கரைதுறைப்பற்று ரெலோ தவிசாளரின் அதிரடி நடவடிக்கை மக்களுக்கான அறிவிப்பு!

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேசத்திற்கு உட்பட்ட துப்பரவு செய்யாத மக்களின் வெறுங்காணிகளை உடனடியாக துப்பரவு செய்யவேண்டும் என ரெலோ இளைஞர் அணியின் உறுப்பினரும் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் புதிய தவிசாளர் க.விஜிந்தன் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில் கரைதுறைப்பற்று பிரதேசத்திற்கு உட்பட்ட மக்கள் நடமாடுகின்ற அல்லது மக்கள் குடியிருப்பு பகுதிகளில் பற்றைக்காடுகளாகவுள்ள தனியார் மற்றும் பொதுக்காணிகள் உடனடியாக துப்பரவு செய்வதுடன் தொடர்ந்தும் பராமரிக்கப்படல் வேண்டும் பிரதேச சபையினால் வழங்கடுகின்ற கால எல்லையினுள் துப்பரவு செய்யாப்படின் பிரதேச சபையின் ஏற்பாட்டில் துப்பரவு செய்யப்பட்டு கூலியுடன் தண்டப்பணமும் அறவிடப்படும்.

இவ்வாறன பற்றைக்காடுகளை துப்பரவு செய்வதினால் பல்வேறுபட்ட பிரச்சினைகளை தவிர்ப்பதுடன் சூழலையும் அழகாக வைத்திருக்கமுடியும் அதுமட்டுமல்லாது பயிர்ச்செய்கைக்கும் ஊக்கமளிக்கும். நாம் வாழும் சூழலை சுத்தமாக வைத்திருப்பதும் அழகுபடுத்துவதும் எமது கடமை.

அதுமட்டுமல்லாது வீதிகளில் தண்ணீர்பாயும் வடிகால்களில் குப்பைகள் கழிவுகள் போடுவோர் மீது தண்டபணம் அறவிடப்படுவதோடு சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

பிரதமரை சந்தித்தார் இந்திய உயர்ஸ்தானிகர்

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இன்று (29.04.2021) முற்பகல் அலரி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

சீன பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயத்தை நிறைவு செய்த பின்னர் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அவசரமாக சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட வேண்டும் என ரவூப் ஹக்கீம் கூறியிருந்தார்- ரெலோ உப தலைவர் ஹென்றி மகேந்திரன்

கல்முனை உப பிரதேச செயலகமாக தரம் குறைப்பதற்கு காரணமாக உலமா கட்சியின் செயற்பாடு பின்னணியில் உள்ளதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் உப தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஹென்றி மகேந்திரன் குறிப்பிட்டார்.

கல்முனை மாநகர சபையின் 37ஆவது மாதாந்த பொதுச் சபை அமர்வு நேற்று (புதன்கிழமை) மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் நடைபெற்றது இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “கடந்த ஜனாதிபதி தேர்தலில் உலமா கட்சி தலைவர் பஸில் ராஜபக்சவுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் ஒன்றின் அடிப்படையில் கல்முனை உப பிரதேச செயலமாக தரம் குறைக்கப்பட்டுள்ளதாக அறிய கிடைத்திருக்கின்றது.

றிசாட் பதியுதீன் மற்றும் முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் அல்லாத ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் உலமா கட்சி தலைவரும் இணைந்து செயற்பட்டதாக ஒரு வதந்தி பரவி கொண்டு இருக்கின்றது.இவ்விடயம் தொடர்பாக கடந்த 35 வருடங்களாக குழப்பட்டு வருகின்றோம்.

தமிழ் முஸ்லீம் மக்களை குழப்புகின்ற சக்தி ஒன்று இதன் பின்னணியில் இருந்து செயற்படுகின்றதா? என்ற சந்தேகமும் நிலவுகின்றது.தற்போது முஸ்லீம் தமிழ் மக்கள் மத்தியில் ஒற்றுமை கீற்று ஏதோ ஒரு வழியில் வெளிப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை உள்நாட்டு அலுவல்கள் ராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்சவினை தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்பிக்களான கோவிந்தன் கருணாகரம் செல்வம் அடைக்கலநாதன் சிவஞானம் சிறிதரன் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் முறையிட்டு இருந்தார்கள்.

இதன் போது இராஜாங்க அமைச்சர் பிரதேச செயலகம் குறித்த வெளிவந்த கடிதத்தின் அமுலாக்கத்தினை நிறுத்துமாறு உத்தரவிட்டிருந்தார்.

இது தவிர நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார பொன்னம்பலம் நாடாளுமன்றத்தில் இது தொடர்பில் பேசியிருந்தார்.முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் கலந்துரையாடி ஆட்சேபனையினையை முன்வைத்திருந்தார்.

கடந்த கல்முனை மாநகர சபையின் வரவு செலவு திட்டத்தின் போது நாங்கள் ஆதரவினை வழங்கியபோது ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட வேண்டும் எனவும் இது நியாயமான தமிழ் மக்களின் கோரிக்கை எனவும் அவர்களுக்குரிய உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதையும் அதை மனப்பூர்வமாக ஆதரிப்பதாகவும் பதிவு செய்திருந்தார்.

இந்த பிரதேச செயலக தரமுயர்த்தும் போதும் பிரிக்கப்படும் போதும் முஸ்லீம் மக்களுக்கு பாதகமாக ஒன்றும் இடம்பெற கூடாது என்றும் செல்லியிருந்தார் என கூறினார்.

இந்த அடிப்படையில் நாங்கள் நிதானமாக இருந்து தமிழ் மக்களுக்கு கிடைக்கவேண்டிய பிரதேச செயலகத்தினை வழங்க முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.இது சம்பந்தமாக பிற்காலத்தில் நாங்கள் ஒற்றுமையுடன் செயற்படுவோம்” என தெரிவித்தார்

நாட்டை முடக்குவதற்கான தீர்மானம் இல்லை – இராணுவத் தளபதி

நாட்டை முடக்குவதற்கான (Lockdown) எவ்வித தீர்மானமும் இல்லை என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தால், அந்தந்த பகுதிகள் மாத்திரம் முன்னறிவிப்பின்றி தனிமைப்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் இரண்டு, மூன்று வாரங்களில் நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தற்போதை விட அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நேற்று (28) இரவு ரிவி தெரணவில் ஔிபரப்பான அளுத் பார்ளிமென்துவ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்கள் இன்று ஒரு முக்கியமான சூழ்நிலையை அடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பலமுறை அறிவுறுத்திய போதும், சரியான சுகாதார ஆலோசனையைப் பின்பற்றாததால் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கணிசமான அளவு தொற்றாளர்கள் இனங்காணப்படுவதை அடுத்து பரவலை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார பிரிவினர் அறிவித்த உடன் சில பகுதிகளை தனிமைப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இம்முறை முன்னறிவித்தல் வழங்கி பின்னர் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏதாவது ஒரு பகுதியை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டிய நிலமை ஏற்படின் கண்டிப்பாக தனிமைப்படுத்தப்படும் எனவும் அவர்தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயின் முழு நாட்டையும் முடக்குவதற்காக தயார் இல்லை எனவும் கொவிட் நிலமை அதிகரித்தால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முன்னறிவித்தல் இன்றி தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

மாமனிதர் சிவராம் நினைவுதினம் யாழில் அனுஸ்டிப்பு

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான தராகி சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவு தினம் இன்றைய தினம் யாழ்.ஊடக அமையத்தில் அனுஸ்டிக்கப்பட்டது.

யாழ் ஊடக அமையத்தில் இன்று மதியம் 12 மணியளவில் நடைபெற்ற இந்த நிகழ்வில் யாழ் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் உருவப்படங்களுக்கு மலர் மாலை அணிவித்து , மலர் தூபி சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.

இலங்கையின் பிரபலமான ஊடகவியலாளர்களில் ஒருவரான தராகி
என்றழைக்கப்படும் தர்மரத்தினம் சிவராம் படுகொலை செய்யப்பட்டு இன்றோடு 16 ஆண்டுகள்
கடந்துவிட்டன.

ஊடகவியலாளர் சிவராம் கடந்த 2 ஆயிரத்து 5 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி கொழும்பு பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் வைத்து இனம் தெரியாதவர்களால் கடத்தப்பட்ட பின்னர் நாடாளுமன்றத்துக்கு அருகில் படுகொலையான நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இளம் ஊடகவியலாளரான செல்வராஜா ரஜீவர்மன் உதயன் பத்திரிகையின் அலுவலக செய்தியாளராக கடமையாற்றி வந்த வேளை கடந்த 2 ஆயிரத்து 7ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 29ஆம் திகதி காலை 10 மணியளவில் ஸ்ரான்லி வீதியில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாத நபர்களால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார்.

இலங்கையில் நிலவும் ஊடக – கருத்துச் சுதந்திர மறுப்பு சூழலைக் காட்டும் சிவராம் மற்றும் ரஜீவர்மன் உள்ளிட்டவர்களின் படுகொலை நடந்து பல ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும், ஊடகவியலாளர்களின் கொலைகளுக்குப் பொறுப்பான குற்றவாளிகள் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது
குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கை மீண்டும் ஆரம்பம் – திகதி அறிவிப்பு !

எதிர்வரும் 10 திகதி முதல் இலங்கையில் உள்ள அனைத்து அரச பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிகைகளும் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இன்று (புதன்கிழமை) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

கொரோனா தொற்று காரணமாக இலங்கையில் உள்ள அனைத்து அரச பல்கலைக்கழகங்களும் மீண்டும் திறக்கப்படுவது இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஏப்ரல் 27 ஆம் திகதி பல்கலைக்கழகங்கள் மீண்டும் திறக்க தீர்மானிக்கப்பட்ட போதும் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை காரணமாக அந்த முடிவு ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சீனாவின் தொடர்ச்சியான ஆதரவை நாம் எதிர்பார்க்கிறோம் – பிரதமர்

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள சீனப் பாதுகாப்பு அமைச்சர் ஜெனவரல் வெய் ஃபெங் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இச் சந்திப்பானது இன்று மாலை அலரிமாளிகையில் இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின்போது, தொற்று நோய்க்கு மத்தியில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டமைக்காக சீன பாதுகாப்பு அமைச்சருக்கு பாராட்டுக்களை தெரிவித்த பிரதமர் மேலும் கூறுகையில்,

தொற்றுநோய் நிலைமை இருந்தபோதிலும், உயர் மட்ட சீன தூதர்கள் பல சந்தர்ப்பங்களில் இலங்கைக்கு விஜயம் செய்தனர். எங்கள் வலுவான மற்றும் நட்பு இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த உங்கள் வருகை மற்றும் சந்திப்பை எதிர்பார்க்கிறேன்.

இந்த ஆண்டு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆவது ஆண்டு விழாவிற்கும் அதன் அனைத்து சாதனைகளுக்கும் எனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவிக்க விரும்புகிறேன். அது உண்மையில் மிக முக்கியமான மைல்கல் ஆகும்.

வறுமையை ஒழிப்பதில் சீனா செய்த சாதனைகளுக்கம் பாராட்டுக்களை தெரிவிக்க வேண்டும். சீன அரசாங்கம் கிட்டத்தட்ட 100 மில்லியன் கிராமப்புற மக்களை வறுமையிலிருந்து உயர்த்தியுள்ளது. மறுபுறம், வறுமையை ஒழிப்பதற்காக 10 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் உலகளாவிய நிலையான அபிவிருத்தி இலக்குகளை சீனா சந்திக்க முடிந்தது. இது ஒரு பெரிய சாதனை.

இந்த தொற்றுநோயைத் தடுப்பதற்கான ஒரே வழி தடுப்பூசி மட்டுமே என்பது இப்போது உலகம் முழுவதும் தெளிவாகியுள்ளது. கொவிட் தொற்றுநோய் வெடித்ததிலிருந்து, அனைத்து இலங்கையர்களுக்கும் சீனா தாராளமாக 600,000 சினோஃபார்ம் தடுப்பூசிகள் மற்றும் சுகாதார உபகரணங்கள் நன்கொடை அளித்தமைக்கு நன்றி.

எனினும் இந்த தொற்றுநோயைக் கையாள்வதில் சீன அரசாங்கத்தின் தொடர்ச்சியான ஆதரவை நாம் எதிர்பார்க்கிறோம்.

கடந்த சில வாரங்களில் கொவிட்- 19 நோயாளர்களது எண்ணிக்கை நாட்டில் அதிகரித்த போதிலும், அதன் பொருளாதார மற்றும் சமூக தாக்கத்தால் முழு நாட்டையும் முடக்க வேண்டாம் என்று ஒரு அரசாங்கமாக நாங்கள் முடிவு செய்துள்ளோம்.

தொற்றுநோய்க்கு பிந்தைய நிலைமையை நிவர்த்தி செய்ய இன்னும் பலவற்றைச் செய்ய வேண்டும்.

தற்போது, உலகெங்கிலும் இருந்து இலங்கைக்கு முதலீட்டை ஈர்ப்பதே எங்கள் முன்னுரிமை. இலங்கையில் இதுபோன்ற முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வளர்ப்பதில் உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன்.

தற்போதுள்ள ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், தொற்றுநோயால் ஏற்படும் சவால்களை சமாளிக்க உங்களுடன் மற்றும் உங்கள் அரசாங்கத்துடன் நெருக்கமாக பணியாற்றுவதற்கும் எதிர்நோக்குகிறேன் என்றும் பிரதமர் கூறினார்.

இந்த சந்திப்பில் சீன தூதுக் குழுவினரும், அமைச்சர்களான ஜி.எல்.பீரிஸ், தினேஷ் குணவர்தன, பஷில் ராஜபக்ஷ மற்றும் சரத் வீரசேகர உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Posted in Uncategorized

இதுவரையில் தனிமைப்படுத்தலுக்கு உள்ளான பகுதிகள் – முழு விபரம்

நாட்டில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று அதிகரித்ததை அடுத்து இதுவரையில் 24 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

9 மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளே இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குருணாகல் மாவட்டம்

கும்புக்கெட்டே பொலிஸ் பிரிவில் தித்தவெல்லகல கிராம சேவகர் பிரிவு மற்றும் நிராவிய கிராம சேவகர் பிரிவு.

வெல்லவ பொலிஸ் பிரிவில் நிகதலுபொத்த கிராம சேவகர் பிரிவு.

மேலும் குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவு.

கம்பஹா மாவட்டம்

கொட்தெனியாவ பொலிஸ் பிரிவில் பொல்ஹேன கிராம சேவகர் பிரிவு, ஹீரலுகெதர கிராம சேவகர் பிரிவு மற்றும் களுஅக்கல கிராம சேவகர் பிரிவு.

மினுவங்கொட பொலிஸ் பிரிவில் அஸ்வென்னவத்த கிழக்கு கிராம சேவகர் பிரிவு.

களுத்துறை மாவட்டம்

மீகஹதென்ன பொலிஸ் பிரிவில் மிரிஸ்வத்த கிராம சேவகர் பிரிவு, பெலவத்த வடக்கு கிராம சேவகர் பிரிவு மற்றும் பெலவத்த கிழக்கு கிராம சேவகர் பிரிவு.

களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவில் அதிகாரிகொட கிராம சேவகர் பிரிவு.

திருகோணமலை மாவட்டம்

திருகோணமலை பொலிஸ் பிரிவில் பூம்புகார் கிராம சேவகர் பிரிவு.

காலி மாவட்டம்

ரத்கம பொலிஸ் பிரிவில் இம்புலகொட கிராம சேவகர் பிரிவு மற்றும கடுதம்பே கிராம சேவகர் பிரிவு.

பொலன்னறுவை மாவட்டம்

ஹிங்குரக்கொட பொலிஸ் பிரிவில் சிறிகெத கிராம சேவகர் பிரிவு.

மாத்தளை மாவட்டம்

உக்குவளை பொலிஸ் பிரிவில் பல்லேகும்புர கிராம சேவகர் பிரிவு.

நாஉல பொலிஸ் பிரிவில் அலுகொல்ல கிராம சேவகர் பிரிவு.

மொனராகல மாவட்டம்

வெல்லவாய பொலிஸ் பிரிவில் வெல்லவாய நகர் கிராம சேவகர் பிரிவு, வெஹரயாய கிராம சேவகர் பிரிவு மற்றும் கொட்டம்கஹபொக்க கிராம சேவகர் பிரிவு

புத்தல பொலிஸ் பிரிவில் ரஹதன்கம கிராம சேவகர் பிரிவு.

அம்பாறை மாவட்டம்

உகன பொலிஸ் பிரிவில் குமாரிகம கிராம சேவகர் பிரிவு.

இதேவேளை தம்புள்ள பொருளாதார மத்திய நிலையமும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி – சீன பாதுகாப்பு அமைச்சர் இடையே கலந்துரையாடல்

நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங்ஹ (Wei Fenghe), ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை சந்தித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இரு நாடுகளுக்குமிடையிலான முக்கிய விடயங்கள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டது.

சீனப் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங்ஹ, உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்றிரவு (27) நாட்டை வந்தடைந்தார்.

மே தினத்தை தனித்து நடத்தவே தீர்மானித்தோம்: கொவிட் வைரஸ் தடுத்து விட்டது – சுதந்திர கட்சி

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மே தின பேரணியை தனித்து நடத்துவதற்கு தீர்மானித்திருந்த போதிலும், கொவிட்-19 வைரஸ் காரணமாக அதனை நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. எனினும் கட்சியின் தொழிற் சங்கத்துடன் கலந்துரையாடி தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையை ஜனாதிபதிக்கு கையளிக்க எதிர்பார்த்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

ஆடை தொழிற்சாலை திணைக்களத்திற்கான பயிற்சி ஆலோசகர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்கிழமை அமைச்சரின் தலைமையில் உலக வர்த்தக மையத்தில் இடம்பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

சுதந்திரக் கட்சியின் மே தின பேரணி காலாகாலமாக தனித்தே நடத்தப்பட்டு வந்துள்ளது. அதற்கமைய இம்முறையும் அவ்வாறு நடத்தவே தீர்மானித்திருந்தோம். எனினும் வைரஸ் பரவல் காரணமாக மே தின பேரணிகளை நடத்த வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதனால் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து பார்த்து ஜனாதிபதியிடம் அறிக்கையொன்றை சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளோம்.

இந்நிலையில், கட்சியின் முன்னேற்றம் குறித்து கட்சியின் உறுப்பினர்களுடனான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றது. அதற்கமைய எதிர்வரும் மாகாணசபை தேர்தல் தொடர்பிலும் இதன்போது பேசப்பட்டு வருகின்றது . தேர்தல் தொகுதி ஒன்றுக்கு மூன்று உறுப்பினர்கள் தெரிவுச் செய்யப்படுவது மற்றும் மேலதிக உறுப்புரிமை வழங்கல் போன்ற செயற்பாடுகளுக்கு நாம் எதிர்ப்பை தெரிவிப்பதுடன் அரசாங்கத்தின் சிறந்த செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பை வழங்குவோம்.

இதேவேளை கட்சியின் முன்னேற்றத்திற்காக நாம் தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றோம் இந்நிலையில் கட்சிக்குள் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் அதனை சுமூகமாக தீர்க்க நடவடிக்கையை எடுப்போம். கட்சி உறுப்பினர்களுடன் மாத்திரமே கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருந்தன.

கேள்வி : பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ அண்மையில் பாராளுமன்றத்தில் சுதந்திரக் கட்சித் தொடர்பில் பல்வேறு கருத்துகளை முன்வைத்து விட்டு , மறுநாள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான உங்களது கருத்து என்ன?

பதில்: பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெனாண்டோ வைத்தியசாலையில் ஏன் அனுமதிக்கப்பட்டார் என்பது தொடர்பில் எமக்கு தெரியாது. எனினும் 2 வருடங்களுக்கு முன்னர் அவர் தெரிவித்த சில விடயங்கள் தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக் கொள்வதற்காகவே அவரை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டால் இங்கு சென்று வாக்குமூலம் வழங்குவதே சிறந்த செயற்பாடாகும்.