்கப்பட்டுள்ளதாக ரோமோயா ஒபோகாடா தனது உரையில் கூறியுள்ளார்.

வீட்டுத் திட்டங்களை இந்தியா அமைத்து கொடுக்கும் நிலையிலும், மலையக மக்கள் லைன் வீடுகளில் மனிதாபிமானமற்ற இழிவான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். இந்த மக்களின் வாழ்க்கையை கண்டு தான் அதிர்ச்சி அடைந்ததாக ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர் ரோமோயா ஒபோகாடா தெரிவித்துள்ளார்.

இந்திய அரசாங்கத்தினால் 14,000 வீடுகள் கட்டிக் கொடுக்க முன்வந்துள்ள போதிலும், பெருந்தோட்ட நிறுவனங்கள் அந்த வீடுகளை நிர்மாணிக்க காணிகளை பிரிந்து வழங்க வெளிப்படையாகவே தயக்கம் காட்டி வருவதாக அவர் கூறுகின்றார்.

பெருந்தோட்ட நிறுவனங்கள் காணிகளை பிரித்து வழங்குவதில் தயக்கம் காட்டுகின்றமையினால், வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் தாமதமடைந்து வருவதாக ரோமோயா ஒபோகாடா குறிப்பிடுகின்றார்.

சாதி என்ற அடிப்படையிலும் இந்த சமூகத்தின் மீதான பாகுபாடு தொடர்ந்தும் அதிகரிக்கப்பட்டு வருவதை அவர் உரையில் முன்னிலைப்படுத்தியுள்ளார்.

இதேவேளை, பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அதிக வட்டியில் நுண்கடன்களை வழங்கி, அவர்களை நிர்கதி நிலைக்கு கொண்டு செல்லும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது.

பணத்தை திருப்பி செலுத்தாத சந்தர்ப்பங்களில், குழந்தை தொழிலாளர்களை தொழிலுக்கு ஈடுபடுத்தும் நடைமுறையொன்றும் உருவாகியுள்ளதையும் அவர் தனது உரையில் முன்னிலைப்படுத்தியுள்ளார்.

நுண்கடன் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் கூறிய போதிலும், இன்று வரை உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என ரோமோயா ஒபோகாடா தெரிவிக்கின்றார்.

மலையக மக்களுக்கு காணி உரிமை

ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் ரோமோயா ஒபோகாடாவின் இலங்கை விஜயத்தின் போது, அவரை சந்தித்து, மலையக மக்களின் பிரச்னை தொடர்பில் கலந்துரையாடல்களை நடத்திய இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சர்வதேச விவகாரங்கள் மற்றும் தொழிலுறவுகளுக்கு பொறுப்பான பரத் அருள்சாமி பிபிசி தமிழுக்கு கருத்து தெரிவித்தார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பங்காளி கட்சியாகும்.

ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் ரோமோயா ஒபோகாடா, கடந்த மாதம் 28ம் தேதி மலையகத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

இதன்போது, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சர்வதேச விவகாரங்கள் மற்றும் தொழிலுறவுகளுக்கு பொறுப்பான பரத் அருள்சாமியையும் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியிருந்தார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு, சர்வதேச நாடுகள், சர்வதேச அமைப்புக்கள் பாரிய உதவிகளை வழங்கி வருகின்ற நிலையில், மலையக தமிழர்கள் எந்த விதத்திலும் அவர்களினால் கண்டுக்கொள்ளப்படுவதில்லை என்பதை தான் வலியுறுத்தியதாக அவர் கூறினார்.

மலையக மக்களுக்கான வீட்டுத்திட்டங்களை தாம், தொழிற்சங்கம் என்ற ரீதியில், இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்களிடம் பல்வேறு போராட்டங்களை நடத்தி, பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் பெற்றுக்கொள்வதையும் தான் கூறியதாக அவர் குறிப்பிடுகின்றார்.

அத்துடன், தொழிற்சங்கங்கள் சந்தா பணம் பெற்றுக்கொள்வது குறித்து ரோமோயா ஒபோகாடா, பரத் அருள்சாமியிடம் கேட்டறிந்து கொண்டுள்ளார்.

தொழிலாளர் நலன்களை பேணும் வகையில், மலையகம் முழுவதும் தமது தொழிற்சங்க அலுவலகங்கள் உள்ளதாகவும், அவ்வாறான அலுவலகங்கள் உள்ளிட்ட இதர தொழிலாளர் நலனுக்காக சந்தா பணம் பயன்படுத்தப்படுவதாகவும் தெளிவூட்டப்பட்டுள்ளது.

சந்தா பணம் பெற்றுக்கொள்வதன் முக்கியத்துவத்தை ரோமோயா ஒபோகாடா உணர்ந்துகொண்டதாக அவர் தெரிவித்தார்.

மேலும் அவர்கள் நீதிமன்றத்தை அணுகவும் வழக்குகளில் அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த தொகைகள் பயன்படுத்தப்படுகிறதே தவிர, தனிப்பட்ட தேவைகளுக்காக அல்ல என்பதை ஐநா அதிகாரியிடம் தெரிவித்தார்.

சந்தா பணம் பெற்றுக்கொள்வதன் முக்கியத்துவத்தை ரோமோயா ஒபோகாடா உணர்ந்துகொண்டதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன், காணி உரிமைகளை மலையக மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதே, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமானின் கொள்கை என்பதை தான் கூறியதாகவும் பரத் அருள்சாமி குறிப்பிட்டார்.

பெருந்தோட்ட முகாமைத்துவத்துக்கு வருகின்ற உயர் அதிகாரிகள் ராணுவ அதிகாரிகள் என கூறி, ராணுவ மயப்படுத்தப்படுத்த முயற்சிக்கின்றதையும் தாம், ஐநா அதிகாரியிடம் தெரிவித்ததாக குறிப்பிட்ட அவர், அதனை தொழிற்சங்கம் என்ற விதத்தில் எதிர்ப்பதாகவும் கூறினார்.

மலையக மக்களுக்கான உரிமைகள் குறித்தே, ஐநா அதிகாரி அதிக கவனம் செலுத்தியிருந்ததாகவும் பரத் அருள்சாமி கூறுகின்றார்.

இதேவேளை, மலையகத்திலுள்ள கட்சிகள், தொழிற்சங்கங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் (NGO) ஆகியவற்றின் பிரதிநிதிகளை சந்தித்த ரோமோயா ஒபோகாடா, மலையக தமிழர்களையும் நேரடியாக சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியிருந்தார்.

இவ்வாறான பின்னணியிலேயே, ரோமோயா ஒபோகாடா, இந்திய வம்சாவளி தமிழர்களின் அவல நிலைமை குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.

சவேந்திர சில்வாவிற்கு எதிராக பிரித்தானியா ‘மெக்னிற்ஸ்கி’ முறையிலான தடையை விதிக்கவேண்டும்!

இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவால் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மிகமோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அவர் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படவேண்டும் என்பதுடன், அவர் பிரிட்டனுக்குள் நுழைவதற்குத் தடைவிதிக்கப்படவேண்டும் என பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் பொப் பிளக்மான் (Bob Blackman)பிரித்தானிய வெளிவிவகாரச்செயலாளரிடம் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின்போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுடன் சவேந்திர சில்வா தொடர்புபட்டிருப்பதாக நம்பத்தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் சவேந்திர சில்வாவிற்கு எதிராக பிரித்தானியா ‘மெக்னிற்ஸ்கி’ முறையிலான தடையை விதிக்கவேண்டும் என அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிவிவகாரச்செயலாளரிடம் வலியுறுத்தி வருகின்றனர்.

அதேவேளை அமெரிக்காவில் நடைமுறையிலுள்ள மெக்னிற்ஸ்கி சட்டத்தின் ஊடாக மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடையவர்கள் மற்றும் பாரிய ஊழல் மோசடிகளுடன் சம்பந்தப்பட்டவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு எதிராகத் தடைவிதிக்கமுடியும் என்பதுடன் அவர்களின் சொத்துக்களையும் முடக்கமுடியும்.

அந்தவகையில் ஏற்கனவே பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களான சாரா ஜோன்ஸ், எலியற் கெல்பேர்ன் மற்றும் தெரேஸா வில்லியர்ஸ் ஆகிய மூவரும் ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு எதிராக தடைவிதிக்கவேண்டும் என வலியுறுத்தியிருந்தனர்.

இந்நிலையில் நான்காவதாக பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் பொப் பிளக்மானும் (Bob Blackman) சவேந்திர சில்வாவிற்கு எதிராக தடைக்கோரிக்கையை முன்வைத்து காணொளியொன்றை வெளியிட்டுள்ளார். அக்காணொளியில் அவர் கூறுகையில்,

பிரித்தானியாவின் சர்வதேச தடை வழிகாட்டல்களுக்கு அமைவாக இலங்கை இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு எதிராகத் தடைவிதிக்கப்படவேண்டும் என்று சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் வெளிவிவகாரச் செயலாளரிடம் கோரியுள்ளது.

கடந்த 2009ம் ஆண்டில் இலங்கையில் முடிவிற்குக்கொண்டுவரப்பட்ட போரின்போது ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தஞ்சமடைந்திருந்த ‘யுத்த சூனிய வலயங்களில்’ ஷெல் தாக்குதல்களை நடாத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இலங்கை இராணுவத்தின் 58வது படைப்பிரிவின் கட்டளைத்தளபதியாக ஜெனரல் சவேந்திர சில்வா செயற்பட்டுள்ளார்.

அதுமாத்திரமன்றி இறுதிக்கட்டப்போரின்போது பல நூற்றுக்கணக்கானோர் படையினரிடம் சரணடைந்தபோது அந்த இடத்தில் சவேந்திர சில்வாவும் இருந்ததை உறுதிப்படுத்திய கண்கண்ட சாட்சியங்களின் வாக்குமூலங்களையும் சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் சமர்ப்பித்துள்ளது.

அவர்களில் பலர் காணாமலாக்கப்பட்டிருக்கின்றார்கள். அவ்வாறு காணாமலாக்கப்பட்டவர்களின் தாய்மார் அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிந்துகொள்வதற்காக பலவருடங்களாக அவர்களின் புகைப்படங்களுடன் வீதிகளில் இறங்கிப்போராடிவருகின்றார்கள்.

இருப்பினும் அவர்களுக்கான பதில் இதுவரை கிட்டவில்லை. போரின்போது சவேந்திர சில்வா தலைமையிலான 58 ஆவது படைப்பிரிவினால் நிகழ்த்தப்பட்ட சட்டவிரோதமான படுகொலைகள் உள்ளடங்கலாக மிகமோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பான பொறுப்புக்கூறலை உறுதிசெய்யும் நோக்கில் கடந்த 2020 ஆம் ஆண்டில் அமெரிக்க இராஜாங்கத்திணைக்களம் சவேந்திர சில்வாவிற்கு எதிராகப் பயணத்தடை விதித்தது.

அவ்வாறானதொரு பின்னணியில் நாம் அவருக்கெதிராகத் தடைவிதிக்கவேண்டிய தருணம் இதுவாகும். எனவே சவேந்திர சில்வா பிரித்தானியாவிற்குள் நுழைவதை அனுமதிக்கக்கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும் சவேந்திர சில்வா கட்டளைத்தளபதியாக இருந்தபோது நிகழ்த்தப்பட்ட மிகமோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும் , அவரால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் குறித்தும் பொறுப்புக்கூறலுக்குட்படுத்தப்படவேண்டும் என்றும் பிளக்மான் (Bob Blackman) வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சீன சேதன பசளைக்கான கட்டணம் மீதான தடை உத்தரவு நீடிப்பு

சீனாவின் சேதன பசளைக்கான கட்டணத்தை செலுத்துவதை இடைநிறுத்தி மக்கள் வங்கிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு எதிர்வரும் 23 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்தால் இன்று (03) தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்தின் நீதிபதிகளான பிரதீப் ஹெட்டியாராச்சி, பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் முன்னிலையில் குறித்த மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

லங்கா உர நிறுவனம் மற்றும் கொழும்பு கொமர்ஷல் உர நிறுவனத்தினால் சீனாவின் சேதன பசளை கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.