தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதிகளிற்கு இந்திய குடியுரிமையை வழங்கவேண்டும் – மோடியிடம் ஸ்டாலின் வேண்டுகோள்

தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதிகளிற்கு இந்திய குடியுரிமையை வழங்கவேண்டும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இந்திய பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்திய பிரதமரை புதுடில்லியில் இன்று சந்தித்தவேளை ஸ்டாலின் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதிகளிற்கு இந்திய குடியுரிமையை வழங்கவேண்டும் குடியுரிமை திருத்தசட்டத்தை மீள பெறவேண்டும் என ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மீனவர் பிரச்சினைக்கு தீர்வை காணவேண்டும் கச்சதீர்வை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Posted in Uncategorized

எம்.பியாகின்றார் பஸில் – நிதி அமைச்சுப் பதவியும் ஒப்படைப்பு?

அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பிய பின்னர், தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பஸில் ராஜபக்ச சத்தியப்பிரமாணம் செய்வார் என்று ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன என்று பிரபல சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றதும் பஸில் ராஜபக்சவுக்கு நிதி அமைச்சு பதவி வழங்கப்படவுள்ளது எனவும், அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எனவும் மேற்படி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பஸில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராக வருவதற்காகப் பதவி துறக்கவுள்ள தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினருடன் இந்த விவகாரம் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச கலந்துரையாடியுள்ளார் எனவும் குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்கா சென்றுள்ள பஸில் ராஜபக்ச எதிர்வரும் 23ஆம் திகதி நாடு திரும்புகின்றார்.

2020 வாக்களர் பட்டியல் சரிவு- யாழ். மாவட்ட நாடாளுமன்ற ஆசனம் ஒன்று காலியானது

நாட்டிலுள்ள தேர்தல் மாவட்டங்களில் வருடாந்தம் பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கைக்கு அமைய யாழ் மாவட்டத்தில் ஆசனங்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளன.

அதேவேளை கம்பஹா மாவட்டத்தில் ஆசனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதற்கமைய யாழ் மாவட்டத்தில் 7 ஆக காணப்பட்ட ஆசனங்களின் எண்ணிக்கை 6 ஆகவும் , கம்பஹா மாவட்டத்தில் 18 ஆக காணப்பட்ட ஆசனங்களின் எண்ணிக்கை 19 ஆகவும் அதிகரித்துள்ளன.

2020 ஆம் ஆண்டுக்கான புதிய வாக்காளர் கணிப்பீட்டின் அடிப்படையில் இந்த அதிகரிப்பு இடம்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

நாட்டில் புதிதாக 172,000 வாக்காளர்கள் பதிவாகியுள்ளமைக்கமைய , இலங்கையில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 16, 400, 000 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரத்தாகும் இலகு ரயில் திட்டத்திற்காக 5,896 மில்லியன் ரூபாவை இலங்கை செலுத்த வேண்டியுள்ளதாக தகவல்

ஜப்பானின் நிவாரணக் கடனின் கீழ் கடந்த அரசாங்கம் செயற்படுத்த முயன்ற இலகு ரயில் திட்டத்தை இரத்து செய்வதற்கு தற்போதைய அரசாங்கம் தீர்மானித்தாலும் 5,896 மில்லியன் ரூபாவை செலுத்த வேண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த வருடத்தின் அரசாங்கத்தின் நிதி கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பிலான கணக்காய்வாளரின் அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5,896 மில்லியன் ரூபாவை இலகு ரயில் திட்டத்தின் ஆலோசனை சேவைக்கு வழங்க வேண்டியுள்ளதாக கணக்காய்வாளர் தெரிவித்துள்ளார்.

எனினும், இந்தத் தொகை கடந்த வருடம் அரசாங்கத்தின் நிதி கொடுக்கல் வாங்கல் பதிவுகளில் உள்வாங்கப்படவில்லையெனவும் கணக்காய்வாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழர் தாயக கோட்பாட்டை உடைப்பதே அதிகாரப் பறிப்பின் நோக்கம் ரெலோ இளைஞர் அணி தலைவர் சபா குகதாஸ்

தமிழர் தாயக கோட்பாட்டை உடைப்பதே அதிகாரப் பறிப்பின் நோக்கம் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணித் தலைவரும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான சபா குகதாஸ் கேள்வி

தமிழ் மக்கள் வாழும் மாகாணங்களின் அதிகாரங்களை மத்திய அரசாங்கம் மீளப் பெறுவதன் நோக்கம் தமிழர் தாயகக் கோட்பாட்டை உடைத்து சிங்கள குடியேற்றங்களை நிலைப்படுத்தி கொள்வதற்கு.

சிங்கள ஆட்சியாளர்கள் தொடர்ந்து இந்த நிகழ்ச்சி நிரலை யார் ஆட்சிக்கு வந்தாலும் நிறுத்தவில்லை மாறாக வேகமாக செயற்படுத்தியே வருகின்றனர். தற்போதைய ஆட்சியாளர்கள் கொரோனா பெருந் தொற்றைக் காரணம் காட்டி பயணத் தடை ஒன்றை வைத்துக் கொண்டு மிக வேகமாக முன்னேடுக்க ஆரம்பித்துள்ளனர்.

வடக்கு மாகாணத்தில் குறிப்பாக வன்னி மாவட்டத்தை இவர்கள் குறிவைத்துள்ளனர். வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் மாகாண அதிகாரங்கள் மத்திக்கு செல்வதை அந்த மாகாண மக்கள் ஆச்சரியமாக பார்க்கமாட்டார்கள் காரணம் எல்லாமே ஒரே இனம் தான் ஆனால் வடகிழக்கு அவ்வாறு அல்ல அதனால் தமிழர் தாயகம் என்பது முழுமையான தமிழ் பேசும் மக்களைக் கொண்ட மாவட்டம் அதனை இனங்களின் கலப்பு மாவட்டமாக மாற்ற வேண்டும். அதுவே அரசின் நோக்கம்.

இதன் முதற் கட்டமாக முல்லைத்தீவு மணலாறு, வவுனியா,மன்னார்,கந்தளாய்,சேருவில்,புல்மோட்டை ஆகிய இடங்கள் நூறு நவீன நகராக்கத் திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளது காரணம் குறிப்பிட்ட தமிழர் தாயகப்பகுதியில் தற்போது சிங்கள குடியேற்றங்கள் ஏற்கனவே அமையப் பெற்றுள்ளன அவற்றை மேலும் விரிவாக்கம் செய்து குடியேற்ற சிங்களவர்களை அதிகரித்தல் தான் நோக்கம். அத்துடன் உருவாகும் நகரங்களில் பாரிய தொழிற்சாலைகள் அமைக்கும் பணிகளும் திட்டங்களாக நிறைவேற்றப்பட்டுள்ளன.

இதனைவிட வன்னிமாவட்ட பொது வைத்திய சாலைகள் மத்திய அரசாங்கத்தின் அதிகாரத்திற்கு கீழ் கொண்டுவரப்பட்டமை. மாகாணப் பாடசாலைகள் தேசியப் பாடசாலைகளாக மாற்றப்பட்டமை மாகாண காணிகள் தொல்லியல்,வனவளத் திணைக்களத்தினுள் உள்வாங்கப்படுதல் போன்ற பல அதிகாரங்கள் பறிக்கப்படுகின்றன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மிக அதிகமாக பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டு வருகின்றது. இந்துக்களின் தொன்மையான இடங்களான குருந்தூர் மலை ஆதி சிவன் ஐயனார் ஆலயம் செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயம் போன்ற பல இடங்கள் வன்னியில் பௌத்த மயமாக்கலுக்கு தீவிரமாக உள்ளாக்கப்பட்டு வருகின்றன.

ஆகவே மாகாண அதிகாரங்களை பறிப்பதன் மூலம் தமிழர் தாயக கோட்பாட்டை உடைத்து சிங்கள குடியேற்றங்களை விரிவு படுத்துவதே அரசாங்கத்தின் பிரதான இலக்கு.

Posted in Uncategorized

ஆடைத் தொழிற்சாலையை மூடாவிட்டால் பாரிய அபாயத்தை எதிர்நோக்க நேரிடும் – ரெலோ மன்னார் நகர முதல்வர் எச்சரிக்கை

கொரோனா அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள மன்னார் ஆடைத் தொழிற்சாலையினை உடனடியாக மூடி, நடவடிக்கை மேற்கொள்ளாவிடின் பாரிய அபாயத்தை எதிர்நோக்க நேரிடும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) மத்திய குழு உறுப்பினரும் நகர முதல்வருமான ஞானப்பிரகாசம் அன்ரனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “அண்மைக்காலமாக மன்னாரிலுள்ள குறித்த ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கு, தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் ஆடைத் தொழிற்சாலையினை தற்காலிகமாக மூடி, கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் நடவடிக்கையினை சுகாதார துறையினர் முன்னெடுக்காமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை.

ஆகவே ‘வரும் முன் காப்போம்’ என்பதற்கு அமைய மன்னாரிலுள்ள ஆடைத் தொழிற்சாலையை தற்காலிகமாக மூடி, மாவட்டத்தில் ஏற்படவுள்ள பாரிய அபாயத்தை தடுப்பதற்கு அரச உயர் அதிகாரிகள், சுகாதார துறையினர் ஆகியோர் துரித நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுக்க வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

பயணக் கட்டுப்பாடு தொடர்பான புதிய அறிவிப்பு

தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடு எதிர்வரும் 21 ஆம் திகதி காலை 4 மணிக்கு நீக்கப்படவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

23 ஆம் திகதி இரவு 10 மணி வரையில் இவ்வாறு பயணக் கட்டுப்பாடு நீக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மீண்டும் 23 ஆம் திகதி இரவு 10 மணி முதல் 25 ஆம் திகதி அதிகாலை 4 வரையில் பயணக் கட்டுப்பாடு அமுலில் இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய கடல் பாதுகாப்பு குறித்து இலங்கை அக்கறை காட்ட வேண்டும்; இந்திய வெளிவிவகாரப் பேச்சாளர்

இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பு குறித்து இலங்கை அக்கறையுடன் செயற்படும் என எதிர்பார்ப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் அரின்டம் பக்ச்சி நேற்று இந்தக் கருத்தை வெளியிட்டார்.

இலங்கை, பகிரப்பட்ட சூழலில் கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட எங்களின் பரஸ்பர பாதுகாப்பு உட்பட எங்களின் மிகச்சிறந்த இரு தரப்பு ஒத்துழைப்பை கருத்தில் கொள்ளும் என எதிர் பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரரிவித்தார்.

கொழும்பு துறை நகர திட்டம் குறித்து எங்களின் சமீபத்தைய பாதுகாப்பு அடிப்படையில் சமீபத்தைய விடயங்களை உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கொழும்பு துறைமுகநகர கட்டமைப்பு குறித்து இலங்கையில் வெளியிடப்பட்டுள்ள கரிசனைகளை கருத்திலெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தரப்பு ஒருமித்த நிலைப்பாட்டில் இல்லாவிட்டால் அதிகாரங்கள் பறிபோவதை தடுக்க முடியாது -ரெலோ ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன்

மாகாண சபைக்குரிய அதிகாரங்கள் பறிக்கப்படுவது தொடர்ந்தும் நடைபெற்று வருகிறது. மாகாணசபைக்கு சொந்தமான வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கம் கையகப்படுத்தும் அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எமக்குரிய அதிகாரங்கள் பறிக்கப்படுவதாக தமிழர் தரப்புகளில் இருந்து குற்றம் சாட்டி அறிக்கைகள் வெளிவந்து கொண்டிருக்கிறன. இந்த நிகழ்ச்சி நிரல் ஆரம்பமோ முடிவோ அல்ல. முன்னைய காலங்களில் இருந்தே தொடர்ந்தும் இப்படியான அதிகாரப் பறிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

மாகாண பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரம் உயர்த்தி மெதுவாக மாகாண சபைக்குரிய பாடசாலைகளை கையகப்படுத்த மத்திய அரசு ஆரம்பித்திருந்தது. அதேபோல அபிவிருத்தி என்ற போர்வையில் காணி நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன. உள்ளூராட்சி சபையின் அனுமதிகள் இல்லாமலே அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் ஆரம்பமாகியுள்ளன. இப்போது மாகாணசபை வைத்தியசாலைகளை கையகப்படுத்துவதற்கான அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
இப்படியாக ஒவ்வொரு நிகழ்வுகளும் நடக்கின்ற போது மாத்திரம் அதற்கு எதிராக குரல் கொடுக்கும் நடவடிக்கையையே நாம் செய்கிறோம். தீர்க்கதரிசனமாக, நாங்கள் போராடி இரத்தம் சிந்தி பெற்ற ஆகக்குறைந்த அதிகாரங்கள் கூட எங்கள் கைகளை விட்டு பறிபோவதை தடுப்பதற்கான, வரும் முன் காக்கும் நடவடிக்கையாக ஒருமித்த வேலைத்திட்டம் அல்லது ஒருமித்த நிலைப்பாடு தமிழ் தரப்பிடம் இல்லை.

தேர்தல் அரசியலை நோக்கிய கட்சி பூசல்களை முன்வைத்து செயற்படுவதனால் இருப்பவற்றை தக்கவைத்துக்கொள்ள முடியாது. நாம் இரத்தம் சிந்திப் போராடி பெற்ற, ஆகக் குறைந்த அதிகாரங்கள் இவை. நம்முடைய அரசியல் தீர்வாக மாகாணசபையையின் அடிப்படையிலான அதிகாரப் பகிர்வை நாம் கருதவில்லை. அதில் எல்லோரும் தெளிவாகவே உள்ளோம். ஆனால் இருப்பவற்றை இழந்துவிடாமல் காப்பது இனத் தலைவர்களின் கடமை.

இதன் அடிப்படையில் ஒருமித்த நிலைப்பாட்டுக்கு தமிழர் தரப்பு வர வேண்டியது காலத்தின் கட்டாயம். இதை பல தடவை நாம் வலியுறுத்தி இருந்தாலும் தத்தமது பதவி, கட்சி அரசியல் நலன்களுக்காக அதற்கான பேச்சுக்களை முன்னெடுக்கும் போது சில தரப்புக்கள் தயக்கம் காட்டி வருவது வருத்தத்துக்குரிய விடயம். அதிகாரங்கள் பறிக்கப்படுவதற்கு ஒருமித்த நிலைப்பாட்டில் எதிர்வினையாற்றாது விட்டால் எவ்வித பலனுமற்ற மாகாண சபை என்று எலும்புக்கூடு தான் எங்களுக்கு மிஞ்சப் போகிறது.

அதையும் தாண்டிய கொள்கை ரீதியாக சமஷ்டி அல்லது சுயாட்சி அலகு முறையான தீர்வு திட்டத்துக்கான பேச்சு வார்த்தைகளும் அதற்கான ஆதரவுகள் சர்வதேச மட்டத்தில் வலுப்பெற்று வந்தாலும் ஏற்கனவே அரசியல் யாப்பிலும் எமது கைகளிலும் இருப்பதை இழந்துவிடாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம். அது ஒரு தீர்வாக அல்லாவிட்டாலும் இருக்கும் உரிமையை இழக்காமல் இருப்பதற்காகவே ஒருமித்த நிலைப்பாடு அவசியமாகிறது. பட்டுவேட்டி கோரிக்கை வைத்து இருக்கிறோம் என்பதற்காக இடுப்பில் இருக்கும் துண்டு மெதுவாக உருவ படுகின்ற பொழுது அதை தடுத்து நிறுத்த வேண்டியது அவசியம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஏற்றுக்கொள்ள பட்ட யதார்த்தம்.

ஆகவே தமிழர் தரப்பாகிய நாங்கள் ஒவ்வொரு சம்பவத்திற்கும் பதில் அறிக்கை அல்லது பதில் நடவடிக்கை எடுப்பதை விட தீர்க்கதரிசனமாக இந்த அதிகாரங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு நமக்குள்ளே ஒருமித்த நிலைப்பாட்டின் அடிப்படையில் எதிர்வினையாற்றுவதன் மூலம்தான் மத்திய அரசாங்கத்தின் தலையீடுகளையோ அல்லது திட்டமிட்ட அதிகார பறிப்புகளையோ தடுத்து நிறுத்த முடியும்.

கொரோனா சூழ்நிலை இருப்பதனால் நேரடியான சந்திப்புகள் சாத்தியமில்லாத சூழல் நிலவுகிறது. மிக விரைவில் மெய்நிகர் இணையவழி ஊடாகவேனும் எப்படியான ஒருமித்த வேலைத்திட்டத்தை செயல்படுத்தலாம் அல்லது செயல்படுத்த முடியாது என்ற ஆராய்வுக்கான கலந்துரையாடலுக்கு தமிழ் தேசிய பரப்பில் செயலாற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரதிநிகளை தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்தி இணைந்து கொள்ள கோருகிறோம்.

சுரேந்திரன்
ஊடகப் பேச்சாளர் – ரெலோ
தமிழ் தேசிய கூட்டமைப்பு.

Posted in Uncategorized

உள்ளுராட்சி அதிகாரத்தை மீறி நியமனங்களை புகுத்துவதை நிராகரித்தது வலி கிழக்குப் பிரதேச சபை – ரெலோ தவிசாளர் நிரோஷ்

உள்ளுராட்சி மன்றங்களால் நியமிக்கப்படும் அட்டவணைப்படுத்தப்படாத ஆளணியை பல்பணி அபிவிருத்திச் செயலணி திணைக்களம் ஊடாக நிரப்ப முயற்சிக்கப்படுவதை வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை நிராகரித்துள்ளதுடன் தொடர் அழுத்தம் காணப்பட்டால் நீதிமன்றம் செல்லவும் முடிவெடுத்துள்ளதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட அமைப்பாளரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளரும் ஆன தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

வடக்கு மாகாண திணைக்களங்களில் ஒரு இலட்சம் வேலைவாய்ப்பில் பயிற்சி பெற்ற 105 பேரை ஆரம்ப நிலை சேவை தேவையின் நிமிர்த்தம் தற்காலிக அடிப்படையில் உள்வாங்குவதற்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு பிரதம செயலாளர் கடிதம் மூலம் அறிவித்திருந்தார்.

வடக்கு மாகாண உள்ளுராட்சித் திணைக்களம் 40 பயிலுநர்களை முதற்கட்டமாக உள்ளராட்சி மன்றங்களுக்கு பகிர்ந்தளித்துள்ளது. இது தொடர்பில், யாழ். மாநகர சபை கடிதம் ஒன்று அனுப்பப்பட்டு அதன் பிரதிகள் ஏனைய பிரதேச சபைகளுக்கும் முகவரியிடப்பட்டிருந்தன. இந் நிலையில் நியமனக் கடிதங்கள் எதுவும் அற்ற நிலையில் குறித்த பயிலுனர்கள் பிரதேச சபைகளுக்கு அனுப்பப்பட்டதுடன் ஏனைய வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைக்கு மூன்று பயிலுனர்கள் அனுப்பப்பட்டனர்.

இதனையடுத்து, வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் பிரதேச சபையின் கூட்டத்தினைக் கூட்டியிருந்தார்.

அக் கூட்டத்தில் தவிசாளார், உள்ளுராட்சி மன்றங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட அட்டவணைப்படுத்தப்படாத ஆளணி நியமனங்களை மத்திய அரசின் தாபனங்கள் அரசியல் காரணங்களுக்காகக் கையாள்வது ஏற்றுக்கொள்ளமுடியாது. ஆளணி நியமனம் தொடர்பில் உள்ளுராட்சி மன்றங்களால் ஏற்கனவே பகிரப்பட்டு கேள்விக்கு இடமின்றி அதிகாரம் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்துள்ளது. அதனை தற்போது கேள்விக்குட்படுத்துகின்றனர். எமது சபைகளில் நிலவும் வெற்றிடங்களுக்கு பகுதி பகுதியாக நாம் உரிய அனுமதிகளைப் பெற்று நேர்முகத் தேர்வுகளை நடத்தி தெரிவு செய்யப்பட்டவர்களது பெயர் விபரங்களையும் பகிரங்கப்படுத்திவிட்டோம். ஆனால் அந் நியமனங்களுக்கு முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் அனுமதி தேவை என வடக்கு மாகாண சபை கருதியமையினால் அங்கு அனுப்பப் பட்டிருக்கின்றது. நியமனத்திற்குத் தெரிவானவர்கள் நியமனத்தினை விரைவுபடுத்த மனித உரிமை ஆணைக்குழுவைக்கோரியுள்ளனர்.

எனினும் அது அரசாங்கத்தின் அனைத்து ஆட்சேர்ப்புக்களையும் தற்காலிகமாக நிறுத்துதல் என்ற காரணத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. எமது சபைகளில் அங்கீரிக்கப்பட்ட ஆளணி எண்ணிக்கை உரியவாறு நிரப்ப முடியாமை காரணமாக நாம் வெளிவாரியாக சனசமூக நிலையங்கள் ஊடாகப் பணியாளர்களைப் பெற்றே மக்களுக்கு சேவை ஆற்றுகின்றோம். இவ்வாறாக சபைகளில் பலர் வருடக்கணக்கில் கடின பணியை ஆற்றிவருகின்றனர். அவ்வாறு பணியாற்றூவர்களுக்கு நேர்முகத்தேர்வில் கூட 10 புள்ளிகள் வழங்குகின்றோம்.

இவர்களின் நியமனங்களை அரசாங்கம் ஏற்பதை விடுத்து, புதிதாக முறையற்ற நியமனங்களை மேற்கொள்வதை நாம் மறுக்கின்றோம். புதிதாக வேலைவாய்ப்புக்கள் வழங்கப்படுவதை நாம் வரவேற்கின்றோம். ஆனால் அந் நியமனங்கள் எமது சபையின் அதிகாரங்களை மீறாத வகையில் கடந்த காலத்தில் எமது சபைக்காக பணியாற்றபவர்களை தூக்கி வீசாத வகையில் அமைய வேண்டும்

ஏற்கனவே நிதி அமைச்சு ஆரம்ப நிலைசேவை வகுப்பிற்குத் தேவையான பணியாளர்களை பல்பணி அபிவிருத்திச் செயலணி வாயிலாக நியமிக்க கடந்த ஆண்டு சுற்றிக்கை வெளியிட்டிருந்தபோதும் அது உள்ளுராட்சி மன்றங்களுக்கு ஏற்றது என சபை கருதவில்லை. எம் மீது தொடர் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டால் நீதிமன்றம் செல்லவேண்டியேற்படும் எனவும் தவிசாளரால் எடுத்துரைக்கப்பட்டது.

இந் நிலையில் ஆளணியை நிரப்புதல் தொடர்பாக நேர்முகத்தேர்வுகள் இடம்பெற்றுள்ள நிலையில் புதிதாக அனுப்பப்பட்டுள்ள குறித்த பயிலுனர்களை அனுமதிப்பதில்லை. நாம் ஏற்கனவே நேர்முகத் தேர்வுகளை நடத்தியிருக்கும் நியமனத்திற்கு முன்னுரிமை அளித்து நடவடிக்கை எடுக்க தீர்மானம் எடுக்கப்பட்டது.

மேலும் உள்ளுராட்சி மன்றத்திற்குப் பகிரப்பட்டு இதுவரைகாலமும் தடையின்றி பிரயோகிக்கப்பட்ட அட்டவணைப்படுத்தப்படாத நியமனங்களை அதிகாரத்தை உள்ளுராட்சி மன்றங்கள் பிரயோகிக்கஇடமளிக்கப்படவேண்டும் எனவும் இல்லையேல் பொருத்தமான நீதிமன்றத்தை நாடவும் முடிவு எடுக்கப்பட்டது. இத் தீர்மானங்களுக்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் தவிர்ந்த சகல கட்சிகளும் ஏகமனதாக அங்கீகாரமளித்தனர்.