உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்க மீளாய்வு குழு பரிந்துரை

உள்ளூராட்சி மன்றங்களுக்கு உறுப்பினர்களை தெரிவுசெய்யும்போது தற்போது பின்பற்றப்படும் 60, 40 கலப்பு விகிதாரசார முறையை எதிர்வரும் காலத்தில் 70, 30 என்ற வீதத்தில் மாற்றியமைக்குமாறு உள்ளூராட்சி மன்ற தேர்தல் முறை மீளாய்வு குழு தனது அறிக்கையில் அரசாங்கத்துக்கு பரிந்துரை செய்திருக்கின்றது.

உள்ளூராட்சிமன்ற தேர்தல் முறைமையை மீளாய்வு செய்ய குழு நியமனம் | Virakesari.lk

அதன் பிரகாரம், உள்ளூராட்சி மன்றங்களுக்கு உறுப்பினர்களை தெரிவு செய்யும்போது நூற்றுக்கு 60 தொகுதி அடிப்படையிலும் ஏனைய 40வீதம் விகிதாசார முறையிலும் இடம்பெறுகின்றது.

அதனை நூற்றுக்கு 70 தொகுதி அடிப்படையிலும் நூற்றுக்கு 30 விகிதாசார முறையின் கீழ் என்ற அடிப்படையில் மாற்றயமைக்குமாறு குழு பரிந்துரை செய்திருக்கின்றது.

நிலையற்ற உள்ளூராட்சி மன்ற கட்டமைப்பொன்று ஏற்படுவதற்கு இருக்கும் வாய்ப்பை குறைப்பதே இதன் நோக்கமாகும் எனவும் குழு தெரிவித்திருக்கின்றது.

இதேவேளை, உள்ளூராட்சி மன்றங்களில் தற்போது இருக்கும் 8 ஆயிரம் பேர் வரையான உறுப்பினர்களின் எண்ணிக்கையை எதிர்வரும் தேர்தலின்போது 6 ஆயிரத்து 500வரை குறையவேண்டும் எனவும் பரிந்துரை செய்திருக்கின்றது.

தற்போதுள்ள தேர்தல் முறையின் கீழ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் தொகையில் தேவையற்ற அதிகரிப்பு இடம்பெற்றிருக்கின்றது. அது ஆயிரத்து 500வரை குறையவேண்டும் எனவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் முறை தொடர்பாக மீளாய்வுசெய்து அறிக்கை சமர்ப்பிக்க நியமிக்கப்பட்ட குழு, அதன் அறிக்கையை மாகாணசபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனிடம் கையளித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

தமிழகத்தில் வாழும் இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை கோரி தீர்மானம் – அமைச்சர் மஸ்தான்

தமிழகத்தில் வாழும் இலங்கை தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வலியுறுத்தி எதிர்வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் கே எஸ் மஸ்தான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் கே எஸ் மஸ்தான் தெரிவித்ததாவது,

‘ தமிழகத்தில் உள்ள 108 அகதி முகாம்களில், 106 முகாம்களில் இலங்கைத் தமிழர்கள் வாழ்கின்றனர். இவர்களுக்கான அடிப்படை வசதிகள் கிடைக்கப் பெற்றார்களா..? என அண்மையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன்போது அவர்களின் கோரிக்கைகளை ஏற்று, இவர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக 5.42 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் மு க ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரின் ஆளுநர் உரையில்,’ இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க தேவையான சட்டங்களும், திருத்தங்களும் மேற்கொள்ள மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தும்’ என கூறப்பட்டுள்ளது.

இலங்கை தமிழர்கள் முகாமை விட்டு வெளியே சென்று வீடு திரும்புவதற்காக உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தி, அவர்களுக்கு கால அவகாசம் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு குடியுரிமை வழங்குவது குறித்து வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்படும்’ என்றார்.

வட்டுவாகல் காணிகளின் சுவீகரிப்புடன் மக்களின் வாழ்வாதாரமும் பறிபோகிறது ரெலோ இளைஞர் அணி தலைவர் சபா குகதாஸ்

முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்கால் கிழக்கு வட்டுவாகல் கிராமத்தில் தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகள் உள்ளடங்கலான 617 ஏக்கர் கோட்டாபய கடற்படை தளத்தை விரிவாக்கம் செய்யும் திட்டத்தில் 29/07/2021 சுவீகரிக்க நில அளவைத் திணைக்களம் மக்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. இதனை தடுத்து நிறுத்த அனைவரும் ஒன்றினைய வேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணித் தலைவரும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான சபா குகதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

2017 , 2018 ஆம் ஆண்டுகளில் அபகரிக்கும் முயற்சி நடைபெற்றது ஆனால் மக்களின் பாரிய எதிர்ப்பு காரணமாக தடைப்பட்டது ஆனால் போராட்டத்தில் பங்கு பற்றியவர்களுக்கு நீதி மன்ற வழக்கு தொடர்கிறது.

2017/08/04 திகதியிடப்பட்ட 2030/44 வர்த்தமானியில் 271,6249 ஹொக்டெயர் நிலத்தை வட்டுவாகல் பிரதேசத்தில் சுவீகரிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வட்டுவாகல் பகுதியில் அபகரிக்க முயற்சிக்கும் காணிகளுக்கு அப்பால் அந்த மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் கடற்தொழில் , விவசாயம் போன்றனவும் பாரிய அளவில் அபகரிப்படவுள்ளன. யுத்தத்தால் பாரிய அழிவை சந்தித்த மக்களின் மீள் வாழ்வை வளம்படுத்துவதை விட்டு இருப்பதையும் பறிக்கும் செயல் தமிழர்களின் இருப்பை இல்லாதொழிக்கும் நடவடிக்கை. எதிர்காலத்தில் பாரிய சிங்கள கடற்படைக் குடியிருப்பு உருவாக்கப்படுவதற்கான இராணுவத் திட்டம் என்பது மறுப்பதற்கில்லை.

அடுத்த மாதம் பாடசாலைகளை திறக்க நடவடிக்கை! ஜி.எல். பீரிஸ்

ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்தியு பின்னர் பாடசாலைகளைத் திறப்பதற்கு ஓகஸ்ட் மாதத்தில் ஆரம்ப நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

இன்று (திங்கட்கிழமை) பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

கொழும்பு பிராந்தியத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் இன்றும் நாளையும் தடுப்பூசி போடப்படும் என்றும் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

நாட்டில் 242,000 ஆசிரியர்கள் உள்ளனர் என்றும் அவர்களில் பெரும்பாலோருக்கு ஏற்கனவே தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்கள் முன்னெடுத்த போராட்டத்தில் இடம்பெற்ற கைது நடவடிக்கை காரணமாக ஒன்லைன் கற்பித்தல் நடவடிக்கைகளில் இருந்து விலகியுள்ளனர் என்றும் ஊடகவியலாளர் கேள்வியெழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர், சில ஆசிரியர்கள் மட்டுமே இன்று கற்பிப்பிலிருந்து விலக நடவடிக்கை எடுத்துள்ளனர் என்றும் இருப்பினும், ஒன்லைன் கல்வியைத் தொடர வேண்டும் என்றாலும் அது நிரந்தர தீர்வு அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.

பொது மன்னிப்பு வழங்கப்பட்ட துமிந்த சில்வா பிரதமரை சந்தித்தார்!

அண்மையில் ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்ட இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா பிரதமர் மஹிந்த ராஜபக்சவை இன்று சந்தித்தார்.

இந்த சந்திப்பு அலரி மாளிகையில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து துமிந்த சில்வா தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா கடந்த ஜூன் 24ம் திகதி சிறப்பு ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டார்.

கொலை குற்றத்திற்காக தண்டனை பெற்றவருக்கு பொது மன்னிப்பு வழங்க இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எடுத்த முடிவை ஐ.நா மற்றும் மனித உரிமைக் குழுக்கள் விமர்சித்தன, இது சட்டத்தின் ஆட்சியைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாக எச்சரித்தது.

அரசியல் பழிவாங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு, துமிந்த சில்வாவை விடுவிக்க வேண்டும் என்று பரிந்துரைத்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

Posted in Uncategorized

சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக 800 மில்லியன் டொலர் நிதியுதவி: அஜித் நிவார்ட் கப்ரால்

நாட்டின் பொருளாதார இயலுமையை வலுப்படுத்திக் கொள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக 800 மில்லியன் அமெரிக்க டொலர் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் கிடைக்கப் பெறவுள்ளதாக நிதி மூலதனச்சந்தை இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிகையில், கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் பூகோளிய மட்டத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் சமூக தாக்கத்தை கருத்திற் கொண்டு சர்வதேச நாணய நிதியம் தனது உறுப்பு நாடுகளுக்கு 650 பில்லியன் அமெரிக்க டொலரை நன்கொடை அடிப்படையில் வழங்க தீர்மானித்துள்ளது. இதனடிப்படையில் இலங்கைக்கும் அந்நிவாரண நிதி கிடைக்கப்பெறவுள்ளது.

உலக பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள வேளையில் சர்வதே நாணய நிதியம் தனது உறுப்பு நாடுகளுக்கு இவ்வாறு நிவாரண அடிப்படையில் நிதி வழங்குவது வழமையானது. இதனடிப்படையில் 510 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி ஏற்கனவே கிடைக்கப் பெற்றுள்ளது.

இந்நிதியை நாட்டின் பொருளாதார இயலுமையை மேம்படுத்துவதற்காகவும், தற்போதைய நெருக்கடி நிலையினை வெற்றிக் கொள்வதற்காகவும் பயன்படுத்திக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த மாதத்தில் இருந்து நேற்று வரையில் சர்வதேச சந்தையில் ஒரு எரிபொருள் தாங்கியின் விலை 10 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் எரிபொருளில் விலையை குறைப்பதென்பது சிக்கலானது.

தேசிய பொருளாதாரத்தில் இயலுமையை மேம்படுத்தும் நோக்கில் எரிபொருளின் விலை கடந்த மாதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்ட காலத்திலும் கடந்த 21 மாத காலமாக எரிபொருளின் விலை அதிகரிக்கப்படவில்லை. நெருக்கடியான சூழ்நிலையிலும் நாட்டு மக்களுக்கு எரிபொருள் விலை குறைப்பின் ஊடாக நிவாரணம் வழங்கப்பட்டது என்றார்.

Posted in Uncategorized

ராஜபக்ச குடும்ப நிறுவனமாக மாறி வரும் இலங்கை அரசாங்கம் – நியூயோர்க் டைம்ஸ்

இலங்கையின் தற்போதைய அரசாங்கம் ராஜபக்ச குடும்பத்தின் நிறுவனமாக மாறி வருவதாக நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

இலங்கையில் ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்சவின் மூன்று சகோதரர்கள் அரசாங்கத்தில் உயர் பதவிகளை வகித்து வருவதாகவும் அவர்களின் புதல்வர்களுக்கும் அதிகாரமிக்க பதவிகள் வழங்கப்பட்டுள்ளன எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இலங்கையின் நிதியமைச்சராக பசில் ராஜபக்ச பதவியேற்றுள்ளமை தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை இது, குடும்ப ஆட்சியை உறுதிப்படுத்தும் நடவடிக்கை எனவும் கூறியுள்ளது.

கோட்டாபய ராஜபக்ச இலங்கையின் ஜனாதிபதியாக பதவி வகிப்பதுடன் அவரது சகோதரரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச பிரதமராக பதவி வகித்து வருகிறார். மேலும் மற்றுமொரு சகோதரரான சமல் ராஜபக்ச மற்றும் மகிந்த ராஜபக்சவின் புதல்வர் நாமல் ராஜபக்ச ஆகியோர் அமைச்சர்களாக பதவி வகித்து வருகின்றனர்.

சமல் ராஜபக்சவின் புதல்வர் ஷசீந்திர ராஜபக்ச ராஜாங்க அமைச்சராக பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில், அண்மையில் அமெரிக்காவில் இருந்து திரும்பிய பசில் ராஜபக்ச, நாட்டின் மிக முக்கிய அமைச்சு பதவிகளில் ஒன்றான நிதியமைச்சு பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

இவர்களை தவிர ராஜபக்ச சகோதரர்களில் தங்கையின் புதல்வரான நிபுண ரணவக்க நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். இலங்கையின் அரசத்துறையில் உள்ள நிறுவனங்களின் கிட்டத்தட்ட 80 வீதமான நிறுவனங்கள் ராஜபக்ச குடும்பத்தினரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதாக நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவர்த்து சேவைகள் புதன்கிழமை முதல்

மட்டுப்படுத்தப்பட்ட மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவர்த்து சேவைகள் எதிர்வரும் புதன்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்தியவசிய தேவைகளுக்கு பயணிப்பவர்களுக்காக இவ்வாறு பொதுப் போக்குவர்த்து சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கண்டியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

புகையிரத சேவைகளும் அன்றைய தினம் ஆரம்பிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதற்கு மக்களிற்கு உரிமையுள்ளது- ஐநா பிரதிநிதி

அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்வதற்கு மக்களிற்கு உள்ள உரிமைக்கு ஆதரவாக இலங்கைக்கான ஐக்கியநாடுகளின் நிரந்தர வதிவிடப் பிரதிநி ஹனா சிங்கர் கருத்து வெளியிட்டுள்ளார்.

ஒன்றுகூடுவதற்கான உரிமையில் ஆர்ப்பாட்டங்களிற்கான உரிமையும் அடங்கியுள்ளது என அவர் டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

கருத்துசுதந்திரம் பொதுமக்கள் கொள்கைகளில் தாக்கம் செலுத்துதல் போன்ற ஏனைய உரிமைகளை பயன்படுத்துவதற்கு அமைதியாக ஒன்றுகூடுவதற்கான உரிமை உதவுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனாவைரசினை கட்டுப்படுத்;துவதற்கான கட்டுப்பாடுகள் பொதுமக்களின் சுகாதாரத்தை பாதுகாக்கின்ற நியாயமான நடவடிக்கைகளிற்கு அப்பால் செல்லாமலிருப்பது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

அரசியல் கட்சிகளும் கூட்டுக்களும் கட்டமைப்பை மாற்ற வேண்டியதில்லை: பொதுத்தளத்தில் பணியாற்றவே அழைப்பு – ரெலோ

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பொதுத்தளமொன்றில் அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகளும் இணைந்து பணியாற்றுவதையே இலக்காக கொண்டு ஒருங்கிணைக்கும் பணியை ரெலோ முன்னெடுத்துள்ளதே தவிர, எந்தவொரு அரசியல் கட்சிகளினதும், கூட்டுக்களினதும் கட்டமைப்புக்களை மாற்ற வேண்டிய அவசியமில்லை என்று ரெலோ தெரிவித்துள்ளது.

ரெலோவின் முயற்சியில், இலங்கைத் தமிழரசுக்கட்சி, புளொட், ரெலோ மற்றும் தமிழ் மக்கள் விடுதலைக் கூட்டணி ஆகிய தரப்புக்கள் பொதுத்தளத்தில் பணியாற்றுவது பற்றி பேச்சுக்களை முன்னெடுத்திருந்தது. இந்நிலையில் கொழும்பில் கூடிய தமிழரசுக்கட்சியின் அரசியல் பீடத்தில் இவ்விடயம் சம்பந்தமாக பலத்த விமர்சனங்களும், எதிர்மறையான நிலைப்பாடுகளும் பிரதிபலிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் கட்சிகளை ஒருங்கிணைக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்த ரெலோ அடுத்த கட்டமாக எவ்விதமான செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளது என்பது தொடர்பில் வினவியபோது அக்கட்சியின் ஊடகப்பேச்சாளர் சுரேந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ்த் தேசியத்தளத்தில் உள்ள அனைத்துக்கட்சிகளும் மக்களின் பிரச்சினைகள் விடயத்தில் ஒரே நிலைப்பாட்டினையே கொண்டிருக்கின்றன என்பது அத்தரப்புக்கள் பல்வேறு இடங்களில் வெளிப்படுத்தப்படும் கருத்துக்கள், செயற்பாடுகள் மூலமாக உணர்ந்து கொள்ளக்கூடியதாக உள்ளது.

அவ்வாறான நிலையில் தான் ரெலோ பொதுப்பிரச்சினைகள் தொடர்பில் பொதுத்தளமொன்றில் அனைத்துக் கட்சிகளும் இணைந்து செயற்படுவதென்றும் பிரதான விடயங்களான வடக்கு கிழக்கு இணைப்பு, இனப்பிரச்சினைத்தீர்வு உள்ளிட்ட விடயங்களில் இணக்கப்பாட்டை எட்டக்கூடிய விடயங்களில் இணைந்து செல்வதென்றும் கூட்டமைப்புக்கு வெளியில் உள்ள அரசியல் தரப்புக்களை ஒருங்கிணைக்கும் முயற்சிகளை முன்னெடுத்தது.

இந்தச் செயற்பாடானது புதிய கூட்டொன்றை முன்னெடுப்பது என்று கருதுவது தவறானதாகும். எந்தவொரு அரசியல் கட்சியும், கூட்டுக்களும் தமது கட்டமைப்புக்களை மாற்ற வேண்டியதில்லை. அக்கட்சிகளும், கூட்டுக்களும் இணைந்து செல்லக்கூடிய விடயங்களில் இணைந்து செயற்பட முடியும் என்ற புரிதல் முதலில் ஏற்பட வேண்டியது அவசியமாகின்றது.

குறிப்பாக, தமிழரசுக்கட்சி உட்பட அனைத்து கட்சிகளும் இந்த விடயத்தில் சந்தேகங்களின்றி சரியான புரிதலைக் கொள்ள வேண்டியது அவசியமாகின்றது. அதேநேரம், கடந்த காலத்தில் நடைபெற்ற திம்புப் பேச்சுவார்த்தையின்போது ஆயுத விடுதலை இயக்கங்களும், அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்தே பேச்சுக்களின் ஈடுபட்டன. திம்புக் கோட்பாட்டை உருவாக்கியிருந்தன.

அண்மைய காலங்களில் கூட கொள்கை அளவில் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக அங்கீகரிப்பதை மறுதலித்திருந்த தரப்புக்கள் அவர் தலைமையில் நடைபெறும் அரச எதிர்ப்பு போராட்டங்களில் பங்கெடுத்துள்ளன.

ஆகவே, தற்போதைய நிலைமையில் தமிழ் மக்களின் விடயங்களை கையாள்வதற்கு வலுவானதொரு தரப்பாக தமிழ்த் தேசியத்தரப்புக்கள் இருக்க வேண்டும் என்பதே ரெலோவின் நிலைப்பாடே தவிரவும் அதற்கு அப்பால் எவ்விதமான தனிப்பட்ட அரசியல் நலன்களும் இல்லை என்றார்.