பங்காளிகளின் தனிவழி சந்திப்பில் முக்கிய அமைச்சர்கள் இருவர் பங்கேற்பு

ஆளும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பங்காளி கட்சிகளின் தலைவர்கள் சிலர், தனியான சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர்.

அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்சவின் உத்தியோகபூர்வ இல்லத்திலேயே ஞாயிற்றுக்கிழமை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

எரிபொருள் விலையேற்றத்தை அடுத்து, விடயதானத்துக்குப் பொறுப்பான அமைச்சர் உதய கம்மன்பில பதவிவிலக வேண்டும் என, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரான சாகர காரியவம் எம்.பி வெளியிட்ட ஊடக அறிக்கை தொடர்பிலும் பங்காளி கட்சிகளின் தலைவர் விரிவாக கலந்துரையாடியுள்ளனர்.

எரிபொருள் விலையேற்றம், அமைச்சர் கம்மன்பிலவின் தனித் தீர்மானம் அல்ல, அரசாங்கத்தால் ​எடுக்கப்பட்ட பொதுத் தீர்மானம் ஆகும். ஆகையால், அமைச்சர் கம்மன்பிலவுக்காக குரல்கொடுப்பதற்கு, அக்கூடத்தில் பங்கேற்றிருந்த பங்காளி கட்சிகளின் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், சாகர காரியவசம் வெளியிட்ட அறிக்கைக்கு அதிருப்தியை வெளியிட்டு அறிக்கையொன்றை வெளியிடவும் இக்கூட்டத்தின் போது கலந்துரையாடப்பட்டு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலையேற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஏழ்மையான மக்களுக்கு, அத்தியாவசியப் பொருள்கள் அடங்கிய நிவாரண பொதியை வழங்குவதற்கும் இக்கட்சித் தலைவர்கள் யோசனையொன்றை முன்வைத்துள்ளனர் என அறியமுடிகின்றது.

அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், அத்துரலிய ரத்ன தேரர், வாசுதேவ நாணயக்கார, டிரான் அலஸ், உள்ளிட்டவர்களும் பங்கேற்றிருந்தனர்.

அதுமட்டுமன்றி, வாழ்க்கைச் செலவு தொடர்பிலான அமைச்சரவை உப-குழுவின் உறுப்பினர்களான அமைச்சர் பந்துல குணவர்தன, அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோரும் பங்கேற்றிருந்தனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Posted in Uncategorized

சீன ஆதிக்கத்தைத் தடுக்க பைடனின் திட்டம்!

சா்வதேச அளவில் சீனாவின் வா்த்தக ஆதிக்கத்தைத் தடுப்பதற்கான அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் திட்டத்துக்கு ஜி-7 அமைப்பு நாடுகளின் தலைவா்கள் ஒப்புதல் அளித்துள்ளனா்.

இதுகுறித்து பிபிசி ஊடகம் தெரிவித்துள்ளதாவது:

பிரிட்டனின் காா்ன்வால் பகுதியில் நடைபெற்று வரும் ஜி-7 மாநாட்டில், சா்வதேச அளவில் உறுப்பு நாடுகளுக்கு பலத்த போட்டியை அளித்து வரும் சீனாவின் ஆதிக்கத்தை எதிா்கொள்வதற்கான திட்டங்களை அமெரிக்க அதிபா் ஜோ பைடன் முன்வைத்தாா்.

சீனாவின் கடுமையான போட்டியை சமாளிக்கும் வகையில், தங்களது நாடுகளைச் சோ்ந்த சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தங்களது உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்திக் கொள்வதற்காக நாடுகளின் அரசுகள் உதவ வேண்டும் என்று ஜனாதிபதி பைடன் வலியுறுத்தினாா்.

உலகம் முழுவதும் தனது செல்வாக்கை அதிகரித்துக் கொள்ளும் வகையில், பெல்ட் அண்டு ரோடு இனிஷியேட்டிவ் (பிஆா்ஐ) என்ற பெயரில் சீனா வா்த்தக வழித் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

அதன் மூலம், தங்களது நாட்டுடன் வா்த்தக வழித்தடத்தை ஏற்படுத்திக் கொள்வதற்காக சாலைகள், ரயில் பாதைகள், துறைமுகங்களை அமைத்துக் கொள்வதற்காக பிற நாடுகளுக்கு சீனா நிதியுதவி அளித்து வருகிறது.

இதன் மூலம், பிற நாடுகளை சீனா கடன் வலைக்குள் சிக்க வைப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.

இந்த நிலையில், சீனாவின் இந்த வா்த்தக வழித் தடத் திட்டதற்கு சரியான மாற்றாக, பில்டு பேக் பெட்டா் வோ்ல்டு (சிறந்த உலகை உருவாக்குவோம்) என்ற திட்டத்தை தங்கள் நாட்டு உதவியுடன் அமல்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி பைடன் ஜி-7 மாநாட்டில் வலியுறுத்தினாா்.

இதற்கு, மாநாட்டில் பங்கேற்ற உறுப்பு நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளனா்.

இதுகுறித்து மாநாடு நடைபெறும் காா்ன்வாலில் ஜி-7 நாடுகளின் தலைவா்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், சீனாவின் வா்த்தக வழித் தடத் திட்டத்துக்கு மாற்றாக தாங்கள் செயல்படுத்தும் திட்டத்தில் மதிப்பு அடிப்படையிலான, உயா் தரம் மிக்க, வெளிப்படைத் தன்மையுடன் கூடிய வா்த்தக நட்புறவு பேணப்படும் என்று குறிப்பிட்டுள்ளனா்.

எனினும், இந்த திட்டத்துக்கு எவ்வாறு நிதி வழங்கப்படும் என்பது இதுவரை தெளிவுபடுத்தப்படவில்லை என்று பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொழில் வளா்ச்சியில் முன்னிலை வகிக்கும் நாடுகள் இடம் பெற்றுள்ள ஜி-7 கூட்டமைப்பின் 47 ஆவது மாநாடு பிரிட்டனின் காா்ன்வால் பகுதியிலுள்ள செயின்ட் ஐவ்ஸ் நகரில் வெள்ளிக்கிழமை (ஜூன் 11) தொடங்கி 3 நாள்களுக்கு நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், பிரிட்டன், ஜொ்மனி, பிரான்ஸ், இத்தாலி, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியன் அமைப்பின் தலைவா்கள் கலந்து கொண்டுள்ளனா்.

தற்போது உலக அளவில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள கரோனா நோய்த்தொற்றைப் போல், எதிா்காலத்தில் பிற கொள்ளை நோய்கள் பாதிப்பு ஏற்படுவதைத் தடுப்பதற்கான கூட்டுத் திட்டத்தை ஜி-7 மாநாட்டில் தலைவா்கள் வெளியிடுவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

கொள்ளை நோய்களுக்கு எதிரான தடுப்பூசிகளை 100 நாள்களுக்கு உருவாக்குவது உள்பட பல்வேறு அம்சங்கள் அந்த திட்டத்தில் இடம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஜி7 நாடுகளுக்கு சீனா எச்சரிக்கை – ‘சில நாடுகள் உலகின் விதியை நிர்ணயிக்கும் காலம் முடிந்துவிட்டது’

“சில நாடுகள் மட்டுமே உள்ள சிறு குழுக்கள் உலகின் விதியை நிர்ணயிக்கும் காலம் எப்போதோ முடிந்துவிட்டது,” என சீனா, ஜி7 நாடுகளிடம் தெரிவித்துள்ளது.

சீனாவை விஞ்சும் நிலையை தாங்கள் ஒன்றிணைந்து எட்ட வேண்டும் என இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் ஜி7 உச்சி மாநாட்டில் அந்த நாடுகளின் தலைவர்கள் எடுத்துள்ள முடிவுக்கு, லண்டனில் உள்ள சீன தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் இவ்வாறு எதிர்வினையாற்றியுள்ளார்.

குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளின் கட்டமைப்பை மேம்படுத்தவும், பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உதவவும் சீனாவின் திட்டத்தை போன்று ஒரு திட்டத்தை உருவாக்க ஜி7 நாட்டுத் தலைவர்கள் முடிவெடுத்துள்ளனர்.

ஜி7 மாநாடு ஞாயிறன்று நிறைவுறும்போது இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதே போன்ற ஒரு திட்டத்தை சீனா ஏற்கனவே செயல்படுத்தி வருகிறது. அதற்கு போட்டியாகவே ஜி7 அமைப்பின் இத்திட்டம் கொண்டுவரப்படுகிறது.

எழுச்சி பெற்று வரும் சீனாவை எதிர்கொள்ளும் வகையில் மேற்குலக நாடுகள் செயல்பட வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உறுதி கொண்டுள்ளதாக வல்லுநர்கள் கருதுகிறார்கள்.

ஜி7 என்றால் என்ன? இதில் சீனா ஏன் இல்லை?

பொருளாதார ரீதியில் வேகமாக வளர்ந்து வரும் இந்தியா, சீனா, பிரேசில் போன்ற நாடுகள், ஜி20 அமைப்பில் இடம் பெற்றிருந்தாலும் ஜி7 அமைப்பின் உறுப்பினர்களாக இல்லை.

முன்னேறிய நாடுகள் என்று கருதப்படும், வளர்ந்த பொருளாதாரங்களைக் கொண்ட ஏழு நாடுகள் இருக்கும் அமைப்பே ஜி7. அதாவது Group of Seven.

இதில் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இடம் பெற்றிருக்கின்றன.

சுதந்திரம், மனித உரிமை, ஜனநாயகம், சட்டம் ஒழுங்கு, செழிப்பு மற்றும் நிலையான வளர்ச்சி போன்ற முக்கிய கொள்கைகளோடு, தங்கள் சமூகம் இருப்பதாக இந்த நாடுகள் தங்களை கருதிக் கொள்கின்றன. இதனால் இந்தப் பண்புகள் இல்லாத நாடுகள் என்று தாங்கள் கருதும் நாடுகளை இவர்கள் ஜி7 அமைப்பில் சேர்த்துக்கொள்வதில்லை.

முதன்முதலில் 1975ல், உலக பொருளாதார நெருக்கடிக்கான தீர்வுகளை தேடும் முயற்சியில் தங்களின் யோசனைகளை பரிமாற்றிக் கொள்வதற்காக ஆறு நாடுகள் கூடி சந்தித்தன.

அதற்கு அடுத்த ஆண்டு கனடா இந்த அமைப்பில் உறுப்பினரானது. 1998இல் உறுப்பினரான ரஷ்யா உக்ரைனின் அங்கமாக இருந்த கிரிமியாவை தன்னுடன் 2014இல் இணைத்துக் கொண்டதால் நீக்கப்பட்டது. அதன்பின் ஜி8 மீண்டும் ஜி7 ஆனது.

ஆண்டு முழுவதும் அவ்வப்போது, ஜி7 உறுப்பு நாடுகளின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள், சில முக்கிய விஷயங்களை விவாதிக்கக் கூடுவார்கள்.

பிபிசி தமிழ்

அரசாங்கம் வருட இறுதிக்குள் பாரிய நிதி நெருக்கடிக்குள் தள்ளப்படும் ரெலோ தலைவர் செல்வம் எம்.பி

எரிபொருள் விலையேற்றம் மூலம் ஏழை மக்கள், மீனவர்கள் மற்றும் விவசாயிகள் பெரும் பாதிப்பினை சந்திப்பதுடன் அரசாங்கம் வருட இறுதிக்குள் பாரிய நிதி நெருக்கடிக்குள் தள்ளப்படும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

மன்னாரில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (13) காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது பல்வேறு விடையங்கள் தொடர்பாக கருத்து தெரிவித்தார்.

இதன் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எரி பொருட்களின் விலையேற்றம்.

தற்போதைய அரசாங்கம் வருட இறுதிக்குள் பாரிய நிதி நெருக்கடிக்குள் தள்ளப்படும் சூழ் நிலையில் காணப்படுகின்றது.

அதற்கான முதல் படி எரி பொருட்களின் விலையேற்றம். மிகவும் மோசமான ஒரு சூழல் இந்த நாட்டில் இருக்கின்ற நிலையில் எரிபொருளை வறிய மக்கள் பயண்படுத்துகின்ற மண்னெண்னை 7 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனால் சாதாரண மக்கள் கடற்தொழிலாளர்கள், விவசாயிகள் அன்றாட கூலித் தொழிலாளர்கள் ஆகியோர் பாரிய பிரச்சினைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

அரசாங்கம் தன்னை நியாயப்படுத்த கூறுகின்ற காரணங்களை ஏற்றுக்கொள்ள முடியாது. நாடு முடக்கப்பட்டுள்ள நிலையில் மக்களும் முடக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இவ்வாறான ஒரு அபாயச் செய்தியான எரிபொருட்களின் விலையேற்றம் செய்யப்பட்டமையை வண்மையாக கண்டிக்கின்றோம்.

எரி பொருட்கள் மட்டும் இல்லை ஏனைய அத்தியாவசியப் பொருட்களும் விலை அதிகரிப்புச் செய்யப்படுவதற்கான காரணமாகவும் உள்ளது. பாண் உட்பட அனைத்துப் பொருட்களின் விலையும் அதிகரிப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படும்.

எனவே இந்த அரசாங்கம் மக்கள் தொடர்பில் சிந்திக்கின்ற அரசாங்கமாக செயல் படவில்லை என்பதை தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

அந்த வகையில் இலங்கை அரசாங்கம் உடனடியாக விலையேற்றங்களை குறைக்க வேண்டும். நாட்டில் வாழ்கின்ற மக்களுக்கு நல்ல செய்தியை விலை குறைப்பின் ஊடாக சொல்ல வேண்டும்.

இல்லை என்றால் நான் கூறியது போல் இவ் வருட இறுதிக்குள் பாரிய நிதி நெருக்கடிக்குள் தள்ளப்படும் என தெரிவித்தார்.

கப்பலை நாட்டிற்குள் கொண்டு வந்ததற்கான நியாயப்பாட்டை கூறும் அரசு.

மேலும் சனிக்கிழமை (12) பிரதமர் தலைமையில் கப்பல் தொடர்பாக ஒரு அவசர கலந்துரையாடல் இடம் பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலை பார்க்கின்ற போது குறித்த கப்பலை நாட்டிற்குள் எடுத்ததிற்கான நியாயப்பாட்டினை தெரிவிக்கின்ற வகையிலே குறித்த கூட்டம் அமைந்துள்ளது.

ஆனால் கப்பல் உள்ளே எடுக்கப்பட்டமையினால் பாதிக்கப்பட்டவர்கள் மக்கள் மற்றும் மீனவ சமூகம்.

மீனவ சமூகம் பாரிய பின்னடைவை சந்திக்கப் போகின்றார்கள் என்பது உண்மை. மன்னார் வளை குடாவில் கூட கப்பலின் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

எனவே 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பதன் ஊடாக பாரிய பிரச்சினையை நிவர்த்தி செய்ய முடியாது. எங்களுடைய மீனவ சமூகம் தங்களிடம் பிடிபடுகின்ற மீனை சர்வதேச ரீதியாக அனுப்பப்படுகின்ற போது சர்வதேசம் எமது மீனவர்களின் மீன்களை கொள்வனவு செய்வார்களா? என்கின்ற அச்சத்தோடு, இருக்கின்றார்கள்.

ஆகவே இலங்கையில் பிடிக்கப்படுகின்ற மீன் வகைகள் சர்வதேச ரீதியாக ஏற்றுமதி செய்யப்படுகின்ற போது அவை திருப்பி அனுப்பப்படுகின்ற நிலை ஏற்படுமா? ஏன்ற நிலையில் எமது மீனவ சமூகம் ஒரு அச்சத்துடன் இருக்கின்றது.

விலை உயர்ந்த மீன் வகைகளை அவர்கள் நல்ல விலைக்கு கொடுத்து அவர்களின் வாழ்வாதாரம் உயர்வடைகின்ற நிலையினை அவர்கள் எதிர் பார்த்துள்ளனர்.

யார் எதனை கூறினாலும் பாதிக்கப்படுவது எமது மீனவ சமூகம். அவர்களுடைய அன்றாட பிரச்சினை மிக மோசமான ஒரு சூழலை ஏற்படுத்தும். கப்பல் தொடர்பில் நியாயப்படுத்துகின்ற விடையங்கள் தவிர்க்கப்பட வேண்டும். உள்ளதைச் சொல்லுங்கள்.

எங்களுடைய மக்களையும், மீனவச் சமூகத்தையும் காப்பாற்றுகின்ற அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்.

நிதியை பெற்றுக் கொள்ளவே கப்பலை உள்ளே எடுத்ததாக வாசுதேவ நாணயக்கர தெரிவித்துள்ளார். அரசாங்கம் பல தடவைகள் பணம் சம்பாதிக்கின்ற சூழலை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் எமது மக்களை பலிக்காடாக்குகின்ற நிலையை இந்த அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

நாடு முழுவதும் அமுல் படுத்தப்பட்ட பயணத்தை வெற்றியளிக்குமா?

நாடு முழுவதும் அமுல் படுத்தப்பட்டுள்ள பயணத்தடையானது நாட்டில் இருந்து கொரோனா தொற்றை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்பதற்காகவே நாடு முழுமையாக முடக்கப்பட்டது.

ஆனால் நாடு முடக்கப்பட்டமைக்கான நோக்கம் வெற்றி பெற்றதாக இல்லை. காரணம் தொற்றாளர்களினதும், மரணிப்பவர்களினதும் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகின்றது. எனவே இந்த நாட்டை முடக்குகின்ற நிலமை தொடர்ந்து கொண்டுள்ள நிலையில் மக்கள் தான் பாதிக்கப்படுகின்றார்கள்.

வைரஸின் தாக்கம் கூடிக் கொண்டிருக்கின்றது.இதற்கு முதல் காரணம் என்ன என்றால் அனைத்து மக்களும் ஆதரவு வழங்க வேண்டும் என்றால் முதலில் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட வேண்டும்.

உலக நாடுகளும் அதனையே செய்கின்றது. ஆனால் நாட்டை முடக்கி விட்டு தடுப்பூசி வழங்க வில்லை என்றால் இறப்பு அதிகரிக்கும், தொற்றும் அதிகரிக்கும். எனவே இவற்றை தடுக்க வேண்டும் என்றால் கொரோனா தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட வேண்டும்.

வன்னி மாவட்டத்தில் மக்களுக்கு தடுப்பூசிகளை வழங்குவதற்கான உரிய வழி முறைகளை அரசு கண்டு கொள்ளவில்லை.

யாழ்ப்பாணத்தில் அதிக அளவில் தொற்றாளர்கள் உள்ளனர். அங்கே தடுப்பூசிகள் போடப்பட வேண்டும்.

வன்னி மாவட்டம் குறிப்பாக முல்லைத்தீவிலும் கிராமங்கள் முடக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆடைத் தொழிற்சாலையினால் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது. ஆடைத் தொழிற்சாலை தொடர்ந்தும் இயங்கிக் கொண்டு இருக்கின்றது. ஆடைத் தொழிற் சாலையினாலேயே கொரோனா தொற்று பரவிக் கொண்டிருக்கின்றது.

மேலும் ஆடைத் தொழிற்சாலையில் கடமையாற்றுகின்றவர்களுக்கு பீ.சி.ஆர்.பரிசோதனை அரச செலவில் மேற்கொள்ளப்படுவதாக அறிகின்றோம். அவ்வாறு செய்யாமல் அரசினால் மேற்கொள்ளப்படும் பீ.சி.ஆர்.பரிசோதனை சமூகத்திலும், மக்கள் மத்தியிலும் முழுமையாக சென்றடைய வேண்டும்.

ஆடைத் தொழிற்சாலை பணியாளர்கள் தனிப்பட்ட முறையில் பீ.சி.ஆர் பரிசோதனைகளை முன்னெடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

த.தே.கூட்டமைப்பில் இருந்து வெளியேறி தனித்து செயல்படுமா ரெலோ?

கூட்டடைப்பில் இருந்து ரெலோ வெளியேறி தனித்து செயல்படாது.  தமிழ் தேசியக் கூட்டமைப்பின்(TNA)  உருவாக்கம் பெறுவதற்கான முயற்சிகளை தமிழ் ஈழ விடுதலை இயக்கம் மேற்கொண்டது.

கூட்டமைப்பிற்குள் சில பிரச்சினைகள் உள்ளது. அதனை நிவர்த்தி செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம்.

தமிழ் தேசியக்கூட்டமையில் இருந்து தமிழ் ஈழ விடுதலை  இயக்கம் ரெலோ வெளியில் வந்து செயல் படுவதற்கான எண்ணம் தற்போது வரை இல்லை. சில பிரச்சினைகள் உள்ளது. அதனை தெரியப்படுத்தி உள்ளோம். உள்ளே இருந்து கொண்டு செயல் படுவோம்.

ஆனால் தற்போதைய கால சூழ்நிலையில் வெளியில் வந்து செயற்படும் நிலை ஏற்படாது என்றார்.

மக்களை நேசிக்கின்ற கட்சிகளை ஒன்றிணைத்து மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளை தீர்த்து வைக்க நிவாரணத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுகின்றோம்.

தமிழ் கட்சிகளை ஒன்றிணைத்து குறித்த நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

அமைச்சர் கம்மன்பிலவின் சிங்கப்பூர் வங்கிக் கணக்கு குறித்து விசாரணை

அமைச்சர் உதய கம்மன்பிலவின் சிங்கப்பூர் வங்கிக் கணக்கு சம்பந்தமான விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிங்கப்பூர் நிறுவனத்தின் ஊடாக இலங்கைக்கு எரிபொருள் இறக்குமதி செய்யப்படுகிறது.

இதன் மூலம் கிடைக்கும் பல மில்லியன் டொலர் தரகு பணம் சிங்கப்பூரில் உள்ள வங்கி ஒன்றில் வைப்புச் செய்யப்படுவதாகவும் அந்த நிறுவனத்தின் தேவைக்கு அமைய இலங்கையில் எரிபொருளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கிடைத்துள்ள தகவல் ஒன்றை அடுத்து இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குறித்த சிங்கப்பூர் நிறுவனம் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்திலும் இலங்கைக்கு எரிபொருளை விநியோகித்த பிரதான நிறுவனங்களில் ஒன்று.

எண்ணெயை உற்பத்தி செய்யும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து அதனை நேரடியாக இறக்குமதி செய்யாது, சிங்கப்பூர் நிறுவனத்தின் ஊடாக ஏன் இறக்குமதி செய்யப்படுகிறது என்ற கேள்வி, பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

அத்துடன் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து பெரும் கஷ்டத்தை அனுபவித்து வரும் நிலைமையில் எந்த வகையிலும் எரிபொருளின் விலைகளை அதிகரிக்கக் கூடாது என்பது பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களது நிலைப்பாடாக உள்ளது.

அத்துடன் இதன் காரணமாக மக்கள் மத்தியில்அரசியலில் ஈடுபட்டு வரும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மக்களின் கடும் அதிருப்திக்கு உள்ளாவார்கள் எனவும் அவர் கூறியுள்ளனர்.

மக்கள் மத்திக்கு சென்று அரசியலில் ஈடுபடாத அமைச்சர் உதய கம்மன்பில முழு அரசாங்கத்தையும் கஷ்டத்தில் தள்ளியுள்ளார் என்பது பொதுஜன பெரமுனவினரின் நிலைப்பாடாக உள்ளது.

Posted in Uncategorized

சத்தமில்லாத யுத்தம் மூலம் இலங்கையை ஆக்கிரமிக்கும் சீனா

சீனாவின் ஆக்கிரமிப்பு வலையத்தினுள் இலங்கை சிக்கி அதிலிருந்த மீளமுடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றது. சத்தமில்லாத மிகப்பெரிய யுத்தம் ஒன்றின் மூலம் இலங்கையை சீனா முழுமையாகக் கைப்பற்றி எதிர்காலத்தில் எங்களுக்கு சொந்தமான நாடு சீனாவிடம் சிக்கி நாங்கள் இந்த உலகத்தில் ஏதிலிகளாகத் தவிக்கின்ற ஒரு நிலைமையே இங்கு ஏற்படப்போகின்றது என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் இ.இளங்கதிர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சீன செயற்திட்டங்கள் தொடர்பில் இன்று கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தென்னாசியாவில் தனது ஆதிக்கத்தை நிறுவிக்கொள்ள நினைக்கும் சீனா அதற்காக இலங்கையில் சத்தமில்லாத யுத்தம் ஒன்றை ஆரம்பித்து தற்போது தமிழர் தாயத்தையும் ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளது.

இதன் ஆரம்பமாக தென்னிலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட ஆக்கிரமிப்பு வடிவமாக இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி என்ற பெயரில் பணத்தைக் கொடுத்து இலங்கைக்கு சொந்தமான கடல் பரப்பைக் கைப்பற்றி தனது வல்லாதிக்க சக்தியை நிலை நாட்டி நிற்கிறது.

இதன் தொடர்ச்சியாக வடமாகணத்திலும் தீவகத்தை கைப்பற்ற பல வழிகளில் முயற்சிகள் மேற்க்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பில் முன்னர் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் இடைநிறுத்தப்பட்ட போதும் தற்போது இரகசியமான முறையில் சீனாவுக்கு நாட்டின் வளம் மிக்க நிலப்பரப்புக்களை விற்று தற்போதைய இலங்கை ஆட்சியாளர்கள் ராஜபக்ஷ குடும்பம் தங்கள் குடும்ப அரசியல் இலாப நோக்கத்திற்காக தங்களது சொந்த நாட்டு மக்களையே ஏமாற்றி வருவதோடு, இலங்கையின் இறையாண்மையையே மதிக்காது செயற்ப்படுகின்றனர்.

அந்த வகையில் இலங்கையின் மேற்கே துறைமுக நகரம் உட்பட மிக முக்கியமான பொருளாதார மையங்கள் என இலங்கையின் நிலப்பரப்புகளை ஆக்கிரமிப்புச் செய்தது மட்டுமல்லாமல் தற்போது வடக்கில் மிகப் பெரிய அளவிலான ஆக்கிரமிப்பினை ஆரம்பித்துள்ளது. அன்பான எமது மக்கள் மிகத் தெளிவாக ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.

வடமாகாணத்தில் சீனாவின் ஆக்கிரமிப்பு பல வடிவங்களில் வருகின்றது. தற்போது காங்கேசன்துறை பகுதியில் முன்னாள் ஜனாதியும், தற்போதைய பிரதமருமான மகிந்த ராஜபக்ஷவினால் அமைக்கப்பட்ட சுற்றுலா விடுதிக்கான கட்டடத் தொகுதியைச் சீனாவிற்கு விற்கும் இரகசியத் திட்டம் போடப்பட்டுள்ளமை தொடர்பான செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

தற்போது நாட்டில் ஏற்படடுள்ள கோவிட் என்ற கொடிய நோயின் காரணமாக நாடே முடக்கப்பட்டுள்ள நிலையில் மக்களோ, ஏனைய அரசியல் பிரதிநிதிகளோ பெரிய அளவில் வெளியில் இறங்கி வேலை செய்ய முடியாத சூழலைப் பயன்படுத்தி இந்த அரசாங்கம் இரகசியமாக தங்களது அரசியலை நகர்த்தி வருகின்றது.

மாகாண சபைகள் இல்லாமையினாலேயே இவ்வாறான செயற்பாடுகளில் அரசாங்கம் தன்னிச்சையாகச் செயற்பட முடிகின்றது. மாகாணசபை இருப்பின் அரசாங்கத்தால் நேரடியாக இவ்வாறான முடிவுகளை எடுத்துச் செயற்பட முடியாது.

மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை இல்லாதொழித்து மாகாண சபைத் தேர்தலையும் நடத்தாது நாட்டின் ஜனநாயத்தைக் குழி தோண்டிப் புதைத்து விட்டு நாட்டை ஒரு சர்வாதிகார ஆட்சி முறையில் நடாத்தி வருகின்றது.

இந்திய அரசாங்கத்தால் தமிழ் மக்களின் நன்மை கருதி கொண்டு வரப்பட்ட 13ம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் மாகாணங்களை ஆட்சி செய்யும் அதிகாரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதனையும் இல்லாமல் ஒழிப்பதற்கான செயற்திட்டங்களையும் இந்த அரசு தென்னிலங்கையில் வைத்துத் திட்டம் தீட்டிக் கொண்டிருக்கின்றது.

எமது விடுதலைப் போராட்டத்தில் தலைவர்களின் அன்றைய தீர்க்கதரிசன வார்த்தைகள் இன்று நிரூபனமாகிக் கொண்டு வருகின்றன. எதிர்காலத்தில் சீன ஆதிக்கம் இலங்கையில் தோன்றும், அதுவே சிங்கள மக்கள் மத்தியில் ஒரு எழுச்சியைத் தோற்றுவிக்கும் என்று அவர்கள் அன்று கூறிய வார்த்தைகளை இன்று நாங்கள் நேரடியாகப் பார்க்கக் கூடியதாக இருக்கின்றன.

இன்று சிங்கள மக்கள் இந்த ஆட்சியாளர்களுக்கு எதிராக மிகப் பெரிய அளவில் கிளர்ந்தெழுந்துள்ளார்கள். அந்த மக்களின் எதிர்ப்புகளை முறியடிக்க முடியாமல் நாட்டை முடக்கி வைத்துள்ள சூழலைப் பயன்படுத்துகின்றது இந்த அரசு.

இந்த முடக்கம் மூலம் மக்களை அடக்கிக்கொண்டு தங்கள் அரசுக்கு எதிரான செயற்பாடுகள் இந்த நாட்டில் இல்லை என்பதை இந்த உலகத்திற்குக் காட்ட முற்படுகின்றனர். இது தொடர்பில் நாங்கள் எங்கள் தமிழ் மக்களுக்கு ஒன்றை மிகத் தெளிவாகச் சொல்லிக் கொள்ளுகின்றோம்.

எமது இனம், மொழி, கலை, கலாச்சாரம் என்ற ரீதியில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் எமது தாயகப் பகுதிகளில் சீனாவின் வருகை எதிர்காலத்தில் எங்களுக்குப் பாரிய ஆபத்தையே தோற்றுவிக்கும்.

ஏனெனில் எமது பாட்டன் பூட்டன் காலத்தில் இருந்து வரலாற்று ரீதியாக நாங்கள் இணைந்து எமது கலாச்சாரத்தின் அடிப்படையில் சேர்ந்து செயற்பட்ட தேசம் இந்தியா. எமது அயல் நாடான இந்தியாவிற்கு சவால் விடும் நோக்கமாகவே சீனா இலங்கையை ஆக்கிரமித்து வருகின்றது.

எனவே இந்தியாவின் உறவுமுறையை நாங்கள் பலப்படுத்திக்கொண்டு சீனாவினை எமது மண்ணில் இருந்து விரட்டும் மிகப் பெரிய வேலை எங்கள் கரங்களில் உள்ளன. அதனை நாங்கள் நிச்சயமாகச் செய்ய வேண்டும்.

எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியாக எங்களை நாங்களே ஆளக் கூடிய ஒரு சுயநிர்ணய உரிமையை நாங்கள் பெற்றெடுப்பதற்கு எமக்கு உதவக்கூடிய ஒரே ஒரு நாடு இந்தியா மாத்திரமே.

இந்தியாவிற்குச் சவால் விடக்கூடிய வகையில் சீன அரசாங்கம் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. அதற்கு இலங்கையும் சார்பாக நடந்து கொண்டிருக்கின்றது. சீனாவின் ஆக்கிரமிப்பு வலையத்தினுள் இலங்கையும் சிக்கி அதிலிருந்து மீளமுடியாமல் தவித்துக்கொண்டிருக்கின்றது.

இலங்கையின் மிக வளம் மிக்க பகுதியான துறைமுக நகரம் அமைந்துள்ள கடற்பரப்பினை சீனா முழுமையாகக் கைப்பற்றி ஆக்கிரமித்து தனது வல்லாதிக்க சக்தியை இங்கு திணித்துள்ளது. அதற்கு அடுத்த கட்டமாக எமது தீவகங்களைக்; கைப்பற்றும் மிகப் பெரிய முயற்சிகளை மேற்கொள்வதற்கு சீனா இலங்கைக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கின்றது.

அதேபோல் காங்கேசன்துறை, சாவகச்சேரி மற்றும் யாழ்ப்பாணம் போன்ற பிரதேசங்களைக் கைப்பற்றுவதற்குரிய முயற்சிகளையும் தற்போது மேற்கொண்டு வருவதாக அறியக்கிடைத்துள்ளது.

உண்மையில் சத்தமில்லாத மிகப் பெரிய யுத்தம் ஒன்றின் மூலம் இலங்கையை சீனா முழுமையாகக் கைப்பற்றி எதிர்காலத்தில் எங்களுக்குச் சொந்தமான நாடு சீனாவிடம் சிக்கி நாங்கள் இந்த உலகத்தில் ஏதிலிகளாகத் தவிக்கின்ற ஒரு நிலைமை இங்கு ஏற்படும். இதனை எமது மக்கள் மிக தெளிவாகப் புரிந்துக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

கம்மன்பில மாத்திரமல்ல முழு அரசும் பதவி விலக வேண்டும்: சஜித் வலியுறுத்தல்

எரிபொருள் விலையை அதிகரித்து மக்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்கியுள்ள அரசாங்கம் அதன் பழியை தனிநபர் மீது சுமத்த முயற்சிப்பது ஏற்றுக் கொள்ள முடியாததாகும். எவ்வாறிருப்பினும் தொடர்ந்தும் மக்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்கிக் கொண்டிருக்கும் இந்த அரசாங்கம் நாட்டை சிறப்பாக நிர்வகிக்கக் கூடியவர்களிடம் அதனை ஒப்படைத்து விட்டு பதவி விலகுவதே சிறந்தது என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

எரிபொருள் விலையேற்றத்திற்கான பொறுப்பினை ஏற்று விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் பதவி விலக வேண்டும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன குறிப்பிட்டுள்ளமை தொடர்பில் விசேட அறிக்கையொன்றினை வெளியிட்டு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இதனை வலியுறுத்தியுள்ளார்.

அவரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :

எரிபொருள் விலையை அதிகரித்து மக்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்கியுள்ள அரசாங்கம் அதன் பழியை தனிநபர் மீது சுமத்த முயற்சிப்பது ஏற்றுக் கொள்ள முடியாததாகும். எவ்வாறிருப்பினும் பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரால் வெளியிடப்பட்டுள்ள குறித்த அறிக்கை அரசாங்கத்திற்குள் காணப்படும் பாரிய முரண்பாடுகளை வெளிக்கொணர்ந்துள்ளது.

தமது கட்சியே இந்த நாட்டை ஆட்சி செய்கிறது என்று குறிப்பிடும் வகையில் அவரால் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கை அபாயம் மிக்கதாகவுள்ளது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் அரசாங்கத்திடமும் பொதுஜன பெரமுனவிடமும் கேட்பதற்கு பல கேள்விகள் எழுந்துள்ளன.

அரசாங்கமும் அறியாத வகையில் எரிபொருள் விலையை திடீரென அதிகரிப்பதற்கு அமைச்சரொருவர் மாத்திரம் எவ்வாறு தன்னிச்சையாக தீர்மானித்தார் ? அவ்வாறு அவர் தனித்து தீர்மானமொன்றை எடுத்திருப்பாராயின் அமைச்சரவையின் ஒழுங்கு விதிகளை மீறி தனியொரு அமைச்சரால் இவ்வாறானதொரு தீர்மானம் எடுக்கப்படும் வரை அரசாங்கத்தின் பிரதானிகளான ஜனாதிபதியும் பிரதமரும் என்ன செய்து கொண்டிருந்தனர் ?

வழமையாக இவ்வாறானதொரு தீர்மானம் எடுக்கப்பட்டால் அது அமைச்சரவையால் எடுக்கப்பட்ட தீர்மானமாகவே கருத்தப்படும். அவ்வாறிருக்கையில் எவ்வாறு குறிப்பிட்டவொரு அமைச்சர் மீது மாத்திரம் குற்றம் சுமத்தப்படுகிறது ?

மேலும், எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் தெரிவித்தது உண்மைக்கு புறம்பாகவா? அவ்வாறெனில் அது கற்பனை கதையா? குறித்த அமைச்சர் இவர்களுக்கு அப்பால் செயற்படுகின்றாரா?

இந்த அரசாங்கத்தால் அண்மைக் காலங்களில் மக்களை நெருக்கடிக்கு உள்ளாக்கும் பல தீர்மானங்கள் மிகவும் இரகசியமாக சூட்சுமமான முறையில் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால் திடீரென இந்த தீர்மானத்திற்கு மாத்திரம் பொதுஜன பெரமுன பகிரங்க அறிக்கையை வெளியிட்டுள்ளமையானது அரசாங்கத்திற்குள் காணப்படும் பாரிய முரண்பாடுகளை வெளிப்படுத்தவில்லையா?

இவ்வாறான அறிக்கைககள் ஊடாக அரசாங்கமானது தம்மீது தவறில்லை என்று நிரூபிக்க முற்படுகிறது. எனவே எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு எடுத்துள்ள தீர்மானத்தை மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமே தவிர இதிலிருந்து தப்பிப்பதற்கு முயற்சிக்க கூடாது. இந்த தீர்மானத்தில் மாற்றம் வேண்டும் என்று அரசாங்கத்திற்கு அழுத்தம் பிரயோகிப்பதற்கான மக்கள் குரல் தோன்றிவிட்டது.

தற்போது அரசாங்கம் மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையை முழுமையாக இழந்துள்ளனர் என்றார்.

Posted in Uncategorized

பெருந்தோட்ட மக்களின் சுமையை அதிகரித்துள்ள மண்ணெண்ணெய் விலையேற்றம்

மண்ணெண்ணெய் விலையேற்றத்தால் கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக பெருந்தோட்டங்களில் வாழும் மக்கள் கவலை வெளியிட்டனர்.

2019 ஆம் ஆண்டு குடியிருப்பு தொகுதியில் ஏற்பட்ட தீ விபத்தினால் 24 வீடுகள் முற்றாக எரிந்ததுடன், அந்த வீடுகளில் இருந்தவர்கள் போர்டைஸ் பொது மைதானத்தில் கூடாரங்கள் அமைத்து தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

ஒன்றரை வருடங்களுக்கு மேலாக இவ்வாறு வாழ்ந்து வரும் இவர்கள் உணவு சமைப்பதற்கு பெரும்பாலும் மண்ணெண்ணெய் மற்றும் விறகு அடுப்பையே பயன்படுத்துகின்றனர்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டதுடன் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் விலை 7 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு அறிவித்தது.

இந்த விலையேற்றம் விறகு அடுப்பு மற்றும் மண்ணெண்ணெய் விளக்குகளை பயன்படுத்தும் தம்மை பெரிதும் பாதித்துள்ளதென ஹட்டன் போர்டைஸ், 30 ஏக்கர் தோட்டத்தில் வாழும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

பயணத்தடைக்கு மத்தியில் வாழ்வாதாரத்தை இழந்துள்ள தமக்கு மண்ணெண்ணெய்க்கு மேலும் 7 ரூபா அதிகமாகக் கொடுத்து வாங்கும் வசதி இல்லை எனவும் தெரிவித்தனர்.

கேகாலை – தெஹியோவிட்ட பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பாம்பேகம தோட்டத்தில் மக்கள் மின்சார வசதி இல்லாமல் விளக்கு வெளிச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

கூலித்தொழில் செய்பவர்கள் அதிகம் உள்ள இந்த பகுதியில் பிள்ளைகளின் கல்வி பெரும் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளது.

கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 20 ஆயிரத்தை கடந்தது

நாட்டில் மேலும் 1,633 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

குறித்த அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கமைய நாட்டில் இதுவரை 220,556 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 2,426 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 186,516 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,073 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மடு மாதா அன்னையின் திருவிழாவில் கலந்து கொள்ள வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு அனுமதி இல்லை

மன்னார் மருதமடு அன்னையின் ஆடி மாத திருவிழா எதிர்வரும் 2 ஆம் திகதி இடம் பெற உள்ள நிலையில், கொரோனா தொற்றின் காரணமாக திருவிழாவிற்கு வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் வருகை தர அனுமதி இல்லை என மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை தெரிவித்தார்.

மன்னார் ஆயர் இல்லத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை (12) மதியம் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து மேலும் அவர் தெரிவிக்கையில், “மருதமடு அன்னையின் ஆடி மாத திருவிழா எதிர்வரும் 2 ஆம் திகதி (02-07-2021) இடம் பெற உள்ளது. இவ்வருடம் எமக்கு சுகாதார அதிகாரிகளினால் வழங்கப்பட்டுள்ள சுகாதார கட்டுப்பாடுகளுடன் ஆடி மாத திருவிழாவை நடாத்த வேண்டியுள்ளது.

எனவே இம் முறை யாத்திரிகர்கள் , பக்தர்கள் மருதமடு அன்னையின் ஆடி மாதம் 2 ஆம் திகதி இடம் பெற உள்ள திருவிழாவிற்கு மன்னார் மறைமாவட்டத்தை தவிர்ந்த ஏனைய வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் வருகை தர அனுமதி இல்லை என்பதை அறியத்தருகின்றோம்” என்றார்.