அனைத்து விமான சேவைகளும் இரத்து; நாட்டிலிருந்து பயணிப்போருக்கு தடை இல்லை

இன்று (21) நள்ளிரவு முதல் 31 ஆம் திகதி நள்ளிரவு வரை அனைத்து விமான சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை அறிவித்துள்ளது.

கொரோனா தொற்றை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகார சபை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், நாட்டில் இருந்து பயணிக்கும் பயணிகளுக்கு எவ்வித தடையுமில்லை.

மேலும் சரக்கு விமானங்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized

துறைமுக நகர் ஆணைக்குழுவிற்கு 13 ஆவது திருத்தத்தில் செக்! துடுப்பை இழந்த படகுப்போல அரசாங்கம் – ரணில் விக்கிரமசிங்க

உயர் நீதிமன்ற தீர்ப்பால் துறைமுக நகர் நிர்வாக ஆணைக்குமு அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்திற்கு கட்டுப்படவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாகாண சபையின் அனுமதியின்றி துறைமுக நகரின் எந்தவொரு நிலப்பரப்பையும் சீனா மற்றும் எந்தவொரு நாட்டிற்கும் விற்க முடியாது போயுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடி மற்றும் கடன் சுமைகளிலிருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவற்றுடன் அரசாங்கம் கலந்துரையாடியிருக்க வேண்டும். துடுப்பை இழந்த படகுப்போல அரசாங்கம் எவ்விதமான தூரநோக்கு சிந்தனையும் இல்லாது செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய தலைவர்களை சந்தித்து நேற்று கலந்துரையாடி அவர். எதிர்கால திட்டங்கள் மற்றும் சமகால விடயங்கள் குறித்து பரந்தளவில் உரையாடினார்.

தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதற்கு 200 மில்லியன் டொலர்களே இலங்கைக்கு தேவைப்படுகின்றது. இந்த தொகையை செலவிட்டு நாம் வலியுறுத்திய காலப்பகுதியில் தடுப்பூசிகளை கொள்வனவு செய்திருந்தால் பொருளாதாரம் இந்தளவு பாதித்து இருக்காது.

வர்த்தக நிலையங்களை மூடவேண்டிய நிலைமையும் ஏற்பட்டிருக்காது. ஆனால் அரசாங்கம் தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய முயற்சிக்க வில்லை. மறுப்புறம் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகிய தரப்புகளுடன் கலந்துரையாடியிருந்தால் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருக்கலாம்.

சர்வதேச கடன்களை செலுத்த முடியாத நாடுகளின் மாநாடு எதிர்வரும் ஜூன் மாதம் இறுதியில் பரிஸ் நகரில் இடம்பெறவுள்ளது. இதனை பரிஸ் கழகம் (Paris Club) என அழைப்பார்கள். இலங்கை போன்ற நாடுகளுக்கு இந்த மாநாட்டின் ஊடாக கடன்நிவாரணங்களை பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் அந்த அமைப்பில் சீனா இல்லை. ஜீ-7 மாநாட்டில் சீனா உறுப்புரிமையை கொண்டுள்ளது. இங்கு கடன்கள் குறித்து பேசமுடியும். ஆனால் இலங்கையின் துரதிஷ்டம் யாதெனில் அந்த அமைப்பிலும் இலங்கை இல்லை.

இவ்வாறானதொரு நிலைமையில் எவ்விதமான தூரநோக்கு சிந்தனையும் இல்லாது துறைமுக நகர் விடயத்தில் அரசாங்கம் செயற்படுகிறது. அதனால் தான் உயர் நீதிமன்றம் கடுமையான தீர்ப்பை வழங்கியது. இது அரசாங்கத்தின் தோல்களின் முக்கியமானதொன்றாகும். ஏனெனில் தன்னிச்சையாக செயற்படும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் நீதிமன்றம் தனது கடமையை செய்யும் என்பதை உணர்த்தியுள்ளது.

அதே போன்று துறைமுக நகர் ஆணைக்குழு நிர்வாக கட்டமைப்பு இலங்கை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்திற்கு உட்பட்டுள்ளதால் சீனாவிற்கு தேவையான வகையில் நிலப்பரப்பை விற்க முடியாது. அனைத்திற்கும் மாகாண சபைகளின் அனுமதி அவசியமாகின்றது.

எனவே ஆரம்பத்தில் சமர்பித்தது போன்று துறைமுக நகர் ஆணைக்குழு சட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால் இந்தியாவின் முதலீடுகள் இங்கு வந்திருக்காது என தெரிவிக்கப்பட்டது.

சர்வதேச அரங்குகளில் இலங்கை சார்பாகவே சீனா குரல் கொடுத்துள்ளது இதனாலேயே TNA சீனாவை எதிர்க்கின்றது – விமல் வீரவன்ச

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சீனாவை எதிர்ப்பது நியாயமானதே என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுக நகர் தொடர்பிலான நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு துறைமுக நகர் தொடர்பில் உரையாற்றிய எதிர்க்கட்சியினர் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையில் விமர்சனம் செய்வதாகத் தெரிவித்துள்ளார்.

சீனா ஒரு போதும் பிரிவினைவாதத்திற்கு ஆதரவளிக்கவில்லை எனவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அமெரிக்காவும், இந்தியாவும் ஆதரவளித்த போதிலும் சீனா ஆதரவளித்தது கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை உள்ளிட்ட சர்வதேச அரங்குகளில் இலங்கை அரசாங்கத்தின் சார்பாகவே சீனா குரல் கொடுத்துள்ளது எனவும், இதனாலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சீனாவை எதிர்க்கின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த துறைமுக நகரின் ஊடாக வெளிநாட்டு செலாவணி கிடைக்கும் எனவும், லட்சக் கணக்கான தொழில் வாய்ப்புக்கள் உருவாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த துறைமுக நகர் தொடர்பில் புதிய கோணத்தில் பார்க்க வேண்டுமே தவிர அரசியல் காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையில் பார்க்கக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்

சீன காலணியாக துறைமுக நகர் உருவாகும் என்ற பிரச்சாரம் முற்று முழுதும் பிழையானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து தினேஸ் குணவர்த்தனவுடன் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் பேச்சு!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவை சந்திந்து தமிழ் அரசியல் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாடினர்.

இந்த சந்திப்பு நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, அரசியல் கைதிகள் பற்றிய விபரங்களை தமிழ் தரப்பினர் அமைச்சரிடம் ஒப்படைத்தனர்.

அதன்படி, விசாரணை முடியாத கைதிகள், தண்டனை வழங்கப்பட்ட கைதிகள் என அரசியல் கைதிகள் குறித்த முழுமையான விபரத்தை கையளித்ததுடன், அவர்களை விடுவிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில், இது குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடி முடிவை அறிவிப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன்,பிளட் தலைவர் த.சித்தார்த்தன், தமிழரசு கட்சியின் பிரதி தலைவர் எம்.ஏ.சுமந்திரன்,ரெலோ கட்சியின் செயலாளர் கோவிந்தம் கருணாகரம்,ரெலோ தலைமை குழு உறுப்பினர் வினோ நோகராதலிங்கம்,தமிழரசு கட்சியின் சார்பில் சி.சிறிதரன், சாள்ஸ் நிர்மலநாதன், இரா.சாணக்கியன், த.கலையரசன் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

அதேநேரம், தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன் ஆகியோரும் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் மனோ கணேசன், வே.இராதகிருஷ்ணன் ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

அதேபோல அரசாங்கத் தரப்பில் அமைச்சர் தினேஸ் குணவர்த்தன, இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய ஆகியோர் கலந்துகொண்டனர்.

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக தமிழ் அரசியல் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அண்மையில் அனுப்பிய கடிதத்தை தொடர்ந்து இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு : பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து தமிழக முதல்வர் ஜனாதிபதிக்கு கடிதம்

தமிழ்நாடு அமைச்சரவைத் தீர்மானத்தை ஏற்று, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்ய ஆணையிட வேண்டுமென இந்திய குடியரசுத் தலைவருக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையை குறிப்பிட்டும் தற்போது கொரோனா பரவும் சூழலை கருத்திற்கொண்டும் விடுதலைசெய்ய தீர்மானம் எடுக்குமாறு இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலைவழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுவிக்க தமிழக அமைச்சரவை தற்போது தீர்மானம் நிறைவேற்றியிருந்தது.

அதன்படி அமைச்சரவை தீர்மானத்தின் மீது முடிவெடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே உள்ளது என்று குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No description available.

No description available.

Posted in Uncategorized

ஜூனில் ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பி ஆகிறார் ரணில்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க, அடுத்த மாதம் நடுப்பகுதியில் பாராளுமன்றத்துக்கு வருவதற்கு எதிர்பார்த்துள்ளதாக, கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

நேற்று(19) கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடந்தாண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஒரு ஆசனம் கிடைத்த நிலையில், குறித்த ஒரு ஆசனத்துக்கான உறுப்பினரைத் தெரிவு செய்வதில், ஐக்கிய தேசிய கட்சிக்குள் இழுபறி நிலை ஒன்று காணப்பட்ட நிலையிலே​யே, ரணில் விக்கிரமசிங்க இத்தீர்மானத்தை எடுத்துள்ளார்.

Posted in Uncategorized

91 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம்

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் பாராளுமன்றத்தில் இனறு வாக்கெடுப்பிற்கு விடப்பட்ட நிலையில், சட்டமூலம் மீதான மூன்றாம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு சட்டமூலத்திற்கு ஆதரவாக 149 வாக்குகளும், சட்டமூலத்திற்கு எதிராக 58 வாக்குகளும் பதிவாகின. அதற்கமைய கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் 91 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டு சட்டமானது.

சட்டமூலத்தின் முக்கிய சில சரத்துகளுக்கு எதிர்க்கட்சி வாக்கெடுப்பு கோரியும் வாக்கெடுப்பில் தோற்றனர்.

பாராளுமன்றத்தில், நேற்றும், இன்றும் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் மீதான இரண்டு நாட்கள் விவாதம் நடத்தப்பட்ட நிலையில் இன்று ஆளும் எதிர்க்கட்சிகளின் வாத விவாதங்களின் பின்னர் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு விடப்பட வேண்டுமா என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபையில் கோரிக்கை விடுத்தார்.

எனினும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் எதிர்க்கட்சி பிரதம கொரடாவான லக்ஸ்மன் கிரியெல்ல சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு அவசியமில்லை எனவும், ஆனால் எதிர்கட்சியின் எதிர்ப்பை பதிவு செய்துகொள்ளுமாறும் சபையில் தெரிவித்தார்.

ஆனால் மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் விஜித ஹேரத் சட்டமூலம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியதற்கு அமைய கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது.

பிற்பகல் 4.30 மணிக்கு கோரம் அடிக்கப்பட்டு 4.35 மணிக்கு இலத்திரனியல் முறையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது, இதில் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்புக்கு ஆதரவாக 148வாக்குகளும், சட்டமூலத்திற்கு எதிராக 59 வாக்குகளும் பதிவாகியது.

அதற்கமைய கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் 89 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

இதனை அடுத்து கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளும் நிலையில் ஆணைக்குழுவின் பணிப்பாளர் சபை உறுப்பினர் விடயத்தில் தற்போது 7 பேரென குறிப்பிடப்பட்டுள்ள உறுப்பினர் எண்ணிக்கை ஒன்பதாக அதிகரிக்கப்படுவதுடன் அதில் ஆறுபேர் உத்தியோகப்பூர்வ அதிகாரிகளாக தெரிவுசெய்யப்பட வேண்டும் எனவும் மூவர் ஜனாதிபதியின் நேரடித் தெரிவாக இருக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சி உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா வலியுறுத்தினார்.

எனினும் அதனை அரசாங்கம் ஏற்க மறுத்ததற்கு அமைய ஆணைக்குழு உறுப்பினர் எண்ணிக்கை அதிகரிக்கப்படவேண்டும் என எதிர்கட்சி உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவினால் வாக்கெடுப்பு கோரப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் சரத்திற்கு ஆதரவாக 46வாக்குகளும், எதிராக 147 வாக்குகளும் பதிவாகியது.

அதேபோல் துறைமுக நகரை அரச கூட்டுத்தாபனமாக மாற்றிக்கொள்ள கூட்டுத்தாபனத்திற்கு அரச நிதியில் ஒரு தொகையை முதலீடு செய்யவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்ட வேளையில் அதற்கும் அரசாங்கம் மறுப்பு தெரிவித்தது.

இதனை அடுத்து சட்டமூலத்தின் 23 ஆம் சரத்தில் திருத்தம் வேண்டுமென ஹர்ஷ டி சில்வாவினால் வாக்கெடுப்பு கோரப்பட்டது. அதற்மைய 23 ஆம் சரத்திற்கு ஆதரவாக 46வாக்குகளும் எதிராக 145 வாக்களும் பதிவாகியது.

அதேபோல் சட்டமூலத்தின் 73 ஆம் சரத்தில் கசினோ போன்ற செயற்பாடுகளை கண்காணிக்கும் செயற்பாடு குறித்து எதிர்க்கட்சி வலியுறுத்திய நிலையில் அதனை அரசாங்கம் ஏற்ற மறுத்ததால் அதற்கும் வாக்கெடுப்பு கோரப்பட்டது. அதற்கமைய 73 ஆம் சரத்திற்கு ஆதரவாக 46வாக்குகளும், எதிராக 148 வாக்குகளும் பதிவாகின.

அதனை அடுத்து மேலும் சில சரத்துக்களுக்கு எதிர்க்கட்சி எதிர்ப்பை வெளிப்படுத்திய போதிலும் அதற்கு வாக்கெடுப்பு கேட்கவில்லை. இறுதியாக நீதிமன்ற வியாக்கியானங்கள் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட நிலையில் திருத்தங்களின் பின்னர் மூன்றாம் வாசிப்பின் மீது மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் விஜித ஹேரத் வாக்கெடுப்பு கோரினார். அதற்கமைய கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் மீதான மூன்றாம் வாசிப்பில் சடமூலதிற்கு ஆதரவாக 149வாக்குகளும் எதிராக 58வாக்குகளும் பதிவாகியது. அதற்கைமைய சட்டம் 89 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

சீனாவிற்கு அதிகாரத்தை கொடுக்க நினைப்பவர்கள் தமிழர்களுக்கு வழங்கியிருந்தால் இரத்த ஆறு ஓடியிருக்காது – ரெலோ தலைவர் செல்வம்

தமிழர்களுக்கும் கிடைக்க வேண்டிய அதிகாரங்களை பகிர்ந்தளித்திருந்தால் இலங்கையில் இரத்த ஆறு ஓடியிருப்பதை தடுத்திருக்க முடியும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.

துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், துறைமுக நகர சட்டமூலம் நாட்டின் அரசியலமைப்புக்கு முரண் என நீதிமன்றம் அறிவித்திருக்காவிட்டால், நாட்டுக்குள் வேறு நாட்டுக்குரிய விடயங்கள் இடம்பெற்றிருக்கும். அந்தவகையிலேயே போட்சிட்டி நகர திட்ட உருவாக்கப்பட்டிருக்கின்றது. அன்று எமது பெரியார்கள் சமஷ்டியை கோரி அகிம்சை போராட்டத்தில் ஈடுபட்டபோது, அவர்கள் நய்யப்புடைக்கப்பட்டு, இந்த சபையில் இரத்தம் சொட்டச்சொட்ட தங்களது கருத்துக்களை தெரிவித்தபோது, அந்த அகிம்சைக்கூட மறுக்கப்பட்டது. அதேபோன்று ஆயுத போராட்டம் ஊடாக எமது இனத்தின் விடுதலையை பெறவேண்டும் என சொல்லுகின்றபோது, பயங்கரவாதிகள் பிரிவினை வாதிகள் என எமது மக்களை தெரிவித்து வந்தனர்.

அத்துடன் தற்போது எமது பிரதேசங்களில் எமது விவசாய நிலங்கள் மகாவலி திட்டம் ஊடாக மத்திய அரசாங்கத்துக்கு கீழ் கொண்டுவர திட்டமிடப்பட்டிருக்கின்றது. தொல்பொருள் என்ற பெயரில் செயற்பட்டு எமது பிரதேசத்தில் புத்த விகாரைகளை அமைக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. பயங்கரவாத தடைச்சட்டத்தின் பெயரில் இன்று பலர் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டிருக்கின்றனர்.

ஆனால் தற்போது பேசுபொருளாக இருக்கும் போட்சிட்டி என்பது, ஒரு நாட்டுக்குரிய சகல அதிகாரங்களையும் கொண்டிருக்கின்றதாக அமைந்திருக்கின்றது. அப்படியானால் ஏன் அதிகார பரவலாக்கத்தை தரவேண்டும் என்கின்ற எமது தமிழ் இனத்தை பிரித்துப்பார்க்கின்ற, அவர்கள் பயங்கரவாதிகள் என சொல்லும் வகையில் உங்களது சிந்தனைகள் இருக்கின்றன. அத்துடன் மாகாண சபை முறைமையை இல்லாமலாக்கும் திட்டத்தையும் அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. மாகாணசபை சட்டத்தில் இருக்கும் பொலிஸ், நில அதிகாரத்தை கேட்கும்போது பிரிவினைவாதிகள் என எங்களை தெரிவிக்கின்றனர். ஆனால் போட்சிட்டிக்கு ஒரு நாட்டுக்குரிய அதிகாரம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றது.

அத்துடன் அரசாங்கத்தின் துறைமுக சட்டமூலத்தை சிங்கள மக்களும் எதிர்க்கின்றனர்.அதனால் இந்த நாட்டுக்குள் வேறு ஒரு நாட்டுக்குரிய அதிகாரம் வழங்கும் இந்த சட்டமூலத்தை நாங்களும் எதிர்க்கின்றோம் என்றார்.

 

இலங்கையில் 1000-ஐ கடந்த கொரோனா மரணங்கள்

இலங்கையில் கொரோனா தொற்றினால் இறந்தவர்களின் எண்ணிக்கை நேற்றைய தினத்துடன் 1000-ஐ தாண்டியது.

நேற்று இறுதியான 34 கோவிட் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் நேற்றிரவு அறிவித்திருந்தது.

இதன்படி, இலங்கையில் கோவிட் தொற்றினால் 1015 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை நாட்டில் கொரோனா தொற்று காரணமாக 1,47,720 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

மாரடைப்பு காரணமாக அசாத் சாலி வைத்தியசாலையில் அனுமதி

முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மாரடைப்பு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்றிரவு (18) அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், அவர் கவலைக்கிடமான நிலையில் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த விசாரணைகளுக்காக அசாத் சாலி கைது செய்யப்பட்டு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.