கூட்டமைப்பை பலப்படுத்தும் கோரிக்கை? Elanadu Editorial

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளில் ஒன்றான, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) தேசிய மகாநாட்டின் போது, கூட்டமைப்பை பதிவு செய்யவேண்டும் என்னும் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருக்கின்றது.

கூட்டமைப்பின் பிறிதொரு பங்காளிக் கட்சியான ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மேற்படி கோரிக்கையை முன்வைத்திருக்கின்றார்.

குறித்த மகாநாட்டில் பங்குகொண்டிருந்த இலங்கை தமிழ் அரசு கட்சியின் துணைத் தலைவர், சீ. வீ. கே. சிவஞானம், கூட்டமைப்பை உடைக்கும் முயற்சியில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஈடுபடுகிறார் என்று தெரிவித்திருக்கிள்றார்.

கேள்வி – கூட்டமைப்பை உடைப்பதற்கு வெளியிலிருந்து முயற்சிகளை செய்யுமளவுக்கு, கூட்டமைப்பு கட்டுக்கோப்பாகவும், பலமாகவும் இருக்கின்றதா? எதிரிக்கு சவாலாக இருக்கும் ஒரு கட்சி தொடர்பில்தானே எதிரிகள் அச்சம் கொள்வார்கள் – மற்றவர்கள் அச்சப்படுமளவுக்கு கூட்டமைப்பின் செயல்பாடுகள் இருக்கின்றனவா? தன்னைத்தானே சிதைத்துக் கொள்ளும் ஒரு தேர்தல் அரசியல் கூட்டை, எதற்காக மற்றவர்கள் உடைக்க முயற்சிக்க வேண்டும்? தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் ஓர் அரசியல் நோய் உண்டு. அதாவது, சிங்களவர்கள் தமிழ்த் தேசிய சக்திகளை பிளபுபடுத்த முயற்சிப்பதாகப் பலரும் அவ்வப்போது புலம்புவதுண்டு. தங்களுடைய தவறுகளைத் திருத்திக் கொள்ள முடியாமல் போகும் போதுதான், இவ்வாறான புலம்பல்கள் எட்டிப்பார்க்கின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்டுக்கோப்புடனும், தெளிவான இலக்குடனும் இருந்தால், அதனை மற்றவர்களால் உடைத்துவிட முடியாது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்வதன் மூலம், அதனை ஒரு பலமான தேசிய அரசியல் இயக்கமாக வளர்க்க வேண்டுமென்னும் கோரிக்கை 2011இலிருந்து முன்வைக்கப்பட்டு வருகின்றது. ஆனால் நடந்ததோ வேறு, 2010இல், இடஒதுக்கீடு தொடர்பான பிரச்னை காரணமாக, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ், கூட்டமைப்பிலிருந்து வெளியேறியது.

கொள்கை அடிப்படையிலான முரண்பாடாக அவர்கள் கூறிக் கொண்டாலும்கூட, கூட்டமைப்பிலுள்ளவர்கள், இட ஒதுக்கீடடில் ஏற்பட்ட சிக்கல்களின் காரணமாகவே கஜேந்திரகுமார் வெளியேறினாரெனக் கூறுகின்றனர்.

ஏனெனில், இரா.சம்பந்தன், விடுதலைப் புலிகளால் அரசியலுக்கு அறிமுகம் செய்யப்பட்ட சிலருக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதி வழங்கவில்லை.
பிறிதொரு பங்காளிக் கட்சியான, சுரேஷ் பிறேமச்சந்திரன், 2015, பாராளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அவர்கள் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியிருந்தனர்.
சுரேஷ் பிறேமச்சந்திரனுக்கு தேசிய பட்டியல் மூலம் ஓர் ஆசனத்தை வழங்குவதன் மூலம், ஈ. பி. ஆர். எல். எவ்வை தொடர்ந்தும் உள்ளுக்குள் வைத்துக் கொள்ளும் ஆலோசனையை பங்காளிக் கட்சிகள் நிராகரிக்கவில்லை.

ஆனால், சம்பந்தன் அந்த யோசனையை மறுதலித்திருந்தார்.

2013இல், கூட்டமைப்பால், வடக்கு மாகாண சபையின் முதலமைச்சராக்கப்பட்ட, நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன், புதிய கட்சி ஒன்றின் மூலம் தனிவழியில் சென்றார்.

மேற்படி விடயங்களுக்கு பின்னால் மற்றவர்களா இருந்தனர் அல்லது விடயங்களை சரியாகவும் நேர்மையாகவும் கையாளமையின் காரணமாக இவ்வாறான விடயங்கள் இடம்பெற்றனவா? கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டுமென்று சிந்திப்போர் முன்னைய அனுபவங்களிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டியது அவசியம்.

அதேபோன்று கூட்டமைப்பிலிருந்து வெளியேறியவர்களும், கூட்டமைப்புக்கு மாற்றான அரசியலை நேர்மையாகவும் முறையாகவும் ஒழுங்காகவும் முன்னெடுக்கவில்லை.

அடிப்படையில் ஒரு விடயம் மட்டும் சரியாகவும் முறையாகவும் நடந்திருக்கின்றது.
அதாவது, தமிழ்த் தேசிய அரசியலை அனைவருமாக ஒன்றிணைந்து சிதைத்திருக்கின்றனர்.
கூட்டமைப்பின் சிதைவில் தமிழ் அரசு கட்சியே பிரதான பங்குவகித்திருந்தது.

ஏனெனில், கூட்டமைப்பை பதிவு செய்யும் கோரிக்கைகளை தொடர்ந்தும் தமிழ் அரசு கட்சியே எதிர்த்து வந்திருக்கின்றது. முக்கியமாக அதன் தலைமை. ஆனால், இறுதியில் தமிழ் அரசுக் கட்சியைக்கூட அவர்களால் கட்டுக்கோப்புடன் பாதுகாக்க முடியவில்லை. தமிழ் அரசு கட்சியின் தலைவரை தேர்தலில் தோற்கடிப்பதற்கு கட்சிக்குள்ளேயே வியூகங்கள் வகுக்கப்பட்டது.

இறுதியில் தமிழ் அரசு கட்சியும் பலவீனமடைந்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பலவீன மடைந்திருக்கின்றது.

கூட்டமைப்பை ஒரு கட்சியாகப் பதிவு செய்வதற்கான காலம் அதிகம் கடந்து விட்டது.
எனினும், இப்போது முயற்சிப்பதில் தவறில்லை. ஏனெனில், கூட்டமைப்பின் முற்றிலுமான சிதைவு என்பது, ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு தமிழ்த் தேசிய அரசியல் மூச்சு விடுவதற்கே கடினமான சூழலை ஏற்படுத்தலாம்.

கூட்டமைப்புக்கு மாற்றான கட்சிகள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் எவருமே, தமிழ்த் தேசிய அரசியலை முன்கொண்டு செல்லும் ஆற்றலோடு இல்லை.

வவுனியா, திருகோணமலை, மன்னார் நகரசபைகளை மாநகரசபைகளாக்க தீர்மானம் : கிளிநொச்சி, முல்லைத்தீவு பிரதேசசபைகள் நகரசபைகளாகின்றன – பந்துல

களுத்துறை, வவுனியா, புத்தளம், திருகோணமலை, மன்னார், அம்பாறை மற்றும் கேகாலை ஆகிய நகரசபைகளை மாநகரசபைகளாக்குவதற்கும் , கிளிநொச்சி , முல்லைத்தீவு மற்றும் மொனராகலை பிரதேசசபைகளை நகரசபைகளாக்குவதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்கிழமை (9) இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் உள்ளுராட்சி மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் முன்வைத்த குறித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அவரால் முன்வைக்கப்பட்ட யோசனையில் 7 நகரசபைகளை மாநகரசபைகளாக்குவதற்கும் , 3 பிரதேசசபைகளை நகர சபைகளாக்குவதற்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

நாட்டில் இதுவரையில் 24 மாநகரசபைகளும் , 41 நகரசபைகளும் , 276 பிரதேசசபைகளும் காணப்படுகின்றன. அதற்கமைய 341 உள்ளுராட்சி நிறுவனங்கள் நாட்டில் இயங்கி வருகின்றன.

குறித்த பிரதேசங்களில் ஏற்படுகின்ற சனத்தொகை மாற்றம் , அடிப்படை வசதிகளில் அபிவிருத்தி மற்றும் மக்களின் தேவைகள் அதிகரிப்பு உள்ளிட்டவற்றைக் கவனத்திற் கொண்டு நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளுக்கமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய களுத்துறை, வவுனியா, புத்தளம், திருகோணமலை, மன்னார், அம்பாறை மற்றும் கேகாலை ஆகிய நகரசபைகளை மாநகரசபைகளாக்குவதற்கும் , அதே போன்று கிளிநொச்சி , முல்லைத்தீவு மற்றும் மொனராகலை பிரதேசசபைகளை நகரசபைகளாக்குவதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அத்தோடு மேல் மாகாணத்தில் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பில் மதிப்பாய்வு செய்து , அவற்றில் பிரதேசசபைகள் , நகரசபைகள் மற்றும் மாநகரசபைகளாக மாற்றப்படக் கூடியவை தொடர்பில் பரிந்துரைக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அமைச்சரவைக்கு அறிவித்தார் என்றார்.

Posted in Uncategorized

வருகையை பிற்போடுமாறு கோரிய பின்னரும் ஹம்பாந்தோட்டை நோக்கி வேகமாக பயணிக்கும் சீன கப்பல்

வருகையை பிற்போடுமாறு வௌிவிவகார அமைச்சு கோரிக்கை விடுத்திருந்தாலும் சீனாவின் அதி தொழில்நுட்ப ஆய்வுக் கப்பல் தற்போது வேகத்தை அதிகரித்துக்கொண்டு ஹம்பாந்தோட்டை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றது.

கப்பல் எதிர்வரும் வியாழக்கிழமை (11) ஹம்பாந்தோட்டையை அடையவுள்ளது.

செய்மதிகள் மற்றும் ஏவுகணைகளை கண்காணிக்க முடியுமான வசதிகள் கொண்ட சீனாவின் Yuan Wang 5 கப்பல் இன்று பிற்பகல் இலங்கையில் இருந்து 680 கடல் மைல் தொலைவில் பயணித்துக்கொண்டிருந்தது. மணித்தியாலத்திற்கு 14 கடல் மைல் வேகத்தில் அந்நேரத்தில் கப்பல் பயணித்துக்கொண்டிருந்தது. இதற்கு முன்னர் இந்த கப்பல் மணித்தியாலத்திற்கு 10 முதல் 13 கடல் மைல் வேகத்தில் பயணித்துக்கொண்டிருந்தது.

தமது பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தல் நிலவுவதாக தெரிவித்து சீனாவின் இந்த கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு பயணிப்பதை இந்தியா கடுமையாக எதிர்த்ததுடன் இந்த கப்பலின் வருகையை தாமதப்படுத்துமாறு நேற்று வௌிவிவகார அமைச்சு சீனாவிற்கு அறிவித்திருந்தது.

இந்த கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தரவுள்ளதாக சீனா ஜூன் 28 ஆம் திகதி அறிவித்ததுடன், ஜூலை 12 ஆம் திகதி வௌிவிவகார அமைச்சு அனுமதி வழங்கியிருந்தது. அதன்படி, ஜூலை 14 ஆம் திகதி இந்த கப்பல் அங்கிருந்து புறப்பட்டுள்ளது.

இதேவேளை, ஏவுகணை கண்காணிப்புகளை மேற்கொள்ள முடியுமான சீனாவின் உற்பத்தியான பாகிஸ்தானின் யுத்த கப்பல் ஒன்றும் 12 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது.

PNS Taimur என்ற இந்த யுத்த கப்பல் தனது கன்னிப் பயணத்தில் ஈடுபட்டுள்ள நிலையிலேயே கொழும்பிற்கு வரவுள்ளது.

கம்போடியா மற்றும் மலேசியாவிற்கு அண்மித்த பகுதியில் யுத்த பயிற்சிகளில் ஈடுபட்ட பின்னரே இந்த கப்பல் வருகைதரவுள்ளது.

பாகிஸ்தானின் கப்பல் இந்தியாவிற்கு மிக அண்மித்த நாடான பங்களாதேஷின் சிட்டகாங் துறைமுகத்திற்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி கோரியிருந்த போதிலும் அவர்கள் அதற்கு அனுமதி வழங்கியிருக்கவில்லை.

பங்களாதேஷ் பிரதமர் சேக் ஹசீனாவின் தந்தை பாகிஸ்தானின் உதவியுடன் செயற்படுத்தப்பட்ட குழு ஒன்றினால் 1975 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொலை செய்யப்பட்டமையே பங்களாதேஷ் இதனை நிராகரித்தமைக்கான காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆகஸ்ட் மாதம் முழுவதும் அங்கு துக்க மாதமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

சீனாவின் அதி தொழில்நுட்ப ஆய்வு மற்றும் கண்காணிப்புக் கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கும் சீனாவின் உற்பத்தியான பாகிஸ்தானின் யுத்த கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கும் ஒரே நேரத்தில் வந்தடையவுள்ளது.

இலங்கையின் பூகோள அமைவிடம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. எனினும், நாட்டை நிர்வகித்தவர்கள் எடுத்த தவறான தீர்மானங்கள் காரணமாக இன்று நாடு நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

காலத்திற்கு காலம் எடுத்த சந்தர்ப்பவாத தவறான தீர்மானங்கள் காரணமாக உலகில் அரசியலில் பலம் பொருந்திய இரண்டு நாடுகளுக்கு இடையில் சிக்கியுள்ளது.

StAR திட்டத்தை ஆரம்பிக்குமாறு மனித உரிமைகள் கண்காணிப்பகம் இலங்கை அரசிடம் கோரிக்கை

திருடப்பட்ட சொத்துகளை மீண்டும் பெற்றுக்கொள்வதற்கான (Stolen Asset Recovery – StAR) திட்டத்தை ஆரம்பிக்குமாறு மனித உரிமைகள் கண்காணிப்பகம் இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளது.

மோசடி மூலம் பெறப்பட்ட பணத்தை தேடுவதற்கான சர்வதேச முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு உலக வங்கி மற்றும் ஐக்கிய நாடுகளின் கூட்டுடன் இலங்கை இணைய வேண்டும் என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தின் அடிப்படையில், அவ்வாறு செயற்படுவதற்கு முன்நிற்க வேண்டுமென நியூயோர்க்கை தலைமையகமாகக் கொண்ட சர்வதேச மனித உரிமை அமைப்புகளில் ஒன்றான மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கத்திற்கு ஆறு யோசனைகளை அந்த அமைப்பு முன்வைத்துள்ளது.

அனைத்து இலங்கையர்களினதும் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க தமது நிர்வாகம் செயற்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளிக்க வேண்டும் எனவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized

அவசரகால சட்டம் முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்படுகின்றமைக்கு ஐ.நா அதிகாரிகள் கண்டனம்

இலங்கையில் ஆர்ப்பாட்டங்களை ஒடுக்குவதற்காக அவசரகால சட்டத்தை பயன்படுத்துகின்றமைக்கு ஐக்கிய நாடுகளின் மனித உரிமை தொடர்பான அதிகாரிகள் கண்டனம் வௌியிட்டுள்ளனர்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை இன்று வௌியிட்டுள்ள ஒன்றிணைந்த அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அறவழி போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்கும் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மக்களின் துன்பங்களை வௌிப்படுத்துவதை தடுப்பதற்கும் இலங்கையிலுள்ள அதிகாரிகளால் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 2 ஆம் திகதி அவசரகால சட்டம் மீள அமுல்படுத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

ஜூலை 15 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நாட்டை விட்டு வௌியேறி பதவியை இராஜிநாமா செய்ததுடன், அதற்காக நாடு முழுவதும் பல மாதங்களாக பாரிய ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதை நினைவுகூர்ந்துள்ள மனித உரிமை தொடர்பாக செயற்படும் குழுவினர், தொடர்ந்து வந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 17 ஜூலை 2022 அன்று போராடுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கையை எடுப்பதற்காக அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

அன்று முதல் இலங்கை பாராளுமன்றம் 2022 ஜூலை 27 ஆம் திகதி மேலும் ஒரு மாதத்திற்கு தற்போதைய அவசரகால சட்டத்தை நீடிக்கவும் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பிக்கவும் இராணுவத்திற்கு தேவையான அதிகாரங்களை வழங்கவும் தீர்மானித்ததாக ஐக்கிய நாடுகளின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தின் அதிகாரம் இன்றி போராட்டக்காரர்ளைத் தடுத்து வைக்கவும் தனியார் சொத்துகளை சோதனை செய்யவும் இதன் மூலம் வழியேற்படுத்தப்பட்டுள்ளதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அவசர கால சட்டம் முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்படுகின்றமை தொடர்பில் பல சந்தர்ப்பங்களில் இலங்கை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட போதிலும் அது பலனளிக்கவில்லை என மனித உரிமை தொடர்பாக செயற்படும் குழுவினரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமை மற்றும் கருத்து சுதந்திரம் மீறப்பட்டுள்ளமை கண்டிக்கத்தக்கது எனவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சர்வதேச சட்டத்தின் கீழ் அவசரகால சட்டத்தை பயன்படுத்துகின்றமை தொடர்பிலான கரிசனையினையும் மனித உரிமை தொடர்பில் செயலாற்றும் குழுவினர் கருத்தில் கொண்டுள்ளனர்.

சிவில் செயற்பாட்டாளர்கள் , ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் அமைதி வழி போராட்டப் பின்னணியில் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் அதற்காக அவர்கள் குற்றவியல் பொறுப்புக்கூறலை எதிர்கொள்ளக்கூடாது எனவும் அவர்கள் அரசாங்கத்திற்கு தமது கரிசனையை வௌியிட்டுள்ளனர்.

அமைதியாக ஒன்று கூடுவதற்கும் சங்கங்களின் சுதந்திரத்திற்கான உரிமைகளுக்காகவும் செயற்படும் விசேட அறிக்கையாளர் கிளமென்ட் நியோல்டெசி வில்லே, வௌிநாட்டு கடன்கள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான சுயாதீன நிபுணர் அத்திய வாரிஸ்,
நீதி, சமத்துவம், இழப்பீடுகளை வழங்குதல், மீள நிகழாமையை உறுதிப்படுத்தி மேம்படுத்தல் தொடர்பான விசேட அறிக்கையாளர் பேபியன் செல்வியோலி, அபிவிருத்திக்கான உரிமை தொடர்பான விசேட அறிக்கையாளர் சாத் அல்பாராகி, ஜனநாயகம் மற்றும் சமத்துவத்திற்கான சர்வதேச திட்டத்தை ஊக்குவிப்பது தொடர்பான சுயாதீன விசேட நிபுணரான லிவிங்ஸ்டன் சேவன்யான் ஆகியோர் இந்த அறிக்கையை வௌியிட்டுள்ளனர்.

இதனைத் தவிர உணவு தொடர்பான உரிமைக்கான விசேட செய்தியாளர் மைக்கல் பெக்ரி, மிரியம் எஸ்டிராடோ கெஸ்டிலோ,
மும்பா மலீலா, எலீனா ஸ்டேனர்டே பிரியா கோபாலன், மத்தியூ கிளட், பிரான்சிஸ் கொக்கலிசே, கருத்துச் சுதந்திரம் தொடர்பான விசேட அறிக்கையாளர் அய்ரின் கன்சா மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு நிலை தொடர்பான விசேட அறிக்கையாளர் மேரி லாலர் ஆகியோர் இந்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.

Posted in Uncategorized

இறுதி நேரத்தில் ஜனாதிபதியுடனான சந்திப்பை நிராகரித்தது ஜே.வி.பி

சர்வகட்சி அரசாங்கம் தொடர்பான கலந்துரையாடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் விடுக்கப்பட்டிருந்த அழைப்பினை நிராகரிப்பதாகவும் , ஜனாதிபதியுடன் சந்திப்பில் ஈடுபடப்போவதில்லை என்றும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) இறுதி நேரத்தில் அறிவித்தது.

இன்று செவ்வாய்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் , ஜே.வி.பி. உறுப்பினர்களுக்குமிடையில் சர்வகட்சி அரசாங்கம் குறித்த கலந்துரையாடல் இடம்பெறவிருந்தது.

சர்வகட்சி அரசாங்கத்தில் தாம் பங்கேற்கப் போவதில்லை என்பதையும் , சர்கட்சி அரசாங்கம் குறித்த தமது யோசனைகளையும் முன்வைப்பதற்காகவும் ஜனாதிபதியுடனான சந்திப்பில் கலந்துகொள்வோம் என்று ஜே.வி.பி.யின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அறிவித்திருந்தார்.

எவ்வாறிருப்பினும் சந்திப்பில் யார் கலந்து கொள்வார்கள் என்பது குறித்து தீர்மானிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். எனினும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க டுவிட்டர் பதிவொன்றின் மூலம் தாம் ஜனாதிபதியுடனான கலந்துரையாடலில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

பிமல் ரத்நாயக்க தனது டுவிட்டர் பதிவில் , ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான கலந்துரையாடலில் ஜே.வி.பி. பங்கேற்காது. ரணில் விக்கிரமசிங்க – மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் முறையற்றது என்பதை ஜே.வி.பி. ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்த முறைகேடான ஆட்சியை தோற்கடித்து மக்களின் இறையாண்மையை நிலைநாட்டுவதே தற்போதுள்ள பிரச்சினைகளுக்க ஒரே தீர்வு’ என்று குறிப்பிட்டுள்ளார்

Posted in Uncategorized

நல்லூரில் 1000 ரூபாய் போலி நாணயத்தாள்கள்!

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய சூழலில் உள்ள கடைகளில் போலி ஆயிரம் ரூபாய் நாணயத்தாள்களினை வழங்கி பொருள்கள் வாங்கிய ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து 2 ஆயிரம் ரூபாய் போலி நாணயத்தாள்களுடம் 3 கடைகளில் வழங்கிய 3 ஆயிரம் ரூபாய் நாணயத்தாள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் திருவிழா இடம்பெற்று வருகிறது.

ஆலய திருவிழாவின் முதல் மூன்று நாள்களில் மூன்று வெவ்வேறு கடைகளுக்குச் சென்ற ஒருவர், போலி ஆயிரம் ரூபாய் நாணயத்தாள்களை வழங்கி கச்சான், பழங்களை 200 ரூபாய்க்குள் வாங்கி மிகுதி பணத்தை பெற்றுச் சென்றுள்ளார்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டன.

அவை தொடர்பில் யாழ்ப்பாணம் மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் தலைமை பொலிஸ் பரிசோதகர் நிகால் பிரான்சிஸ் தலைமையிலாற மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

நல்லூரடியைச் சேர்ந்த 27 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் விசாரணைகளின் பின் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார்.

சந்தேக நபருக்கு போலி நாணயத்தாள்களை அச்சிட்டு வழங்கியவர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் கூறினர்.

Posted in Uncategorized

இலங்கை குறித்து இந்தியாவும் அமெரிக்காவும் நேரடிப்பேச்சு!

இலங்கைத்தீவில் அண்மையில் ஏற்படுத்தப்பட்ட ஆட்சிமாற்றத்தின் இரண்டு முக்கிய பங்காளர்களாக கருதப்படும் இந்தியாவும் அமெரிக்காவும் கம்போடியாவில் இலங்கையின் சமகால நிலவரங்கள் குறித்து இன்று பேச்சுக்களை நடத்தியுள்ளன.

கம்போடியாவில் இடம்பெற்றுவரும் ஆசியான் நாடுகளின் அமைச்சர்களின் சந்திப்பின் பின்னணியில் அமெரிக்க ராஜாங்க செயலாளர் அன்ரனி பிளிங்கனும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் இன்று பனோம் பென்னில் இந்தப்பேச்சுக்களை நடத்தியுள்ளனர்.

இலங்கை, மற்றும் மியான்மார் ஆகிய சீன ஆதரவு நாடுகளில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் முக்கியமாக சவால்கள் இருப்பதை ஏற்றுக்கொண்ட இருவரும் இந்த விடயங்களை குறித்து விரிவாக பேசுவதற்காக விரைவில் தனித்துவமான சந்திப்பு ஒன்றை நடத்தவும் உடன்பட்டுள்ளனர்.

சீனாவின் உளவுக்கப்பல் இலங்கைக்கு வருவது குறித்து இந்தியா ஏற்கனவே ஆட்சேபம் தெரிவித்துள்ள நிலையில், இலங்கை குறித்து பேச வேண்டிய விடயங்கள் இருப்பதாக அன்ரனி பிளிங்கன் குறிப்பிட்டுள்ளார்

நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடாது இருக்க வேண்டும்- சீனத் தூதுவருடனான சந்திப்பையடுத்து ரணில் ட்வீட்

க்கிய நாடுகள் சபையின் கொள்கைகளுக்கும், ஒரே சீனா என்ற கொள்கைக்கும் இலங்கை எப்போதும் அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சீனத் தூதுவர் Qi Zhenghong உடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தாக அவர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாடுகளுக்கிடையில் தற்போது நிலவிவரும் பதற்றமான சூழ்நிலையை அதிகரிப்பதற்கு காரணமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருப்பதற்கு நாடுகள் கவனம் செலுத்த வேண்டுமென ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஒரு நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடாது பரஸ்பர மரியாதையை பேணுவதற்கு அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான மக்களின் உரிமைக்கு மதிப்பளிக்கவும் – சர்வதேச மன்னிப்புச் சபை !

பொது இடங்களில் அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான மக்களின் உரிமைக்கு மதிப்பளிக்குமாறும், அமைதியான எதிர்ப்பாளர்களைக் கலைப்பதற்கு அச்சுறுத்தல் அல்லது பலத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் இலங்கை அதிகாரிகளுக்கு சர்வதேச மன்னிப்புச் சபை கோரியுள்ளது.

ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ள குறித்த அமைப்பு, போராட்டத் தளமான ‘கோட்டா கோ கம’ வை காலி செய்யுமாறு பொலிஸாரின் அறிவிப்பு தொடர்பில் கவலை தெரிவித்துள்ளது.

போராட்டக்காரர்கள் மற்றும் போராட்ட ஏற்பாட்டாளர்களின் தொடர்ச்சியான கைதுகள் மூலம் அரசாங்கத்திற்கு எதிரான குரல்களின் ஒடுக்குமுறையின் தீவிரம் குறித்து எச்சரிக்கையை வெளிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமையைப் பயன்படுத்தியதற்காக மாத்திரமே தடுத்து வைக்கப்பட்டுள்ள போராட்டக்காரர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை இலங்கை அதிகாரிகள் உடனடியாக விடுவித்து கைவிட வேண்டும் என மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

கருத்துச் சுதந்திரம் மற்றும் அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமைகளை மதிக்கவும், பாதுகாக்கவும், ஊக்குவிக்கவும் மற்றும் நிறைவேற்றவும், மக்கள் தங்கள் மனித உரிமைகளை சுதந்திரமாகப் பயன்படுத்த அனுமதிக்குமாறு அந்த அமைப்பு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

Posted in Uncategorized