அவுஸ்திரேலியாவிடம் இருந்து 50 மில்லியன் டொலர்கள்

இலங்கைக்கு 50 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் நிதி உதவி வழங்கவுள்ளதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

அவசரகால உணவு மற்றும் மருந்துப் பாவனைக்கான குறித்த நிதித்தொகை வழங்கப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

உணவு, மருந்து மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இலங்கை தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

குறித்த நிதி உதவியில், 22 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் உலக உணவுத் திட்டத்திற்காகவும் மூன்று மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் மக்களின் அன்றாட உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய செலவிடப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

2022/23 க்குள் இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ஆதரவாக மேலும் 23 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

Posted in Uncategorized

ஜனாதிபதி செயலகம், நிதி அமைச்சின் நுழைவாயில்கள் மறிப்பு; கைதான 21 பேருக்கு பிணை

ஜனாதிபதி செயலகம் மற்றும் நிதி அமைச்சின் லோட்டஸ் வீதியிலுள்ள நுழைவாயில்களை மறித்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 21 பேருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.

தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் 21 பேரும் ஆஜர்ப்படுத்தப்பட்ட போதே அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் தேரர் ஒருவரும் 4 பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நிதி அமைச்சு மற்றும் திறைசேரிக்கு பயன்படுத்தப்படும் இரண்டு நுழைவாயில்களை
ஆர்ப்பாட்டகாரர்கள் மறித்துள்ளதுடன், அந்த நுழைவாயில்களுக்கு முன்பாக சிறிய கூடாரங்களை
அமைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையால், அத்தியாவசிய சேவைகளுக்கு சென்ற அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவிற்கும் நிதி அமைச்சின் செயலாளருக்கும்
இடையில் நடத்தப்படவிருந்த கலந்துரையாடலுக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளதாக பொலிஸ்
ஊடகப்பேச்சாளர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தின் பிரதான நுழைவாயிலை மறித்து கோட்டாகோகம போராட்டக்களம்
ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இன்று 73 ஆவது நாளாகவும் ஆர்ப்பாட்டம் வலுப்பெற்றுள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களால், ஜனாதிபதி செயலகத்தின் ஏனைய இரண்டு
நுழைவாயில்களும் இன்று அதிகாலை மறிக்கப்பட்டன.

இதனால் ஜனாதிபதி செயலகத்திற்கான மூன்று நுழைவாயில்களும் மூடப்பட்டுள்ளதுடன்,
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிஸார் கைது செய்தனர்.

இதன் பின்னர் குறித்த இடத்தில் இலங்கை இராணுவத்தின் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு
கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு இந்தியா கடனுதவி

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்காக இந்தியா 45 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்கியுள்ளது.

காங்கேசன்துறை துறைமுகத்தை துரிதமாக அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

துறைமுக அபிவிருத்தியின் பின்னர் இந்தியாவில் இருந்து நேரடியாக சரக்கு போக்குவரத்து நடவடிக்கைகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட விவகாரம் : சாட்சியாளரான புலிகள் இயக்கத்தின் முன்னாள் புலனாய்வாளருக்கு திட்டமிட்ட கும்பல் அழுத்தம்

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை கடத்திச் சென்று காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பிலான வழக்கின் சாட்சியாளர்களுக்கு திட்டமிட்ட கும்பல் ஒன்றின் ஊடாக அழுத்தம் பிரயோகிக்கப்படுவது குறித்து தகவல்கள் உள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் கொழும்பு, மூவரடங்கிய விஷேட மேல் நீதிமன்ற அமர்வுக்கு அறிவித்துள்ளது.

இந்த வழக்கில் 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை சாட்சியமளித்த, தமிழீழ விடுதலை புலிகளின் புலனாய்வு பிரிவில் கடமையாற்றியவரும் பின்னர் இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவுடன் இணைந்து கடமையாற்றியவருமான புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினரான முரளி எனும் சுமதிபால திருக்குமார் எனும் முறைப்பாட்டாளர் தரப்பு சாட்சியாளருக்கும் அவ்வழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் நியாயமான சந்தேகம் இருப்பதால் அது குறித்து விசாரணை ஒன்று அவசியம் என வழக்கை நெறிப்படுத்தும் சட்ட மா அதிபர் திணைக்கள குழுவுக்கு தலைமை தாங்கும் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் நீதிபதிகளுக்கு அறிவித்தார்.

அதன்படி, எக்னெலிகொட விவகாரத்தில் சாட்சியாளர்களுக்கு திட்டமிட்ட கும்பல் ஒன்றூடாக, நிலைப்பாட்டை மாற்றி சாட்சியம் அளிக்க அழுத்தம் பிரயோகிக்கப்படுகிறதா என்பது குறித்து மிக விரைவான விசாரணைகளை முன்னெடுத்து மன்றுக்கு அடுத்த தவணைக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் சி.ஐ.டி.யின் சமூக கொள்ளை தொடர்பிலான விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சுதத் குமாரவுக்கு உத்தரவிட்டது.

இந் நிலையில் குறித்த வழக்கில் பிரதிவாதிகளான 9 இராணுவ புலனாய்வாளர்களின் பிணையும் இரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், கடும் எச்சரிக்கையுடன் மீண்டும் முன்பிருந்த நிபந்தனைகலின் கீழ் பிணையில் செல்ல கொழும்பு, மூவரடங்கிய விஷேட மேல் நீதிமன்ற அமர்வு அவர்களுக்கு அனுமதியளித்தது. மீண்டும் சாட்சியாளர்களுக்கு அச்சுறுத்தல் அல்லது அழுத்தம் கொடுப்பது தொடர்பில் தெரியவந்தால் பிணை வழக்கு முடியும் வரை ரத்து செய்யப்படும் என நீதிபதிகள் எச்சரித்தனர்.

அதன்படி, எக்னெலிகொட விவகாரத்தின் பிரதிவாதிகளான கிரித்தலை இராணுவ புலனாய் முகாமின் கட்டளைத் தளபதியாக இருந்த லெப்டினன் கேர்ணல் சம்மி அர்ஜுன குமாரரத்ன, ஸ்டாப் சார்ஜன் வடுகெதர வினிபிரியந்த டிலஞ்சன் உபசேனா எனபப்டும் சுரேஷ், ஸ்டாப் சார்ஜன் ஆர்.எம்.பி.கே. ராஜபக்ஷ எனும் நாதன், ஸ்டாப் சார்ஜன் செனவிரத்ன முதியன்சலாகே ரவீந்ர ரூபசேன எனபப்டும் ரஞ்சி, சமிந்த குமார அபேரத்ன, எஸ்.எம். கனிஷ்க குமார அபேரத்ன, ஐய்யா சாமி பாலசுப்ரமணியம், கி.ஜி. தரங்க பிரசாத் கமகே, எரந்த பீரிஸ் ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

அவ்வழக்கு நீதிபதி சஞ்ஜீவ மொராயஸ் தலைமையில் மகேன் வீரமன் மற்றும் தமித் தொட்டவத்த ஆகியோர் அடங்கிய விஷேட மேல் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வின் முன்னால் விஷேட மேல் நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் விசாரணைக்கு வந்தது. இதன்போதே இதற்கான உத்தர்வு பிறப்பிக்கப்பட்டது.

எனினும் நேற்று முன்தினம் மன்றில் சாட்சியமளித்த, அரச தரப்பின் 4 ஆவது சாட்சியாளரான முரளி எனும் சுமதிபால திருக்குமார், முன்னதாக சி.ஐ.டி. க்கு அளித்த வாக்கு மூலம் மற்றும் ஹோமாகம நீதிவானுக்கு குற்றவியல் சட்டத்தின் 127 ஆவது அத்தியாயம் பிரகாரம் அளித்த இரகசிய வாக்கு மூலத்துக்கு மாற்றமான நிலைப்பாட்டை சாட்சியாக வழங்கிய நிலையில், அவரை அரச தரப்புக்கு எதிரான சாட்சியாளராக சட்ட மா அதிபர் தரப்பு பெயரிட்டது.

அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நடவடிக்கைஎடுக்க எதிர்ப்பார்ப்பதாக சட்ட மா அதிபர் சார்பில் இந்த விவகாரத்தை நெறிப்படுத்தும் குழுவில் உள்ளடங்கும் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சுதர்ஷன டி சில்வா நீதிமன்றுக்கு அறிவித்தார். ஏற்கனவே 3 ஆம் சாட்சியாளரான ரண்பண்டா என்பவர் தொடர்பிலும் அதே நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.

இந் நிலையிலேயே, 4 ஆம் சாட்சியாளரின் மேலதிக சாட்சி நெறிப்படுத்தல்கள் மற்றும் சாட்சிகள் கட்டளை சட்டத்தின் 154 ஆவது அத்தியாயத்துக்கு அமைவான குறுக்கு விசாரணைகள் நிறைவுறும் வரை அவரை விளக்கமறியலில் வைக்க வேண்டும் என மன்றில் வாதங்கள் முன் வைக்கப்பட்டன.

எனினும் குறித்த சாட்சியாளரான சுமதிபால திருக்குமார் சார்பில் மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சானக ரணசிங்க, அவ்வாறு அவரை விளக்கமறியலில் வைப்பது நியாயமற்றது என வாதிட்டார்.

எனினும் சட்ட மா அதிபர் சார்பில் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ், பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சுதர்ஷன டி சில்வா, சிரேஷ்ட அரச சட்டவாதி வசந்த பெரேரா ஆகியோர் முன் வைத்த விடயங்களை ஆராய்ந்த நீதிபதிகள் குழாம், சாட்சியாளரான சுமதிபால திருக்குமாரை அடுத்த தவணை வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டு வழக்கை எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தது.

வழக்கில் பிரதிவாதிகளுக்காக ஜனாதிபதி சட்டத்தரணிகளான அனில் சில்வா, அனுஜ பிரேமரத்ன, அனுர மெத்தேகொட உள்ளிட்டோர் ஆஜராகினர். பாதிக்கப்பட்ட தரப்பினருக்காக சிரேஷ்ட சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும ஆஜரானார்.

2010 ஜனவரி 24 மற்றும் 27 ஆகிய காலப்பகுதிக்குள், கிரிதலே, கொஸ்வத்த மற்றும் பத்தரமுல்ல ஆகிய பகுதிகளில், தம்முடன் தொடர்பில்லாத நபர்களுடன் இணைந்து பிரகீத் எக்னெலிகொடவை இரகசியமாக சிறைவைக்கும் நோக்கத்தில் கடத்திச் சென்றமை, அவருக்கு மரணத்தை ஏற்படுத்தியமை தொடர்பில், பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கு முனையம் இந்திய அதானி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படாது என்கின்றது அரசாங்கம்

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்குவதாக வெளியான குற்றச்சாட்டுக்களை அரசாங்கம் மறுத்துள்ளது.

இவ்வாறு துறைமுக தொழிற்சங்கங்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு பொய்யானது என துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

கிழக்கு முனையத்தை துறைமுக அதிகார சபையின் செலவில் அதற்கு சொந்தமான முனையமாக மாற்றுவதற்கு ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

கொழும்பு துறைமுகத்தின் முனையத்தில் உள்ள கிரேன்களைப் பாதுகாப்பதற்கான ஒப்பந்தத்திற்கு 270 மில்லியன் டொலர்கள் தேவை என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஒன்றரை ஆண்டுகளில் கிரேன்கள் கட்டி முடிக்கப்படும் என்றும் மேலும் 39 மில்லியன் டொலர்கள் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்ட தாமதத்திற்கு முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவே பொறுப்பு என நிமல் சிறிபால டி சில்வா குற்றம் சாட்டினார்.

சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையைப் பெறுவதற்கும் கடனை மறுசீரமைப்பதற்கும் சரவதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுமாறு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் தான் தெரிவித்ததாகவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

Posted in Uncategorized

கோட்டா கோகமவிலிருந்து யாழ் பொதுநூலகத்திற்கு நூல்கள் அன்பளிப்பு!! நூலகம் எரிக்கப்பட்டதையும் நினைவு கூர்ந்தனர்

கோட்டாகோகம நூலகத்தில் இருந்து யாழ்ப்பாண பொதுசன நூலகத்திற்கு இன்றைய தினம் நூல்கள் அன்பளிப்பு செய்யப்பட்டது.

யாழ் பொதுசன நூலகத்துக்கு மதியம் ஒரு மணியளவில் வந்த கோட்டாகம போராட்டக்குழுவினர் ஒரு தொகுதி நூல்களை யாழ்ப்பாண பொதுசன நூலக நிர்வாகத்தினரிடம் கையளித்தனர்.

அத்துடன் யாழ் பொதுசன நூலகம் எரிக்கப்பட்டமையை நினைவு கூறும் வகையில் நூலக வாயிலில் மெழுகுவர்த்தி ஏந்தி நினைவு கூரலில் ஈடுபட்டனர்.

கோட்டாகம போராட்டக்குழுவினர் யாழ் பொதுசன நூலகத்திற்கும் மேலும் யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகத்திற்கும் கிளிநொச்சியில் இருக்கின்ற மாணவர்களுக்கும் நூல்களை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

கோட்டா பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்! கோட்டா கோகம போராட்ட குழுவினர் யாழில் தெரிவிப்பு

நாட்டில் பொருளாதார பிரச்சனையும் வாழ்வாதாரத்துக்கான தேவைகருதிய போராட்டங்களும் இடம்பெற்று வருவதால் கோட்டாகம போராட்டம் தொய்வடைந்து காணப்படுகிறது. ஆனாலும் கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகும் வரை எமது போராட்டம் ஓயாது என கோட்டாகம போராட்டகாரர்கள் தெரிவித்தனர்.

யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேய கோட்டாகம போராட்டகாரர்கள் இதனை தெரிவித்தனர்.

மேலும் தெரிவிக்கையில், கோட்டாகம நூலகத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு நூல்களை கொண்டு வந்திருக்கின்றோம்.

நாட்டை ஆட்சி செய்த மோசமான ஆட்சியாளர்களின் செயற்பாடுகள் காரணமாகவும் தவறான வழிநடத்தல் காரணமாகவும் எமது நாட்டிற்கு இந்த நிலைமை ஏற்பட்டது.

தவறான ஆட்சியால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதுடன் பாடசாலை மாணவர்களும் பல்கலைக்கழக மாணவர்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்

இலங்கையில் இரண்டு வருடங்களாக பாடசாலை மாணவர்கள் கல்வி கற்க முடியாத நிலைமை காணப்படுகிறது.

எமது கோட்டாகம நூலகத்திற்கு கிடைத்த நூல்களை நாம் நாடளாவிய ரீதியில் கஷ்டப்படுகிற மாணவர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானித்தோம்.அந்த வகையில் மகிந்த ராஜபக்சவின் வீட்டுக்கு அருகில் உள்ள மிகவும் கஷ்டப்பட்ட ஒரு பகுதியில் ஒரு நூல்களை வழங்கினோம். இரண்டாவதாக நாம் யாழ்ப்பாணத்துக்கு வந்திருக்கின்றோம்

யாழ்ப்பாணப் பொதுசன நூலகம் எரிக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது. அப்பொழுது நாம் பிறக்கவும் இல்லை. எங்கள் கண்முன்னே நாங்கள் அமைத்த போராட்ட களத்தை நெருப்பில் எரித்தார்கள் அதனை நாம் பார்த்துக் கொண்டிருந்தோம்.

எமது கோட்டாகம நூலகம் எரிக்கப்படுமோ என அஞ்சியிருந்தோம். நூலகத்தை எரிப்பது என்பது சமூகத்தினை வீழ்த்துவதற்கு முக்கியமானதாகும்.

அந்த வகையில் யாழ் பொதுசன நூலகத்திற்கும் யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகத்திற்கும் கிளிநொச்சியில் இருக்கின்ற மாணவர்களுக்கும் நூல்களை வழங்கவிருக்கிறோம். அத்துடன் காலிமுகத்திடல் கோட்டாகமவில் இணைய வழியிலான பாடசாலை ஒன்றை ஆரம்பிக்கவிருக்கின்றோம் என்றனர்.

நல்லூரில் நாளை கவனயீர்ப்புப் போராட்டம்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரியும் நாளை ஞாயிற்றுக்கிழமை(19.6.2022) முற்பகல்-10 மணிக்கு நல்லூர் கைலாசபிள்ளையார் ஆலய முன்றலில் வடக்கு- கிழக்கு சிவில் அமைப்புக்கள், அரசியல் கைதிகளின் உறவுகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இணைந்து கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளனர்.

மேற்படி போராட்டத்தில் அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணையுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

பலாலி – திருச்சி விமான சேவை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானம்

யாழ், பலாலியிலிருந்து இந்தியாவின் திருச்சி வரையிலான விமான சேவை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த விமான சேவையை ஆரம்பிப்பதற்கான ஆலோசனைகளை பிரதமர் ரணில் விக்ரமசிங்க உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதக்க தெரிய வருகிறது.

மேலும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக, பலாலி விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் திருச்சி விமான நிலையம் வரையிலான விமான சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.

இதேவேளை, ; யாழ்ப்பாணம் முதல் பாண்டிச்சேரி வரையிலான பயணிகளுக்கான மற்றும் சரக்குகளுக்கான கப்பல் போக்குவரத்து சேவையை விரைவில் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது.

அரசாங்கம் காங்கேசன்துறையூடாக கப்பல் போக்குவரத்துக்கு சேவையை ஆரம்பிக்க அனுமதித்தால் ஒரே இரவில் பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம் என கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

முல்லைத்தீவு விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்ப நிலை – இராணுவம் துப்பாக்கி சூடு !

முல்லைத்தீவில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பதட்டம்-படையினர் துப்பாக்கி சூடு!
முல்லைத்தீவில் விசுவமடு பலநோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் வழங்கும்நடவடிக்கையின் போது அமைதியின்மை ஏற்பட்டுள்ளது

இதனை தொடர்ந்து அங்கு கூடிய இளைஞர்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் முறுகல் நிலைஏற்பட்டுள்ளது.

இந்த சம்பத்தினை தொடர்ந்து இரு தரப்பிற்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளநிலையில் அங்கு பதட்டமான ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.இளைஞர்கள் மீது அங்கு கடமையில் நின்ற இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதாகவும் இளைஞர்கள் இராணுவத்தினர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார்கள் இரு தரப்பிற்கும் இடையில் கைகலப்பாக மாறியதில் இராணுவத்தினரின் வாகனம் ஒன்றின் கண்ணாடி உடைக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் தாக்குதலில் இராணுவத்தினர் ஒருவர் காயமடைந்துள்ளதுடன் சம்பவத்தின் போது பொதுமகன்ஒருவரும் காயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன்போது ஆத்திரமடைந்த இளைஞர்கள் அங்குள்ள இராணுவ காவலரண் மீது கண்ணாடி போத்தில்கள்,கற்கள் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.

இந்த சம்பவத்தினை தொடர்ந்து நிலமையினை கட்டுக்குள் கொண்டுவர இராணுவத்தினர் வானத்தினை நோக்கி துப்பாக்கிசூடு நடத்தி கட்டுக்குள் கொண்டுவந்துள்ளார்கள்.

இரவு சம்பவ இடத்திற்கு விரைந்த புதுக்குடியிருப்பு பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் சிலமணிநேரங்கள் பரந்தன்- புதுக்குடியிருப்பு வீதியில் விசுவமடு பகுதியில் எவரும் பயணிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும அங்கு அதிகளவு இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன
இந்த சம்பவம் தொடர்பில் இருவரை பொலீசார் கைதுசெய்துள்ளார்கள்இதேவேளை முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் முரண்பாடான பதட்ட நிலை ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து அங்கு இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளார்.

முள்ளியவளையில் அமைந்துள்ள லங்கா ஜ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொது பயன்பாட்டிற்கு எரிபொருள் இல்லை என இன்று எவருக்கும் வழங்கப்படாத நிலையில் மாலை வேளை தனியார் பேருந்து ஒன்றுக்கு எரிபொருள் வழங்கியதால் அங்கு கூடிநின்ற வாகன சாரதிகளுக்கும் எரிபொருள் நிரப்பு நிலையத்தினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தினை தொடர்ந்து பொலீசார் அங்கு வரவளைக்கப்பட்டார்கள்.அரசாங்க அதிபரின் அனுமதியுடன் போக்குவரத்து சேவைக்காக வந்த பேருந்துக்கு எரிபொருள் வழங்கப்பட்டுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் அதற்கான அனுமதி கடிதத்தினை பொலீசாரிடம் காட்டியுள்ளார்கள்.

வீதியில் நின்ற சாரதி ஒருவர் தனது டிப்பரினை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் கொண்டுவந்து தனக்கும் எரிபொருள் வழங்குமாறு கூறியதை தொடர்ந்து அங்கு பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது.வெளியில் நின்ற சாரதிகள் எரிபொருள் நிரப்பிய தனியார் பேருந்தினை எடுக்கவிடாது சூழ்ந்துகொண்டுள்ளார்கள்.

இன்னிலையில் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு இராணுவத்தினர் மேலதிகமாக கொண்டுவரப்பட்டு குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் வீதியில் நின்ற சாரதிகள் தமது வாகனங்களுக்கும் டீசல் வழங்கவேண்டும் என்று கோரி தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

இராணுவத்தினரின் பிரசன்னத்தினை தொடர்ந்து எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் சென்ற டிப்பர் ஒன்றிற்கு மாத்திரம் எரிபொருள் வழங்க வெளியில் நின்ற ஏனைய சாரதிகளின் கோரிக்கைக்கு அமைய டீசல்வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் நின்ற பேருந்தினை வெளியில் எடுத்துள்ளார்கள்.

முரண்பாட்டினை ஏற்படுத்திய சாரதிகளும் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளார்கள் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு டீசல் கொண்டுவரப்பட்டுள்ளதுடன் அது அத்தியஅவசிய தேவைக்காகவும் விவசாயிகளுக்கு வழங்குவதற்காகவும் அரச அதிகாரிகளின் அனுமதியுடன் கொண்டுவரப்பட்டுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளார்கள்.