சிங்கப்பூர் இத்தாலி நாடுகள் இலங்கைப் பயணிகளுக்கு பயணத் தடைகளை விதித்தன

கடந்த 14 நாட்களுக்குள் இலங்கைக்கு பயண வரலாற்றைக் கொண்ட நீண்ட கால பாஸ் அனுமதி வைத்திருப்போர் மற்றும் குறுகிய கால வருகை யாளர்கள் நாட்டுக்குள் நுழைவது தடை செய்யப்படும் என சிங்கப்பூர் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இத்தடை இன்று(1) முதல் நடைமுறைக்கு வருவதுடன் மறு அறிவித்தல் வரும் வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷ், நேபாளம் மற்றும் பாகிஸ்தானிலிருந்து வருவோருக்கும் இந்த நிபந்தனை அமுல்படுத் தப்பட்டுள்ளது.

சிங்கப்பூருக்குள் நுழைய முன் அனுமதி பெற்ற அனைவருக்கும் இத்தடை பொருந்தும் என அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை பங்களாதேஷ், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு சமீபத்திய பயண வரலாற்றைக் கொண்ட கப்பல் பணியாளர்களின் மாற்றல்களுக்கும் தடை செய்வதாக சிங்கப்பூர் தெரிவித்துள்ளது.

இதனிடையே இலங்கையில் கொவிட்-19 தொற்று அதிகரித்துள்ளதால் இலங்கையர்கள் இத்தாலிக்குள் நுழைவதை அந்நாடு தடை செய்துள்ளது.

மேலும் கொவிட்-19 தொற்று அதிகரித்து வருவதால் இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளும் தங்கள் பிரஜைகள் இலங்கைக்கு பயணிப்பதற்கு எதிராக எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

தேர்தலில் தமிழ்க் கட்சிகள் பெண்களுக்கு 30 வீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் தமிழ் கட்சிகளிடம் யாழில் பெண்கள் போராட்டம்

தேர்தலில் தமிழ்க் கட்சிகள் பெண்களுக்கு 30 வீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என உழைக்கும் மகளீர் அமைப்பின் இயக்குனர் மிதுலைச்செல்வி ஸ்ரீ பத்மநாதன் கோரியுள்ளார்.

உழைக்கும் மகளீர் அமைப்பின் இன்றைய மேதின ஒன்று கூடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் “பெண்கள் அனைவரையும் ஒன்றிணைத்து சமூக பொருளாதார ரீதியாக முன்னேற வைக்க வேண்டும் என்பதே எமது நோக்கமாகும்.

மே தினமாகிய இன்றைய தினம் நாம் ஒரு பெரிய நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தோம். அதனை தற்போது நிறுத்தி இருக்கின்றோம். எனினும் இன்றைய தினம் ஒரு சிறிய ஒன்றுகூடலை நடத்தினோம்.

அதில் அரசியலில் பெண்களுக்கு 30 வீதமான இட ஒதுக்கீடு மாகாண சபை மற்றும் நாடாளுமன்றத்திலும் வழங்கப்பட வேண்டும். இம்முறை தமிழ் பெண்கள் எவரும் பாராளுமன்றம் செல்ல வில்லை. ஆனால் பெரும்பான்மை கட்சிகளில் பெண்கள் பலர் தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றம் சென்று இருக்கின்றார்கள்.

ஆனால், தமிழ் மக்களைப் பொறுத்தவரைக்கும் பெண்களில் ஒருவரும் நாடாளுமன்றம் செல்ல வில்லை. என்பது குற்றச்சாட்டாக காணப்படுகின்றது.

யுத்த காலத்தில் இருந்து பெண்களாகிய நாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறோம். எனவே பெண்கள் எமது பிரச்சனையை தீர்ப்பதற்கு நாமே பாராளுமன்றம் மற்றும் ஏனைய சபைகளுக்கு செல்வதன் மூலம் எமது பிரச்சினைகளை நாமே தீர்த்துக் கொள்ள முடியும்.

எனவே எம்மை போன்ற பெண்களை நாடாளுமன்ற அனுப்புவதன் மூலம் தங்களுடைய பிரச்சனைகளை தாங்களே தீர்த்துக் கொள்வார்கள். எனினும் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்கள் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கும முகம் கொடுத்துக் கொண்டு கையேந்தி நிற்கும் நிலை காணப்படுகின்றது.

பலர் கடனாளிகளாக இருக்கின்ற நிலை காணப்படுவதோடு பலர் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றதோடு, சமூக மட்டத்தில் பல பாதிப்புக்களை எதிர்நோக்கி இருக்கிறார்கள்.

எனவே அவ்வாறான பெண்களின் வாழ்வாதாரத்தை வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே நாங்கள் எமது அமைப்பின் மூலம் பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம்.

ஒவ்வொரு மாதமும் போயா தினங்களில் அனைத்து பெண்களையும்இணைத்து ஒன்றுகூடல் நடத்துவது வழக்கம்
அதேபோலத்தான் மே தினமாகிய இன்றைய தினம் இந்த ஒன்றுகூடலை ஏற்பாடு செய்திருக்கிறோம். எமது மே தின கோரிக்கையாக 30 வீதம் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படவேண்டும் என்பதாகும்.

முக்கியமாக தமிழரசுக் கட்சியாக இருக்கலாம் , ரெலோ, புளொட். மற்றும் விக்னேஸ்வரன் அனந்தி சசிதரன் போன்ற அனைத்து தமிழ் கட்சிகளும் பெண்களுக்கு 30 வீதமான இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்பதுதான் மேதின தினமாகிய இன்றைய தினம் எமது கோரிக்கையாகும்.

தமிழ் கட்சிகள் வெல்லக்கூடிய பெண்களை தேர்தலை நிறுத்துவது இல்லை. வெல்லாத பெண்களை நிறுத்தி விட்டு பெண்கள் தேர்தலில் வெல்ல மாட்டார்கள் என காண்பிப்பது வழமை.

எனவே அனைத்து தமிழ் கட்சிகளும் 30 வீத இட ஒதுக்கீட்டை எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் வழங்க வேண்டும். என்பதுதான் மே தினத்தில் எமது கோரிக்கையாக காணப்படுகின்றது. பல்வேறுபட்ட திறமையான பெண்கள் உள்ளார்கள். அவர்களை தேர்தலில் நிறுத்தினால் கட்டாயம் வெல்வார்கள்” என்றார்.

யாழ். கொடிகாமம் மரக்கறி சந்தைக்கு பூட்டு

யாழ்ப்பாணம் – கொடிகாமம் மரக்கறி சந்தை மற்றும் அதனை சூழவுள்ள வர்த்தக நிலையங்களில் நடத்தப்பட்ட எழுந்தமானமான பீ.சி.ஆர் பரிசோதனையில் 4 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் சந்தை தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.

இன்று காலை சுகாதார பிரிவினரால் சந்தை முடக்கப்பட்டிருப்பதுடன், தொற்று நீக்கம் செய்யப்பட்டு சந்தையில் உள்ள ஏனைய வர்த்தகர்களுக்கும் பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

அத்தோடு இனிவரும் பீ.சி.ஆர் முடிவுகளின் அடிப்படையில் சந்தையை மீளவும் திறப்பது தொடர்பாக தீர்மானிக்கப்படும் என சுகாதார பிரிவனர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சீனாவின் அடிப்படை அபிலாஷைகளுக்கு இலங்கை ஒத்துழைக்கும்: ஜனாதிபதி தெரிவித்ததாக தகவல்

இலங்கை சீனாவுடன் இருதரப்பு உறவுகளை பலப்படுத்துவதற்கு முன்னுரிமையளித்துள்ளதாகவும் சீனாவின் அடிப்படை அபிலாஷைகளுக்கு உயர் மட்டத்தில் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளதாக Xinhua News Agency இன்று தகவல் வௌியிட்டுள்ளது.

சீன பாதுகாப்பு அமைச்சர் Wei Fenghe உடன் நடைபெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி இதனைக் கூறியதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை சுயாதீன வௌிநாட்டுக் கொள்கையை கடைப்பிடிப்பதாகவும் வலயத்திற்கு வௌியில் உள்ள உலகின் அதிகாரமிக்கவர்களின் அதிகாரத்திற்கு அடிபணியப் போவதில்லையெனவும் எந்தவொரு நாட்டுடனும் கூட்டிணைவதில்லையெனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ குறிப்பிட்டதாக Xinhua செய்தி வௌியிட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல்: நாடாளுமன்ற அமர்வுகள் மட்டுப்படுத்தப்பட்டன

நாடாளுமன்ற அமர்வுகளை எதிர்வரும் மே 4 மற்றும் 5 ஆம் திகதிகளில் மாத்திரம் நடத்துவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று (வெள்ளிக்கிழமை) சபாநாயகர் மஹிந்த யாப்ப அபேவர்தன தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கொவிட்-19 சவாலை எதிர்கொண்டு, நாட்டின் தற்போதைய நிலைமை குறித்த ஒத்திவைப்பு விவாதம் மே 4 ம் திகதி மதியம் 1 மணிக்கு நடைபெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணையகத்தின் சட்டமூலம், இந்த மாதம் 5 ஆம் திகதி தாக்கல் செய்யப்படும். காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை முழு நாளிலும் விவாதத்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தின் பொதுச்செயலாளர் தம்மிக தசநாயக்க தெரிவித்துள்ளார்.

குறித்த இரு நாட்களிலும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாய்வழி கேள்விகளுக்கும், நிலையான ஆணை 27 (2) இன் கீழ் உள்ள கேள்விகளுக்கும் நேரமில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

ஏப்ரல் 21 போன்று மே 18 சுதந்திரமாக அனுஸ்டிக்க விட வேண்டும்-ரெலோ இளைஞர் அணித் தலைவர் சபா குகதாஸ்

ஏப்ரல் 21 போன்று மே 18 சுதந்திரமாக அனுஸ்டிக்க விட வேண்டும்
முன்னாள் வடமாகாணசபை உறுப்பினரும் ரெலோ இளைஞர் அணித் தலைவருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

“கடந்த ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவிப் பொதுமக்களை நினைவு கூறுவதற்கு பூரண சுதந்திரத்தை வழங்கியதை போன்று 2009 மே 18 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தினத்தில் பாதிக்கப்பட்ட உறவுகள் தம் இறந்த உறவுகளை நினைவு கூற இடையூறுகள் புரியாது அச்சுறுத்தல்களை ஏற்படுத்தாது பூரண அனுமதியை வழங்க வேண்டும்.

இந்த நாட்டில் பாதிக்கப்பட்ட தரப்பினர் யாராக இருந்தாலும் மனித நேய அடிப்படையில் அவர்களது அடிப்படை உரிமைகளை மதிக்க வேண்டும் அதுவே உண்மையான ஐனநாயகப் பண்பு அந்த வகையில் தெற்கில் யுத்த வெற்றியை கொண்டாடும் போது வடக்கு கிழக்கில் மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தடுத்தல் நீதி அல்ல.

பாதிக்கப்பட்ட மக்களின் மன ஆறுதலுக்கும் அவர்களுக்கான நீதி கிடைப்பதற்கும் மீண்டும் இவ்வாறான அவலம் ஏற்படாதிருப்பதற்கும் ஐனநாயக விரோத தடைகளை நிறுத்தி நினைவு கூறலை மேற்கொள்ள அனுமதிப்பதுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்களுக்கான நீதியை பெற்றுக் கொடுப்பதே உண்மையாக இந்த நாட்டின் அமைதிக்கும் அபிவிருத்திக்கும் புதிய வழியை உருவாக்கும் இதனை பிற்போக்கான அடிப்படைவாத கோட்பாட்டில் மூழ்கிப் போய்யுள்ள பெருந் தேசியவாதிகள் புரிந்து கொள்ள வேண்டு்ம்.

சகோதர இனமான தமிழர்களை புறம் தள்ளி அவர்களுக்கான நீதியை பெற்றுக் கொடுக்காது காலத்தை கடத்தி விடலாம் என தொடர்ந்து சிங்கள ஆட்சியாளர் நினைத்தால் சில ஆண்டுகளில் மீண்டும் அந்நிய சக்திகளின் முழுமையான காலணித்துவத்தில் நாடு சிக்கி சீரழியும் நிலை உருவாகும்” என்றார்.

Posted in Uncategorized

P2P வழக்கை இடைநிறுத்துமாறு நீதவான் உத்தரவு

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணிக்கு நீதிமன்ற தடை உத்தரவினை மீறியுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 7 பேருக்கு எதிரான வழக்கினை முற்றாக இடை நிறுத்துமாறு இன்று (30) கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ.என் றிஸ்லான் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த பெப்ரவரி 3 ஆம் திகதி பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணியில் கலந்து கொள்வார்கள் என கூறி கல்முனை பொலிஸ் நிலையத்தினால் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 29 பேருக்கு கல்முனை நீதிமன்ற உத்தரவின் பேரில் தடைஉத்தரவு பெறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், கே.கருணாகரன், த.கலையரசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேந்திரன், சீ.யோகேஸ்வரன், மாணவர் மீட்பு பேரவை தலைவர் செ.கணேஷ் ஆனந்தம், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி துணைச் செயலாளர் அ.நிதான்சன் ஆகியோரை இன்று 30 ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறு கல்முனை நீதவான் அழைப்பாணை பிறப்பித்திருந்தனர்.

கல்முனை நீதவான் நீதிமன்றில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதன்போது ஜனாதிபதி சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் மற்றும் சட்டத்தரணி நிரான் அங்கிற்றல் ஆகியோர் நீதிமன்றில் ஆஜராகி நேற்றைய தினம் குறித்த வழக்கிற்கு எதிராக கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த ஆட்சேபனை மனுவினை சமர்ப்பித்தனர்.

இந்த வழக்கில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.சுமத்திரன், சட்டத்தரணி நிரான் அங்கிற்றல் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர். இதனையடுத்து மேன் முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான அர்ஜுன ஒபேசேகர மற்றும் மாயதுன்ன கொரயாவினால் தொடரப்பட்ட வழக்கினை கல்முனை நீதவான் நீதிமன்றம் தொடர்ந்து நடாத்தவும் அதன் மீது கட்டளை பிறப்பிக்கவும் மே 18 ம் திகதி வரை இடைக்கால தடை விதித்து கட்டளை பிறப்பித்துள்ளது.

பிரதிவாதிகள் தரப்பினர் வழக்கை மீளப் பெறுமாறு சமர்ப்பணம் விடுத்ததையடுத்து, நீதவான் பொலிஸாரிடம் வழக்கை மீளப்பெறுவீர்களா என கேட்ட போது மேலிடத்து உத்தரவு, மேலிடத்திலிருந்து அனுமதி பெற வேண்டும் என பொலிசார் தெரிவித்தனர் .

நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணை செய்யும் நியாயாதிக்கம் நீதவான் நீதிமன்றிற்கு கிடையாது. ஆகவே கல்முனை நீதவான் நீதிமன்றில் இன்று இடம்பெற்ற வழக்கினை தடை செய்யக்கோரி முன் வைக்கப்பட்ட சமர்ப்பணத்தை ஏற்ற நீதிமன்றம் எதிர் வரும் 18ஆம் திகதி வரை இடைக்கால தடை விதித்ததோடு எதிராளிகளுக்கான அறிவித்தலை வழங்குமாறும், மேன் முறையீட்டு நீதிமன்ற பதிவாளர் கல்முனை நீதவான் நீநிமன்றின் பதிவாளருக்கு இந்த கட்டளையை தொலை நகல் மூலமும் அனுப்பி வைக்குமாறும், கட்டளையிட்டதோடு இந்த வழக்கு தொடர்பில் கல்முனை நீதவான் நீதிமன்றம் இதற்கு மேல் எந்த உத்தரவும் வழங்க கூடாது எனவும் கட்டளையிட்டது.

புலிகளின் நினைவுச் சின்னங்களை அனுமதிக்க முடியாது!

வடக்கு, கிழக்கில் தமிழீழ விடுதலைப்புலிகளை நினைவுகூரும் வகையில் நினைவுத் தூபிகளை அமைக்க முடியாது என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

”யாழ். மாநகர சபை மேயர் மணிவண்ணன் மூலமாக இளைஞர்களுக்கு அணிவிக்கப்பட்ட ஆடை தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆடை தான். இந்தச் சம்பவம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

மேயர் என்ற காரணத்துக்காகவோ அல்லது வேறு அதிகாரியாக இருக்கின்ற காரணத்தினாலேயோ இளைஞர்களைப் பயன்படுத்தி அவர்களுக்கு வேறு ஆடைகளை அணிவித்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் செயற்பாடுகளை முன்னெடுப்பது சட்டவிரோதமானது.

குறித்த இளைஞர்களுக்கு தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆடையே அணிவிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாகவே யாழ். மேயரை உடனடியாகக் கைது செய்து சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை எடுத்தோம். அதேபோல, எதிர்காலத்திலும் எவரேனும் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் பின்னிற்க மாட்டோம்.

இந்த நாட்டில் வடக்கிலோ அல்லது தெற்கிலோ இளைஞர்கள் மீண்டும் ஒரு கஷ்ட நிலைமையைச் சந்திக்கும் சூழல் உருவாக நாம் இடமளிக்கமாட்டோம். யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட நினைவுத்தூபி போரில் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் தூபியே தவிர, தமிழீழ விடுதலைப்புலிகளை நினைவு கூரும் தூபி அல்ல. வடக்கிலோ, கிழக்கிலோ பயங்கரவாத அமைப்பை நினைவுகூரும் நினைவுத்தூபிகளை உருவாக்க நாம் இடமளிக்கமாட்டோம்” என்றார்.

திருமணம் உள்ளிட்ட அனைத்து வகையான நிகழ்வுகளுக்கும் இரு வாரங்களுக்குத் தடை -இராணுவத் தளபதி

திருமண வைபவம் உள்ளிட்ட அனைத்து வகையான நிகழ்வுகளையும் நடத்த அடுத்த இரு வாரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய எதிர்வரும் 3ஆம் திகதி முதல் மேற்படி தடையானது அமுல்படுத்தப்படுவதுடன் எதிர்வரும் இரு வாரங்களுக்கு இது நடைமுறையில் இருக்கும்.

நாட்டில் தற்போது கொரோனா தொற்றுப் பரவலானது அதிகரித்து வருவதால் அதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மேற்படி தீர்மானமானது எடுக்கப் பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

நகரங்களுக்கு இடையிலான மற்றும் தூர பிரதேசங்களுக்கான ரயில் சேவைகள் இரத்து

COVID-19 வைரஸ் தொற்று காரணமாக நகரங்களுக்கு இடையிலான மற்றும் தூர பிரதேசங்களுக்கான சில ரயில் சேவைகள் எதிர்வரும் முதலாம் திகதி முதல் இரத்து செய்யப்படுமென ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் முதலாம் திகதி தொடக்கம் 3 ஆம் திகதி வரை மூன்று கட்டங்களாக ரயில் சேவைகள் இரத்து செய்யப்படுமென திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை, கண்டி, காங்கேசன்துறை, பொலன்னறுவை, பெலிஅத்த ஆகிய பகுதிகளுக்கு முன்னெடுக்கப்படும் ரயில் சேவைகள் இரத்து செய்யப்படவுள்ளன.

தூர பிரதேச ரயில் சேவைக்கான ஆசன ஒதுக்கீட்டு முன்பதிவு மிகவும் குறைந்த அளவில் இடம்பெறுவதை கருத்திற்கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.