சர்வதேசம் மீண்டும் தோல்வியடைந்துவிடக் கூடாது – மனித உரிமைகள் கண்காணிப்பகம்

இலங்கைத் தமிழர் விடயத்தில் சர்வதேசம், முன்னர் தோல்வி அடைந்ததைப்போல மீண்டும் தோல்வியடைந்துவிடக்கூடாது என்று சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது மாநாட்டில் தமது நிலைப்பாட்டை வெளியிட்ட மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் பிரதிநிதி இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்-

“யுத்தம் நிறைவடைந்து 11 ஆண்டுகள் கடந்துவிட்டன. யுத்தத்தில் ஈடுபட்டிருந்த இரண்டு தரப்பினரும் மேற்கொண்ட யுத்தக் குற்றங்களுக்கு இன்னும் பொறுப்பு கூறப்படவில்லை. இலங்கை அரசாங்கம், தம்மீதான குற்றச்சாட்டுகளை தொடர்ச்சியாக மறுதலித்து வருகிறது.

பல்வேறு ஆணைக்குழுக்களை அரசாங்கம் நியமித்தாலும் அவை அதிகாரம் குறைந்தனவாகவும், உறுதி மொழிகளை நிறைவேற்றுவதற்கான மனத்திடம் இல்லாத நிலைமையும் காணப்படுகின்றன. போர்க்குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளவர்கள் முக்கிய பதவிகளுக்கு நியமிக்கப்படுகிறார்கள்.

படுகொலைகள் தொடர்பாக இலங்கையில் தண்டனை விதிக்கப்பட்ட ஒரேயொரு நபரும் பொதுமன்னிப்பில் விடுவிக்கப்பட்டுள்ளார். தற்போது மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் நீதி கோரி நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் கூட அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

இந்தநிலையில் மனித உரிமைகள் ஆணையாளர் தமது அறிக்கையில் பரிந்துரைத்தபடி, இலங்கையை மாற்று சர்வதேச பொறிமுறைக்கு பாரப்படுத்த, மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றார்.

Posted in Uncategorized

இலங்கையில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரம் – ஐரோப்பிய ஒன்றியம் கவலை

இலங்கையில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளமை குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவலை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் பொறுப்புக்கூறல் மற்றும் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுதலை முடிவிற்கு கொண்டுவருவதற்காக ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் முன்வைத்துள்ள வழிவகைகளிற்கு மிகுந்த முக்கியத்துவம் வழங்குவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவைக்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையிலேயே ஐரோப்பிய ஒன்றியம் இதனை தெரிவித்துள்ளது.

சமீப காலங்களில் பெற்றுக்கொள்ளப்பட்ட சாதகமான விடயங்களில் பின்னடைவு ஏற்படுவது குறித்து கரிசனை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள ஐரோப்பிய ஒன்றியம் காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகம் இழப்பீட்டிற்கான அலுவலகம் போன்றவற்றை பாதுகாப்பதும் அவர்களுக்கான சுதந்திரத்தையும் நிதிவளங்களையும் வழங்குவதும் அவசியம் என தெரிவித்துள்ளது.

இலங்கையில் மோசமடைந்து வரும் மனித உரிமைநிலவரத்திற்கான எச்சரிக்கை அறிகுறிகள் குறித்த மனித உரிமை ஆணையாளரின் கரிசனையை பகிர்ந்துகொள்வதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.சிவில் சமூகத்தினர் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கண்காணிக்கப்படுவது அதிகரித்துள்ளமை குறித்தும் ஐரோப்பிய ஒன்றியம் கவலை வெளியிட்டுள்ளது.

வழிகாட்டல்கள் வௌியிடப்பட்டதன் பின்னரே நல்லடக்கம் செய்ய அனுமதி வழங்கப்படும்

கொரோனாவினால் மரணிப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்குரிய வழிகாட்டல்கள் வௌியிடப்பட்டதன் பின்னரே, அனுமதி வழங்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

உடல்களை அடக்கம் செய்வதற்கான இடங்களை எதிர்வரும் நாட்களில் தெரிவு செய்ய வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

நீர் நிலைகள் உள்ளிட்ட பல விடயங்களை ஆராய்ந்து இடங்களை தெரிவு செய்ததன் பின்னர் அதனை சுகாதார அமைச்சர், செயலாளர் மற்றும் ஜனாதிபதி தலைமையிலான COVID செயலணிக்கு சமர்ப்பித்து, அதற்கு அனுமதி பெற வேண்டும் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயம் கூறினார்.

இதற்கான வழிகாட்டியை வௌியிடும் வரை COVID-இனால் மரணிப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்ய முடியாது எனவும், இடத்தை தெரிவு செய்ய வேண்டியிருப்பதே அதற்கான பிரதான காரணம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதுவரை உடல்களை வைத்தியசாலைகளின் குளிரூட்டிகளில் வைத்திருக்க முடியும் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன மேலும் தெரிவித்தார்.

இஸ்லாமிய நாடுகளின் நிலைப்பாடு மாறாதென நம்புகிறோம், கட்டாய ஜனாஸா எரிப்பை நீக்கியது, முஸ்லிம் நாடுகளின் ஆதரவுக்காகவே – சுமந்திரன்

தமிழ் தேசிய பரப்பில் இருக்க கூடிய அனைத்து கட்சிகளும் ஒன்றாக செயற்படவேண்டும் என்ற தன்மையை வலியுறுத்துவதாக பாராளுமன்ற உறுப்பினர் எம.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும் காலம் கடந்து ஞானம் வந்தது போல் ஸ்ரீலங்கா அரசாங்கம் ஓடித்திரிகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழ்தேசியப் பரப்பில் இருக்கக்கூடிய தமிழ் கட்சிகள்,வட கிழக்கில் இருக்கக்கூடிய கிறிஸ்தவ ஆயர்கள், ஆதினமுதல்வர்கள், மற்றும் சிவில் அமைப்புக்கள் ஆகியவற்றின் ஒன்றிணைந்த கலந்துரையாடல் ஒன்று வவுனியாவில் இன்று -26- இடம்பெற்றது.

இதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

இன்றைய கால கட்டத்தில் தமிழ் மக்களின் அரசியல் ஒற்றுமை இன்றியமையாதது என்ற கருத்தை நாங்கள் எல்லாருமே ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.

அதனை மத தலைவர்களும் வலியுறுத்தியுள்ளனர். அந்த அரசியல் ஒற்றுமையை எவ்வாறு வேகமாகவும், தீவிரமாகவும் நகர்த்துவது என்பது பற்றி ஒவ்வொரு கட்சிகளும் தமது தீர்மானம் எடுக்கும் கூட்டங்களிலே பேசி தீர்மானங்களை எடுத்த பின்னர் வெகு விரைவில் ஒரு கட்டமைப்பாக முன்னேறுவது குறித்த நடவடிக்கையை எடுப்போம்.

இக்கலந்துரையாடலில் எந்தவித முரண்பாடு இல்லாத நிலையிலும் அழைப்பு விடுக்கப்பட்ட அனைத்து கட்சிகளும் கலந்துகொள்ளவில்லை. அத்துடன் இது ஒரு தேர்தல் கட்டமைப்பே கிடையாது. இது இன்று தமிழர்களிற்கு ஒரு அத்தியவசிய தேவை அதனை பொறுப்போடு நாம் அணுக வேண்டுமாக இருந்தால் தமிழ்த் தேசிய பரப்பில் இருக்க கூடிய அனைத்து கட்சிகளும் ஒன்றாக செயற்பட வேண்டும். அவ்வாறு செயற்படுவதற்கு தேவையான ஒரு கட்டமைப்பை உருவாக்குவோம்.

ஜெனிவா அமர்வில் இலங்கை தொடர்பாக பலநாடுகள் நடுநிலமையை பேணும் என்ற ஒரு நிலைப்பாடு காணப்படுகின்றது. இந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக இணை அனுசரணை வழங்கும் நாடுகள் பெரும் முயற்சி எடுத்திருக்கிறார்கள்.

அதை நீர்த்துப்போகச் செய்வதற்காகவே இலங்கை அரசு கட்டாய ஜனாஸா எரிப்பு என்ற விடயத்தை நீக்கியிருக்கிறது. முஸ்லிம் நாடுகள் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கலாம் என்ற எண்ணத்தில் இதனை செய்திருக்கிறார்கள்.

எனினும் இஸ்லாமிய நாடுகள் தங்களது நிலைப்பாட்டை மாற்ற மாட்டார்கள் என்று நம்புகிறோம். அதேபோல சில நாடுகளின் ஆதரவை பெறுவதற்காக காணாமல் போனவர்களுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்படும் தெரிவித்துள்ளார்.

ஜெனீவா அறிக்கையை நடைமுறைப்படுத்துமாறு கோருகிறது சுவிஸ்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரையை ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்துமாறு இலங்கையிடம் சுவிட்ஸர்லாந்து வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் முன்னைய தீர்மானங்களின் உள்ளடக்கங்களையும் நடைமுறைப்படுத்துமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. மனித உரிமை பேரவை இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்குவதற்காக மேலதிக நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் எனவும் சுவிட்ஸர்லாந்து வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஐக்கிய நாடுகள் தீர்மானத்திலிருந்து விலகுவது குறித்து இலங்கை அறிவித்தவேளை தேசிய அளவில் உருவாக்கப்பட்ட நல்லிணக்க மற்றும் பொறுப்புக்கூறல் நடைமுறையை தொடரவுள்ளதாக இலங்கை தெரிவித்திருந்தது.

எனினும் இந்த அறிக்கையில் உள்ளுர் முயற்சிகள் எவையும் பலன்களை அளிக்கவில்லை, தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுவது தொடர்கின்றது.

இதன் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் அமைப்பின மீதான நம்பிக்கை மேலும் குறைவடைந்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.

Posted in Uncategorized

இலங்கையில் சிறுபான்மையினர் ஓரங்கட்டப்படுகிறார்கள் ஜெனீவா அமர்வில் நோர்வே

ஐ.நாவுக்கான நோர்வேயின் நிரந்தர பிரதிநிதி, தூதர் டைன் மார்ச் ஸ்மித், ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகருடன் முழுமையாக ஒத்துழைக்கவும், மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் (OHCHR) அறிக்கையின் பரிந்துரைகளை அமல்படுத்தவும் இலங்கையை இன்று வலியுறுத்தியுள்ளார்.

46 வது அமர்வு மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான உயர் ஸ்தானிகர் அறிக்கை குறித்து உரை நிகழ்த்திய அவர், இலங்கை தொடர்பான மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அறிக்கையை நோர்வே வரவேற்பதாகவும், எழுப்பப்பட்ட கவலைகளைப் பகிர்ந்து கொள்வதாகவும் கூறினார்.
“2015 முதல், இலங்கை ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்துவதில் முக்கியமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது, ஆனால் சமீபத்திய எதிர்மறை முன்னேற்றங்கள் அடைந்த லாபங்களைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும். இடைக்கால நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தில் முன்னேற்றம் குறைவு
“நாட்டின் சிறுபான்மையினர் ஓரங்கட்டப்படுகிறார்கள். நிலையான மனித அபிவிருத்தி என்பது மனித உரிமைகளின் அடிப்படையில் மற்றும் ஒரு உள்ளடக்கிய செயல்முறையின் மூலம் மட்டுமே அடையப்படும்.

“இலங்கையின் சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்டக் கடமைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்கும், மனித உரிமை பாதுகாவலர்கள், ஊடகவியலாளர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் மீதான அனைத்து வகையான கண்காணிப்பு மற்றும் துன்புறுத்தல்களையும் முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமென இலங்கையை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்,” என்று அவர் தெரிவித்தார்.

Posted in Uncategorized

அரச வெசாக் விழாவை யாழ்ப்பாணம் – நாகதீப ரஜ மகா விகாரையில் நடத்துமாறு பிரதமர் ஆலோசனை

அரச வெசாக் விழாவை யாழ்ப்பாணம் – நாகதீப ரஜ மகா விகாரையில் நடத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆலோசனை வழங்கியுள்ளார்.

இம்முறை அரச வெசாக் விழாவை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை அடிப்படையாகக் கொண்டு நாகதீப ரஜ மகா விகாரையை மையமாகக் கொண்டு நடத்த புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஸ அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக பிரதமர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய வடக்கு, கிழக்கு மாகாணங்களின் 65 விகாரைகள் மற்றும் 35 அறநெறி பாடசாலைகளை ஒன்றிணைத்து இம்முறை அரச வெசாக் விழாவை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தனவிற்கு பிரதமரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாரம்பரிய வெசாக் விழாவிலிருந்து மாறுபட்டதாக, பிற மதங்களுடன் இணைந்து அரச வெசாக் விழாவை ஏற்பாடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளமை இம்முறை அரச வெசாக் விழாவின் விசேட அம்சமாகும்.

இதற்கான செயற்பாட்டை புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழுள்ள இந்து, கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் விவகார திணைக்களங்கள் ஒன்றிணைந்து முன்னெடுக்குமென பிரதமரின் ஊடகப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமலை கோணேஸ்வரர் ஆலயத்தில் 800 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் கல்வெட்டு கண்டுபிடிப்பு

திருகோணமலை கோணேஸ்வர ஆலயத்திற்கு அருகில் உள்ள இராவணன் கல்வெட்டுக்கருகில் பழமைவாய்ந்த தமிழ் கல்வெட்டு ஒன்று கடந்தவாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை யாழ் பல்ககலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை பேராசியர் ப.புஸ்பரட்ணம் தெரிவித்துள்ளார்.

இக் கல்வெட்டு இற்றைக்கு 800 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனவும் பெரும்பாலும் கோணேஸ்வரர் ஆலயத்திற்கு நெல் அரிசி என்பன தானமாக வழங்கப்பட்டதனை கூறுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கை எதிர்த்தாலும் பரிந்துரைகள் அமுலாகும்- ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அறிவிப்பு

மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கு இலங்கை எதிர்ப்புத் தெரிவித்தாலும், அதனை அமுலாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பிரதி ஆணையாளர் நடா அல் நசிஃப் (Nada Al-nashif ) இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் குறிப்பிடுகையில், “மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்செல் பச்லெட் ஏற்கனவே வெளியிட்டிருந்த அறிக்கை, இலங்கை அரசாங்கத்துடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின் பின்னர் சீராக்கப்பட்டு நேற்று முன்வைக்கப்பட்டது.

இலங்கை அரசாங்கம் சில விடயங்களுக்கு எதிர்ப்பைத் தெரிவித்திருந்தமையால், இந்த அறிக்கையை இறுதிப்படுத்த மூன்று வாரங்கள் காலதாமதம் ஏற்பட்டது.

இந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள சில பொறிமுறைகளின் பல விடயங்களை அமுலாக்குவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே, சிரியா, மியான்மார் மற்றும் வடகொரியா போன்ற நாடுகளில் அமுலாக்கப்பட்டுள்ளதைப் போன்றோ அல்லது இலங்கை விடயத்தை பிரத்தியேகமான முறையிலோ கையாள்வது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த விடயத்துக்கான பொருத்தமான நடைமுறை எதுவென்பதை மனித உரிமைகள் பேரவையே தீர்மானிக்கும்.

அத்துடன், இலங்கை விடயத்தில் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தால் பல ஆண்டுகளாகச் சேகரிக்கப்பட்ட சான்றுகள் உள்ளன” என்று குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

தமிழ்த் தேசிய கட்சிகளை ஒன்றினைப்பது தொடர்பில் ஆராய்வு

தமிழ் தேசிய கட்சிகளின் அரசிய தலைவர்களை சர்வ மதத்தலைவர்கள் அழைத்து இன்று வவுனியாவில் சந்தித்தனர்.

குறித்த சந்திப்பின் போது தமிழ்த் தேசிய பரப்பில் பயணித்து கொண்டிருக்கும் அனைத்து கட்சிகளையும் எவ்வாறு ஒன்றிணைப்பது தொடர்பிலும் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் ஜெனீவாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமர்வில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள தீர்மானங்களை நிறைவேற்ற தமிழர் தரப்பு கையாள வேண்டிய விடயங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

இச்சந்திப்பில் நல்லை ஆதின குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ திருஞானசம்பந்த பரமச்சாரிய சுவாமிகள், வேலன் சுவாமிகள், தென்கயிலை ஆதினத்தின் சுவாமிகள், வவுனியா, மன்னார் மற்றும் திருகோணமலை மாவட்டங்களின் அதிவணக்கத்துக்குரிய ஆயர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

அரசியல் கட்சிகள் சார்பில் தமிழரசுக் கட்சியின் சார்பில் தலைவர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன், சுமந்திரன், கலையரசன்,ரெலோ சார்பில் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், கோவிந்தன் கருணாகரன், வினோநோதரலிங்கம் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன்,சிவசக்தி ஆனந்தன்,சிவாஜிலிங்கம் ஜனநாயக போராளிகள் கட்சியின் க.துளசி ஆகியோரும் கலந்து கொண்டனர்.