இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் மற்றொரு தீர்மானம்; இணை அனுசரணை நாடுகள் திட்டம்

எதிர்வரும் செப்ரெம்பரில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 48 ஆவது அமர்வில் இலங்கைக்கு எதிராக மற்றுமொரு கடுமையான தீர்மானம் ஒன்றைக் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப் படுவதாகத் தெரிய வருகின்றது.

இலங்கை மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கும் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வருவதற்கு பிரிட்டன் உட்பட ஐந்து நாடுகள் தயாராகி வருகின்றன என்று தகவல் வெளியாகியுள்ளது.

பிரிட்டன், மசிடோனியா, கனடா, ஜேர்மனி மற்றும் மொண்டினீக்ரோ ஆகியவை இணைந்து கூட்டாக இந்த தீர்மானத்தைக் கொண்டு வருவதற்கான முன்னெடுப்புக்கள் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது.

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 48 ஆவது அமர்வு எதிர்வரும் செப்ரெம்பர் 13ஆம் திகதி முதல் ஒக்ரோபர் 8 ஆம் திகதிவரை ஜெனிவாவில் இடம் பெறவுள்ளது. இதன் போதே இந்தப் புதிய தீர்மானத்தைக் கொண்டு வருவதற்கு ஐந்து நாடுகள் திட்டமிட்டுள்ளன என தெரியவருகின்றது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சீனா சமர்ப்பித்த பிரிட்டிஷ் எதிர்ப்பு தீர்மானத்துக்கு ஆதரவாக இலங்கை வாக்களித்தமையே இந்தப் புதிய தீர்மானத்தைக் கொண்டு வருவதற்கான காரணம் என்று தெரிவிக்கப் படுகிறது

முஸ்லிம் அரசியல்வாதிகள் சரத் வீரசேகரவுடன், றிசாத் தொடர்பில் பேச்சு – ஜனாதிபதி தரப்பிலிருந்து நேரம் ஒதுக்கிக் கொடுக்கப்படவில்லை

றிசாத் பதியுதீன், அவரது குடும்பத்தினர் கைது, அதனால் அவரது குடும்பத்தினருக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து, முஸ்லிம் அரசியல்வாதிகள் 2 பேர், அமைச்சர் சரத் வீரசேகரவுடன் சந்தித்து உரையாடியுள்ளதாக நம்பரகமான வட்டாரங்களில் இருந்து Jaffna Muslim இணையத்திற்கு தகவல் கிடைத்தது.

எனினும், தற்போது றிசாத் விவகாரம் தேசிய விடயமாகி, தனது கரங்களையும் மீறிச் சென்றுவிட்டதாகவும், தன்னால் எதுவும் செய்ய முடியாதெனவும், சரத் வீரசேகர 2 முஸ்லிம் அரசியல்வாதிகளிடமும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இதுதொடர்பில் ஜனாதிபதியுடன் நேரடியாக, உரையாடுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதியுடன் இதுபற்றி நேரடியாக உரையாட, 2 முஸ்லிம் அரசியல்வாதிகளும் அனுமதி கோரியபோதும், இந்த செய்தியை எழுதும்வரை அவர்களுக்கு ஜனாதிபதி தரப்பிலிருந்து நேரம் ஒதுக்கிக் கொடுக்கப்படவில்லை எனவும் Jaffna Muslim இணையத்திற்கு மேலும் அறிய வருகிறது.

Source:Jaffnamuslim

சரத் வீரசேகரவின் பொறுப்பிலிருந்த நிறுவனங்கள் பறிப்பு

அமைச்சர் சரத் வீரசேகரவின் பொறுப்பின் கீழிருந்த சிவில் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் பல்துறை அபிவிருத்தி விசேட செயலணிகளை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளார் ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச.

அண்மைக்காலமாக சிலரது அமைச்சுப் பொறுப்புகள் இவ்வாறு மாற்றப்படுகின்ற அதேவேளை, விமல் வீரவன்சவிடமிருந்து இலாபமீட்டிக் கொண்டிருந்த நிறுவனம் அபகரிக்கப்பட்டதாக சர்ச்சைகள் எழுந்திருந்தன.

இந்நிலையில், பல முனைகளில் தனது குரலை பதிவு செய்யும் வகையில் கருத்துக்கள் வெளியிட்டு வரும் சரத் வீரசேகரவிடமிருந்து இரு நிறுவனங்கள் மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

தகவல் அறியும் உரிமை கோரிக்கையினை திருப்பி அனுப்பிய பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகம்..!

கிளிநொச்சி இரணைமடுவில் அமைந்துள்ள பிரதி பொலிஸ் மா அதிபர் ( DIG Office) அலுவலகத்திற்கு அனுப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மேன் முறையீட்டு விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ள மறுத்து திருப்பி அனுப்பியுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சியை சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகத்திடம் கடந்த 30.04.2021 திகதியிட்டு சில தகவல்களை கோரி விண்ணப்பத்தை அனுப்பியிருந்தார். இதற்கான பதில் சட்டத்தில் குறிப்பிப்பட்ட கால எல்லையைக் கடந்தும் அனுப்படவில்லை.

இந்நிலையில், சட்டத்தின் பிரகாரம் ஊடகவியலாளர் குறித்தளிக்கப்பட்ட அலுவலருக்கு (Designated Officer) 20.07.2021 திகதியில் மேன் முறையீடு விண்ணப்பத்தை தகவல் அறியும் படிவம் 10 ஊடாக பதிவுத் தபாலில் அனுப்பியிருந்தார்.

இந்த விண்ணப்பத்தையே கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகம் ஏற்க மறுத்து திருப்பி அனுப்பியுள்ளது. கோரிக்கை அனுப்பட்ட தபாலுறையில் பொலிஸ் திணைக்களத்தால் ஏற்க மறுத்துள்ளார்கள் என எழுதப்பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி அலுவலகங்கள், நிறுவனங்களில் உள்ள தகவல் அறியும் அலுவலருக்கு விண்ணப்பித்து, அவரிடமிருந்து உரிய காலத்தில் தகவல் ஏதேனும் கிடைக்கவில்லை என்றால் அவ்வலுவலகத்தில் சட்டத்தின் பிரகாரம் நியமிக்கப்பட்டுள்ள குறித்தளிக்கப்பட்ட அலுவலருக்கு மேன் முறையீடு செய்ய வேண்டும் இதற்கும் பதில் இல்லை எனில் தகவல் அறியும் ஆணைக்குழுவுக்கு முறையீடு செய்ய முடியும்.

ஆனால் சட்டத்தை நடைமுறைப்படுத்துகின்ற பொலிஸ் திணைக்களமே சட்டத்தின் படி நடக்காமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக குறித்த ஊடகவியலாளர் கவலை தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகள் நான்கு பேர் விடுதலை!

தமிழ் அரசியல் கைதிகள் நான்கு பேர், நிரபராதிகள் என இனங்காணப்பட்டதையடுத்து வவுனியா மேல் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

குரலற்றவர்களின் குரல் அமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்விடயம் தொடர்பாக மேலும் கூறியுள்ளதாவது, அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகளான யாழ்ப்பாணத்தை சேர்ந்த நடேசன் தருமராசா, வவுனியாவைச் சேர்ந்த ஜோசப் செபஸ்ரியான், கிளிநொச்சியை சேர்ந்த நடராசா சர்வேஸ்வரன் மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த கண்ணதாசன் ஆகியோரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இதில் நடேசன் தருமராசா, தனது ஒருவருட புனர்வாழ்வை முடித்து இயல்பு வாழ்க்கையில் ஈடுபட்டிருந்த வேளையில், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கடந்த 2013 ஆம் ஆண்டு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.

இதன்போது ஜோசப் செபஸ்ரியான் என்பவரும் கைது செய்யப்பட்டு, இருவருக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

அந்தவகையில் வழக்கு விசாரணைகளின் அடிப்படையில் அவர்கள், வவுனியா மேல் நீதிமன்றத்தினால் நிரபராதிகள் என இனங்காணப்பட்டதையடுத்து, 8 வருடங்களின் பின்னர் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கடந்த 2016 ஆம் ஆண்டு நடராசா சர்வேஸ்வரன் கைது செய்யப்பட்டு, கடந்த 2018 ஆம் ஆண்டு அவருக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த வழக்கு விசாரணைகளின் அடிப்படையில் நேற்று நிரபராதியென இனங்காணப்பட்டு நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு கட்டாய ஆள்சேர்ப்பில் ஈடுபட்டார் என்ற குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு, தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் நுண்கலைத் துறை விரிவுரையாளர் கண்ணதாசனையும் வவுனியா மேல் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

சீன தூதுவருடன் வடக்கு, கிழக்கு ஆளுநர்கள் சந்திப்பு

இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென்ஹொங்க்கும் (Qi Zhenhong) வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்லத் இற்கும் இடையில் மிக அண்மையில் விசேட சந்திப்புக்கள் நடை பெற்றதன.

இந்தச் சந்திப்புக்களின் போது வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கும் சீனாவுக்கும் இடையில் காணப்படுகின்ற வரலாற்றுத் தொடர்புகள் பற்றி இருவரும் பரஸ்பரம் கலந்துரையாடினார்கள்.

அத்துடன் வடக்கு மாகாணத்திற்கு தடுப்பூசிகளை வழங்கியமைக்கு நன்றிகளைத் தெரிவித்ததோடு, தமது மாகாணத்திற்கு முழுமையாக தடுப்பூசிகளை அளிப்பது தொடர்பில் கரிசனை கொண்டிருப்பதாக ஆளுநர்கள் தெரிவித்தனர்.

அத்துடன் எதிர் வரும் காலத்தில் சீனாவுடன் ஒத்துழைப்புக்களை மேம்படுத்தி வட மாகாணத்திலும், கிழக்கு மாகாணத்திலும் பல்வேறு விடயங்களை முன்னெடுப் பதற்கான இருதரப்பினரதும் விருப்பம் வெளியிடப்பட்டது.

Posted in Uncategorized

‘தமிழர்களைப் பாதுகாக்கும் பொறுப்பை இலங்கை நிறைவேற்றவேண்டும்’- வைகோவின் கேள்விக்கு அமைச்சர் பதில்

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மாநிலங்களவையில் நடந்த விவாதத்தின் போது, கீழ்காணும் கேள்விகளுக்கு, அயல் உறவுத்துறை அமைச்சர் விளக்கம் தருவாரா? என கேள்வி எழுப்பி ஆறு முக்கிய கேள்விகளை முன் வைத்திருந்தார்.

அதாவது,

1.இலங்கையின் உள்நாட்டுப் போரில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து, இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகள், பன்னாட்டு நீதி விசாரணை கோரி இருக்கின்றார்களா?

அவ்வாறு இருப்பின், அதுகுறித்து உங்கள் நிலைப்பாடு என்ன?
இலங்கை அரசு இதுவரை எந்தவிதமான உள்ளக விசாரணையும் மேற்கொள்ளாத நிலையில், இனியும் அதற்கான வாய்ப்புகள் இல்லாத சூழலில், பன்னாட்டு நீதி விசாரணை நடைபெறுவதற்கான முயற்சிகளை, இந்திய அரசு மேற்கொள்ளுமா?
இலங்கையில் முஸ்லிம்கள் உடல் அடக்க உரிமைகளைத் திரும்பத் தருவதற்கும், தமிழர்களுடைய நிலங்களில் இலங்கைப் படையினர் நிலை கொண்டு, தமிழர்களைக் கண்காணித்து வருவதையும், அவர்கள் மீது தொடர் அடக்குமுறைகளைத் தடுப்பதற்கும், தூதரக முறையில் இந்தியா ஏதேனும் முயற்சிகளை மேற்கொண்டதா?
அவ்வாறு இருப்பின், அதுகுறித்த தகவல்களைத் தருக;
இல்லை என்றால், அதற்கான காரணங்கள் என்ன?
வைகோவின் குறித்த ஆறு கேள்விகளுக்கும் உள்துறை இணை அமைச்சர் முரளிதரன் விளக்கம் அளிக்கையில்,

இலங்கையின் உள்நாட்டுப் போரின்போது நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் குறித்து, இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகள், பன்னாட்டு விசாரணை கோரி இருக்கின்றன. பல்வேறு இனங்கள், பல்வேறு மொழிகள், பல்வேறு சமயங்கள் கொண்ட இலங்கை நாட்டில், தமிழர் உள்ளிட்ட அனைத்துக் குடிமக்களும் சமமாக வாழ்வதற்கும், பாதுகாப்பு மற்றும் சமய நல்லிணக்கம் நிலவுதற்கும், அவர்களுடைய முன்னேற்றம், எதிர்காலக் கனவுகளை, ஒன்றுபட்ட இலங்கை என்ற நாட்டுக்கு உள்ளே நிறைவேற்றிக் கொள்வதற்கும், இந்தியா எப்போதும் உறுதுணையாக இருந்து வருகின்றது.

இந்தப் பொருண்மையில், இந்திய அரசு, இலங்கை அரசுடன் தொடர்ந்து பேசி வருகின்றது; பல்வேறு நிலைகளில் இருதரப்பு பேச்சுகள் நடைபெற்று உள்ளன; இலங்கைத் தமிழர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கு இலங்கை அரசு அளித்துள்ள உறுதிமொழிகளை நிறைவேற்ற வலியுறுத்தி வருகின்றது.

2019, 2020 ஆம் ஆண்டுகளில், இலங்கைக் குடிஅரசின் தலைவர் இந்தியா வருகை தந்தபோதும், 2020 செப்டெம்பர் 26 ஆம்நாள், இரண்டு நாடுகளின் பிரதமர்கள் இணையக் காணொளி வழியாக நடத்திய இருதரப்புப் பேச்சுகளிலும், 2021 ஜனவரி மாதம், இந்திய அயல் உறவு அமைச்சர் இலங்கை சென்றபோதும், மேற்கண்ட கருத்துகளை, இந்தியா வலியுறுத்தி இருக்கின்றது.

ஐ.நா.மனித உரிமைகள் மன்றத்தின் (United Nations Human Rights Council – UNHRC), 46 ஆவது கூட்டத் தொடரில், சமத்துவம், நீதி, அமைதி, கண்ணிய வாழ்வு என்ற தமிழர்களின் விருப்பங்களை நிறைவேற்ற இந்தியா வலியுறுத்தியது.

தமிழர்களின் உரிமைகளை மதிக்கின்ற வகையில், உண்மையான அதிகாரப் பகிர்வுதான், இலங்கையின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கும் என்பதையும் எடுத்துக் கூறியது.

கூடுதலாக, இலங்கை அரசு நல்லிணக்க முயற்சிகளை மேற்கொள்ளவும், மறுவாழ்வுப் பணிகளைச் செயல்படுத்தவும், தமிழர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவும், பன்னாட்டு சமுதாயத்துடன் இணைந்து அத்தகைய முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு, இலங்கையின் அனைத்துத் தரப்பு மக்களும், விடுதலை உணர்வுடன், மனித உரிமைகள் பாதுகாப்புடன் வாழ வகை செய்யுமாறு இந்தியா வலியுறுத்தியது.

இந்நிலையில், இலங்கையில் மனித உரிமை மீறல்களிற்கு பெறுப்புக்கூறுவது உள்நாட்டு பொறிமுறைகள் மூலம் சாத்தியமில்லை என்பதால் இந்தியா சர்வதேச விசாரணையை ஆரம்பிக்குமா என்ற கேள்விக்கு அமைச்சர் வி முரளீதரன் நேரடியான பதிலை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

கிராம மட்டத்தில் சுதந்திரக் கட்சியை மறுசீரமைக்கும் திட்டத்தை ஆரம்பித்தார் மைத்திரிபால சிறிசேன

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை வலுப்படுத்துவதற்கான புதிய திட்டத்தை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆரம்பித்துள்ளார்.

இந்த திட்டத்தின் கீழ் மாவட்ட மட்டத்தில் நடத்தப்படுகின்ற கருத்தரங்கு இன்று காலியில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

காலி மாவட்டத்தின் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தொகுதி அமைப்பாளர்கள், முகாமையாளர்களும் கருத்தரங்கிற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

கருத்தரங்கு நிறைவு பெற்றதன் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு முன்னாள் ஜனாதிபதி பதிலளித்தார்.

Posted in Uncategorized

இலங்கை வரலாற்றில் அதிக பெறுமதியான பணம் அச்சிடப்பட்டது

இந்த வருடம் ஒரே நாளில் அதிக பெறுமதியான பணம் 28-07-2021 அச்சிடப்பட்டுள்ளது.

நேற்று 213.48 பில்லியன் ரூபா புழக்கத்திற்கு விடுவிக்கப்பட்டதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

நேற்று முன்தினம் 1 பில்லியன் அமெரிக்க டொலர் வௌிநாட்டு கடன் செலுத்தப்பட்டதை அடுத்து, இந்த பணம் புழக்கத்திற்கு விடப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் பொருளாதார ஸ்திரநிலை உள்ளதாக அல் ஜசீரா தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய வெளியுறவு செயலகத்திடம் ரெலோ அவசர விடயங்கள் கோரிக்கை 

பிரித்தானிய வெளியுறவு மற்றும் பொதுநலவாய அபிவிருத்தி அலுவலகத்தின்  இந்தியா மற்றும் இந்தியப் பெருங்கடல் உதவி இயக்குநராக லிசா பண்டாரி நியமிக்கப்பட்டுள்ளார்.  அவரின் பதவியேற்பின் பின் 28-07-2021ரெலோ   பிரித்தானிய  கிளை  தலைவரும் , தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இணைத் தலைவராகவும் செயலாற்றிவரும் சாம் சம்பந்தன் அவர்களுடன் சந்திப்பு ஒன்று நடைபெற்றது . 

இலங்கை விவகாரங்கள் பற்றி கலந்துரையாடப் பட்ட வேளையில் தமிழ் மக்கள் தற்போது எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனைகளை பிரித்தானிய அரசு உடனடி கவனத்தில் கொள்வதோடு உரிய செயல்பாடுகளையும் முன்னெடுக்க வேண்டும் என திரு. சம்பந்தன் அவர்களால் கோரிக்கைகள் சமர்ப்பிக்கப் பட்டன. 

 குறிப்பாக தமிழ் மக்கள் நீண்டகாலமாக கோரிவரும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளை நமது பாரம்பரிய தாயகமாக அங்கீகரிக்கும் அரசியல் தீர்வை அடைய தமிழ் சமூகத்திற்கு சர்வதேச மத்தியஸ்தத்தின் முலம் உதவுதல்.

 அரசியல் தீர்வை எட்டும் வரை  நிலம் மற்றும் பொலிஸ் அதிகாரப் பகிர்வுடன் அரசியலமைப்பின் 13 வது திருத்தத்தை UNHRC தீர்மானம் 46/1 இல் பிரேரிக்கப் பட்டதன் பிரகாரம் முழு அளவில் செயல்படுத்துதல்.

 இதன் அடிப்படையில் மாகாண சபை தேர்தல்களை தாமதமின்றி நடத்த இலங்கை அரசை வலியுறுத்துதல்

இலங்கை சிறைகளில் காலவரையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை பொதுமன்னிப்பு வழங்கி விடுவித்தல்

இலங்கை அரசின் இனப்படுகொலை உள்ளிட்ட அட்டூழிய குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க அர்த்தமுள்ள நடவடிக்கைகளை மனித உரிமைப் பேரவையிலும் அதைத் தாண்டியும் செயல்படுத்தல் 

பல்வேறு காரணங்களின் அடிப்படையில் தமிழரின் பாரம்பரிய  நிலங்களை ஆக்கிரமித்து சிங்கள குடியேற்றங்களை நிறுவி தமிழ் மக்களின் இனக் குடிப் பரம்பலை சிதைப்பது மூலம் தங்கள் சொந்த நிலத்தில் உள்ள தமிழ் மக்களுக்கு எதிரான  இலங்கை அரசின் திட்டமிட்ட இனவழிப்பு நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துதல்.

என்பன உடனடியாக கையாளப்பட வேண்டிய விடயங்களாக சுட்டிக் காட்டப்பட்டன.  தமிழ் மக்களின்  மனித உரிமை மற்றும்  அடிப்படை உரிமைகள் அரசியல் சமத்துவம், கெளரவமான வாழ்வு என்பனவற்றை உறுதி செய்யும் அனைத்து நடவடிக்கைகளையும் பிரித்தானியா விரைந்து செயல்படுத்தும் என புதிய உதவி இயக்குனராக லிஸா பண்டாரி உறுதியளித்தார் .

ரெலோ ஊடக வாரியம்