இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவிற்கு எதிரான தடையைக்கோரும் பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர் சாரா

இலங்கை இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு எதிராகத் தடைவிதிப்பதற்கு ஆதரவளிக்குமாறு பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர் சாரா ஜோன்ஸ் அந்நாட்டு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தொழிற்கட்சியின் சார்பில் பிரிட்டனின் மத்திய க்ரொய்டொன் தொகுதியில் போட்டியிட்டு கடந்த 2017 ஆம் ஆண்டு பாராளுமன்றத்திற்குத் தெரிவான சாரா ஜோன்ஸ், தன்னுடைய தொகுதியில் வசிக்கும் தமிழ் சமூகத்தினர் மத்தியில் இலங்கையில் இடம்பெற்ற போரின் வடுக்கள் இன்னமும் இருப்பதை உணரமுடிவதாகவும் தெரிவித்துள்ளார்.

அதுமாத்திரமன்றி உலகில் பல்வேறு பகுதிகளிலும் வாழும் இலங்கைத்தமிழர்கள் தொடர்பில் நீதியும் பொறுப்புக்கூறலும் உறுதிசெய்யப்படவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

‘இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவைத் தடைசெய்யுங்கள்’ என்ற வாசகத்துடனான பதாகையுடன் சாரா ஜோன்ஸ் அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொளியொன்றிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

‘மனித உரிமைகள் உறுதிசெய்யப்படுவதற்கான தலைமைத்துவத்தை பிரிட்டன் வழங்கவேண்டும். நாம் நீதிக்காகப் போராடவேண்டும். பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கான செயல்வடிவிலான நடவடிக்கைகளே தற்போதைய தேவையாக இருக்கின்றன.

இலங்கையிலும் உலகம் முழுவதிலும் வாழும் தமிழர்களுக்காக நாம் அதனைத் தொடர்ந்து வலியுறுத்தவேண்டும்’ என்று சாரா ஜோன்ஸ் அக்காணொளியில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

மன்னார் பிரதேச சபை தவிசாளர் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வட மாகாண ஆளுநரால் இரத்து

மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் சாகுல் ஹமீது முகம்மது முஜாஹிரை பதவி நீக்கி ஏற்கனவே விடுக்கப்பட்ட அதிவிசேட வர்த்தமானியை வட மாகாண ஆளுநர் இரத்து செய்துள்ளார்.

இதற்கான அதிவிசேட வர்த்தமானி வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவினால் வௌியிடப்பட்டுள்ளது.

மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் சாகுல் ஹமீது முகம்மது முஜாஹிர், தவிசாளர் மற்றும் உறுப்பினர் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டு கடந்த செப்டம்பர் மாதம் 13 ஆம் திகதி அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டிருந்தது.

முன்னாள் வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸினால் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டது.

இந்நிலையிலேயே ஏற்கனவே வௌியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்வதாக வட மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார்.

கச்சா எண்ணெய் இல்லை! மூடப்படுகிறது சப்புகஸ்கந்தை சுத்திகரிப்பு ஆலை!

கச்சா எண்ணெய் கையிருப்பில் இல்லாத காரணத்தினால், சப்புகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை நாளைய தினம் முதல் தற்காலிகமாக மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஆலையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கச்சா எண்ணெய் கையிருப்பில் இல்லாத காரணத்தினால், சப்புகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மூடப்படுவது இதுவே முதல் முறை.

இது சம்பந்தமாக நாளைய தினம் பிற்பகல் செய்தியாளர் சந்திப்பை நடத்தி உத்தியோகபூர்வமாக அறிவிக்க உள்ளதாக எரி சக்தி அமைச்சர் உதய கம்மன்பில மற்றும் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

கச்சா எண்ணெயை ஏற்றிய கப்பல் எதிர்வரும் டிசம்பர் மாதம் மூன்றாவது வாரத்தில் இலங்கையை வந்தடையவுள்ளது.

அதுவரை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை மூட நேரிட்டுள்ளதாக சப்புகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் தொழிற்சங்க தலைவர் அசோக ரத்வல தெரிவித்துள்ளார்.

டிசம்பர் மாதம் வரும் கப்பலில் 90 ஆயிரம் மெற்றி தென் கச்சா எண்ணெயே கொண்டு வரப்படுவதாகவும் அது 15 நாட்களுக்கு மாத்திரமே போதுமானது என்பதால், ஜனவரி மாத நடுப் பகுதியில் மீண்டும் ஆலையை மூட நேரிடும் எனவும் தெரியவந்துள்ளது.

பட்ஜட்டுக்கு ஆதரவா..? எதிர்ப்பா..?? கம்மன்பில வீட்டில் 11 கட்சிகள் மந்திராலோசனை

வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவளிப்பதா – அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் நாளை -15- ஆலோசனை , அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும்11 சிறு கட்சிகள் நாளை 15ம் திகதி அமைச்சர் உதய கம்மன்பில வீட்டில் மீண்டும் சந்தித்து கலந்துரையாட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் சமர்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் குறித்து ஆராயவே இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு வழங்குவதா இல்லையா என்ற தீர்மானமும் இக்கூட்டத்தில் எடுக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது

மன்னார் மாவட்ட பொதுமக்களுக்கான முக்கிய அறிவிப்பு

இரண்டு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டவர்கள் மாத்திரமே, எதிர் வரும் திங்கட்கிழமை (15) முதல் வியாபார நிலையங்கள், சந்தைகள் ,பொது போக்குவரத்து வாகன சேவைகள் ஆகியவற்றை நடத்தி செல்ல அனுமதிக்கப்படுவர்கள் என்று மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.

தற்பொழுது மன்னாரிலுள்ள காலநிலை வைரஸ் பரவுவதற்கு ஏற்ற சூழ் நிலையாக காணப்படுவதால் மக்கள் கட்டாயம் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் பொது மக்களிடம் வைத்தியர் ரி.வினோதன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை கொரோனா தொற்று அதிகரிப்புக்கு பிரதான காரணமாக மக்கள் அதிகமாக வெளியில் நடமாடுவது சுகாதார நடைமுறைகளை கடைபிடிக்காது செயல்படுவது மற்றும் ஒன்று கூடல் நிகழ்வுகளில் குறிப்பிடப்பட்ட எண்ணிக்கைக்கு மேலாக பங்குகொள்வதும் ஒரு காரணமாக இருக்கிறது. என்றும் தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நேற்று (12) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்த வருடத்தில் இது வரை 2,635 கொரோனா தொற்றாளர்கள், மன்னார் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த மாதம் மேலும் இருவர் கொரோனா தொற்றின் காரணமாக இறந்துள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் கடந்த 11 ஆம் திகதி மேலும் 50 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் கடந்த 11 நாட்களில் மன்னார் மாவட்டத்தில் 240 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இவர்களில் 45 தொற்றாளர்கள் ஆன்டிஜென் பரிசோதனைகள் மூலமாகவும் 05 தொற்றாளர்கள் பி.சி.ஆர் பரிசோதனை மூலமாகவும் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.கொரோனா மரண வீதம் மாவட்டத்தில் 0.95 ஆக காணப்படுவதாக பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் கூறினார்.

இந்த மாதம் 11 நாட்களில் 240 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சராசரியாக 21 பேர் நாள் ஒன்றிற்கு மன்னாரில் கொவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது வரை மன்னார் மாவட்டத்தில் மொத்தமாக 25 கொரோனா தொற்றாளர் மரணங்கள் பதிவாகி உள்ளன..

அதே வேளை நிகழ்வுகளை ஒழுங்கு செய்பவர்கள் சுகாதார அதிகாரிகளின் அனுமதியைப் பெற்றே நிகழ்வுகளை ஒழுங்கு செய்ய வேண்டிய நிலை உருவாகியிருக்கின்றது.அத்தோடு அத்துடன் தற்பொழுதுள்ள காலநிலை மழை வீழ்ச்சி காரணமாக டெங்கு தொற்று நோய் பரவும் அபாயம் மன்னார் மாவட்டத்தில் உருவாகியுள்ளது.

குறிப்பாக வீடுகள் மற்றும் வீடுகள் சூழல் உள்ள இடங்களில் வெள்ள நீர் தேங்கி காணப்படுகிறது. ஆகவே மக்கள் இவ் வியத்திலும் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும்

நுளம்புகள் பெருகக்க்கூடிய இடங்களை இனம் கண்டு உடன் அவற்றை சுத்தம் செய்து நுளம்பு தாக்கத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

மன்னார் மாவட்டத்தில் இதுவரை 89 சதவீதமானோர் முதலாவது தடுப்பூசிகளையும் 71.9 சதவீதமானோர் இரண்டாவது தடுப்பூசியையும் பெற்றுள்ளனர்.

இதனைத் தவிர மொத்தமாக 5,573 பாடசாலை மாணவர்களுக்கும் 492 பேருக்கு பூசர் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளன. 768 பேருக்கு பாடசாலையிலிருந்து இடை விலகிய வருக்கும் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன என அவர் மேலும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

இந்திய உயர்ஸ்தானிகர்களுடன் கூட்டமைப்பினர் கலந்துரையாடல்

“ஒரே நாடு ஒரே சட்டம்” கொள்கையை முன்வைத்து உருவாக்கப்படும் புதிய அரசியல் அமைப்பினூடாக தமிழ் மக்களின் உரிமைகள், அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வுகள் பெற்றுக்கொள்ள முடியும் என்ற எண்ணம் இல்லையென்பதையும், சர்வதேச அழுத்தங்களை பிரயோகித்து மாற்று வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்ற தமது நிலைப்பாட்டையும், இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லேயுடனான சந்திப்பில் ஆர்.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

புதிய அரசியல் அமைப்பு உருவாக்க விடயத்தில் தமிழ் அரசியல் தரப்பினர் ஒரு அணியாக ஒன்றிணைந்து தமது நிலைப்பாடுகளை முன்வைக்க வேண்டும் எனவும், மாகாணசபை தேர்தலில் தமிழர் தரப்பு பலமான கட்டமைப்பொன்றை உருவாக்கி, வடக்கு கிழக்கின் பலத்தை நிரூபிக்கும் பட்சத்தில், அதனூடாக அரசாங்கத்தை வலியுறுத்தும் முயற்சிகளை இந்தியாவினால் முன்னெடுக்க முடியும் எனவும் இந்திய உயர்ஸ்தானிகர் கூட்டமைப்பிடம் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தலைமையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு நேற்று பிற்பகல் இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லேவை, தூதுவர் இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.

கூட்டமைப்பின் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் அவரும், அமெரிக்காவிற்கான தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டுள்ள காரணத்தினால் கோவிந்தன் கருணாகரன் எம்.பியும், தனிப்பட்ட காரணங்களுக்காக வினோ நோகனாதலிங்கம் எம்.பியும் நேற்றைய கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கவில்லை.

இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏனைய ஏழு பாராளுமன்ற உறுப்பினர்களும், தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவும் நேற்றைய சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர். நேற்று பிற்பகல் 5 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த பேச்சுவார்த்தை சுமார் இரண்டு மணிநேரம் இடம்பெற்றது.

இந்திய – இலங்கை பாராளுமன்ற நட்புறவு சங்கம் நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இரு நாடுகளுக்கு இடையிலான பாராளுமன்ற தொடர்புகள் மற்றும் பரிமாற்றங்கள் உள்ளிட்ட துறைகளூடாக இரு நாடுகளுக்கு இடையில் ஏற்படுத்தப்பட்டுள்ள நட்புறவு குறித்தும், வழமைக்கு மாறாக இந்த நிகழ்வில் ஆளும் எதிர் தரப்பு சார்ந்து நூற்றுக்கும் அதிமாக பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தமை குறித்தும் இந்திய தூதுவர் கூட்டமைப்பிடம் தனிப்பட்ட சில காரணிகளை எடுத்துக்கூறியுள்ளார்.

குறிப்பாக இதற்கு முன்னர் இந்த நிகழ்வுகளில் மிகக் குறைவான உறுப்பினர்கள் கலந்துகொண்ட நிலையில் இம்முறை அந்த நிலைப்பாடு முழுமையாக மாறியுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.

சீன சார்பு பயணமாக இலங்கையின் செயற்பாடுகளை விமர்சித்த நிலையில் இந்திய எதிர்ப்பு அற்ற அல்லது இந்தியாவின் முக்கியத்துவம் அரசாங்கத்திற்கும் பாராளுமன்றத்திற்கும் விளங்கியுள்ளமை வெளிப்பட்டுள்ளதாக இந்தியத்தூதுவர் சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும்,வடக்கு கிழக்கு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் வடக்கு கிழக்கிற்கு அவசியமான முன்மொழிவுகள் குறித்தும், மாவட்ட ரீதியிலான தனித்தனியான துரித அபிவிருத்தி செயற்பாடுகள் மற்றும் நீண்டகால அபிவிருத்தி நலத்திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும், இந்திய வீட்டுத்திட்டம் உள்ளிட்ட முக்கிய காரணிகள் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும், இந்திய – இலங்கை மக்களுக்கு இடையிலான தொடர்பாடல், ராமேஸ்வரம் படகு சேவை, விமான நிலைய அபிவிருத்தி, காங்கேசன்துறை அபிவிருத்தி குறித்தும் முக்கியத்துவம் கொடுத்து பேசப்பட்டதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார்.

அரசியல் தீர்வு விடயத்தில், நீண்டகால அரசியல் முரண்பாடுகள் தீர்க்கப்பட்டு அரசியல் தீர்வு ஒன்றினை நோக்கிய பயணத்தில் இந்தியாவின் முழுமையான ஒத்துழைப்புகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்பார்ப்பதாக வலியுறுத்தியிருந்த நிலையில், அரசியல் தீர்வு விடயங்களில், அதிகார பகிர்வு உள்ளிட்ட முக்கிய விடயங்களில் இந்தியாவின் பங்களிப்பும் ஒத்துழைப்பும் எப்போதும் வழங்கப்படும் என இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கூறுகையில்,

புதிய அரசியல் அமைப்பு உருவாக்க விடயத்தில் எமது நிலைப்பாடுகள் மற்றும் அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் எமது சந்தேக கருத்துக்களை முன்வைத்தோம்.

குறிப்பாக “ஒரே நாடு -ஒரே சட்டம்” கொள்கையின் கீழ் அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்பாடுகள் குறித்த தெளிவு அவர்களிடத்தில் இருக்கவில்லை, எனவே அதனை நாம் தெளிவுபடுத்தினோம்.

புதிய அரசியல் அமைப்பினூடாக தமிழ் மக்களின் உரிமைகள், அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வுகள் பெற்றுக்கொள்ள முடியும் என்ற எண்ணம் எம்மத்தியில் இல்லை,எனவே சர்வதேச அழுத்தங்களை பிரயோகித்து மாற்று வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் எனவும் நாம் தெரிவித்தோம்.

இந்த விடயத்தில் வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல தமிழ் அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரு யோசனையை முன்வைத்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதை அவரும் எம்மிடத்தில் தெரிவித்தார்.

அதேபோல் மாகாணசபை தேர்தலை துரிதப்படுத்தும் செயற்பாடுகள் குறித்தும் அதில் தமிழர் தரப்பின் நகர்வுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இதன்போதும் மாகாணசபை தேர்தலில் தமிழர் தரப்பு பலமான கட்டமைப்பொன்றை உருவாக்கி, வடக்கு கிழக்கின் பலத்தை நிருபிக்கும் பட்சத்தில், அதனூடாக அரசாங்கத்தை வலியுறுத்தும் முயற்சிகளை இந்தியாவினால் முன்னெடுக்க முடியும் என்ற கருத்துக்களை அவர் எம்மிடத்தில் தெரிவித்தார். இந்த விடயங்களில் தமிழர் அரசியல் தலைமைகள் ஒரு அணியாக செயற்படுவது கட்டாயமென்பதை அவரும் வலியுறுத்தினார்,

அரசியல் தீர்வு விடயத்திலும் இந்தியாவின் பங்களிப்பு தொடர்ச்சியாக இருக்கும், அதில் தமிழர் தரப்பு அதிர்ப்தியடைய வேண்டிய அவசியம் இல்லை என்ற வாக்குறுதியையும் அவர் எம்மிடத்தில் முன்வைத்தார் என்ற காரணிகளை கேசரிக்கு குறிப்பிட்டார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் பிற்பகல் சுவிஸ் தூதுவரை சந்தித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள், அரசியல் தீர்வு விடயங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.

பல்லின சமூக கட்டமைப்பை கொண்ட சுவிஸ்லாந்து நாட்டின் அரசியல் நகர்வுகள் மற்றும் அங்கீகாரம் போன்றவை இலங்கைக்கும் அமைய வேண்டும் என்ற விடயங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

இலங்கை பட்ஜெட் 2022: நீங்கள் அறிய வேண்டிய 10 முக்கிய தகவல்கள்

இலங்கை நாடாளுமன்றத்தில் அந்நாட்டின் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தாக்கல் செய்த 2022ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், மதுபானம், சிகரெட்டுக்கான வரி உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் பதவிக்காலத்தை நிறைவு செய்தால் மட்டுமே அவர்களுக்கான ஓய்வூதியத்தை பெறலாம் என யோசனை முன்மொழியப்பட்டுள்ளது.

இலங்கையின் 76ஆம் வரவு செலவு திட்ட அறிக்கை நாடாளுமன்றத்தில் இன்று (12) தாக்கல் செய்யப்பட்டது. இதையொட்டி 2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ இன்று தாக்கல் செய்து உரை நிகழ்த்தினார்.

இதன்படி, 2022ஆம் ஆண்டுக்கான எதிர்பார்க்கப்படும் முழுமையான வருமானமாக ரூ. 2,284 பில்லியன் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதுடன், எதிர்பார்க்கப்படும் செலவீனமாக 3,912 பில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட துண்டு விழும் தொகையாக 1,628 பில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, இன்றைய தினம் சமர்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நாளை முதல் 7 தினங்களுக்கு இடம்பெற்று, 22ம் தேதி வாக்கெடுப்பு நடைபெறும்.

அதனைத் தொடர்ந்தும், 3ம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெற்று, இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் 10ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வரலாற்றில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டங்களில், இது மிக முக்கியமானதொரு வரவு செலவுத்திட்டமாக கருதப்படுகின்றது.

2019ம் ஆண்டு முதல் இலங்கை தொடர்ச்சியாக பல்வேறு பிரச்னைகளை எதிர்நோக்கி வருவதுடன் ஊடாக, பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவை சந்தித்துள்ளது.

2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதலின் ஊடாக இலங்கையின் சுற்றுலாத்துறை முழுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், அந்த பாதிப்பிலிருந்து மீண்டெழ முயற்சிக்கும் தருணத்திலேயே, கோவிட்-19 பெரும் தொற்று இலங்கையையும் பாதித்து, அனைத்து துறைகளிலும் தாக்கத்தை செலுத்தியது.

இவ்வாறான பாதிப்புக்களுக்கு மத்தியில், 2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் இன்று (நவம்பர் 12) சமர்பிக்கப்பட்டது. அதன் 10 முக்கிய அம்சங்களை இங்கே தொகுத்தளிக்கிறோம்.

1. காணாமல் போனோருக்கான நட்டஈட்டை வழங்குவதற்காக 300 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2. 3 வருடங்களில் மலையக மக்கள் வாழும் லயின் வீடுகளை இல்லாது செய்வதற்கான திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. இதன்படி, அடுத்த ஆண்டிற்காக தனி வீடுகளை அமைப்பதற்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

3. கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள சிறு மற்றும் நடுத்தர வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்காக 5,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

4. கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள பஸ் உரிமையாளர்கள், முச்சக்கரவண்டி உரிமையாளர்கள், பாடசாலை வேன் மற்றும் பேருந்து உரிமையாளர்களுக்கும் நிவாரணம் வழங்க நிதியொதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

5. சுமார் 2 தசாப்தங்களுக்கு அதிகமாக காணப்பட்ட அதிபர் – ஆசிரியர் சம்பள முரண்பாட்டை ஒரே தடவையில் தீர்க்கும் வகையில், மேலதிகமாக 30,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

6. 2015ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரையான காலப் பகுதியில் ஆட்சி செய்த அரசாங்கத்தினால் அரசியல் பழிவாங்கலுக்கு உட்படுத்தப்பட்டவர்களுக்கான நட்டஈட்டை வழங்குவதற்காக 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

7. நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளுக்கு அதிவிரைவு இணைய வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

8. நாடு முழுவதும் உள்ள 7 லட்சத்திற்கும் அதிகமான முச்சக்கரவண்டி சாரதிகளை பாதுகாக்கும் நோக்கில், முச்சக்கரவண்டி அதிகார சபையொன்றை ஸ்தாபிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

9. மதுபானத்திற்கான வரி அதிகரிக்கப்படவுள்ளதுடன், சிகரட்டிற்கான விலையும் உடன் அமலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படவுள்ளது.

10. விபத்துக்குள்ளாகும் வாகன சாரதிகளிடமிருந்து நட்டஈட்டு தொகையொன்றை அறவிடுவதற்கான யோசனையும், எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக முன்மொழியப்பட்டுள்ளது. வாகன விபத்துக்களை குறைத்துக்கொள்ளும் நோக்குடன் இந்த திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது.

இந்த பட்ஜெட் உரையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐந்து வருடங்கள் தொடர்ந்தும் நாடாளுமன்றத்தில் இருந்தால் மாத்திரமே ஓய்வூதியம் கிடைக்கும் என்ற சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, அந்த கால எல்லையை 10 வருடங்கள் வரை அதிகரிப்பதற்கான யோசனையும் முன்மொழியப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்

அதிகரித்துச் செல்லும் வாழ்க்கைச் செலவு, நாட்டின் வளங்களை வெளிநாடுகளுக்கு கொடுத்தல், உரப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விடயங்களை மையப்படுத்தி கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமொன்றை வெள்ளிக்கிழமை (12 ) நடத்தியது.

மக்களின் கண்ணீர் வடிப்பதை அறியாத மோசமான இந்த அராசங்கத்தை இல்லாதொழித்து மக்களின் துயர் துடைக்கும், சர்வதேச ரீதியில் நல்லுறவை பேணும் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சி அதிகாரம் மீண்டும் மலர வேண்டுமென்றும் இதில் கலந்துகொண்ட ஐ.தே.க. ஆதரவாளர்கள் கோஷப் எழுப்பியும், பதாகைகளைத் தாங்கியும் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

மேலும், எமது நாட்டு விவசாயிகளுக்கு உரம் இல்லை, பட்டினிச் சாவில் மரணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது, அரிசியின் விலையை நிர்ணயிப்பது டட்லி சிறிசேனவா? அதிகரித்துச்செல்லும் வாழ்க்கை செலவு, நாட்டின் வளங்களை வெளிநாடுகளுக்கு விற்காதே, குறைந்து செல்லும் டொலர் கையிருப்பு, கெரவலப்பிட்டி மின் நிலைய பங்குகள் விற்பனை உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் தாங்கிய பாதாகைகளை தாங்கி இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

விகாரமாதேவி பூங்காவுக்கு அருகில் ஆரம்பமாகி லிப்டன் சுற்றுவரை வந்த இந்த இந்த ஆர்ப்பாட்ட ‍ பேரணியில், ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார, கட்சியின் உப தலைவர் ருவன் விஜேவர்தன, கட்சியின் உறுப்பினர்களான நவீன் திசாநாயக்க, சாகல ரத்நாயக்க , கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனாநாயக்க, உள்ளூராட்சி மன்றத்தின் முன்னாள் மற்றும் இந்நாள் உறுப்பினர்கள் கட்சியின் உறுப்பினர்கள் , தொழிற்சங்கவாதிகள் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார,

“ராஜபக்ச குடும்பத்தின் மற்றுமொரு உறுப்பினரான ஏழு அறிவுடையக் கொண்ட பஷில் ராஜபக்சவின் வரவு செலவுத் திட்டம் இன்று (‍நேற்று) வாசிக்கப்பட்டது. இந்த வரவு செலவுத் திட்டமானது வேதனையில் துன்புறும் மக்களுக்கு உலக்கையால் அடித்தது போல் உள்ளது. ஒரு சில மணித்தியாலங்களுக்குக் கூற நிற்க முடியாத ஒருவரால் எப்படி நாட்டை கட்டியெழுப்ப முடியும் என நான் கேட்கிறேன். இந்த வரவு செலவுத் திட்டத்தால் துன்புறும் மக்கள் மென்பேலும் அழுத்தத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

விவசாயத்தை செய்வதற்கு முறையான திட்டமில்லை, பொருளாதாரத்தை கட்டியெழுப்பு திட்டமில்லை, சுகாதாரத் துறையை மேம்படுத்த தெரியவில்லை , அரச ஊழியர்கனை பலப்படுத்த திட்டமில்லை, வியாபாரத்தை கட்டியெழுப்ப திட்டமில்லை, வர்த்தகர்களை பாதுகாக்க திட்டமில்லை. இவற்றுக்கு முறையான செயற்திட்டங்கள் எதுவும் இல்லாமல் மணிக் கணக்கான மக்களின் நேரத்தை வீணாக செலவழித்த ஓர் வரவு செலவுத் திட்டமாகவே பார்க்கிறோம்.

ஆகவே, ராஜபக்ச குடும்பத்துக்கு இந்த நாட்டை கொண்டு ‍செல்வதற்கு முடியாமல் போயுள்ளது. இந்த நாட்டை கட்டியெழுப்பக் கூடிய ஒரே கட்சி ஐக்கிய தேசிய கட்சியாகும்.

2001 மற்றும் 2015 ஆம் ஆண்டு ஆகிய இரண்டு சந்தர்ப்பங்களில் வீழ்ந்து கிடந்த இந்த நாட்டை நாம் முன்னேற்றியிருந்தோம். 2001 இல் வீழ்ச்சியடைந்திருந்த பொருளாதாரத்தை நாம் கட்டியெழுப்பினோம். 2015 இல் அரசியல் ரீதியாக வீழ்ந்திருந்த நாட்டை கட்டி எழுப்பினோம். ஆகவே, நாட்டை கட்டி எழுப்பக்கூடிய கட்சிக்கு ஆட்சியைக் கொடுத்துவிட்டு செல்லுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

பஷில் ராஜபக்ச வந்தால் எல்லாம் சரியாகிவிடும் என கூறினர். ஆம், பஷிலுக்கும் அவரது குடும்பத்துக்கும் எல்லா நன்றாக அமைந்துவிட்டது. ஆனால், நாட்டு மக்களுக்கு பட்டினி சாவில் இறக்கும் நிலையே ஏற்பட்டுள்ளது. இந்த வரவு செலவுத் திட்டத்தின் பின்னர் மக்கள் மேலும் பட்டினிச் சாவை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது” என்றார்.

மன்னார் மாவட்ட மீனவர்கள் சீரற்ற காலநிலையினால் பாதிப்பு!

தொடர்ச்சியாக நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக மன்னார் மாவட்ட மீனவர்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கடல் பகுதியில் வீசி வரும் அதீத காற்று காரணமாக மூன்றாவது நாளாக அதிகளவான மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளை தவிர்த்து வருகின்றனர்.

மன்னார் தீவக பகுதிகளை சூழ்ந்த கடல் பரப்பின் நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்து காணப்படுகின்ற மையினாலும் கடல் பகுதியில் அதீத காற்று வீசுவதனாலும் மீன்பிடி நடவடிக்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் உள்ளூர் மீனவர்களுடைய படகுகள் மற்றும் மீன்பிடி வலைகள் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டு கடற்கரையினை அண்மித்த பகுதிகளில் அடையவிடப்பட்டுள்ளமையும் காணக்கூடியதாக உள்ளது.

Posted in Uncategorized

யாழ்ப்பாணத்தில் வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் பகிர்ந்தளிப்பு

நாட்டில் நிலவிய பலத்த மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில், மக்கள் சக்தியினால் முன்னெடுக்கப்படும் நிவாரணப் பயணம் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்கின்றது.

நேற்றும் இன்றும் யாழ். மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மக்கள் சக்தி குழுவினர் நிவாரணப் பொருட்களை பகிர்ந்தளித்தனர்.

யாழ். மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொட்டும் மழையிலும் நிவாரணப்பொருட்கள் இன்று பகிர்ந்தளிக்கப்பட்டன.

மக்கள் சக்தியின் நிவாரணப் பயணத்தினூடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

யாழ். ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட J/58, நாரந்தனை தெற்கு கிராம சேவையாளர் பிரிவில் மழை வெள்ளத்தினால் பாதிப்படைந்துள்ள குடும்பங்களுக்கு நிவாரணப்பொருட்கள் இன்று பகிர்ந்தளிக்கப்பட்டன.

இதனிடையே தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவில் J – 222, இளவாலை வடமேற்கு கிராம சேவையாளர் பிரிவின் சேந்தாங்குளம் கிராமத்தில் வெள்ளத்தினால் இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாமில் தங்கியுள்ள மக்களுக்கு நிவாரணப்பொருட்கள் நேற்று நள்ளிரவு பகிர்ந்தளிக்கப்பட்டன.

தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவின் J /213 கிராம சேவையாளர் பிரிவிலுள்ள மல்லாகம் நீதவான் நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ள மக்களும் இம்முறை வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

குறித்த மக்களுக்கான நிவாரணப் பொருட்களும் மக்கள் சக்தி குழுவினரால் நேற்று பகிர்ந்தளிக்கப்பட்டன.

யாழ். சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கல்லுண்டாய் குடியிருப்பு பகுதியிலும், வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப்பொருட்கள் மக்கள் சக்தி குழாத்தினரால் நேற்று நள்ளிரவு வழங்கப்பட்டன.