ஆரியகுளம் யாழ்.மாநகரசபைக்கே சொந்தம்: எவரும் உரிமை கோர முடியாது! ரெலோ பிரதி முதல்வர் ஈசன்

யாழ்.ஆரியகுளம் யாழ்.மாநகரசபைக்கும், மக்களுக்கும் உரியது. எந்தக் காலத்திலும் ஆரியகுளத்தை யாரும் உரிமை கோர முடியாது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் யாழ் மாவட்ட பிரதி அமைப்பாளரும், யாழ்.மாநகரசபையின் பிரதி முதல்வருமாகிய து. ஈசன் தெரிவித்தார்.

யாழ். மாநகர முதல்வரின் “தூய கரங்கள் தூய நகரம்” எனும் திட்டத்தின் ஒரு பகுதியாக யாழ்.ஆரிய குளம் துரித அபிவிருத்தித் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை(23-07-2021) இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

44 குளங்களை ஆழமாக்கி அழகுபடுத்தும் வேலைத் திட்டமாக உலகவங்கி தலையிட்டு அதற்கான திட்டத்தை தந்திருந்தது. அதற்கான முயற்சிகளை மேற்கொண்ட நிலையில் தற்போது இரண்டு குளங்களுக்கான புனரமைப்பு வேலைகள் தான் நடந்து கொண்டிருக்கின்றன.

ஆரியகுளத்தை அழகுபடுத்துவதுடன் மாத்திரமின்றி நிலத்தடி நீரைப் பாதுகாக்கக் கூடிய வகையில் ஆழப்படுத்தி, சுத்தப்படுத்தி நவீனமயப்படுத்துவதால் யாழ்.நகரத்தின் அழகுக்கு மேலும் அழகு சேர்க்கும் என்பதில் ஐயமில்லை.

யாழ்.மாநகர முதல்வரின் சிந்தனைக்கு ஈடாகத் தியாகி அறக்கொடை நிலையத்தின் ஸ்தாபகர் இந்தத் திட்டத்தை முன்னெடுப்பதற்கான நிதி உதவி வழங்க முன்வந்திருப்பதை நாங்கள் மேலும் மேலும் பாராட்டுகின்றோம்.

இதுபோன்ற பல மக்கள் நலப் பணிகளை ஆற்றும் மனிதர்களை வாழ்வில் காண்பது அரிது. அந்தவகையில் யாழ். மாநகரத்துக்கு இப்படியானதொரு கொடையாளி கிடைத்தது வரவேற்கத்தக்க விடயம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Posted in Uncategorized

சீன நாட்டு பிரஜை ஒருவரும், கோட்டாபய முகாமுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் கிழக்கு, வட்டுவாகல் கோட்டாபய கடற்படை முகாம் காணி அளவீடு செய்வதற்கு நேற்றும் (29) முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டமையால் அங்கு பெரும் பதற்றமான நிலைமையொன்று இன்றுக்காலை முதல் ஏற்பட்டிருந்தமை யாவரும் அறிந்த விடயமாகும்.

இந்நிலையில், அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் மற்றும் ஏனைய தரப்பினருக்கும் அதிகாரிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றது. அந்தப் பேச்சுவார்த்தையின் போது,

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் கிழக்கு, வட்டுவாகல் கோட்டாபய கடற்படை முகாம் காணி அளவீடு தொடர்பில் கடற்படை, காணிகளுக்கு உரியவர்கள், உரிய திணைக்கள அதிகாரிகளுடன் மாவட்டசெயலகத்தில் ஒரு கலந்துரையாடல் இடம்பெறும். அந்தக் கலந்துரையாடலின் அடிப்படையிலேயே நில அளவீடு தொடர்பில் முடிவு எடுக்கப்படும். அதுவரை நில அளவைச் செயறபாடுகள் இடம்பெறாது என்ற இணக்கமான முடிவொன்று எடுக்கப்பட்டது. இதனையடுத்தே, ஆர்ப்பாட்டம் சற்றுமுன்னர் கைவிடப்பட்டது.

தென்னிலங்கையில் வசித்துவருகின்ற சீன நாட்டவர் ஒருவருக்கு குறித்த கோட்டாப கடற்படை முகாம் அமைந்துள்ள பகுதியில் சுமார் 49 ஏக்கர் காணியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அந்த சீன நாட்டைச்சேர்ந்தவர் ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற பகுதிக்கு வருகைதந்து தனது காணிகளுக்குரிய நட்ட ஈட்டைப் பெறுவதற்கும், இதுவரைகாலம் அங்கு கடற்படை இருந்து தனது காணியைப் பயன்படுத்தியமைக்கான நட்ட ஈட்டைப் பெறுவதற்கும் கட்டாயம் அங்கு நில அளவீடு இடம்பெறவேண்டும் என வலியுறுத்தினார்.

குறித்த நபரின் இத்தகைய கருத்திற்கு அங்கிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது கடுமையான கண்டனங்களை வெளியிட்டிருந்தனர். சீனச்சிங்களவர் அங்கிருந்து வெளியேறவேண்டும் என கோசம் எழுப்பியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து ஏனைய ஆர்ப்பாட்டக்காரர்களும் குறித்த நபர் அங்கிருந்து வெ ளியேறவேண்டுமெனக் கோசம் எழுப்பியதைத் தொடர்ந்து ஆர்ப்பாட்ட இடத்திலிருந்து அந்நபர் வெளியேறியிருந்தார்.

ஞாயிறு முதல் வரையறுக்கப்பட்டளவில் மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து ஆரம்பம்

வரையறுக்கப்பட்ட அளவிலான அரச , தனியார் பஸ்கள் மற்றும் புகையிரதங்கள் உரிய சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களுக்கு அமைவாக ஞாயிற்றுக்கிழமை முதல் மாகாணங்களுக்கிடையிலான பொதுபோக்குவரத்து சேவையில் ஈடுப்படுத்தப்படும்.

இதன் போது சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களை பின்பற்றாதவர்களுக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

மாகாணங்களுக்கிடையிலான பொதுபோக்குவரத்து சேவை தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஹிஷாலினியின் சடலத்தை பொலிஸ் பாதுகாப்புடன் பேராதனை போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு உத்தரவு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய போது எரிகாயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்த டயகம பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி ஹிஷாலினியின் சடலத்தை தோண்டி, பொலிஸ் பாதுகாப்புடன் பேராதனை போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு நுவரெலியா நீதவான் லுஷாகா குமாரி தர்மகீர்த்தி இன்று உத்தரவிட்டார்.

தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கு அமைய, டயகம பொது மயானத்தில் புதைக்கப்பட்டுள்ள சிறுமியின் சடலத்தை நாளை (30) காலை 8.30-க்கு தோண்டுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அரச சிரேஷ்ட சட்டத்தரணி ஹங்ச அபேரத்ன, B அறிக்கையை சமர்ப்பித்து முன்வைத்த விடயங்களை ஆராய்ந்த பின்னர் நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பணிப்பாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் நெவில் டி சில்வா, கொழும்பு தெற்கு மகளிர் மற்றும் சிறுவர் பிரிவின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட தரப்பினர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.

டயகம சிறுமி ஹிஷாலினியின் சடலத்தை தோண்டி எடுத்து மீளவும் பிரேத பரிசோதனையை நடத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

அதற்கமைய, பிரேத பரிசோதனையை மேற்கொள்வதற்கான மூவரடங்கிய விசேட நிபுணர் குழு நேற்று பெயரிடப்பட்டது.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின், சட்ட மருத்துவத்துறை தொடர்பான பேராசிரியர் ஜீன் பெரேரா, கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின், சட்ட மருத்துவத்துறை தலைவரும், விரிவுரையாளருமான டொக்டர் சமீர குணவர்தன பேராதனை போதனா வைத்தியசாலையின் சட்ட மருத்துவ துறையின் விசேட சட்ட வைத்திய அதிகாரி பிரபாத் சேனசிங்க ஆகியோர் இந்த குழுவிற்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

சிறுமி உயிரிழந்த விதம், துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளாரா, அவ்வாறு ஏற்பட்டிருப்பின் எந்த காலப்பகுதியில் சம்பவம் இடம்பெற்றுள்ளது, ஏனைய சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டுள்ளாரா உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் மூவரடங்கிய விசேட நிபுணர் குழுவிடமிருந்து விசாரணை அறிக்கை பெறப்படவுள்ளது.

நிபுணர் குழுவின் விசாரணை அறிக்கை கிடைத்ததன் பின்னர் மேலதிக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் மனைவி, மனைவியின் தந்தை மற்றும் சிறுமி ஹிஷாலினியை தொழிலுக்காக டயகம பகுதியிலிருந்து கொழும்பிற்கு அழைத்து வந்த தரகர் ஆகியோரே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சிறுமியின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுத்துள்ளமையால், நீதி கோரி ஆர்ப்பாட்டங்களும் வலுப்பெற்றவண்ணமுள்ளன.

Posted in Uncategorized

வட்டுவாகல் காணி சுவீகரிப்பினை தடுக்க போராட்டம்-போக்குவரத்து தடை- அமைதியின்மை!

முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் காணியினை அரசாங்கம் சுவீகரிக்கும் நடவடிக்கைக்காக இன்று 29.07.21அளவீடு செய்யப்படவுள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வட்டுவாகல் கடற்படைதளம் அமைக்கப்பட்டுள்ள காணியினை விடுவிக்க காணியின் உரிமையாளர்கள் மக்கள் பிரதிநிதிகளால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.
காணி அளவீட்டுப்பணிகள் இன்று முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் வட்டுவாகல் கடற்படைத்தளம் முன்பாக ஒன்று கூடிய மக்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல் தங்கள் எதிர்பினை வெளிப்படுத்தி காணி அளவீட்டினை எதிர்த்துள்ளார்கள்.

போராட்டக்காரர்களின் எதிர்ப்பு நடவடிக்கையால் முல்லைத்தீவு-புதுக்குடியிருப்பு முதன்மை சுமார் நான்கு மணிநேரம் பயணம் தடைப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து பொலீசார்,கடற்படையின் கலகம் அடக்கும் படையினர் சிறப்பு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

போராட்ட காரர்களிடம் கருத்து தெரிவித்த நில அளவைத்திணைக்கள அதிகாரிகள் மக்கள் எதிர்பினை வெளிப்படுத்துவதால் நில அளவையினைகைவிட்டு காணி உரிமையாளர்களுடன் மாவட்ட செயலாளருடன் கலந்துரையாடி அதன் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்றத்தில் எடுத்துரைத்து ஒரு முடிவிற்கு வரவேண்டும் என சொல்லியுள்ளார்கள்.

இவ்வாறு சொல்லிய நில அளவைத்திணைக்களத்தினர்போராட்ட காரர்களை திசைதிருப்பிவிட்டு கடற்படையினரின் வாகனத்தில் ஏறி கடற்படை முகாமிற்குள் சென்று காணி அளவீட்டினை முன்னெடுத்துள்ளார்கள்.மக்களை ஏமாற்றும் நடவடிக்கையில் அரச திணைக்கள அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதுடன் காணிசுவீகரிப்பிற்கு மக்கள் கருத்தறியாமல் காணியினை அளவீடு செய்யும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் போராட்ட காரர்கள் வட்டுவாகல் முதன்மை வீதியில் குறுக்கே அமர்ந்து போராட்டத்தினை மேற்கொண்டுள்ளார்கள்.இன்று நண்பகள் 1.00 மணிவரைக்கும் வீதியனை மறித்து போராட்டத்தினை மேற்கொண்டுவருவதால் குறித்த வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளார்கள்.

இன்னிலையில் மாவட்ட செயலக அதிகாரியான மேலதிக அரசாங்க அதிபர் சம்பவ இடத்திற்க வருகை தந்து போராட்ட கரர்களுடன் கலந்துரையாடியும் முடிவு எட்டப்படாத நிலையில் போராட்டம் தொடர்ந்துவருகின்றது.

வட்டுவாகல் கடற்படை தளம் அமைந்துள்ள காணி தமிழ்மக்களுக்கு சொந்தமான காணியுடன் இரண்டு சிங்கள மக்களுக்கும் சொந்தமான காணியாகும் காணியின் உரிமையாளர்களான சிங்கள மக்களும் இன்று காலை குறித்த பகுதிக்கு வந்து தங்கள் காணியினை அளவீடுசெய்து அரசாங்கத்திற்கு கொடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

இந்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான தமிழரசுக் கட்சி சாள்ஸ்நிர்மலநாதன்,ரெலோ வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம்,தமிழ் தேசிய முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,கஜேந்திரன்,மற்றும் முன்னால் மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன்,சிவாஜிலிங்கம், உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டுள்ளார்கள்.

Posted in Uncategorized

மீண்டும் தோண்டி எடுக்கப்படவுள்ள ஹிஷாலினியின் சடலம்

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த போது தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த சிறுமியின் சடலம் நாளை மறுதினம் (30) நீதிமன்ற உத்தரவின் பேரில் தோண்டி எடுக்கப்படும் என்று டயகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுஜீவ குணதிலக தெரிவித்தார்.

டயகம தோட்டத்தில் வசித்த ஹிஷாலினி ஜூட் குமார் (16), கொழும்பில் உள்ள முன்னாள் அமைச்சர் வீட்டில் பணிபுரிந்து கொண்டிருந்த போது பலத்த தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

இதனையடுத்து, சிறுமியின் உடல் டயகம தோட்டத்தின் மூன்றாம் பகுதியில் உள்ள பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

சிறுமி தொடர்பான விசாரணையில் பல சிக்கல்கள் உள்ளதால், சிறுமியின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்த கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்காக விசேட வைத்திய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழுவினால் எதிர்வரும் 30 ஆம் திகதி சிறுமியின் சடலம் இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக தோண்டி எடுக்கப்படவுள்ளது.

இதனால், சிறுமி அடக்கம் செய்யப்பட்டுள்ள டயகம பொது மயானத்திற்கு கடும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக டயகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுஜீவ குணதிலக மேலும் தெரிவித்தார்.

1983இல் தப்பிய சிப்பாய் அனுபவத்தை பகிந்தார்

பயங்கரவாத அமைப்பொன்றை முழுமையாகத் தோற்கடித்த ஒரே நாடு என்றவகையில் இலங்கை பெயர்பெற்று 12 வருடங்கள் கடந்துள்ளன.

எனினும், 30 வருடங்களாக இடம்பெற்ற யுத்தத்தின் ஞாபகங்கள் இன்னும் பலவற்றை நினைவூட்டிக் கொண்டிருக்கின்றன.

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஈழத்துக்கான முதலாவது நகர்வு, 1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலையுடன் ஆரம்பமானது.

யாழ்ப்பாணம், திருநெல்வேலியில் 1983 ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் திகதியன்று, இராணுவத்தினர் 13 பேர் கொல்லப்பட்டனர். அதுவே இலங்கையின் விதியை மாற்றியது.

கறுப்பு ஜூலை அரங்கேற்றப்பட்டு (ஜூலை 23) சனிக்கிழமையுடன் 38 வருடங்கள் நிறைவடைந்தன.

எனினும், யாழ்ப்பாணம், திருநெல்வேலி தாக்குதல்களிலிருந்து தப்பிய இராணுவ அதிகாரியான உபாலி பெரேரா அங்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் விபரிக்கையில்…

அக்காலத்தில், இராணுவத்தில் சேர்ந்து கொள்வது என்பது மிகவும் சிரமமான காரியமாகும். நேர்முகத்தேர்வுகள் பலவற்றுக்கு முகங்கொடுக்கவேண்டும். உயர்கல்வித் தகுதிகள், விளையாட்டுத் திறமை, குடும்பப் பின்னணி ஆகியவை கவனத்தில் கொள்ளப்படும் என, இராணுவத்தில் சேர்ந்துகொள்வதற்கான நெருக்கடிகளை தொடர்ச்சியாக விவரித்தார்.

ஒருவாறு இராணுவத்தில் சேர்ந்துகொண்ட தான், பல்வேறான பயிற்சிகளைப் பெற்றுகொண்டதாகத் தெரிவித்ததுடன், அதன் கஷ்டங்களையும் விவரித்தார்.

தமிழ் இளைஞர்கள், தனிநாட்டுக்காக குழுவாகச் செயற்படுகின்றனர் என்பது தொடர்பில் 80ஆம் ஆண்டுகளில் எங்களுக்குத் தகவல்கள் கிடைத்தன.

அவர்களின் ஆரம்ப இலக்கு, தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் தமிழ்ப் பொலிஸார் என்பதால், அவ்வளவு பெரிதாக அது விளங்கவில்லை.

நான், இணைக்கப்பட்டிருந்த படைப்பிரிவு யாழ்ப்பாணத்துக்குச் சென்றவேளையில், அங்கு படையினரின் ஐந்து முகாம்கள் இருந்தன. அவற்றில், மாதகல் பகுதியில் அமைந்திருந்த முகாமிலேயே நான் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்தேன் என தனது நினைவலைகளைப் பகிர்ந்துகொண்டார்.

பாதுகாப்புப் பிரிவினருக்கு தேவைப்பட்ட சீலன் என்றழைக்கப்பட்ட சார்ள்ஸ் அன்ரனி, 1983 ஜூலை 15ஆம் திகதியன்று இராணுவ கமாண்டோ படையணியின் தாக்குதலில் மரணமடைந்தார்.

சார்ள்ஸ் அன்ரனி, பிரபாகரனின் நெருங்கிய நண்பன். (பிரபாகரனின் மூத்த மகனுக்கும் சார்ள்ஸ் அன்ரனி) எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர், புலிகளின் சிறப்புமிக்க படையணியாக சார்ள்ஸ் அன்ரனி படையணி உருவானது.

சார்ள்ஸ் அன்ரனியின் மரணத்தால் கடுங்கோபமடைந்திருந்த பிரபாகரன், அதன் பதில் தாக்குதல்களை படையினர் மீது மேற்கொள்வதற்கு திட்டம் வகுத்திருந்தார்.

இந்நிலையில், ஜூலை 23ஆம் திகதியன்று புலிகள், மிக முக்கியமான தாக்குதல் ஒன்றை யாழ்ப்பாணத்தில் செய்வதற்குத் திட்டமிட்டுள்ளனர் என படையினரின் புலனாய்வுப் பிரிவினருக்கு இரகசியத் தகவலொன்று கிடைத்தது.

அதனைப்பற்றி நாங்கள் அலட்டிக்கொள்ளவில்லை. ஏனெனில், புலி இளைஞர்கள், இருந்திருந்து இராணுவத்தில் ஓரிருவர் மீது தாக்குதல் நடத்தியிருந்தனர். இராணுவப் படையணியின் மீதோ, முகாம்கள் மீதோ தாக்குதல்களை நடத்தியிருக்கவில்லை.

ஆனாலும், பொலிஸ் நிலையங்களின் மீது தாக்குதல்களை நடத்தி, ஆயுதங்களை எடுத்துச் சென்றிருந்தனர்.

ஆனாலும் புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில், ரோந்து நடவடிக்கைகளை நாங்கள் திட்டமிட்டிருந்தோம். எங்களுடைய குழுவில் 15 பேர் அடங்கியிருந்தோம்.

அக்குழுவின் கட்டளையிடும் அதிகாரியாக இரண்டாம் லெப்டினன்ட் வாஸ் குணவர்தன இருந்தார். எனக்கு நல்ல ஞாபகத்தில் இருக்கிறது. அன்றையதினம் அவர் மிகவும் சந்தோஷமடைந்திருந்தார்.

இரண்டு மூன்று நாள்களுக்கு முன்னர், ஆனந்தா- நாலந்தா கல்லூரிகளுக்கு இடையில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அதில், ஆனந்தா கல்லூரி வெற்றியீட்டியிருந்தது. “அந்த சந்தோஷத்தில் அவர் இருந்தார்”.

ரோந்து நடவடிக்கைகளுக்காக ஜீப் ஒன்றும் ட்ரக் ஒன்றும் எங்களுக்கு கிடைத்திருந்தது. அந்த ஜீப்பில் லெப்டினன்ட் வாஸ் உள்ளிட்ட ஐவர் ஏறிக்கொண்டனர். ட்ரக்கில் நான் 10ஆவது நபராக ஏறிக்கொண்டடேன்.

பலாலியிலிருந்து வழங்கப்பட்ட கட்டளைகளின் பிரகாரம், காங்கேசன்துறை வீதியால் யாழ்ப்பாணத்துக்குச் சென்று, பின்னர் நாக விஹாரைக்குச் சென்று குருநகர் முகாமில் பதிவு செய்யவேண்டும்.

அதற்காக இரவு 9 மணிக்கு புறப்பட்டோம். எவ்விதமான பிரச்சினைகளும் இல்லை. அவ்வாறே செய்து பதிவு செய்துவிட்டுப் புறப்பட்டோம்.

கடுமையாக இருள் சூழ்ந்திருந்த யாழ்ப்பாணம்-பலாலி வீதியில், பல்கலைக்கழத்துக்கு அண்மையில், திருநெல்வேலியை அண்மித்தோம்.

திருநெல்வேலியின் தபால் பெட்டி சந்திதான், புலிகளின் இலக்காக இந்தது. அவ்விடத்தின் வீதி தற்போது இருமருங்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆனால், 1983 ஆம் ஆண்டு இரண்டு புறங்களும் கட்டிடங்கள் மற்றும் மதில்களால் மறைக்கப்பட்டிருந்தன.

அங்கு தற்போது தொலைபேசி வசதிகள் உள்ளன. வர்த்தக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

வீதியின் குறுக்காக கான் வெட்டப்பட்டிருந்தது. அந்த தாக்குதல்களுக்கு செல்லக்கிளி என்பவரே தலைமை தாங்கினார்.

அவருடன் கிட்டு ஐயர், விக்டர், புலேந்திரன், சந்தோஷம், அப்பையா, பாஷிட் காக்கா உள்ளிட்ட 14 பேரடங்கிய குழுவொன்று இருந்தது.

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் கடத்தப்பட்ட எக்ஸ்ஃபோல்டர் உபகரணமே வெடிப்புச் சம்பவத்துக்காக பயன்படுத்தப்பட்டது. வீதியின் குறுக்காக வெட்டப்பட்டிருந்த கானின் ஊடாகவே, இருமருங்கிலும் இருந்த மதில்களுக்கு பின்பாக மறைந்திருந்தவர்கள் தொடர்புகளைப் பேணியிருந்தனர்.

நாங்கள் அவ்விடத்துக்கு இரவு திரும்பிய வேளையில், ரோந்து நடவடிக்கை நிறைவடைவதற்கு இன்னும் சில கிலோமீற்றர் தூரமே இருந்தது. ஆகையால், சகலரும் கவனயீனமாகவே இருந்தோம்.

இரவு 11 மணியிருக்கும் இரண்டு வாகனங்களும் ஏகநேரத்தில் வெடிக்குள் சிக்கிக்கொண்டன. ஜீப் முன்புறம் சேதமடைந்தது. பின்னால் சென்றுகொண்டிருந்த ட்ரக் வாகனமும் சிக்கிக்கொண்டது. (இங்கு விசேடமாக ஒன்றை சொல்லவேண்டும். சிலர் கூறுகின்றனர். இராணுவத்தைச் சேர்ந்த 13 பேரும் கண்ணிவெடியில் சிக்கி இறந்துவிட்டனர் என, கண்ணிவெடியில் சிக்கினால் யாரும் இறக்கமாட்டார்கள்) அவ்விடத்தில் ஜீப் சிக்கிகொண்டதை அடுத்து இருபுறங்களில் இருந்தும் துப்பாக்கிப்பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டன.

வீதியின் நடுவே சிக்கிக்கொண்ட எங்களால் எதனையுமே செய்யமுடியவில்லை. துப்பாக்கிகள், ரைபிள்கள் மற்றும் அவர்களால் தயாரிக்கப்பட்ட குண்டுகளைக் கொண்டே, எம்மீது தாக்குதல்களை நடத்தினர்.

நாங்கள், வாகனங்களிலிருந்து கீழே இறங்கித்தான் பதில் தாக்குதல்களை நடத்தினோம். எங்களிடமிருந்த ஒரேயொரு தடுப்பணை வாகனங்கள் மட்டுமேயாகும். எனினும் புலிகளின் தாக்குதல்களை தாக்கப்பிடிக்கமுடியவில்லை பதில்தாக்குதல்களும் சத்தங்களும் குறைந்தன.

ஆனால், எனது இரு கால்களையும் துப்பாக்கி ரவைகள் துளைத்துச் சென்றிருந்தன. என்னுடன் இருந்த லான்ஸ் கோப்ரல் சுமதிபாலவின் வயிற்றில் துப்பாக்கி சூடு பட்டிருந்தது. துடிதுடித்தார் அவரையும் தூக்கிக்கொண்டு தோட்டத்துக்குள் சென்றுவிட்டேன்.

அங்கிருந்த புதருக்குள் அவரை படுக்கவைத்துவிட்டு சத்தம்போடவேண்டாம் என்றேன். நான் அங்கிருந்த கூரையொன்றின் மீதேறிப் பார்த்துகொண்டிருந்தேன். அப்போதுதான் பயங்கரவாதிகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்வதை நிறுத்திவிட்டு, படையினருக்கு அருகில் வந்து, கத்தியால் வெட்டினர்.

சன்னங்களைக் கழற்றிகொண்டு ஆயுதங்களைச் சேகரித்துகொண்டிருந்தனர். அப்போதுதான் பார்த்தேன், என் கால்களில் இருந்து இரத்தம் பீச்சிட்டு ஓடிகொண்டிருந்தது. அங்கிருந்த வாழை மரத்திலிருந்து ஒரு பட்டியை பிய்த்து, இரத்தம் வெளியேறாத வகையில் காயத்துக்கு மேலே இறுகக்கட்டிக்கொண்டேன்.

துப்பாக்கி சத்தத்துக்கு நாய்கள் குரைத்தன. ஆனால் புலிகளுக்கு அது கணக்கே இல்லை. என் கால்களிலிருந்து இரத்தம் வெளியேறிக்கொண்டே இருந்தது. அதன்பின்னர் எனது பூட்ஸை கழற்றி, அதிலிருந்த லேஸ்களை எடுத்து கால்களை மீண்டும் கட்டினேன்.

அந்த சொற்ப நேரத்தில் பயங்கரவாதிகள் போய்விட்டனர். சத்தம் குறைந்துவிட்டது. இன்றும் அந்தக் காட்சிகள் யாவும் எனது கண்முன்னே ஒரு திரைப்படக் காட்சிகளைப் போலவே இருக்கின்றன.

சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து இரண்டு கிலோமீற்றருக்கு அப்பால் இருந்த பஸ் டிப்போவுக்குச் சென்று, அங்கிருந்து முகாமுக்குத் தகவலை கொடுத்தோம். அப்போது எமது அணியைச் சேர்ந்த இரண்டொருவரும் அவ்விடத்துக்கு கடுங்காயங்களுடன் வந்துவிட்டனர். நான், புதருக்குள் மறைத்துவைத்த வீரர் தொடர்பிலும் தகவல் கொடுத்தேன்.

தகவல் கிடைத்ததும் எம்மை மீட்க மற்றுமொரு அணி வந்தது. அந்த அணி, புதருக்கு இருந்தவரையும் மீட்டது. நாங்கள் அனைவரும், யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டோம். புதருக்கு மறைத்துவைத்த வீரர் அங்கு உயிரிழந்தார்.

அங்கிருந்தவர் ஒரு தமிழ் வைத்தியர், “பயப்பிடவேண்டாம் நான், உங்களை சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்போகின்றேன் என்றார். நன்றாகவே கதைத்தார். அதற்குப் பின்னர் சுயநினைவை நான் இழந்துவிட்டேன். சுயநினைவு திரும்புபோது எனது நெஞ்சின் மீது யுத்த களத்திலிருந்த பதவியுயர்வு வைக்கப்பட்டிருந்தது.

அன்று மாலைதான் நானும் சுமதிபாலவும், மரணமடைந்த 13 வீரர்களின் சடலங்களை விமானத்தின் மூலம் கொழும்புக்குக் கொண்டுவந்தோம். உயிர்பிழைத்த சுமதிபால தற்போது உயிருடன் இல்லை.

சடலங்கள் யாவற்றையும் பொரளை கனத்தை மயானத்தில் நல்லடக்கம் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்தது. எனினும், அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் கூடிவிட்டனர்.

கோபத்தில் இருக்கும் மக்கள் ஏதாவது செய்துவிட்டால் என்ன நடக்கும் என்பதற்காக, வானத்தை நோக்கி துப்பாகிப்பிரயோகங்களை மேற்கொண்டு அவர்களை பொலிஸார் கலைத்தனர்.

அங்கிருந்து கோபத்துடன் கலைந்து சென்றவர்கள், தமிழர்களின் கடைகளுக்குத் தீயிட்டனர். அதன்பின்னர், அதுவே இனங்களுக்கு இடையிலான மோதலாக மாறியது. (நன்றி: லங்காதீப)

Posted in Uncategorized

ரிஷாத் தரப்பினரை எதிர்க்கட்சி கூட்டணியிலிருந்து நீக்கிவிட்டோம் – எதிர்க்கட்சி தலைவர்

நாட்டின் ஜனநாயக ஆட்சிக்கு பாரிய சவாலை ஏற்படுத்தியுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவளித்த போதே ரிஷாத் பதியுதீனின் கட்சி உறுப்பினர்கள் எதிர்க்கட்சி கூட்டணியிலிருந்து விலக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கலில் ஒரு கட்டமாகவே பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ மீதான நெருக்கடிகள் அமைந்துள்ளன. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த உண்மைகளைக் கண்டறியாது இவ்வாறான பழிவாங்கல்களிலேயே அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளதாகவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவினை இன்று புதன்கிழமை குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.

இதன் போது அவருடன் குற்ற புலனாய்வு திணைக்களத்திற்கு சென்ற போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தமிழர்களின் வரலாற்றை அழிக்க சிங்கள அரசாங்கம் முயற்சி -டானியல் வசந்த்

தமிழர்களின் வரலாற்றை இல்லாது செய்வதில் சிங்கள பேரினவாத அரசாங்கம் குறியாக இருக்கின்றது என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களின் பிரத்தியேக செயலாளர் டானியல் வசந்த் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் உள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் மாவட்ட காரியாலயத்தில் இன்று நடைபெற்ற வெலிக்கடைச் சிறைப் படுகொலையின் 38வது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வின் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கும் போது,

இந்த மண்ணை நாங்கள் பாதுகாக்காமல், இந்த மண்ணை நாங்கள் மீட்காமல் எமது இனத்தின் வளர்ச்சிப் பாதையில் செல்லும் என்று நாங்கள் ஒரு போதும் கருதிவிட முடியாது.

இந்த மண்ணை மீட்பதற்காக எத்தனையோ உயிர்களை நாங்கள் பலி கொடுத்திருக்கிறோம். எதுவிதமான அடக்கு முறைகளுக்கும் அடிபணியாது, இந்த மண்ணுக்காக உண்மையிலேயே தமது இன்னுயிர்களை கொடுத்த மாபெரும் தலைவர்கள் தளபதி குட்டிமணி தலைவர் தங்கதுரை அவர்களோடு இணைந்த ஏனைய போராளிகளும், அன்று இந்த சிங்கள ஏகாதிபத்தியத்திற்கு அடிபணிந்து இருந்தால் சிங்களவர்களின் அமைச்சர்களாகவோ அல்லது தளபதிகளாகவும் வாழ்ந்திருக்க முடியும். அவர்களது உயிர்களை இந்த மண்ணிற்காக கொடுத்திருக்கின்றார்கள் அவர்களை நினைவு கூருவது எமது கடமை.

எனவே ஒரு இனம் வாழ வேண்டும். வளர வேண்டுமென்றால் அவர்களது வரலாறு நிலைத்திருக்க வேண்டும். எமது வரலாறுகளை அழித்தொழிக்கும் செயற்பாடுகளை இந்த சிங்கள இனவாத அரசாங்கம் முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றது.

கறுப்பு ஜூலை படுகொலையின் நினைவேந்தல் சுவரொட்டிகளை நாங்கள் ஒரு புறமாக ஒட்டிச் செல்லும் பொழுது மறுபுறமாக சிங்கள இனவாதத்தின் காவல் துறையினரும் புலனாய்வுத் துறையினரும் அந்த சுவரொட்டிகளை கிழித்துக் கொண்டு வருகிறார்கள். அதற்கான காரணம் இந்த தலைவர்களின் வரலாறு எமது அடுத்த சந்ததியினருக்கு தெரிந்து விடக்கூடாது என்பது தான்.

மேலும் இன்று எமது நிலங்களை சிறுக சிறுக கைப்பற்றி எமது இருப்பை கேள்விக் குறியாக்கி கொண்டிருக்கின்றார்கள். எமது மண்ணையும் மக்களையும் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் பேணி பாதுகாக்க வேண்டிய ஒரு கடப்பாட்டில் நாங்கள் இருக்கின்றோம்.

எனவே இந்த தருணத்தில் நாம் அனைவரும் ஒற்றுமையாக செயற்பட்டு எமது மண்ணையும் மக்களின் இருப்பையும் நிலை நிறுத்த பாடுபட வேண்டும் என்று ஒரு உறுதி மொழியை எடுத்துக் கொள்வோம் என்றார்.

தமிழர்களுக்கு எதிராக சட்டவிரோத நடவடிக்கைகள் இடம்பெறாது என்பதற்கு உத்தரவாதமில்லை- ரெலோ தியாகராஜா நிரோஷ்

தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் இனிஒருபோதும் இடம்பெறாது என்பதற்கு உத்தவாதம் இல்லை என்பதற்கு இனத்திற்கு மறுக்கப்படும் நீதி உணர்த்துகின்றது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட அமைப்பாளரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளரும் ஆன தியாகராஜா நிரோஷ் தெரிவித்துள்ளார்.

வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையில் இடம்பெற்ற கறுப்பு ஜுலை நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தவிசாளர் தியாகராஜா நிரோஷ் மேலும் கூறியுள்ளதாவது, “படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொள்வது மட்டுமல்ல. அவர்களை நினைவு கூர்வதும் இராணுவ மயமாக்கலின் ஊடாக தடை செய்யப்படுகின்றது.

இன்றும் கூட சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நினைவேந்தல் நிகழ்வினை நாம் செய்ய முற்பட்ட வேளையிலும் பொலிஸார் எமது அலுவலகத்தை கண்காணித்தனர்.

இத்தகைய நிலைமைகள் காணப்படுகின்றமையினால், பல உறுப்பினர்கள் அச்சத்தின் நிமிர்த்தம் இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை.

உலகம் அறிந்த கறுப்பு யூலை போன்ற இனவாதத் தாக்குதல்கள் இனியும் தமிழ் மக்கள் மீது முடுக்கிவிடக்கூடாது என்பதற்காகவும் நினைவு கூர்தல் சுதந்திரத்தை பாதுகாப்பதற்காகவும் அனுஸ்டிக்கின்றோம்.

இதேவேளை யுத்த காலத்தில் ஆட்சியில் இருந்த அரசாங்கத்தின் முழுமையான அனுசரனையோடு தமிழ் மக்கள் 2 ஆயிரம் தொடக்கம் 3 ஆயிரம் வரையில் மிகக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டனர்.

மேலும் எங்களது தலைவர்கள் சிறையில் கண்கள் தோட்டப்பட்டு கொல்லப்பட்டனர். தமிழ் மக்களின் சொத்துக்கள் வாக்காளர் இடாப்பில் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு இழிக்கப்பட்டன. இவைகள் திட்டமிடப்பட்ட இன அழிப்பு நடவடிக்கைகள் ஆகும்.

இவை போன்று தமிழர் வரலாற்றில் ஏராளமான கொடுமைகள், மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளன. இவைகளுக்கு 38 வருடங்கள் கடந்தபோதும் எமக்கு நீதி கிடைக்கவில்லை.

எதிர்வரும் காலங்களில் இத்தகைய செயற்பாடுகள் இடம்பெறாது என்பதற்கும் உத்தரவாதமில்லை என்பதனை இனத்திற்கு மறுக்கப்படும் நீதி உணர்த்துகின்றது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.