50 இலட்சம் பேருக்கு உணவு நெருக்கடியால் நேரடி பாதிப்பு

உணவு நெருக்கடியில் எவரையும் பட்டினியில் வைத்திருக்காமல் இருப்பதே தமது கொள்கை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகத்தில் இன்று (17) காலை நடைபெற்ற உணவுப் பாதுகாப்பு தொடர்பான குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உணவு நெருக்கடியானது எதிர்வரும் காலங்களில் நாட்டில் 4 மில்லியனிலிருந்து 5 மில்லியன் மக்களை நேரடியாகப் பாதிக்கக்கூடிய போதிலும் அதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.

குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மீது அதிக கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்தினார்.

உணவு நெருக்கடியை வெற்றிகரமாகக் கையாள்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தலைமையில் குழுவொன்றை நியமிக்குமாறும் அதில் அமைச்சர் நிமல் சிறிபால, கலாநிதி ஹர்ஷ டி சில்வா மற்றும் ஜனாதிபதி அலுவலகம், நிதி அமைச்சு, விவசாய அமைச்சு, இராணுவம், தனியார் பிரிவு உள்ளிட்ட குறித்த நிறுவனங்களின் பிரதிநிதிகளை உள்ளடக்குமாறும் பிரதமர் பணிப்புரை விடுத்தார்.

இந்தக் குழுவினால் தயாரிக்கப்பட்ட திட்டத்தை இரண்டு வாரங்களுக்குள் தனக்கு பெற்றுத் தருமாறு பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை வரலாற்றில் மிக நீண்ட எரிபொருள் வரிசை!

வரலாற்றில் மிக நீண்ட எரிபொருள் வரிசையை இலங்கை இன்று (வெள்ளிக்கிழமை) எதிர்கொண்டுள்ளது.

SUTUஇன் ஊடகப் பேச்சாளர் ஆனந்த பாலித, நாட்டில் உள்ள 85 சதவீத எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் தீர்ந்துவிட்டதாக ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்தார்.

ஜூன் 24 ஆம் திகதி எரிபொருள் விலை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் இருப்பதால் லங்கா ஐஓசி நிறுவனமும் எரிபொருளை விநியோகிக்கவில்லை என்று அவர் கூறினார்.

இன்று 50 மெட்ரிக் டன் பெட்ரோல் மட்டுமே வழங்கப்பட்டதென்றும் பாலித கூறினார்.

கோட்டாவுக்கும் ரணிலுக்கும் இடையில் பகைமை அதிகரித்து வருகிறது – மைத்திரி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் ஒரு போட்டி போன்று பகைமை அதிகரித்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அப்போது ஜனாதிபதியாக இருந்த தமக்கும் பிரதமராக இருந்த ரணிலுக்கும் இடையில் இருந்த போட்டியைப் போன்றே இதுவும் உள்ளதாகஅவர் கூறியுள்ளார்.

கட்சி அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இருவருக்குமிடையில் ஒருங்கிணைப்பு, பரஸ்பர புரிந்துணர்வு அல்லது ஒற்றுமை இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறதென்றும் அதனால்தான் கோட்டாபய ராஜபக்ஷ – ரணில் விக்ரமசிங்க ஆட்சி முழுத் தோல்வியடைந்து நாட்டையும் அதன் 22 மில்லியன் மக்களையும் ஆழமற்ற படுகுழிக்குள் இழுத்துச் சென்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளர்.

அரச அதிகாரிகள், தனியார் துறை மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளை தனித்தனியாக கூட்டி ஆலோசனைகளை வழங்குவதை ஜனாதிபதியும் பிரதமரும் தற்போது வழக்கமாக கொண்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சில சமயங்களில் இருவரும் ஒருவரையொருவர் தோற்கடிக்கும் போட்டியில் ஈடுபடுவது போல் தெரிகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

Posted in Uncategorized

யாழ்ப்பாணம் கொழும்பு விசேட புகையிரத சேவை ஆரம்பிக்க நடவடிக்கை!!

தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியினை கருத்திற்கொண்டு யாழ்ப்பாணம் கொழும்பு விசேட புகையிரத சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட உள்ளதாக யாழ்ப்பாண புகையிரத நிலைய பிரதம அதிபர் தி.பிரதீபன் தெரிவித்தார்

இன்று யாழ்ப்பாண புகையிரத நிலையத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், நாளை 17ம் திகதி வெள்ளிக்கிழமையிலிருந்து கல்கிசையில் இருந்து காங்கேசன்துறைக்கு இரவு நகர்சேர் கடுகதி புகையிரதமொன்று சேவையில் ஈடுபட உள்ளது .இது ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் கல்கிசையில் இரவு 10 மணிக்கு புறப்பட்டு அங்கிருந்து வெள்ளவத்தை பம்பலப்பிட்டி ஆகிய புகையிரத நிலையங்களில் நிறுத்தப்பட்டு அம்பலங்கோட பொல்காவலை குருநாகல் அனுராதபுரம் வவுனியா கிளிநொச்சி ஊடாக யாழ்ப்பாணத்தை 5.25க்கு வந்தடைந்து அங்கிருந்து 5.30 க்கு புறப்பட்டு காங்கேசந்துறையை சென்றடையும்

ஞாயிற்றுக்கிழமைகளில் மாத்திரம் காங்கேசன்துறையில் இருந்து இரவு 10 மணிக்கு புறப்பட்டு சுன்னாகம் கோண்டாவில் ஊடாக 10.25க்கு யாழ்ப்பாணத்தை வந்தடைந்து 10.30மணிக்கு யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்டு கிளிநொச்சி வவுனியா அநுராதபுரம் குருநாகல் கொழும்பு கம்பகா மருதானை சென்றடைந்து அங்கிருந்து பம்பலப்பிட்டி வெள்ளவத்தை தெஹிவளையை சென்றடையவுள்ளது.

நகர்சேர் கடுகதிக்குரிய ஒரு வழி கட்டணமாக 2,800 ரூபா அறவிடப்ப்படவுள்ளது. இதற்கான முன்பதிவுகள் யாழ்ப்பாண புகையிரத நிலையத்திலும் ஏனைய முன்பதிவுகளை மேற்கொள்ளக்கூடிய புகையிரத நிலையங்களிலும் மேற்கொள்ளலாம் . இன்றைய காலகட்டத்தில் யாழ்ப்பாண மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இது அமையும் என எதிர்பார்க்கின்றோம் என்றார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க பாகிஸ்தான் உதவி செய்வதாக தெரிவிப்பு

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண இலங்கைக்கு தமது அரசாங்கமும் பூரண ஆதரவை வழங்கும் என பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) உமர் பாரூக் புர்க்கி (Umar Farooq Burki) தெரிவித்துள்ளார்.

இன்று (17) பிற்பகல் கொழும்பு, கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்த போதே உமர் பாரூக் புர்கி இதனைத் தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய மற்றும் பலதரப்பு உறவுகள், அரசியல், வர்த்தகம், கலாசாரம், பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என்று உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டார்.

மனிதாபிமான உதவியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மருந்துகளை இந்நாட்டுக்கு வழங்குதல், பாகிஸ்தானில் உயர் கல்விக்காக இலங்கை மாணவர்களுக்கு புலமைப்பரிசில்களை வழங்கியமை தொடர்பில் பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து ஜனாதிபதி அவர்கள் உயர்ஸ்தானிகரிடம் விளக்கினார்.

தற்போதைய சூழ்நிலையில் இருந்து மீள பாகிஸ்தான் அரசாங்கம் உதவிகளை வழங்கும் என்றும், இலங்கை விரைவில் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு தாம் பிரார்த்திப்பதாகவும் உமர் பாரூக் புர்கி மேலும் தெரிவித்தார்.

Share

Posted in Uncategorized

பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள இறுதி அறிக்கை!

புதிய தேர்தல் முறையொன்றை அறிமுகப்படுத்துவது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட பாரளுமன்ற தெரிவுக்குழுவின் இறுதி அறிக்கை அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று சபைத் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் (15) இடம்பெற்ற பாராளுமன்ற விசேட தெரிவுக் குழு கூட்டத்தின் பின்னர் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த குழுவின் இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக பாரளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல் மற்றும் தேர்தல் கட்டமைப்பில் தேவையான சீர்திருத்தங்களை இனங்கண்டு, அதில் தேவையான திருத்தங்களை மேற்கொள்வதற்காக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் இந்த குழு பல மாதங்களுக்கு முன்னர் நியமிக்கப்பட்டது.

இந்த பாராளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவராக தினேஷ் குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தக் குழு ஏற்கனவே அரசியல் கட்சிகள், சிவில் சமூகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்தும் தகவல்களைப் பெற்றுள்ளது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Posted in Uncategorized

பாடசாலைகளைத் தொடர்ந்து இயக்க முடியாது – இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்

தற்போதுள்ள சூழ்நிலையில் பாடசாலைகளை தொடர்ந்தும் இயக்குவது கேள்விக்குறியாக உள்ளது. இதனை அரசாங்கம் உணராமல் இருப்பது வேதனையாக உள்ளதென இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேய இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில்,

இன்றைய மோசமான நிலைமை இலங்கையில் ஒருபோதும் ஏற்பட்டதில்லை. சகல பொருட்களின் விலைகளும் அதிகரித்தே செல்கின்றன. ஆனாலும் அப்பொருட்களைப் பெறமுடியாமல் உள்ளது. அதன் காரணமாக சகல துறைகளுமே ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பாடசாலை என்பது மாணவரை மையப்படுத்திய நிறுவனமாகும். மாணவர் துயரப்பட்டு பாடசாலைக்கு வந்து கற்கமுடியாது. அவர்களுக்கு கல்வியூட்டும் கல்வியியலாளர்கள் குடும்பங்களோடு இணைந்தவர்கள். அவர்கள் ஏனைய மக்களைப் போன்று பல்வேறு சிரமங்களையும் சுமந்தவர்களாக உள்ளனர். அவை எவற்றையும் பொருட்படுத்தாமல் பணியை தர்மமாகக் கருதி பணியாற்றும் அவர்கள் கடமைக்கே செல்லமுடியாது தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து மார்க்கங்கள் எதுவுமே சீராக இல்லை. தாமாகச் செல்வதற்கும் வழியில்லை.

இந்நிலையில் பாடசாலைகளை தொடர்ந்து இயக்க முடியாது. என்பதனை அரசாங்கம் இன்னும் புரிந்து கொள்ளவில்லை. மீண்டும் தோற்றுப்போன இணையவழி முறையை அரசாங்கம் புகுத்தி நாட்டில் உள்ள அரைவாசிக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இன்னும் சுமையை ஏற்படுத்தப்போகின்றது.

ஆகையால் நாம் முன்வைத்த மாணவர், ஆசிரியர்களுக்கான போக்குவரத்து மார்க்கங்களை இலவசமாக்குவதே பாடசாலைகளை தொடர்ந்தும் இயக்க ஒரேவழி. இதைவிட தொடர்ச்சியாக வரவழைப்பதைத் தவிர்த்து சுழற்சிமுறையை பயன்படுத்த வேண்டும் என கல்வி அமைச்சிடம் தெரிவித்துள்ளோம் என்றுள்ளது.

Posted in Uncategorized

குருந்தூர் மலை விவகாரம் காலிமுகத்திடலில் எதிரொலிக்காதது ஏனோ?ரெலோ ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் கேள்வி

காலிமுகத்திடலில் முன்னெடுக்கப் படுகின்ற போராட்டத்தை நாங்கள் எதிர்க்கவில்லை. அவர்களுடைய நியாயப் பாட்டினை நாங்கள் நன்றாக புரிந்து கொள்ளுகிறோம்.

ஆனால் தமிழர் பிரச்சினையை பெரும்பான்மை இனத்தினருக்கு தெளிவுபடுத்துகிறோம், விளக்குகிறோம், அவர்களோடு கலந்துரையாடுகிறோம் என்றெல்லாம் கூறியவர்கள் குருந்தூர் மலை விவகாரத்தில் எங்கு சென்றார்கள்?

குருந்தூர் மலை விவகாரம் மதப் பிரச்சினைக்கு அப்பாற்பட்டது. பௌத்த மதத்தின் பெயரால் தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளை அபகரித்து, அங்கு சிங்கள குடியேற்றங்களை நிறுவுவதும் அதனூடாக எங்கள் குடிப்பரம்பலை சிதைப்பதற்கும் முயல்வது இனவழிப்பு நடவடிக்கையாகவே கருதப் பட வேண்டும். இந்த நடவடிக்கைக்கு எதிராக காலிமுகத்திடலில் இருக்கும் போராளிகள் ஏன் குரல் கொடுக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது.

அதையும் தாண்டி தமிழர் பிரச்சினையை பெரும்பான்மை இனத்தினருக்கு தெளிவுபடுத்துகிறோம், விளக்குகிறோம், அவர்களோடு கலந்துரையாடுகிறோம் என்றெல்லாம் கூறியவர்கள் குருந்தூர் மலை விவகாரத்தில் தாங்கள் இணைந்து போராடிய பெரும்பான்மையின சகோதரர்களிடம் குருந்தூர் மலையில் பெளத்த சின்னங்களை நிறுவ முயல்வதற்கு எதிராக குரல் கொடுக்க கோரவில்லையா?

காலிமுகத்திடல் போராட்டத்தில் தமிழர்கள் இணைய வேண்டும் என்று மூர்க்கமாக குரல் கொடுத்தவர்கள் சிலர் குருந்தூர் மலை விவகாரத்தில் கள்ள மவுனம் காப்பது ஏன்?

கைதட்டல் கிடைக்காது என்பதற்காகவா அல்லது காலிமுகத்திடலில் போராடும் பெரும்பான்மை இனத்தின் மனம் நோகக்கூடாது என்பதா?
எதற்காக மௌனம் காக்கிறார்கள்?

தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினையை புரிந்து கொள்ளாத எமது அடிப்படை கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளாத அல்லது அங்கீகரிக்காத இந்தப் போராட்டத்தில் தமிழ் மக்களும் இணைந்து கொள்ள வேண்டும் அல்லது தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக நாங்கள் இணைந்து கொண்டு இருக்கிறோம் என்று கூறுபவர்கள் யதார்த்த நிலையை புரிந்து கொள்ள வேண்டும். மக்கள் கூடுகின்ற இடங்களில் எல்லாம் சென்று சத்தமெழுப்புவதன் மூலம் தமிழ் மக்களுடைய பிரச்சினையை தீர்த்து விடலாம் என்று தமிழ் மக்களை நம்ப வைக்க முயல்வது கேலிக் கூத்தாகும். அது இன்று நிரூபணமாகியுள்ளது.

ஆகவே தென்னிலங்கையில் நடக்கின்ற அரசியல் அதிகார சதுரங்க ஆட்டத்தில் தமிழ் மக்களை பகடைக் காயாக பயன்படுத்த இடமளித்து நேரத்தை வீணடிப்பதை தவிர்க்க வேண்டும். கடந்த கால அனுபவங்களில் இருந்து , நல்லாட்சி காலம் உட்பட நாம் பாடம் கற்றுள்ளோம். இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி தமிழர் தரப்பாக பேரம் பேசுவதே தேவையானது.

தமிழ் மக்களுக்கு பயன் தரும் ஆக்கபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுப்பது பற்றியே நமது தரப்புக்கள் சிந்திக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

சுரேந்திரன்
ஊடகப் பேச்சாளர்
தமிழ் ஈழ விடுதலை இயக்கம்
(தமிழ் தேசியக் கூட்டமைப்பு)

Posted in Uncategorized

ரெலோ யாழ் மாவட்ட தலைவரும் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளருமான நிரோஷிற்கு எதிரான வழக்கு நவம்பர் 16 க்கு ஒத்திவைப்பு

நிலாவரையில் தொல்லியல் திணைக்களம் மேற்கொண்ட முயற்சிகளுக்கு தடையாக அமைந்ததன் வாயிலாக தொல்லியல் திணைக்களத்தின் அரச கருமங்களுக்கு தடை ஏற்படுத்தினார் என ரெலோ யாழ் மாவட்ட தலைவரும் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளருமான தியாகராஜா நிரோஷிற்கு எதிராகத் தொடாரப்பட்ட வழக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த வருடம் தொடரப்பட்ட இவ் வழக்கில் வழக்கினை முன்னொண்டு செல்வதாயின் சட்டமா அதிபரின் ஆலோசனையினைப் பெறுமாறு தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று புதன்கிழமை(15.06.2022) மல்லாகம் நீதவான் திருமதி காயத்திரி சைலவன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, அச்சுவேலி பொலிஸார் மேலதிக அறிக்கையினை சமர்ப்பித்ததுடன் சட்டமா அதிபரின் ஆலோனைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதையும் மன்றில் தெரியப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

யாழ். நிலாவரையில் தொல்லியல் திணைக்களத்தின் நடவடிக்கைக்கு தடை : ரெலோ யாழ் மாவட்ட தலைவரை மன்றில் முன்னிலையாகுமாறு பணிப்பு

நிலாவரையில் தொல்லியல் திணைக்களத்தின் நடவடிக்கைகளுக்கு ரெலோ யாழ் மாவட்ட தலைவரும் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் உள்ளிட்டவர்கள் தடைகளை ஏற்படுத்தினர் எனக் குற்றம் சாட்டப்பட்டு கடந்த வருடம் ஏப்ரல் மாதம் மல்லாகம் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இவ் வழக்கில் தொல்லியல் திணைக்களத்தின் அரச கருமத்திற்குத் தடை ஏற்படுத்தியதாக மேலும் சிலரை இணைக்கவுள்ளதாகவும் மன்றில் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி விஸ்வலிங்கம் திருக்குமரன் தலைமையிலான சட்டத்தரணிகள் குழாம், தொல்லியல் திணைக்களத்தின் வர்த்தமானியில் நிலாவரைக் கிணறு என்றே அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

குற்றவியல் சட்டக் கோவையின் பிரகாரம் இவ் வழக்கை சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெற்றே மேற்படி வழக்கின் குற்றப்பத்திரத்தினைத் பொலிஸார் தாக்கல் செய்திருக்கவேண்டும்.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதேசசபையின் தலைவர் என்ற வகையில் தவிசாளார் அங்கு என்ன நடக்கின்றது எனக் கேள்வி எழுப்பியமையை அரச கடமைக்கு தடை ஏற்படுத்தியதாகக் கருத முடியாது.

நிர்வாக ரீதியாக இரு அரச நிறுவனங்களுக்கு இடையே எழும் பிரச்சினையினை குற்றவியல் சட்டக்கோவையின் பிரகாரம் அணுகமுடியாது எனவே இவ்வழக்கினை தள்ளுபடி செய்யவேண்டும் என மன்றில் தமது சமர்ப்பணங்களை முன்வைத்தனர்.

அதேவேளை தனியாராக இருந்தாலென்ன அரச ஸ்தாபனமாக இருந்தாலென்ன பிரதேசசபையின் அனுமதி பெற்றே எந்தக் கட்டுமானத்தினையும் செய்ய முடியும் என்பதும் சட்டத்தரணிகளால் முன்வைக்கப்பட்டது.

அவ் வழக்கினை கடந்த வருடம் விசாரித்த நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா, பொலிசார் தாக்கல் செய்துள்ள குற்றவியல் சட்டக்கோவையின் பிரகாரம் முதலாம் எதிராளியாக மன்றில் முன்னிலையாகியுள்ள வலிகாமம் கிழக்குப் பிரதேசசபைத் தவிசாளரை விசாரிப்பதற்கு சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்பட்டதாக எங்கும் வெளிப்படுத்தவில்லை.

அத்துடன் தொல்லியல் திணைக்களத்தின் வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் கிணறு என்றே அடையாளப்படுத்தப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்ததுடன் தொடர்ந்து இவ் வழக்கினை நடத்துவதாயின் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்று வழக்கினைத் தொடருமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தியிருந்தார்.

பிரதேசசபைத் தவிசாளர் இவ்வழக்கில் மேலதிக விசாரணைகள் தேவைப்படின் தவிசாளர் ஒத்துழைக்க வேண்டும் எனவும் தவிசாளர் ஒரு இலட்சம் ரூபா சொந்தப் பிணையில் செல்வதற்கும் உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் மீளவும் இவ் வழக்கிற்கு வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளரை முதலாவது சந்தேக நபராக அடையாளப்படுத்தி மன்றில் முன்னிலையாகுமாறு கட்டளை அனுப்பப்பட்டுள்ளது.