கட்சி தலைவர் கூட்டம் திட்டமிட்ட வகையில் நிறுத்தப்பட்டுள்ளது: விரைவில் தீர்வுகாண எதிர்பார்த்துள்ளோம்..!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியின் பங்காளி கட்சிகளுக்கும் இடையிலான தொடர்பு இல்லாமல் போயுள்ளது. பிரதமருக்கும், பங்காளி கட்சி தலைவர்களுக்கும் இடையில் ஒவ்வொரு வாரமும் இடம்பெறும் கட்சி தலைவர் கூட்டம் திட்டமிட்ட வகையில் நிறுத்தப்பட்டுள்ளது. கூட்டணிக்குள் எழுந்துள்ள முரண்பாடுகளுக்கு விரைவில் தீர்வுகாண எதிர்பார்த்துள்ளோம் என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸவிதாரன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

எரிபொருள் விலையேற்றம் குறித்து அமைச்சரவை மட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் விமர்சனத்திற்குள்ளாக்கி தேவையற்ற பிரச்சினையை ஏற்படுத்தயுள்ளார். கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய விவகாரத்திற்கு கூட்டணியின் பங்காளி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த வேளையிலும் இவர் முரண்பாட்டை தோற்றுவிக்கும் வகையில் ஊடகங்களுக்கு மத்தியில் கருத்துரைத்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணி ஸ்தாபிக்கப்பட்டது. ஜனாதிபதி தேர்தல், பொதுத்தேர்தல்களில் கூட்டணியாக ஒன்றிணைந்து போட்டியிட்டோம். பொதுத்தேர்தலுக்கு பின்னர் கூட்டணியினை பலப்படுத்தும் கொள்கை திட்டங்கள் வகுக்கப்படவில்லை. மாறாக கூட்டணியை பலவீனப்படுத்தும் செயற்பாடுகள் மாத்திரமே இடம்பெற்றன.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும், ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணிக்கும் இடையிலான தொடர்பு அண்மை காலமாக முறையாக பேணப்படவில்லை. பிரதமர் தலைமையில் ஒவ்வொரு வாரமும் இடம்பெற்ற கூட்டணியின் பங்காளி கட்சி தலைவர்களின் கூட்டம் திட்டமிட்ட வகையில் நிறுத்தப்பட்டுள்ளது..

பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ நாடு திரும்பியதும் சிரேஷ்ட அரசியல் தலைவர்களை உள்ளிடக்கி பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது அவசியம் என்ற கோரிக்கையை ஒன்றினைந்து முன்வைத்துள்ளோம். கூட்டணிக்குள் காணப்படும் பிரச்சினைகள் தற்போது பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளன. ஆகவே பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வு காண எதிர்பார்த்துள்ளோம் என்றார்

இலங்கை அரசாங்கத்திற்கு செயற்பாடுகளை கண்டித்து இராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம்

இலங்கை மீன்வளத்துறை அதிகாரிகள் பாரம்பரிய மீன்பிடி கடற்பரப்பில் பயன்பாட்டில் இல்லாத பேருந்துகளை போட்டு வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இராமேஸ்வரம் பேருந்து எதிரே மீனவர்கள் இன்று(புதன்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து தமிழக மீனவர்களின் மீன்பிடி தொழிலை அளிக்கும் நோக்கத்தோடு இலங்கை அரசு சர்வதேச கடல் எல்லையில் இருந்து அருகே இந்திய இலங்கை மீனவர்கள் பாரம்பரியமாக மீன் பிடித்து வரும் இடங்களான கச்சத்தீவு, நெடுந்தீவு, நயினாதீவு பகுதிகளில் பயன்பாட்டில் இல்லாமல் கைவிடப்பட்ட இலங்கை போக்குவரத்து துறைக்கு சொந்தமான பேருந்துகளை கடல் பரப்பில் இறக்கி வருகின்றனர்.

பேருந்துகளின் கூடுகளை கடலில் இருக்கும் போது கடல் மாசு படுவதுடன் தமிழக மீனவர்கள் இந்திய கடற்பரப்பில் மீன் பிடித்தாலும் அவர்கள் விரிக்கும் மீன்பிடி வலைகள் காற்றின் வேகம் காரணமாகவும், கடல் நீரோட்டம் காரணமாக இலங்கை கடற்பகுதிக்கும் செல்லகூடும் இதனால் படகுகள் மற்றும் வலைகளை சேதமடைந்து படகு ஒன்று சுமார் ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்படும் என்பதால் உடனடியாக இலங்கை மீன்வளத்துறை இந்த திட்டத்தை கைவிட வேண்டும்.

அதேபோல் நாளுக்கு நாள் உயர்ந்து டீசல் விலையால் மீனவர்கள் தங்களது படகுகளை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது எனவே மத்திய, மாநில அரசுகள் கலால்,சாலை வரிகளை நீக்கி மீனவர்களுக்கு உற்பத்தி விலையில் டீசல் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று இராமேஸ்வரம் பேருந்து நிலையம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் மீனவர்கள் இலங்கை மீன் வளத்துறைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியிருந்தனர்.

Posted in Uncategorized

இந்த வருடத்துக்கான தனது பன்முகப்படுத்தப்பட்ட ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டை, வன்னி மாவட்டத்தில் பட்டினியில் வாழும் மக்களுக்கு பகிர்ந்தளிக்குமாறு வினோ எம்.பி பிரதமருக்கு கடிதம்

ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வருடாந்தம் அபிவிருத்தி திட்டங்களுக்காக அரசாங்கத்தினால் ஒதுக்கீடு செய்யப்படும் தலா ஒரு கோடி ரூபா நிதியினை இவ்வருடம் நிறுத்தி அந்த நிதியினை கோவிட்-19 தொற்று காரணமாகவும், பயணத்தடை காரணமாகவும் வாழ்வாதாரத்தை இழந்து பட்டினியில் வாடும் ஏழைக் குடும்பங்களுக்குப் பகிர்ந்தளிக்குமாறும், இவ்வருடம் பட்டினிச் சாவுகளைத் தடுக்க இந்நிதிகளைப் பயன் படுத்துமாறும், அடுத்த வருடம் அபிவிருத்தி திட்டங்களுக்குச் செலவிடுமாறும் கோரி நிதி அமைச்சரும், பிரதம மந்திரியுமான மகிந்த ராஜபக்சவுக்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) தலைமை குழு உறுப்பினரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வினோ நோகராதலிங்கம் கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார்.

இன்று அனுப்பியுள்ள குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,

எமது நாட்டில் வேகமாகப் பரவிவரும் கோவிட் – 19 தொற்று காரணமாக நாடு முடக்கப்பட்டு, பயணத்தடை விதிக்கப்பட்டு தொற்றுப் பரவலை தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுகாதாரத்துறை சார்ந்தவர்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டு வாரா வாரம் இப்பயணத்தடைகள் ஒரு மாதம் கடந்தும் நீடிக்கப்பட்டே வருகின்றது.

இருந்த போதும் நோய்த்தொற்றின் வேகமும், மரணங்களின் வீதமும் குறைவடைவதைக் காண முடியவில்லை. இந்நிலையில் மக்களின் நடமாடுவதற்கான தடைகள் காரணமாக அன்றாடம் உழைத்து உண்ணும் ஏழைத் தொழிலாளர்கள், கூலித் தொழிலாளர்கள், பொருளாதார வலுவற்றோர் என ஏழைக்குடும்பங்கள் பட்டினிச் சாவை என்றுமில்லாதவாறு எதிர் நோக்கியுள்ளனர்.

அரசாங்கத்தால் வழங்கப்படும் 5000 ரூபாய் நிதி உதவி சமுர்த்தி பயனாளிகளுக்கு மட்டும் என வரையறுக்கப்பட்டுள்ளது. சமுர்த்தி உதவித்திட்டம் பெறாத, சமுர்த்தி உதவி பெறத் தகுதியான குடும்பங்கள் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளன.

அவர்கள் பல்வேறு விதமான துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். சமுர்த்தி பயனாளிகளுக்கு வழங்கப்படுகின்ற 5000 ரூபாய் நிதி நிவாரணமானது கூட பொருட்களின் சமகால, நாளாந்த விலை ஏற்றத்திற்கு ஈடு கொடுக்கக் கூடிய உதவித் திட்டமாகக் கருத முடியாது. சாதாரண குடும்பம் ஒன்றுக்கு 5000 ரூபாய் 5 நாட்களுக்குக் கூட போதுமானதாக இல்லை.

பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கும், கோவிட் சட்டங்களை இயற்றும் அரச அதிகாரிகளால், அரசியல்வாதிகளால் 5000 ரூபாவை மட்டும் கொண்டு தத்தமது குடும்பத்தைக் காப்பாற்ற முடியுமா? மாதாந்த ஊதியம் பெறும் அரச, அரச சார்பற்ற ஊழியர்களினால் கூட வாழ்க்கைச் செலவை ஈடு செய்யமுடியாமல் திண்டாடுகின்றனர்.

இப்படியிருக்கச் சாதாரண, அன்றாடம் உழைத்தாலே அன்றாட ஊதியம் பெறும் வறுமைக்கோட்டுக்குட்பட்ட ஏழை, எளிய மக்களின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியது. வறுமைக்குள் பசி, பட்டினியுடன் போராடும் சாதாரண மக்கள் மன ரீதியில் மிகப்பெரிய பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

பட்டினி காரணமாக இதர பக்க விளைவுகளுக்கும், ஏனைய நோய்களுக்கும் உள்ளாகிக் கொண்டிருக்கின்றனர். பட்டினி என்ற நோய் பரவல் தொடங்கினால் அதன் பக்க விளைவு நோய்களை யாராலும் கட்டுப்படுத்த முடியாமல் அது மரணத்தை மட்டுமே விட்டுச் செல்லும்.

கோவிட்டை காரணம் கூறி பட்டினி மரணங்களுக்கு அரசாங்கமோ, யாருமே காரணமாக இருந்துவிட முடியாது. இன்று வறிய குடும்பத்தைச் சேர்ந்த நாளாந்த கூலி வேலை செய்வோர் கேட்பதெல்லாம் 3 நேர உணவல்ல, பிரியாணி அல்ல. 3 வேளையிலும் கஞ்சி குடிச்சாவது உயிரோடு வாழவே கேட்கின்றனர்.

குறிப்பாக வன்னி மாவட்ட மக்களின் துயரம் மரத்தால் விழுந்தவனை மாடு ஏறி மிதித்ததுக்கு ஒப்பானதாக இருக்கின்றது. கடந்தகால யுத்த வடுக்களிலிருந்து அவர்கள் இன்னமும் விடுபடவில்லை.

உயிர் இழப்புக்கள், சொத்தழிவுகள், இடப்பெயர்வுகள் எனப் பொருளாதார நிலையில் மீண்டெழ முடியாமல் சிக்கியுள்ளவர்கள் கொடிய நோய்த்தொற்று, பயணத்தடை காரணமாகப் பசியால் இன்று வாடுகின்றனர். தொற்றினால் இறப்பவர்களில் எத்தனை பேர் பட்டினியாலும் அதன் விளைவுகளாலும் இறக்கின்றனர் என்ற கணக்கெடுப்பு நடாத்தப்படுவதில்லை.

இதனால் இவ்வாண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டத்துக்கான எனது வன்னி மாவட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டினை வறுமை நிலையிலுள்ள எனது மாவட்ட ஏழை மக்களின் பசி, பட்டினியைப் போக்க நிவாரணம் வழங்குவதற்காகப் பயன்படுத்துமாறு தங்களைக் கேட்டுக் கொள்கின்றேன்.

வன்னி தேர்தல் மாவட்டத்தின் மூன்று நிர்வாக மாவட்டங்களுக்கும் இந்நிதியினை பகிர்ந்தளித்து அவர்களைப் பட்டினியிலிருந்தும், மரணப்பிடியிலிருந்தும் மீட்டெடுக்குமாறும் தங்களை வினயமாகக் கேட்டுக் கொள்கின்றேன்.

சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். அபிவிருத்தி திட்டங்களும் மக்களுக்காகவேயெனினும் அவர்கள் இப்போது உண்ண உணவோ குடிக்க கஞ்சியையோ தான் கேட்கின்றனர். அபிவிருத்தி திட்டங்களை அடுத்த வருடமும் முன்னெடுக்க முடியும்.

பன்முக நிதி ஒதுக்கீட்டைக் கையாளும்; நிதி அமைச்சர் என்ற வகையில் எனது பத்து மில்லியன் ரூபா நிதி மட்டுமல்லாமல், வன்னி மாவட்டத்தின் ஏனைய ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிதி மட்டுமல்லாமல் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இக் கொடிய கோவிட் தொற்றுப் பரவலால் வறுமையும், பட்டினியும் தலைவிரித்தாடுவதால் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களினதும் 2250 மில்லியன் ரூபா பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டினையும் அந்தந்த மாவட்ட கோவிட் நிதிக்காக, பசிபோக்கும் நிவாரண பணிக்காக விடுவிப்பது காலத்தின் தேவை கருதிய ஓர் முன்மாதிரி நடவடிக்கை எனக் கருதுகின்றேன்.

இது அவசரமும் அவசியமும் என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியது என நம்புகின்றேன். எனது நிதியினை விடுவித்து வன்னியிலுள்ள மூன்று மாவட்டச் செயலகங்களூடாக இடர் நிவாரண உதவியாக வறிய குடும்பங்களுக்குப் பகிர்ந்தளிக்க அனுமதி வழங்குமாறு தங்களைத் தயவாகக் கேட்டுக் கொள்கின்றேன் என குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கில் சிவில் நிர்வாகம் இராணுவப் பிடிக்குள்ளா? ரெலோ இளைஞர் அணி தலைவர் சபா குகதாஸ்

வடக்கில் சிவில் நிர்வாகம் இராணுவப் பிடிக்குள்ளா? என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணித் தலைவரும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான சபா குகதாஸ் கேள்வி

வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட மண்டலாய் பிரதேசத்தில் பொது மக்களின் காணிகளை சிவில் நிர்வாக அதிகாரிகள் இன்றி காணிகளுக்கு உரித்தான பொது மக்களுக்கு முன் அறிவித்தல் செய்யாது அடாவடித்தனமாக இராணுவம் தாங்களே நில அளவைத் திணைக்களம் இல்லாமல் அளவீடு செய்து எல்லைக் கட்டைகள் அடித்துள்ளனர்.

இந்த செயற்பாடு வடக்கு மாகாணத்தில் சிவில் நிர்வாகம் இராணுவப் பிடிக்குள் அகப்பட்டுள்ளதா? என பொது மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

மண்டலாய் பகுதியில் 700 ஏக்கர் காணியை இராணுவ முகாமிக்கு சுபிகரிக்க திட்டமிட்ட இராணுவம் தற்போது 300 ஏக்கர்களை அபகரித்துள்ளதாக அப் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ் விடையம் தொடர்பில் மருதங்கேணி பிரதேச செயலாளர் எவ்வித பதில்களையும் வழங்கவில்லை. அரச அதிகாரிகளும் இவ் விடையங்களுக்கு உடந்தையாக உள்ளனரா? இல்லை இராணுவ மிரட்டல் உள்ளதா? என மக்கள் சந்தேகிக்கின்றனர்.

நில அளவைத் திணைக்களம் இல்லாது இராணுவம் அளவிட்ட நிலப்பகுதி கடந்த காலங்களில் பல தடவை அளவீடு செய்ய முயன்ற போது மக்களின் எதிர்ப்பால் தடுக்கப்பட்டது தற்போது பயணத் தடையை பணயமாக வைத்து மக்களுக்கும் அறிவிக்காது அபகரித்தமை மிகவும் அப்பட்டமான மனிதவுரிமை மீறல்.

வடமராட்சி கிழக்கில் வளமான பகுதியாக உள்ள மண்டலாய்ப் பகுதியில் திராட்சைத் தோட்டங்கள் ஏனைய பயிர்கள் காணப்படுவதுடன் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை நிர்ணயிப்பதாகும்.

Posted in Uncategorized

வடகிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிய 92 உறவுகள் இதுவரை உயிரிழப்பு

வடக்குக்கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி போராட்டம் மேற்கொண்டு வரும் அவர்களது உறவுகள் அவர்களின் விடுதலையை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களையும் நீண்டகாலமாக மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடியலைந்து சொல்லெண்ணா துன்பங்களையும் , துயரங்களையும் சுமந்து வயோதிப ஓய்வு காலங்களில் நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலைகளிலும் ஏனைய உறவுகளின் பாதுகாப்பிலும் இருந்து வருகின்றார்கள் .

இவ்வாறு தமது உறவுகளை தேடியலைந்து 92 உறவுகள் நோயினால் பீடிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். வவுனியா மாவட்டத்தில் 12 பேர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக உறவுகள் தெரிவித்துள்ளனர்.

வடகிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் வீதிகளிலிருந்து தமது போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். சர்வதேசத்தின் தலையீடுகளை கோரியும் ஐக்கிய நாடுகள் தமது விடயங்களில் தலையீடு செலுத்தி தீர்வுகளை பெற்றுத்தருமாறு கோரியும் உறவுகள் தமது போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

ஜனாதிபதியுடன் உள்ள மிகப்பெரிய எட்டப்பன் PB ஜயசுந்தர, விழ்ச்சிக்கு அவரே காரணம் – ஆனந்த தேரர்

நாரஹேன்பிட்டி அபயாராமய விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் இன்று -15- அரசாங்கத்திற்கு எச்சரிக்கையொன்றை விடுத்தார்.
மிக குறுகிய காலத்தில் மக்களின் வரவேற்பை இழந்த அரசாங்கம் கோட்டாபய ராஜபக்ஸவின் அரசாங்கம் தான் என தேரர் தெரிவித்தார்.

நாட்டில் நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியே இருப்பதாகவும் ஜனாதிபதியின் அனுமதியின்றி பிரதிநிதிகள் செயற்படுவார்களாயின், யாரிடம் இதனை முறையிடுவது என தேரர் கேள்வி எழுப்பினார்.

பிரதிநிதிகள் ஜனாதிபதியின் கண்ணில் மண்ணைத் தூவியுள்ளதாகவும், “நாம் மன்னர்” என நினைத்துக் கொண்டு எவரேனும் செயற்படுவதாக இருந்தால் அது அந்த தனிநபரின் தவறு அல்ல, நாட்டை நிர்வகிக்கும் அதிகாரிகளின் குறைபாடே அதற்கு காரணம் எனவும் தேரர் குறிப்பிட்டார்.

எந்தவொரு நபரையும் சுற்றி எட்டப்பன்மார் இருப்பார்கள். புரோகிதர்களும் இருப்பார்கள், புரோகிதர்கள் கூறினால் அதனையே பின்பற்றுவார்கள். இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் இருக்கும் மிகப்பெரிய எட்டப்பனாக கலாநிதி ஜயசுந்தரவை காண்கின்றோம். ஜனாதிபதியின் இந்த விழ்ச்சிக்கு அவரே காரணம்

என முருத்தெட்டுவே ஆனந்த தேரர் குறிப்பிட்டார்.

P.B. ஜயசுந்தரவை பதவியில் இருந்து நீக்கி, அதனை வழிநடத்தக் கூடிய ஒருவரை நியமிக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.

அவ்வாறு செய்யாவிட்டால் எதிர்காலத்தில் பாரிய எதிர்ப்பு நடவடிக்கையொன்றை ஏற்பாடு செய்யப் போவதாகவும் அரசாங்கத்திற்கு தேரர் எச்சரிக்கை விடுத்தார்.

காலை முதல் இரவு வரை வீதியில் இறங்கி சத்தமிடுகின்றனர். உண்பதற்கு ஒன்றும் இல்லை. உரம் இல்லை. கடலாமைகள் போன்ற உயிரினங்கள் இறக்கின்றன. இந்த அனைத்து அவலக் குரலுக்கு மத்தியில், வாகனங்களை கொண்டுவர முயற்சிக்கின்றனர். மக்கள் மீது சுமையை சுமத்தி அவர்கள் சொகுசு வாழ்க்கை வாழ முயல்கின்றனர். சொகுசு வாகனங்கள் கொள்வனவு செய்யப்பட்டால் அது யாராகவும் இருக்கலாம், அவரது முடிவு அன்றிலிருந்தே ஆரம்பமாகும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்

என தேரர் மேலும் குறிப்பிட்டார்.

Posted in Uncategorized

இலங்கைக்கு புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி ஜியூன் சங்

இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி ஜியூன் சங்கின் (Julie Jiyoon Chung) பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனினால் நேற்றைய தினம் இவருடைய பெயர் பரிந்துரை செய்யப்பட்டதாக வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கு மேலதிகமாக மாலைதீவுக்கான அமெரிக்க தூதுவராகவும் இவருடைய பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு முன்னர் இவர் கம்போடியா, தாய்லாந்து, ஈராக், கொலம்பியா, வியட்நாம், ஜப்பான் மற்றும் சீனாவிற்கான அமெரிக்க தூதுவராலயங்களில் பல்வேறு பொறுப்புகளில் கடமையாற்றியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Posted in Uncategorized

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் தொடர்பான ஆவணம் தேர்தல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை நியமிப்பதற்குரிய ஆவணம், தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் இன்று (16) சமர்ப்பிக்கப்பட்டதாக பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்தார்.

கடந்த மாதம் இடம்பெற்ற கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில், தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்புரிமைக்கு, கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை நியமிக்க தீமானிக்கப்பட்டமையும் குறிப்பிடதக்கது.

ரணிலுடன் இரகசிய பேச்சு நடத்திய அரசாங்க தரப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, அரசாங்கத்தரப்புடன் இரகசிய பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவுடனான பேச்சுவார்த்தையில் அமைச்சர்கள் சிலரும் சம்பந்தப்பட்டுள்ளனர்.

ரணில் விக்ரமசிங்கவை சந்திக்க பிரதமர் மகிந்த ராஜபக்சவும் சென்றுள்ளார்.

“ நீங்கள்தான் நாடாளுமன்றத்திற்கு வர வேண்டும்” என இந்த சந்திப்பின் போது மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார் எனவும் அபேசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இப்படியான பின்னணியில், ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்திற்கு வந்த பின்னர், ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், ரணிலுடன் இணையலாம் என்ற வதந்தியை அரசாங்கத் தரப்பினரே சமூக ஊடகங்களில் பரப்பியுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இருந்தவர்களுக்கு ரணில் விக்ரமசிங்க , ராஜபக்சவினருடன் உடன்பாடுகளை ஏற்படுத்திக்கொண்டதை நன்கு அறிவார்கள்.

ரணில் விக்ரமசிங்க தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்கவில்லை என்றாலும் அவரது பாதுகாப்புக்காக 100க்கும் மேற்பட்ட படையினர் வழங்கப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினரல்லாத ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளருக்கும் உயர்மட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

ரணில் விக்ரமசிங்கவுக்கும் ராஜபக்ச தரப்பினருக்கும் இடையில் இருக்கும் தொடர்புகள் காரணமாகவே இந்த சலுகைகள் வழங்கப்படுகின்றன எனவும் அசோக அபேசிங்க குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

நாட்டில் மேலும் 1,843 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

அதன்படி, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 227,765 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களில் 192,478 பேர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வௌியேறி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,260 ஆக அதிகரித்துள்ளது.

Posted in Uncategorized