வடக்கின் 04 மாவட்ட பொது வைத்தியசாலைகளின் அதிகாரங்கள் பறிபோயின!

வடக்கு மாகாண நிர்வாக ஆளுகைக்குள் செயற்பட்டுவந்த மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மாவட்ட பொது வைத்திசாலைகள் உட்பட இலங்கையின் 09 வைத்தியசாலைகளை மத்திய சுகாதார அமைச்சின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு செல்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

சேவை வழங்கலில் தரம், சமத்துவம், வினைத்திறன் போன்றவற்றை அதிகரிக்கவும் இலகுவாக நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்கத் தரப்புத் தெரிவித்துள்ளது.

குறித்த யோசனையை சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி சமர்ப்பித்தாகவும் அதற்கு அமைச்சரவை நேற்று அனுமதி வழங்கியுள்ளதாகவும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதற்கமைய வடக்கின் யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட பொது வைத்தியசாலைகள் மற்றும் மாத்தளை, நாவலப்பிட்டி, எம்பிலிப்பிட்டி, அவிசாவளை, கம்பஹா ஆகிய வைத்தியசாலைகளின் நிர்வாகத்தினை இனிவரும் காலங்களில் மத்திய சுகாதார அமைச்சே நிர்வகிக்கும் என்று தெரியவருகிறது.

இரத்தானது ஜனாதிபதி – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்திப்பு

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிற்கும் இடையில் நாளை நடைபெறுவதாக இருந்த சந்திப்பு “பிறிதொரு தினத்திற்கு ஒத்திவைக்கப்படுவதாக ஜனாதிபதி செயலகத்தினால் கூறப்பட்டு” இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பேச்சுப் பற்றிய விவரம் வெளிவந்ததால் தெற்கில் ஜனாதிபதிக்கு ஏற்பட்ட அழுத்தத்தையடுத்தே அவர் பேச்சை இப்போதைக்குத் தள்ளிப்போடும் முடிவை எடுத்திருக்கின்றார் எனக் கொழும்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

புதிய பேச்சுத் திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனக் கூட்டமைப்புக்கு ஜனாதிபதி செயலகம் இன்று மாலை அறிவித்துள்ளது.

கூட்டமைப்பின் உறுப்பினர்களுடன் ஜனாதிபதி நாளை சந்திப்பு

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பாக ஜனாதிபதிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று நாளை (புதன்கிழமை) மாலை இடம்பெறவுள்ளது.

இந்த சந்திப்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன்,புளொட் தலைவர் சித்தார்த்தன், மற்றும் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜாவும் கலந்துகொள்ளவுள்ளனர்.

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகைய பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அவர் நடத்தும் முதலாவது சந்திப்பு இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

ஆளும் கட்சிக்குள்ளேயே கடும் மோதல்கள் அதிகரிப்பு நாடு திரும்புகின்றார் பசில்

ஆளும் கட்சிக்குள்ளேயே கடும் மோதல்கள் இடம்பெற்றுவரும் நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனாவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ நாடு திரும்பவுள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவர் ஜூன் 23 புதன்கிழமை நாடு திரும்புவார் என அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரட்டை பிரஜாவுரிமை கொண்ட பசில் ராஜபக்ஷ மே 12 ஆம் திகதி அமெரிக்காவிற்கு விஜயம் செய்திருந்த நிலையில் 6 வாரங்களின் பின்னர் நாடு திரும்பவுள்ளார்.

எரிபொருள் விலை அதிகரிப்பை தொடர்ந்து அமைச்சரை பதவி விலக வேண்டும் என ஆளும் கட்சி கோரிக்கை விடுத்திருந்தது.

இந்த அறிவிப்பு கட்சிக்குள்ளேயே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்த நிலையில் அமைச்சர் உதய கம்மன்பிலவும் விசேட ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்ததுடன் கட்சியின் பொதுச் செயலாளருக்கு சவாலும் விடுத்திருந்தார்.

இதற்கிடையில் கருத்து வெளியிட்டிருந்த இராஜாங்க அமைச்சர் நிமல் லங்சா, எரிபொருள் விலை விவகாரத்தில் தலையிட்டு பசில் ராஜபக்ஷ உயர்வைத் தடுத்திருப்பார் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கம்மன்பிலக்கு பதிலளிப்பதற்காக ஊடக சந்திப்பு கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்தால் ஏற்பாடு செய்யப்பட்டபோதும் உயர்மட்டத்தின் அறிவுறுத்தலை அடுத்து இச்சந்திப்பு இரத்து செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு ‘சீனாவை நோக்கி நகர்கிறது’ இலங்கையுடனான உறவை மறுபரிசீலனை செய்ய இந்தியா சிந்தனை- தி பிரின்ட்

கொழும்பு ‘சீனாவை நோக்கி நகர்கிறது’  இலங்கையுடனான உறவுகள் குறித்து இந்தியா மறுபரிசீலனை செய்து வருவதாக பல வட்டாரங்கள் தெரிவித்துள்ளன என தி பிரின்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து தி பிரின்ட் மேலும் தெரிவித்துள்ளதாவது.

கடந்த மாதம் இலங்கை சர்ச்சைக்குரிய 1.4 பில்லியன் திட்டமான கொழும்பு துறைமுகநகர திட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளது.
இதற்கு சீனா நிதியுதவி வழங்குகின்றது.

ராஜபக்ச அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்னர் கொழும்புடனான உறவுகளிற்கு புத்துயுர் கொடுக்கும் நோக்கத்துடன் காணப்பட்ட புதுடில்லி, தற்போது இந்தியாவை சமநிலையில் வைத்திருப்பதை கைவிட்டுவிட்டு சீனாவின் பக்கம் சாய்வது குறித்த உறுதியான நிலைப்பாட்டை கொழும்பு எடுத்துள்ளதாக கருதுகின்றது என பல வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த மாதம் இலங்கை நாடாளுமன்றம் சர்ச்சைக்குரிய கொழும்புதுறைமுகநகர பொருளாதார ஆணைக்குழு திட்டத்தை நிறைவேற்றியது.

எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பிற்கு மத்தியிலும், கொழும்பு துறைமுகநகரம் இலங்கைக்குள் ஒரு சீன மாகாணமாக மாறலாம் என்ற கரிசனைகளிற்கு மத்தியிலும் இலங்கை நாடாளுமன்றம் கொழும்பு துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை நிறைவேற்றியது.

உத்தேச புதிய கொழும்பு துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழு பரந்துபட்ட அதிகாரங்களை கொண்டிருக்கும் என கருதப்படுகின்றது.மேலும் இலங்கையின் மாநகரசபை, நகர அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றின் சட்டமூலங்கள் கொழும்பு துறைமுக நகரை கட்டுப்படுத்தாது.

இதன்காரணமாக இது ஜனநாயக ரீதியில் செயற்படாது என்ற கரிசனைகள் காணப்படுகின்றன.

கொழும்புதுறைமுகநகரம் காரணமாகவும்,- அம்பாந்தோட்டை துறைமுகநகரத்திற்கு என்ன நடந்தது என்பதன் காரணமாகவும்( கொழும்பு 99 வருட குத்தகையை மேலும் நீடிக்க தீர்மானித்துள்ளது என்ற ஊகங்களிற்கு மத்தியில்)இலங்கை முழுமையாக சீனாவின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துவிட்டது என தெரிவித்த ஒரு வட்டாரம் இந்தியாவிற்கு இதனால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படலாம், இந்திய அரசாங்கங்களிற்கும் சவால்கள் ஏற்படலாம் என தெரிவித்தது.
இந்தியா இலங்கை உறவுகள் கடந்த பெப்ரவரியில் இலங்கை முத்தரப்பு கொழும்பு துறைமுக கிழக்குகொள்கலன் முனைய அபிவிருத்தி திட்டத்தை கைவிட்டதை தொடர்ந்து வீழ்ச்சியடைய ஆரம்பித்தன.

அதற்கு பதில் இலங்கை இந்தியாவிற்கு மேற்குகொள்கலன் முனையத்தை வழங்கியது – அரசாங்கங்களிற்கு இடையிலான உடன்படிக்கை போலயில்லாமல் தனியார் உடன்பாடு போன்று இது வழங்கப்பட்டது.

இந்திய பிரதமர் நரேந்திரமோடிக்கும் ராஜபக்ச சகோதாரர்களிற்கும் இடையிலான ஆரம்ப காலநட்புறவு தற்போது மறையத்தொடங்கியுள்ளது என்பது தெளிவான விடயம் என தெரிவித்த தகவல் அறிந்த வட்டாரங்கள் இந்தியாவிற்கு முதலிடம் என்ற இலங்கையின் கொள்கை வேகமாக காணாமல்போகின்றது என தெரிவித்தன.

இதுசீனா இலங்கையை இந்தியாவிலிருந்து விலக்கிகொண்டு சென்றுள்ளதால் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் இந்து சமுத்திரத்தில் தனது பிரசன்னத்தை பேணலாம் என சீன கருதுகின்றது என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
அதேவேளை அடானி குழுமம் அபிவிருத்தி செய்துவரும் மேற்கு கொள்கலன் முனையத்தை இலங்கையில் கால்பதிப்பதற்கு இந்தியா நம்பியுள்ளது என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ராஜபக்ச அரசாங்கம் அரசமைப்பின் 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த செய்வதன் மூலம் தசாப்தகால இலங்கை தமிழர் விவகாரத்தில் அதிக கவனம் செலுத்த இந்தியா திட்டமிடுகின்றது என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Posted in Uncategorized

ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தமிழ் நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அவசர கடிதம்!

முகாம்களில் வாழும் தமிழ் மக்களின் நலன்களை கருத்தில் கொண்டும், திருச்சி சிறப்பு சிறைச்சாலையில் தங்களது விடுதலை தொடர்பாக சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்ளும் சிறைக்கைதிகளின் விடுதலை குறித்தும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தமிழ் நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இன்றைய தினம் திங்கட்கிழமை (14) அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

-குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,,,

இலங்கை வாழ் தமிழ் மக்கள் அயல் நாடாம் இந்திய தாய் திரு நாட்டில் அடைக்கலம் புகுந்த வேளையில் இது வரை காலமும் ஆற்றி வந்த அளப்பரிய நன்மைகளை நன்றியுடன் நினைவு கூறுகின்றேன்.

-மேலும் கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு முகாம்களில் வாழும் இலங்கை வாழ் தமிழ் மக்களின் சிரமங்களையும் கஸ்டங்களையும் தங்களது மேலான கவனத்திற்கு கொண்டு வந்து அதற்கான தீர்க்கமான சாத்திகமான முடிவுகளை எடுக்குமாறு தங்களை வேண்டி நிற்கின்றேன்.

அத்தோடு இந்த குடும்பங்களின் ஒரு சில குடும்ப தலைவர்கள் திருச்சி சிறப்பு சிறைச்சாலையில் வாடிக்கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் தங்களது குடும்ப அங்கத்தவர்களுடன் இணைந்து தங்கள் வாழ்க்கையினை முன்னெடுக்க எதிர் பார்த்துள்ளனர்.

முகாம்களில் வாழும் தமிழ் மக்களின் நலன்களை கருத்தில் கொண்டும், திருச்சி சிறப்பு சிறைச்சாலையில் தங்களது விடுதலை தொடர்பாக சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்ளும் சிறைக்கைதிகளின் விடுதலை தொடர்பாகவும் இவர்களுடைய மன ஆதங்கத்தை கருத்தில் கொண்டு இவர்களுடைய விடுதலைக்காகவும் மேலான நடவடிக்கைகளை எடுப்பீர்கள் எனவும் நான் நம்புகிறேன் என குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

பங்காளிகளின் தனிவழி சந்திப்பில் முக்கிய அமைச்சர்கள் இருவர் பங்கேற்பு

ஆளும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பங்காளி கட்சிகளின் தலைவர்கள் சிலர், தனியான சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர்.

அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்சவின் உத்தியோகபூர்வ இல்லத்திலேயே ஞாயிற்றுக்கிழமை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

எரிபொருள் விலையேற்றத்தை அடுத்து, விடயதானத்துக்குப் பொறுப்பான அமைச்சர் உதய கம்மன்பில பதவிவிலக வேண்டும் என, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரான சாகர காரியவம் எம்.பி வெளியிட்ட ஊடக அறிக்கை தொடர்பிலும் பங்காளி கட்சிகளின் தலைவர் விரிவாக கலந்துரையாடியுள்ளனர்.

எரிபொருள் விலையேற்றம், அமைச்சர் கம்மன்பிலவின் தனித் தீர்மானம் அல்ல, அரசாங்கத்தால் ​எடுக்கப்பட்ட பொதுத் தீர்மானம் ஆகும். ஆகையால், அமைச்சர் கம்மன்பிலவுக்காக குரல்கொடுப்பதற்கு, அக்கூடத்தில் பங்கேற்றிருந்த பங்காளி கட்சிகளின் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், சாகர காரியவசம் வெளியிட்ட அறிக்கைக்கு அதிருப்தியை வெளியிட்டு அறிக்கையொன்றை வெளியிடவும் இக்கூட்டத்தின் போது கலந்துரையாடப்பட்டு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலையேற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஏழ்மையான மக்களுக்கு, அத்தியாவசியப் பொருள்கள் அடங்கிய நிவாரண பொதியை வழங்குவதற்கும் இக்கட்சித் தலைவர்கள் யோசனையொன்றை முன்வைத்துள்ளனர் என அறியமுடிகின்றது.

அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், அத்துரலிய ரத்ன தேரர், வாசுதேவ நாணயக்கார, டிரான் அலஸ், உள்ளிட்டவர்களும் பங்கேற்றிருந்தனர்.

அதுமட்டுமன்றி, வாழ்க்கைச் செலவு தொடர்பிலான அமைச்சரவை உப-குழுவின் உறுப்பினர்களான அமைச்சர் பந்துல குணவர்தன, அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோரும் பங்கேற்றிருந்தனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Posted in Uncategorized

சீன ஆதிக்கத்தைத் தடுக்க பைடனின் திட்டம்!

சா்வதேச அளவில் சீனாவின் வா்த்தக ஆதிக்கத்தைத் தடுப்பதற்கான அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் திட்டத்துக்கு ஜி-7 அமைப்பு நாடுகளின் தலைவா்கள் ஒப்புதல் அளித்துள்ளனா்.

இதுகுறித்து பிபிசி ஊடகம் தெரிவித்துள்ளதாவது:

பிரிட்டனின் காா்ன்வால் பகுதியில் நடைபெற்று வரும் ஜி-7 மாநாட்டில், சா்வதேச அளவில் உறுப்பு நாடுகளுக்கு பலத்த போட்டியை அளித்து வரும் சீனாவின் ஆதிக்கத்தை எதிா்கொள்வதற்கான திட்டங்களை அமெரிக்க அதிபா் ஜோ பைடன் முன்வைத்தாா்.

சீனாவின் கடுமையான போட்டியை சமாளிக்கும் வகையில், தங்களது நாடுகளைச் சோ்ந்த சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தங்களது உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்திக் கொள்வதற்காக நாடுகளின் அரசுகள் உதவ வேண்டும் என்று ஜனாதிபதி பைடன் வலியுறுத்தினாா்.

உலகம் முழுவதும் தனது செல்வாக்கை அதிகரித்துக் கொள்ளும் வகையில், பெல்ட் அண்டு ரோடு இனிஷியேட்டிவ் (பிஆா்ஐ) என்ற பெயரில் சீனா வா்த்தக வழித் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

அதன் மூலம், தங்களது நாட்டுடன் வா்த்தக வழித்தடத்தை ஏற்படுத்திக் கொள்வதற்காக சாலைகள், ரயில் பாதைகள், துறைமுகங்களை அமைத்துக் கொள்வதற்காக பிற நாடுகளுக்கு சீனா நிதியுதவி அளித்து வருகிறது.

இதன் மூலம், பிற நாடுகளை சீனா கடன் வலைக்குள் சிக்க வைப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.

இந்த நிலையில், சீனாவின் இந்த வா்த்தக வழித் தடத் திட்டதற்கு சரியான மாற்றாக, பில்டு பேக் பெட்டா் வோ்ல்டு (சிறந்த உலகை உருவாக்குவோம்) என்ற திட்டத்தை தங்கள் நாட்டு உதவியுடன் அமல்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி பைடன் ஜி-7 மாநாட்டில் வலியுறுத்தினாா்.

இதற்கு, மாநாட்டில் பங்கேற்ற உறுப்பு நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளனா்.

இதுகுறித்து மாநாடு நடைபெறும் காா்ன்வாலில் ஜி-7 நாடுகளின் தலைவா்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், சீனாவின் வா்த்தக வழித் தடத் திட்டத்துக்கு மாற்றாக தாங்கள் செயல்படுத்தும் திட்டத்தில் மதிப்பு அடிப்படையிலான, உயா் தரம் மிக்க, வெளிப்படைத் தன்மையுடன் கூடிய வா்த்தக நட்புறவு பேணப்படும் என்று குறிப்பிட்டுள்ளனா்.

எனினும், இந்த திட்டத்துக்கு எவ்வாறு நிதி வழங்கப்படும் என்பது இதுவரை தெளிவுபடுத்தப்படவில்லை என்று பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொழில் வளா்ச்சியில் முன்னிலை வகிக்கும் நாடுகள் இடம் பெற்றுள்ள ஜி-7 கூட்டமைப்பின் 47 ஆவது மாநாடு பிரிட்டனின் காா்ன்வால் பகுதியிலுள்ள செயின்ட் ஐவ்ஸ் நகரில் வெள்ளிக்கிழமை (ஜூன் 11) தொடங்கி 3 நாள்களுக்கு நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், பிரிட்டன், ஜொ்மனி, பிரான்ஸ், இத்தாலி, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியன் அமைப்பின் தலைவா்கள் கலந்து கொண்டுள்ளனா்.

தற்போது உலக அளவில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள கரோனா நோய்த்தொற்றைப் போல், எதிா்காலத்தில் பிற கொள்ளை நோய்கள் பாதிப்பு ஏற்படுவதைத் தடுப்பதற்கான கூட்டுத் திட்டத்தை ஜி-7 மாநாட்டில் தலைவா்கள் வெளியிடுவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

கொள்ளை நோய்களுக்கு எதிரான தடுப்பூசிகளை 100 நாள்களுக்கு உருவாக்குவது உள்பட பல்வேறு அம்சங்கள் அந்த திட்டத்தில் இடம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

Posted in Uncategorized

ஜி7 நாடுகளுக்கு சீனா எச்சரிக்கை – ‘சில நாடுகள் உலகின் விதியை நிர்ணயிக்கும் காலம் முடிந்துவிட்டது’

“சில நாடுகள் மட்டுமே உள்ள சிறு குழுக்கள் உலகின் விதியை நிர்ணயிக்கும் காலம் எப்போதோ முடிந்துவிட்டது,” என சீனா, ஜி7 நாடுகளிடம் தெரிவித்துள்ளது.

சீனாவை விஞ்சும் நிலையை தாங்கள் ஒன்றிணைந்து எட்ட வேண்டும் என இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் ஜி7 உச்சி மாநாட்டில் அந்த நாடுகளின் தலைவர்கள் எடுத்துள்ள முடிவுக்கு, லண்டனில் உள்ள சீன தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் இவ்வாறு எதிர்வினையாற்றியுள்ளார்.

குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளின் கட்டமைப்பை மேம்படுத்தவும், பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உதவவும் சீனாவின் திட்டத்தை போன்று ஒரு திட்டத்தை உருவாக்க ஜி7 நாட்டுத் தலைவர்கள் முடிவெடுத்துள்ளனர்.

ஜி7 மாநாடு ஞாயிறன்று நிறைவுறும்போது இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதே போன்ற ஒரு திட்டத்தை சீனா ஏற்கனவே செயல்படுத்தி வருகிறது. அதற்கு போட்டியாகவே ஜி7 அமைப்பின் இத்திட்டம் கொண்டுவரப்படுகிறது.

எழுச்சி பெற்று வரும் சீனாவை எதிர்கொள்ளும் வகையில் மேற்குலக நாடுகள் செயல்பட வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உறுதி கொண்டுள்ளதாக வல்லுநர்கள் கருதுகிறார்கள்.

ஜி7 என்றால் என்ன? இதில் சீனா ஏன் இல்லை?

பொருளாதார ரீதியில் வேகமாக வளர்ந்து வரும் இந்தியா, சீனா, பிரேசில் போன்ற நாடுகள், ஜி20 அமைப்பில் இடம் பெற்றிருந்தாலும் ஜி7 அமைப்பின் உறுப்பினர்களாக இல்லை.

முன்னேறிய நாடுகள் என்று கருதப்படும், வளர்ந்த பொருளாதாரங்களைக் கொண்ட ஏழு நாடுகள் இருக்கும் அமைப்பே ஜி7. அதாவது Group of Seven.

இதில் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இடம் பெற்றிருக்கின்றன.

சுதந்திரம், மனித உரிமை, ஜனநாயகம், சட்டம் ஒழுங்கு, செழிப்பு மற்றும் நிலையான வளர்ச்சி போன்ற முக்கிய கொள்கைகளோடு, தங்கள் சமூகம் இருப்பதாக இந்த நாடுகள் தங்களை கருதிக் கொள்கின்றன. இதனால் இந்தப் பண்புகள் இல்லாத நாடுகள் என்று தாங்கள் கருதும் நாடுகளை இவர்கள் ஜி7 அமைப்பில் சேர்த்துக்கொள்வதில்லை.

முதன்முதலில் 1975ல், உலக பொருளாதார நெருக்கடிக்கான தீர்வுகளை தேடும் முயற்சியில் தங்களின் யோசனைகளை பரிமாற்றிக் கொள்வதற்காக ஆறு நாடுகள் கூடி சந்தித்தன.

அதற்கு அடுத்த ஆண்டு கனடா இந்த அமைப்பில் உறுப்பினரானது. 1998இல் உறுப்பினரான ரஷ்யா உக்ரைனின் அங்கமாக இருந்த கிரிமியாவை தன்னுடன் 2014இல் இணைத்துக் கொண்டதால் நீக்கப்பட்டது. அதன்பின் ஜி8 மீண்டும் ஜி7 ஆனது.

ஆண்டு முழுவதும் அவ்வப்போது, ஜி7 உறுப்பு நாடுகளின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள், சில முக்கிய விஷயங்களை விவாதிக்கக் கூடுவார்கள்.

பிபிசி தமிழ்

அரசாங்கம் வருட இறுதிக்குள் பாரிய நிதி நெருக்கடிக்குள் தள்ளப்படும் ரெலோ தலைவர் செல்வம் எம்.பி

எரிபொருள் விலையேற்றம் மூலம் ஏழை மக்கள், மீனவர்கள் மற்றும் விவசாயிகள் பெரும் பாதிப்பினை சந்திப்பதுடன் அரசாங்கம் வருட இறுதிக்குள் பாரிய நிதி நெருக்கடிக்குள் தள்ளப்படும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

மன்னாரில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (13) காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது பல்வேறு விடையங்கள் தொடர்பாக கருத்து தெரிவித்தார்.

இதன் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எரி பொருட்களின் விலையேற்றம்.

தற்போதைய அரசாங்கம் வருட இறுதிக்குள் பாரிய நிதி நெருக்கடிக்குள் தள்ளப்படும் சூழ் நிலையில் காணப்படுகின்றது.

அதற்கான முதல் படி எரி பொருட்களின் விலையேற்றம். மிகவும் மோசமான ஒரு சூழல் இந்த நாட்டில் இருக்கின்ற நிலையில் எரிபொருளை வறிய மக்கள் பயண்படுத்துகின்ற மண்னெண்னை 7 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனால் சாதாரண மக்கள் கடற்தொழிலாளர்கள், விவசாயிகள் அன்றாட கூலித் தொழிலாளர்கள் ஆகியோர் பாரிய பிரச்சினைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

அரசாங்கம் தன்னை நியாயப்படுத்த கூறுகின்ற காரணங்களை ஏற்றுக்கொள்ள முடியாது. நாடு முடக்கப்பட்டுள்ள நிலையில் மக்களும் முடக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இவ்வாறான ஒரு அபாயச் செய்தியான எரிபொருட்களின் விலையேற்றம் செய்யப்பட்டமையை வண்மையாக கண்டிக்கின்றோம்.

எரி பொருட்கள் மட்டும் இல்லை ஏனைய அத்தியாவசியப் பொருட்களும் விலை அதிகரிப்புச் செய்யப்படுவதற்கான காரணமாகவும் உள்ளது. பாண் உட்பட அனைத்துப் பொருட்களின் விலையும் அதிகரிப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படும்.

எனவே இந்த அரசாங்கம் மக்கள் தொடர்பில் சிந்திக்கின்ற அரசாங்கமாக செயல் படவில்லை என்பதை தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

அந்த வகையில் இலங்கை அரசாங்கம் உடனடியாக விலையேற்றங்களை குறைக்க வேண்டும். நாட்டில் வாழ்கின்ற மக்களுக்கு நல்ல செய்தியை விலை குறைப்பின் ஊடாக சொல்ல வேண்டும்.

இல்லை என்றால் நான் கூறியது போல் இவ் வருட இறுதிக்குள் பாரிய நிதி நெருக்கடிக்குள் தள்ளப்படும் என தெரிவித்தார்.

கப்பலை நாட்டிற்குள் கொண்டு வந்ததற்கான நியாயப்பாட்டை கூறும் அரசு.

மேலும் சனிக்கிழமை (12) பிரதமர் தலைமையில் கப்பல் தொடர்பாக ஒரு அவசர கலந்துரையாடல் இடம் பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலை பார்க்கின்ற போது குறித்த கப்பலை நாட்டிற்குள் எடுத்ததிற்கான நியாயப்பாட்டினை தெரிவிக்கின்ற வகையிலே குறித்த கூட்டம் அமைந்துள்ளது.

ஆனால் கப்பல் உள்ளே எடுக்கப்பட்டமையினால் பாதிக்கப்பட்டவர்கள் மக்கள் மற்றும் மீனவ சமூகம்.

மீனவ சமூகம் பாரிய பின்னடைவை சந்திக்கப் போகின்றார்கள் என்பது உண்மை. மன்னார் வளை குடாவில் கூட கப்பலின் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

எனவே 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பதன் ஊடாக பாரிய பிரச்சினையை நிவர்த்தி செய்ய முடியாது. எங்களுடைய மீனவ சமூகம் தங்களிடம் பிடிபடுகின்ற மீனை சர்வதேச ரீதியாக அனுப்பப்படுகின்ற போது சர்வதேசம் எமது மீனவர்களின் மீன்களை கொள்வனவு செய்வார்களா? என்கின்ற அச்சத்தோடு, இருக்கின்றார்கள்.

ஆகவே இலங்கையில் பிடிக்கப்படுகின்ற மீன் வகைகள் சர்வதேச ரீதியாக ஏற்றுமதி செய்யப்படுகின்ற போது அவை திருப்பி அனுப்பப்படுகின்ற நிலை ஏற்படுமா? ஏன்ற நிலையில் எமது மீனவ சமூகம் ஒரு அச்சத்துடன் இருக்கின்றது.

விலை உயர்ந்த மீன் வகைகளை அவர்கள் நல்ல விலைக்கு கொடுத்து அவர்களின் வாழ்வாதாரம் உயர்வடைகின்ற நிலையினை அவர்கள் எதிர் பார்த்துள்ளனர்.

யார் எதனை கூறினாலும் பாதிக்கப்படுவது எமது மீனவ சமூகம். அவர்களுடைய அன்றாட பிரச்சினை மிக மோசமான ஒரு சூழலை ஏற்படுத்தும். கப்பல் தொடர்பில் நியாயப்படுத்துகின்ற விடையங்கள் தவிர்க்கப்பட வேண்டும். உள்ளதைச் சொல்லுங்கள்.

எங்களுடைய மக்களையும், மீனவச் சமூகத்தையும் காப்பாற்றுகின்ற அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்.

நிதியை பெற்றுக் கொள்ளவே கப்பலை உள்ளே எடுத்ததாக வாசுதேவ நாணயக்கர தெரிவித்துள்ளார். அரசாங்கம் பல தடவைகள் பணம் சம்பாதிக்கின்ற சூழலை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் எமது மக்களை பலிக்காடாக்குகின்ற நிலையை இந்த அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

நாடு முழுவதும் அமுல் படுத்தப்பட்ட பயணத்தை வெற்றியளிக்குமா?

நாடு முழுவதும் அமுல் படுத்தப்பட்டுள்ள பயணத்தடையானது நாட்டில் இருந்து கொரோனா தொற்றை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்பதற்காகவே நாடு முழுமையாக முடக்கப்பட்டது.

ஆனால் நாடு முடக்கப்பட்டமைக்கான நோக்கம் வெற்றி பெற்றதாக இல்லை. காரணம் தொற்றாளர்களினதும், மரணிப்பவர்களினதும் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகின்றது. எனவே இந்த நாட்டை முடக்குகின்ற நிலமை தொடர்ந்து கொண்டுள்ள நிலையில் மக்கள் தான் பாதிக்கப்படுகின்றார்கள்.

வைரஸின் தாக்கம் கூடிக் கொண்டிருக்கின்றது.இதற்கு முதல் காரணம் என்ன என்றால் அனைத்து மக்களும் ஆதரவு வழங்க வேண்டும் என்றால் முதலில் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட வேண்டும்.

உலக நாடுகளும் அதனையே செய்கின்றது. ஆனால் நாட்டை முடக்கி விட்டு தடுப்பூசி வழங்க வில்லை என்றால் இறப்பு அதிகரிக்கும், தொற்றும் அதிகரிக்கும். எனவே இவற்றை தடுக்க வேண்டும் என்றால் கொரோனா தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட வேண்டும்.

வன்னி மாவட்டத்தில் மக்களுக்கு தடுப்பூசிகளை வழங்குவதற்கான உரிய வழி முறைகளை அரசு கண்டு கொள்ளவில்லை.

யாழ்ப்பாணத்தில் அதிக அளவில் தொற்றாளர்கள் உள்ளனர். அங்கே தடுப்பூசிகள் போடப்பட வேண்டும்.

வன்னி மாவட்டம் குறிப்பாக முல்லைத்தீவிலும் கிராமங்கள் முடக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆடைத் தொழிற்சாலையினால் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது. ஆடைத் தொழிற்சாலை தொடர்ந்தும் இயங்கிக் கொண்டு இருக்கின்றது. ஆடைத் தொழிற் சாலையினாலேயே கொரோனா தொற்று பரவிக் கொண்டிருக்கின்றது.

மேலும் ஆடைத் தொழிற்சாலையில் கடமையாற்றுகின்றவர்களுக்கு பீ.சி.ஆர்.பரிசோதனை அரச செலவில் மேற்கொள்ளப்படுவதாக அறிகின்றோம். அவ்வாறு செய்யாமல் அரசினால் மேற்கொள்ளப்படும் பீ.சி.ஆர்.பரிசோதனை சமூகத்திலும், மக்கள் மத்தியிலும் முழுமையாக சென்றடைய வேண்டும்.

ஆடைத் தொழிற்சாலை பணியாளர்கள் தனிப்பட்ட முறையில் பீ.சி.ஆர் பரிசோதனைகளை முன்னெடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

த.தே.கூட்டமைப்பில் இருந்து வெளியேறி தனித்து செயல்படுமா ரெலோ?

கூட்டடைப்பில் இருந்து ரெலோ வெளியேறி தனித்து செயல்படாது.  தமிழ் தேசியக் கூட்டமைப்பின்(TNA)  உருவாக்கம் பெறுவதற்கான முயற்சிகளை தமிழ் ஈழ விடுதலை இயக்கம் மேற்கொண்டது.

கூட்டமைப்பிற்குள் சில பிரச்சினைகள் உள்ளது. அதனை நிவர்த்தி செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம்.

தமிழ் தேசியக்கூட்டமையில் இருந்து தமிழ் ஈழ விடுதலை  இயக்கம் ரெலோ வெளியில் வந்து செயல் படுவதற்கான எண்ணம் தற்போது வரை இல்லை. சில பிரச்சினைகள் உள்ளது. அதனை தெரியப்படுத்தி உள்ளோம். உள்ளே இருந்து கொண்டு செயல் படுவோம்.

ஆனால் தற்போதைய கால சூழ்நிலையில் வெளியில் வந்து செயற்படும் நிலை ஏற்படாது என்றார்.

மக்களை நேசிக்கின்ற கட்சிகளை ஒன்றிணைத்து மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளை தீர்த்து வைக்க நிவாரணத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுகின்றோம்.

தமிழ் கட்சிகளை ஒன்றிணைத்து குறித்த நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.